search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி போலீசார்
    X
    டெல்லி போலீசார்

    டெல்லியில் அமைதியை நிலைநாட்ட துப்பாக்கி ஏந்திய 1000 போலீசார் குவிப்பு

    டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களால் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன.

    வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. மாஜ்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற வன்முறையில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார்.

    இதேபோல் பல்வேறு இடங்களில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இன்றும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கல்வீச்சில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வன்முறையில் நேற்று மாலை வரை 4 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் சிஏஏ போராட்ட வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இதையடுத்து வடகிழக்கு டெல்லி பகுதியின் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    டெல்லி போராட்டம் 

    டெல்லி நிலவரத்தை குறித்து ஆலோசிக்க உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லி கவர்னர், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் அமைதியை நிலைநாட்ட ஆயுதம் ஏந்திய 1000 போலீசார் குவிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் டெல்லியில் போலீசார் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டது.  

    Next Story
    ×