என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடனை திரும்ப செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்ப மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். #rahulgandhi #congress
    உத்தரபிரதேச மாநிலம் தாதாகஞ்ச் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, இப்போது கோடிகளில் கடன் வாங்கிய வர்த்தக பிரமுகர்கள் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் அவர்களை சிறைக்கு அனுப்புவதை தவிர்த்து நாட்டைவிட்டு பறந்துசெல்ல அனுமதிக்கிறார்கள்.

    அதேசமயம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயி கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் சிறையில் தள்ளி விடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது நடக்காது. கடனை செலுத்தாத பெரும்புள்ளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். கடனை செலுத்தாத ஒரு விவசாயி கூட சிறைக்கு அனுப்பப்படமாட்டார். 

    மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். அதேபோன்று நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #rahulgandhi #congress 
    அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் வாக்களித்த பின் கூறியுள்ளார். #anbumaniramadoss #admk #election2019
    திண்டிவனம்:

    திண்டிவனத்தில் மாரியம்மன்கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை ஆரம்ப பள்ளியில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் இன்று காலை வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடைபெற்ற பாராளு மன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்பட 39 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மிகப் பெரிய ஆதரவு உள்ளது. வலிமையான பாரதம், வளமான தமிழகம் அமைப்பதற்காக மக்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளதா செய்திகள் வருகின்றன.

    எங்களது கூட்டணி பாட்டாளி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக உள்ள கூட்டணி. எதிர்கட்சியினர் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ள கூட்டணி. தமிழகத்தில் நடைபெறும் 22 சட்டசபை இடைத்தேர்தலில் மிகபெரிய வெற்றி பெறும். தற்போதைய ஆட்சி தொடர்ந்து நிலையாக நீடிக்கும். எங்கள் கூட்டணி தமிழகத்தில் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய வெற்றியை பெறும்.
     
    வேலூரில் பாராளுமன்ற தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்து உள்ளது. இதன் மூலமாக தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டுள்ளது தெரிகிறது. வேலூரில் எதிர் அணியினருக்கு சொந்தமான பணம் கைப்பற்றபட்டது குறித்து எந்தந்த வழிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட இருந்தது குறித்து அறிக்கையை சமர்பித்த பின்புதான் வேலூர் பாராளுமன்ற தேர்தலை ரத்து செய்தது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    மின்னணு வாக்கு எந்திரம் நம்பகத்தன்மையற்று உள்ளதா என அன்புமணி ராமதாசிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்த போது, இந்த தேர்தல் நேரத்தில் இதுகுறித்து தற்போது பேச தேவையில்லை, இருந்த போதிலும் வாக்கு அளித்தேன். விவிபேட் எந்திரத்தில் சின்னம் தெளிவாக இருந்தாலும், உலக நாடுகள் அளவில் வாக்குசீட்டு முறையை பயன்படுத்தி வருகின்றனர். வருங்காலத்தில் தேர்தல் ஆணையம் மாற்றங்களை கொண்டு வரலாம் என்றார். #anbumaniramadoss #admk #election2019
    பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் இன்று 66 சதவீதம் வாக்குகள் பதிவாகின என அதிகாரிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019 #ParliamentElections
    முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்தது.

    அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 

    சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுமார் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில், அசாம் 76.22%, பீகார் 62.38%, ஜம்மு காஷ்மீர் 45.5%, கர்நாடகம் 67.67%, மகாராஷ்டிரா 61.22%, மணிப்பூர் 67.15%, ஒடிசா 57.97%, தமிழ்நாடு 66.36%, உத்தரப்பிரதேசம் 66.06%, மேற்கு வங்காளம் 76.42%, சத்தீஸ்கர் 71.40%, புதுச்சேரி 76.19% வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. #LokSabhaElections2019 #ParliamentElections
    சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் மே 19-ந் தேதி வேலூர் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். #acshanmugam #admk #parliamentelection

    வேலூர்:

    வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. ஆனால் இன்று நடக்க இருந்த வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் மட்டும் ஓட்டுப்போட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இது அவமானம்தான். மக்கள் ஓட்டுப்போடாமல் போனது துரதிஷ்டவசமானது.

