search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "i periyasamy"

    • சிறப்பு கோர்ட்டு விசாரணையை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டும்.
    • தமிழக அமைச்சர்களில் கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி இருக்கும் 3-வது அமைச்சராக ஐ.பெரியசாமி உள்ளார்.

    சென்னை:

    தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த 2008-ம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்தபோது, வீட்டுவசதி வாரிய வீடு ஒன்றை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசனுக்கு ஒதுக்கீடு செய்தார்.

    அதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றம், அந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

    இதையடுத்து நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்தார்.

    வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என்று இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    சிறப்பு கோர்ட்டு அந்த விசாரணையை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டும். ஐ.பெரியசாமி கோர்ட்டில் நேரில் ஆஜராகி ரூ.1 லட்சம் பிணை செலுத்தி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு அளித்தார்.

    தமிழக அமைச்சர்களில் கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி இருக்கும் 3-வது அமைச்சராக ஐ.பெரியசாமி உள்ளார். இதற்கு முன்பு செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது கோர்ட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதனால் அவர்கள் இருவரும் அமைச்சர் பதவியை இழந்தனர். இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான குற்றச்சாட்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட இருப்பது அவருக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.

    இதேபோல அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார்.

    இதில் பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத்தடை விதித்துள்ளது.

    • லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக உள்ளது.
    • தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை.

    சென்னை:

    அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:-

    லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

    முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணை அதிகாரி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில் விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்து வைக்க வேண்டும். ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

    கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொறுத்தவரை விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவும் ஐகோர்ட்டினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு கோர்ட்டு அவரை விடுவித்து இருக்கிறது.

    கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்க்கும்போது உண்மையில் நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். விடுதலையான, விடுவிக்கப்பட்ட இதுபோன்ற அரசியல்வாதிகளின் வழக்குகளை எல்லாம் மறு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளும் என்னை சிலர் வில்லனாக பார்க்கின்றனர். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐகோர்ட்டு நீதிபதியின் இந்த கருத்து நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஐ.பெரியசாமி, கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தார்.
    • அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தார்.

    அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

    அதேபோல, 2001-2006-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த இரு வழக்குகளும் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

    இதே நீதிபதி, ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பயன்பாடு குறித்து ஆசிரியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
    • 10 ஊராட்சிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி டிராக்டர்கள் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெற்கட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2021 - 22 ஆம் ஆண்டு பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரு வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூ. 5.70 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

    மேலும் அங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பயன்பாடு குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கடைய நல்லூர் ஊராட்சி ஒன்றியம் புன்னையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் 5 வகுப்பறைகள் கட்டும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலு வலக கூட்டரங்கில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி தூய்மை பாரத இயக்கம் பகுதி 2- ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கடையநல்லூர் வட்டா ரத்திற்குட்பட்ட சொக்கம் பட்டி, நயினாரகரம், குத்துக் கல்வலசை, சுமைதீர்ந்தபுரம் மற்றும் கீழப்பாவூர், கல்லூ ரணி ஊராட்சிகள், தேவி பட்டிணம் சுப்பிரமணியபுரம் ஆகிய 10 ஊராட்சிகளுக்கு ரூ. 45.20 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர்களை வழங்கினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குனர்) மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, சதன் திருமலைக்குமார், பழனி நாடார், நகராட்சி தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஷேக் அப்துல்லா, ஒன்றிய குழு துணைத்தலைவர் கனக ராஜ், முத்து பாண்டியன், கீழப்பாவூர் ஒன்றிய சேர்மன் காவேரி சீனித்துரை, ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன், குத்துக்கல் வலசை ஊராட்சி தலைவர் சத்யராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி உட்பட பலர் உடனிருந்தனர்.

    • இந்திய கூட்டுறவு வாரவிழா சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது.
    • பயிர்க்கடன் ரூ.10 ஆயிரத்து 292 கோடி கொடுக்கப்பட்டது.

    சென்னை :

    கோவையில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய கூட்டுறவு வாரவிழா தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய கூட்டுறவு வாரவிழா வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை கவுரவிப்பதற்கும், கூட்டுறவு நோக்கத்தை மக்களிடத்தில் கொண்டுசேர்த்து, அதை சிறப்பாக வழிநடத்துவதற்கும் இந்த கூட்டுறவு வார விழா மிகப்பயனுள்ளதாக இருக்கும்.

