search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தினத்தில் நாசவேலைக்கு சதி - உளவுத்துறை எச்சரிக்கை
    X

    சுதந்திர தினத்தில் நாசவேலைக்கு சதி - உளவுத்துறை எச்சரிக்கை

    சுதந்திர தின விழாவில் நாசவேலையில் ஈடுபடவும் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Independenceday

    புதுடெல்லி:

    நாட்டின் 72-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார்.

    இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளில் டெல்லி போலீசாருடன், பாதுகாப்பு படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்கள். டெல்லி முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் பயங்கரவாதிகள் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே 2 பயங்கரவாதிகள் நாசவேலை சதித் திட்டத்துடன் டெல்லியில் ஊடுருவி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் பல நாச வேலைகளில் ஈடுபட்டது. இதன் தலைவனான மவுலானா மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரப் அக்சார் என்பவனிடம் டெல்லியில் நாசவேலை நடத்தும் சதித் திட்டம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக இப்ராகிம், முகமத் உமர் என்ற 2 பயங்கரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருக்கிறார்கள். இப்ராகிம் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தான். தற்போது அவன் டெல்லியை அடைந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

    இதேபோல் முகமத் உமரும் சமீபத்தில் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து விட்டதாகவும் அவன் டெல்லி வந்து இப்ராகிம் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து விட்டதாகவும் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இங்கு இருவரும் ரகசிய இடத்தில் தங்கி தங்களது கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகளும் டெல்லிக்குள் புகுந்து இருக்கிறார்கள்.

    இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நாசவேலைகளில் ஈடுபடும் சதித்திட்டம் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் அப்துல் அக்சார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    2 பயங்கரவாதிகளும் மனித வெடி குண்டாக செயல்படக் கூடியவர்கள் என்றும், சாதுக்கள் வேடத்தில் நுழைந்து பாதுகாப்பு படையினரின் முகாம்களில் தாக்குதல் நடத்தவும், சுதந்திர தின விழாவில் நாசவேலையில் ஈடுபடவும் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். டெல்லி முழுவதும் சோதனை நடத்தி ரகசிய இடத்தில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினரும், பயங்கரவாத எதிர்ப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

    பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தி அதன்மூலம் அங்கு தங்கள் ஆதரவாளர்களிடம் நல்ல பெயர் எடுப்பதில் முனைப்பு காட்டுகின்றன. சமீபகாலமாக ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீரில் பல ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

    தற்போது காஷ்மீருக்கு வெளியே தலைநகர் டெல்லியில் அவர்கள் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

    பயங்கரவாதிகளின் நாசவேலைக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தேவையான பயிற்சிகளை அளிப்பதுடன் ஆயுத உதவிகளையும் செய்து வருகிறது.

    தற்போது புதுவகையான வெடிகுண்டுகள் தயாரிப்பு பணியிலும், அவற்றை வெடிக்கச் செய்யும் முறைகள் பற்றியும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Independenceday

    Next Story
    ×