    தேர்தல் நடத்துவது குறித்து எங்கள் வக்கீல் குழுவினருடன் ஆலோசனை நடத்தி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. தேர்தல் கமி‌ஷனுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள். வரும் மே மாதம் 19-ந் தேதி தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலுடன் நிறுத்தப்பட்ட இந்த பாராளுமன்ற தொகுதி தேர்தலையும் நடத்த வேண்டும்.

    ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து அங்கேயும் இதுபோன்ற தீர்ப்பு வந்தால் தேவையில்லாமல் வருமான வரித்துறையினருடன் உரசல் ஏற்படும். வருமான வரித்துறை இந்த வழக்கை துரிதமாக முடிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் விரைவில் நடக்கும். தி.மு.க. வேட்பாளர் செய்த தவறால் இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் கமி‌ஷன் தன்னிச்சையாக முடிவு எடுக்ககூடியது. அவர்களின் முடிவுக்கு பிரதமர் மோடியை குறை கூறுவது தவறு. இந்த தேர்தலை ரத்து செய்தது ஒரு வகையில் தி.மு.க.வுக்கு சாதகமானதுதான்.

    பெரிய தோல்வியில் இருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனவே தாமதம் செய்யாமல் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று காலை ஆரணி நாடாளுமன்ற தொகுதி ஆரணி கொசப்பாளையத்தில் ஏ.சி.சண்முகம் ஓட்டு போட்டார். அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் பேச முடியாமல் கண்கலங்கினார். பின்னர் நிறுத்தபட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தலை 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் மே 19-ந் தேதி நடத்த வேண்டும் என்றார். #acshanmugam #admk #parliamentelection

    வருமானவரித் துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டும் நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன என்று முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். #iperiyasamy #tnelection2019

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கோவிந்தாபுரம் வாசவி மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்த பிறகு நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-

    வருமானவரித் துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டும் நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனநாயகப் படுகொலை நடந்தேறியுள்ளது. இது தவறான முன்னுதாரணம். சோதனை என்ற பெயரில் வருமானவரித்துறையினர் எதிர்கட்சி வேட்பாளர்கள் இடங்களில் சோதனை செய்தார்கள். இது மிக மோசமான நிகழ்வு. எதிர்காலத்தில் இது தவிர்க்கப்பட வேண்டும்.

    தேனி மாவட்டத்தில் 150 கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் செயல்படவேண்டிய செக்போஸ்டுகள் அனைத்தும் ஓ.பி.எஸ். குரூப்புக்காக திறந்து விடப்பட்டுள்ளன. அங்குள்ள காவல் துறையும் வருமான வரித்துறையும் முறையாக செயல்படவில்லை.

    ஆளும் தரப்பினரின் இந்த நடவடிக்கையை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தி.மு.க. கூட்டணிக்கு அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். இந்த முறை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுல்காந்தி பிரதமராகவும் ஸ்டாலின் முதல்வராகவும் பதவி ஏற்பார்கள் இது நிச்சயம்.

    இவ்வாறு அவர் கூறினார். #iperiyasamy #tnelection2019

    தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #ministermrvijayabaskar #admk #TNElections2019

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் வடிவேல்நகர் அரசு உயர் நிலைபள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 130-வது வாக்குச்சாவடியில் எனது வாக்கை பதிவு செய்துள்ளேன். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இருக்கிறது. எங்கள் வேட்பாளர் தம்பிதுரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று உறுதியாகியுள்ளது.