    கூட்டுறவின் நோக்கம் என்பது பொருளாதாரத்தில் அடித்தட்டில் இருக்கின்ற மக்களுக்கு அவர்கள் செய்கின்ற விவசாயமாக இருந்தாலும், நெசவுத்தொழிலாக இருந்தாலும், கைவினைஞர்களாக இருந்தாலும், அவர்களே உறுப்பினர்களாக பதிவு செய்து ஒரு கூட்டமைப்பாக ஒரு சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனை வழங்கி சேவை செய்வதாகும்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வட்டியில்லாமல் கடன் வழங்கியதிலும் தமிழகம்தான் முன்னோடி. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் வட்டியில்லாமல் தொடக்க வேளாண்மை வங்கிகளில் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். எவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான நகைக்கடன் தள்ளுபடியில் ரூ.5,018 கோடி கணக்கெடுத்து, இதுவரை ரூ.4,888.88 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. சுயஉதவி குழு கடனை பொறுத்தவரை ரூ.2,755 கோடி வரை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு கொடுத்திருக்கிறோம். பயிர்க்கடன் ரூ.10 ஆயிரத்து 292 கோடி கொடுக்கப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டு கூட்டுறவுத்துறையில் இருந்த வைப்பீடு ரூ.67 ஆயிரம் கோடிதான்.

    இந்த ஆண்டு இந்த 6 மாத காலத்தில் ரூ.66 ஆயிரம் கோடி வந்துவிட்டது. அந்த அளவுக்கு மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால்தான் மக்கள் இதில் வைப்பீடு செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்கிற போது, எல்லோருக்கும் உற்சாகம் வந்துவிட்டது.
    • ஒவ்வொரு அமைச்சரின் செயலையும், சிந்தனையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன்.

    சென்னை :

    தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் பொறுப்பை ஏற்ற பின்னர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி மட்டும் வெற்றி என்ற நிலையை மாற்றி, ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. இருந்தபோதும் வெற்றி பெற்றோம்.

    மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரான பின்னரும் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். எனவே 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். இப்படி அவர்கள் (எதிர்க்கட்சிகள்) வெற்றி பெற்று இருக்கிறார்களா?. இந்த வெற்றி இதோடு நிற்காது. இப்போது ஒவ்வொரு அமைச்சரின் செயலையும், சிந்தனையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன்.

    தனது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் உழைத்துகொண்டிருக்கின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்கிற போது, எல்லோருக்கும் உற்சாகம் வந்துவிட்டது. இப்போது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான் என்கிறார்கள்.

    இந்த கட்சி சேர்ந்தால் அவ்வளவுதான், அந்த கட்சி சேர்ந்தால் அவ்வளவுதான் என்று சொல்கிறார்கள். வரப்போகிற பாராளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் சேர்ந்தாலும் தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இதை நான் ஏதோ மேடை பேச்சுக்காக சொல்லவில்லை. நான் உறுதியாக சொல்கிறேன் 20 ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின்தான் இருக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள்.

    இவ்வாறு ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

    வருமானவரித் துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டும் நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன என்று முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். #iperiyasamy #tnelection2019

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கோவிந்தாபுரம் வாசவி மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்த பிறகு நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-

    வருமானவரித் துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டும் நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனநாயகப் படுகொலை நடந்தேறியுள்ளது. இது தவறான முன்னுதாரணம். சோதனை என்ற பெயரில் வருமானவரித்துறையினர் எதிர்கட்சி வேட்பாளர்கள் இடங்களில் சோதனை செய்தார்கள். இது மிக மோசமான நிகழ்வு. எதிர்காலத்தில் இது தவிர்க்கப்பட வேண்டும்.

    தேனி மாவட்டத்தில் 150 கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் செயல்படவேண்டிய செக்போஸ்டுகள் அனைத்தும் ஓ.பி.எஸ். குரூப்புக்காக திறந்து விடப்பட்டுள்ளன. அங்குள்ள காவல் துறையும் வருமான வரித்துறையும் முறையாக செயல்படவில்லை.

    ஆளும் தரப்பினரின் இந்த நடவடிக்கையை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தி.மு.க. கூட்டணிக்கு அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். இந்த முறை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுல்காந்தி பிரதமராகவும் ஸ்டாலின் முதல்வராகவும் பதவி ஏற்பார்கள் இது நிச்சயம்.

