search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீநகர் ரெயில் நிலையம்
    X
    ஸ்ரீநகர் ரெயில் நிலையம்

    3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் ரெயில் சேவை தொடங்கியது

    காஷ்மீரில் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்ட ரெயில் சேவை 3 மாதங்களுக்கு பிறகு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
    • காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது.
    • காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து செல்போன் சேவை அளிக்கப்பட்டது.
    • ஸ்ரீநகர் - பாரமுல்லா- ஸ்ரீநகர் இடையே ரெயில்கள் இன்று இயக்கப்படுகின்றன.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

    இதையடுத்து காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி காஷ்மீரில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

    காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர்

    சில இடங்களில் நிலைமை சீரானதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனாலும் பல இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருந்து வந்தது.

    தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை மெல்லமெல்ல திரும்பியதையடுத்து செல்போன் சேவை அளிக்கப்பட்டது. இதேபோல் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் காஷ்மீரில் இன்று முதல் ரெயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி காஷ்மீரில் இன்று ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஸ்ரீநகர் - பாரமுல்லா- ஸ்ரீநகர் இடையே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ரெயில்வே போலீசார் உறுதி அளித்ததன் பேரில் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி, மாலை 3 மணிக்கு ரெயில்கள் இயக்கப்படும் என்றனர். ஜம்மு பகுதியில் உள்ள பனிஹால்-ஸ்ரீநகர் வழித்தடத்தில் வருகிற 16-ந்தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 17-ந்தேதி ரெயில் சேவை தொடங்குகிறது.

    காஷ்மீரில் 3 மாதங்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×