search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகேஷ் சிங்
    X
    முகேஷ் சிங்

    நிர்பயா வழக்கு- முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி

    நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். எனவே, அவரை தூக்கிலிடுவதற்கான தடை நீங்கி உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி திகார் சிறையில் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இதற்கிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார். இந்த கருணை மனுவானது டெல்லி அரசு மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் உள்துறை அமைச்சகமும் கருணை மனுவை நிராகரித்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. அதில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    உள்துறை அமைச்சகத்தின் இந்த கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணை மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் முகேஷ் சிங்கை தூக்கிலிடுவதற்கான தடை நீங்கி உள்ளது. 

    மரண வாரண்டை ரத்து செய்யக்கோரி டெல்லி கோர்ட்டில் முகே‌‌ஷ் குமார் சிங்கின் வக்கீல் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ‘கருணை மனு பரிசீலனையில் இருக்கும்போது, தண்டனை நிறைவேற்றப்படாது. அந்த வகையில் 22-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றமாட்டோம் என்ற அறிக்கையை சிறை அதிகாரிகள் எனக்கு வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இப்போது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்திருப்பதால், 22ம் தேதி திட்டமிட்டபடி குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது. முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை, உள்துறைக்கு ஜனாதிபதி அனுப்பி உள்ளார். உள்துறை அமைச்சகம் இதனை குற்றவாளி முகேஷ் சிங்கிடமும், திகார் சிறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தும். அதன்பின்னர் தண்டனையை நிறைவேற்றுவதற்கான பணிகள் தொடங்கும்.
    Next Story
    ×