    கரூர் பாராளுமன்ற தொகுதி பதற்றமான தொகுதி கிடையாது. அமைதியான தொகுதிதான். தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் பொது விடுமுறையையடுத்து சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று ஒரே நாளில் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பயணிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. தீபாவளி, பொங்கல் பண்டிகை நேரங்களில் 3, 4 நாட்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு செல்வார்கள். ஆனால் நேற்று பணி நாள் என்பதால் தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு ஒரே நேரத்தில் புறப்பட்டனர். இதனால் சற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தவிர்க்க முடியாதது. சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் திரும்புவதற்கு சிரமம் இருக்காது. அதற்கேற்றாற் போல் . பயணிகளின் கூட்டத்தை பொறுத்து பஸ்கள் இயக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #admk #TNElections2019 

    அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். #senthilbalaji #admk #TNElections2019 #mkstalin

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, கரூர் அருகே உள்ள புதுப்பாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு மக்கள் தன்னெழுச்சியோடு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். அவர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெறுவார். இதே நிலைதான் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் காணப்படுகிறது.

    இந்த தேர்தலோடு மத்தியில் ஆளும் மோடியும், தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியும் வீட்டுக்கு செல்வது உறுதி. ராகுல்காந்தி பிரதமர் ஆவார். 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தற்போது அறிவித்துள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார்.

    கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்பழகன் நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் பிரசாரம் தொடர்பான எங்கள் மனுவை இரவு நேரமாக இருந்தாலும் அவர் வாங்கியிருக்க வேண்டும். ஏதோ முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தது போல சாதாரணமாக கையாண்டு இருக்கிறார்.


    காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், கலெக்டர் பேசும்போது, தேர்தலை நிறுத்த பரிந்துரைப்பேன் என்று கூறியிருக்கிறார். இது தம்பிதுரை, ஆளுங்கட்சியினரின் குரலாக இருக்கிறது. கலெக்டர் சொன்னது போல் 100 பேர் அவரது வீட்டிற்கு செல்ல வில்லை. வேட்பாளரால் அங்கீகாரம் செய்யப்பட்ட முகவர் செந்தில் உள்பட 10 பேர்தான் சென்றிருக்கிறார்கள். 100பேர் வந்திருப்பதாக சொல்லும் கலெக்டர், அவரது வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை வெளியிட வேண்டும். அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #senthilbalaji #admk #TNElections2019 #mkstalin

    அ.தி.மு.க. கூட்டணி 39 தொகுதியிலும் வெற்றி பெறும் என்று வாக்களித்த பின் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். #ministerspvelumani #TNElections2019 #admk

    கோவை:

    கோவை சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஓட்டுப் போட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒவ்வொருவரும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செய்த ஜெயலலிதாவின் அரசுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 39 தொகுதியிலும் வெற்றி பெறும். வாக்குச்சீட்டு முறையை விட புதிதாக தொழில் நுட்ப ரீதியில் வந்த இந்த வாக்கு எந்திரம் நன்றாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerspvelumani #TNElections2019 #admk

    இந்தியா முழுவதும் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற எழுச்சி அலை வீசுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். #rahulgandhi #pmmodi #TNElections2019

    வில்லியனூர்:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் இன்று வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மணவெளியில் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார்.

    பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தேர்தல் அமைதியான முறையில், அதே வேளையில் விறுவிறுப்பாகவும் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. அதற்கு காரணம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    மோடியின் எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. அதேபோல் புதுவையிலும் மோடியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

    இந்தியா முழுவதும் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற எழுச்சி அலை வீசுகிறது. அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்று தெரிந்து விட்டது.

    தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த தொகுதி மக்கள் ஆளுங்கட்சி வேட்பாளரை எம்.எல்.ஏ.வாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #rahulgandhi #pmmodi #TNElections2019 

    தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 39 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று நடந்தது. புனித வியாழன் இன்று கடைபிடிக்கப்படுவதால் கிறிஸ்தவர்கள் ஓட்டு போடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. #HolyThursday #TNElections2019

    திண்டுக்கல்:

    தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 39 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று நடந்தது. காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.