    இவ்வாறு அவர் கூறினார். #iperiyasamy #tnelection2019

    மு.க.அழகிரி ஒரு பொருட்டல்ல. திமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். #DMK #IPeriyasamy
    பரமக்குடி:

    பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி முகவர்களிடம் ஆலோசனை செய்வதற்காக தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, சுப்பிரமணியன், மேகநாதன் ஆகியோர் வந்தனர்.

    அப்போது அவர்கள் நகரில் சேதுபதி நகர், காட்டுப் பரமக்குடி, சந்தைக்கடை, சுப்பிரமணியசுவாமி தெரு உள்பட பல்வேறு வார்டுகளில் ஆலோசனை வழங்கினர்.

    ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், முன்னாள் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுப.த.சம்பத், மாநில தீர்மானக் குழு துணைத் தலைவர் திவாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திசைவீரன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர் செயலாளர் சேது கருணாநிதி வரவேற்றார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த தி.மு.க. ஆட்சிகளின் போது ரூ. 616 கோடியிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்பட எண்ணற்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

    உழவர் சந்தை, பசும்பொன் தேவருக்கு நினைவு மண்டபம், சேது சமுத்திரத் திட்டம் என நல்ல திட்டங்களையும் தி.மு.க. செயல்படுத்தியுள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அ.திமு.க. அரசால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

    20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். தி.மு.க. அமோக வெற்றி பெறும். கடந்த தேர்தல்களைப் போல் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தடுக்கப்படும்.

    அரசியலில் யாருடன் கூட்டணி வைக்கலாம்? என்பது பற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். மு.க.அழகிரி ஒரு பொருட்டல்ல. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். தமிழகத்தில் மத்தியில் ஆளும் மோடியின் ரிமோட் ஆட்சி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளானந்து, வக்கீல் பூமிநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன். துரைச்சாமி, ஒன்றிய செயலாளர் போகலூர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #IPeriyasamy
    அதிமுக அரசு விரைவில் முடிவுக்கு வரும் என்று கடையநல்லூர் கூட்டத்தில் ஐ.பெரியசாமி பேசினார். #tngovt #iperiyasamy

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கமி‌ஷன், கலெக்‌ஷன், கரப்‌ஷன் ஊழல் செய்யும் அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நகர செயலாளர் சேகனா தலைமையில் நடைபெற்றது.

    இதில் அவைத்தலைவர் சங்கரன், பொருளாளர் மஸ்தான், அப்துல்வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சைபுன்னிசா வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தங்கவேலு ஆகியோர் பேசினர். இதில் மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசிதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் இன்றைக்கு தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எமர்ஜென்சி காலத்தை போல் பொதுக்கூட்டத்தில் எந்த செய்திகளை, எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்று கூறுகின்றனர். மிசா காலத்தில் கூட கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடைத்தது.

    மாநிலத்தில் தற்போது ஊழல் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கூட்டங்களை நடத்த விடமால் தடுத்து விடலாம் என்று கருதினர். அதை தற்போது சட்டரீதியாக எதிர் கொண்டு ஊழலுக்கு எதிராக கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

    மதங்களை புண்படுத்துகின்ற வகையில் இதுவரை இல்லாத அளவிற்கு, முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தனர். மதம் மாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வந்தபோது தமிழகத்தில் இருந்த ஜெயலலிதா ஆட்சி தூக்கி எறியப்பட்டது.

    அதே போல தான் இன்றைக்கு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்த பாரதிய ஜனதா அரசு இந்தியாவில் தூக்கி ஏறியப்பட வேண்டுமென்றால் 2004-ம் ஆண்டை போல் பாராளுமன்ற தேர்தலை போல தி.மு.க.கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் வெற்றியை தர வேண்டும்.

    மேலும் குட்கா ஊழலில் சரியான விசாரணை மேற்கொள்ள வேண்டும். தற்போது நடக்க கூடிய அரசு மெஜாரிட்டி இல்லாத அரசாக உள்ளது. அது விரைவில் முடிவுக்கு வரும். தற்போது மக்கள் விரோத ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் முத்துப்பாண்டி, செரீபு, சீனிவாசன், சேக்தாவூது, பேபி ரஜப்பாத்திமா நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tngovt #iperiyasamy

    ×