    இன்று புனித வியாழக்கிழமையாகும். இன்றைய தினம் கிறிஸ்தவர்கள் புனித வாரமாக கடைபிடித்து வருகிறார்கள். இதனால் ஏராளமானோர் நோன்பு இருந்து வருகின்றனர்.

    கடும் வெயிலும் கொளுத்தி வருவதாலும், இந்த தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாலும் அரசு இதற்கு செவிமடிக்கவில்லை என்ற காரணத்தினாலும் வாக்கினை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

    தேர்தல் முடிந்த கையோடு நாளை(19-ந்தேதி) பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பெரும் பாலான வாக்குச்சாவடிகள் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

    நாளை புனித வெள்ளியாகும். அன்றைய தினம் கத்தோலிக்க திருச்சபையின் கடன் திருநாளாகும். எனவே இந்த சமயத்திலும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவதால் கிறிஸ்தவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து கிறிஸ்தவர்கள் கூறுகையில்,

    மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு சிறுபான்மையினரை நசுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. எனவே இந்நிலையை அவர்கள் மாற்றவேண்டும் என்றனர்.  #HolyThursday #TNElections2019 

    தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 
     
    இதற்கிடையே, இரவு 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

    “ 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல், சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் முழுமையான தகவல் பிறகு அறிவிக்கப்படும். தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. வாக்குச்சாவடியை கைப்பற்றிய சம்பவங்கள் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடைபெற்றது” என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

    6 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக  வாக்கு சதவீதம் வருமாறு:

    வடசென்னை 61.46%, தென்சென்னை 58.14%, மத்திய சென்னை 57.05%, ஸ்ரீபெரும்புதூர் 60.39% நெல்லை 65.78%, கடலூர் 72.51%  பொள்ளாச்சி 69.81% சேலம் 72.73%, தென்காசி 70.39% திருவண்ணாமலை 69.84% தர்மபுரி 73.45%, விழுப்புரம் 72.50% கன்னியாகுமரி 65.55%, தூத்துக்குடி 69.31% காஞ்சிபுரம் 67.52%  அரக்கோணம் 72.86% கள்ளக்குறிச்சி 75.18% தஞ்சாவூர் 70.53%, திண்டுக்கல் 70.40%

    மயிலாடுதுறை 71.20%, நீலகிரி 69.74%, சிவகங்கை 70.48%, தேனி 74.57%, 
    ராமநாதபுரம் 67.70% பெரம்பலூர் 74.67%, கிருஷ்ணகிரி 72.79% திருச்சி 71.12%, விருதுநகர் 70.38%, கரூர் 75.84%, திருவள்ளூர் 70.46  ஆரணி 75.08% மதுரை 62% கோவை 63.81% நாகை 75.42% திருப்பூர் 63.18% சிதம்பரம் 76.07%
    நாமக்கல் 78% ஈரோடு 71.10%

    இதேபோல், 18 தொகுதி இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீத நிலவரம்:

    பூந்தமல்லி-79.14%, பெரம்பூர்-61.06%, திருப்போரூர் - 81.05%, சோளிங்கர் - 79.63%, குடியாத்தம் - 81.79%, ஆம்பூர் - 76.35%, ஓசூர் - 71.29%, பாப்பிரெட்டிப்பட்டி - 83.31%, அரூர் - 86.96%, நிலக்கோட்டை - 85.50%  

    திருவாரூர் - 77.38%, தஞ்சாவூர் - 66.10%, மானாமதுரை - 71.22%, ஆண்டிப்பட்டி - 75.19%, பெரியகுளம் - 64.89%, சாத்தூர் - 60.87%, பரமக்குடி - 71.69%, விளாத்திக்குளம் - 78.06%. #LokSabhaElections2019 #TNElections2019 #VoterTurnout 
    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று உத்தர பிரதேசத்தின் ஆசம்கர் பாராளுமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #AkhileshYadav
    ஆசம்கர்:

    உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ஆசம்கர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆசம்கர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா உடனிருந்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், உ.பி.யில் தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, ஆசம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AkhileshYadav
    ×