என் மலர்
தேர்தல் செய்திகள்
சென்னை:
பா.ஜனதா தலைவர் அமித் ஷா தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்காக நாளை மறுநாள் (2-ந்தேதி) வருகிறார்.
பா.ஜனதா போட்டியிடும் தூத்துக்குடி, சிவகங்கை, கோவை ஆகிய 3 தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.
2-ந்தேதி காலை 11.30 மணிக்கு தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கிருந்து எட்டயபுரம் ரோட்டில் தூத்துக்குடி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசையை ஆதரித்து நடை பெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சிவகங்கை செல்கிறார்.
நண்பகல் 12.30 மணிக்கு எச்.ராஜாவுக்கு ஆதரவாக நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவை புறப்பட்டு செல்கிறார். கோவை சிவானந்தா கல்லூரி மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு கோவை பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த பிரசார கூட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டு பேசுகிறார்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அமித் ஷா கோவையில் இருந்து தனிவிமானத்தில் பெங்களூர் புறப்பட்டு செல்கிறார். #AmitShah #LokSabhaElections2019
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. இக்கூட்டணியை கண்டு மு.க.ஸ்டாலினும், மற்ற கட்சிகளும் பயந்துவிட்டன.
இக்கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. பெண்களின் நலன் காக்க இக்கூட்டணி பாடுபடும். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இரும்புக்கரம் கொண்டு இந்த கூட்டணி தடுக்கும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவிடாமல் எங்களை தடுக்க தி.மு.க.வும், காங்கிரசும் முயன்று தோற்றுப்போய் விட்டன. துரோகிகளின் புகலிடம் தி.மு.க.
தமிழக அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த வெற்றிக்கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதுபோல தேர்தல் முடிவு நமது வெற்றியை நிரூபிக்கும்.

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி பதவியேற்றவுடன் முதல் வேலையாக நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு பாடுபடுவோம். தமிழகத்தில் விவசாயிகளின் நலன்காக்க, ஏழை தொழிலாளர்களின் நலன்காக்க அனைத்து திட்டங்களையும் பெற்றுத்தருவோம். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். துளசியின் வாசம்கூட மாறலாம். ஆனால் தவசியின் வாக்கு மாறாது.
விலைவாசியை குறைப்போம். தேர்தல் முடிந்ததும் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.2ஆயிரம் ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் தேடிவரும். எங்கள் வெற்றிக்கூட்டணிக்கு எதிரே உள்ளவர்கள் 2ஜி ஊழல் போன்றவற்றை செய்தவர்கள். 2011-ல் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே தேவையற்ற பிரிவினையை உண்டாக்கியவர்கள் தி.மு.க.வினர்தான் என இங்கு முதன்முதலாக குற்றம் சாட்டுகிறேன். அதன் பிறகு இறைவனாக பார்த்து இப்போது எங்களை இணைத்து வைத்துள்ளார். இந்த கூட்டணி இனி தொடரும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #PremalathaVijayakanth #DMDK #ADMK
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு, திம்மராஜ குளம், ஜி.எஸ்.டி. சாலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டு இருந்தது.
இதன் திறப்பு விழாவை வரும் நாட்களில் நடத்த அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் கீற்று கொட்டகை முழுவதும் தீப்பற்றி கரும் புகை ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த சேர்கள் மற்றும் பேனர்கள்எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
டி.எஸ்.பி. கந்தன் மற்றும் போலீசார் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் குமார் செங்கல்பட்டுபோலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தேர்தல் அலுவலகத்தை மர்ம கும்பல் தீ வைத்து எரித்து இருப்பதாக கூறி உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
மேலும் அதிகாரிகள் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். வாக்குசாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்களை அனுப்பி வைப்பது மற்றும் பணப்பட்டு வாடாவை தடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக வட மாநிலங்களை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தி, உரிய அனுமதியின்றி எடுத்து செல்லும் பணம், நகை மற்றும் பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அரியலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஹரியானாவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஹேமந்த் ஹல்க் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை கவனித்து வந்தார்.
இன்று காலை சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர், துப்பாக்கி மூலம் வானத்தை நோக்கி 9 முறை சுட்டதாக பரபரப்பு தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் எஸ்.பி. (பொறுப்பு)திஷாமித்தல் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஹேமந்த் ஹல்க் இன்று அதிகாலை சுற்றுலா மாளிகை அறையில் இருந்து வெளியே வந்தததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை கேட்டுள்ளார். உயர் அதிகாரி என்பதால் போலீஸ்காரரும் தன்னிடமிருந்த துப்பாக்கியை கொடுத்துள்ளார்.
அதனை வாங்கிய ஹேமந்த் ஹல்க் திடீரென வானத்தை நோக்கி 9 முறை துப்பாக்கியால் சுட்டார். இதனால் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த மற்ற அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பிறகு ஹேமந்த் ஹல்க் துப்பாக்கியுடன் தனது அறைக்கு சென்று அமர்ந்து கொண்டார். அவர் எதற்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
வேலைப்பளு காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டாரா? அல்லது மன ரீதியாக ஏற்பட்ட பிரச்சினையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணப்பட்டுவாடா புகார் எழுந்த தன் காரணமாக அதனை தடுப்பதற்காக எச்சரிக்கை விடுக்கும் வகையில் சுட்டாரா? என்றும் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தேர்தல் பார்வையாளர் ஹேமந்த் ஹல்க் குடிபோதையில் இருந்ததால் அவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அரியலூர் தேர்தல் பார்வையாளர் குடிபோதையில் துப்பாக்கியால் சுட்டது அரசியல் கட்சியினர், வாக்காளர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019 #Electionofficer

சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். ஆளும்மோடி அரசின் மீதான இந்த எதிர்ப்பு எங்கள் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும்.
பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணி நிர்பந்தத்தினால் உருவான கூட்டணி. ஆனால் மதசார்பற்ற கூட்டணி கொள்கைகளின் அடிப்படையில் புரிந்து கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டணி.
மோடி மட்டுமே தேசத்தை பாதுகாக்கும் தலைவர் போல் முன்னிலைப்படுத்துகிறார்கள். நேரு மிகப் பெரிய தலைவர். அவரது மறைவுக்கு பிறகு நாட்டை பாதுகாக்கப் போகும் தலைவர் யார்? என்ற பயம் நாடு முழுவதும் எழுந்தது. லால்பகதூர், சாஸ்திரி அடுத்த பிரதமராக வந்தார்.

அந்த கால கட்டத்தில் பாகிஸ்தானை போரில் தோற்கடித்தோம். நாட்டின் பன்முகத்தன்மையை கட்டிக் காக்கும் பல தலைவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
எங்கள் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. தி.மு.க. கிறிஸ்தவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்கிறது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பது எங்கள் கூட்டணி தான் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பா.ஜனதாவுக்கு சொல்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லை. அதனால் தான் மதத்தை ஒரு ஆயுதமாக கையில் எடுத்துள்ளார்கள்.
ஆனால், மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் இந்துக்களும் பாதிக்கப்பட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan
விருதுநகர்:
பாராளுமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நிலை கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கர் தலைமையிலான கண்காணிப்பு குழு நேற்று இரவு விருதுநகர்-சிவகாசி சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது அங்கு வந்த சரக்கு பார்சல் வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். வேனுக்குள் ஏராளமான அட்டை பெட்டிகளில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தன.
அதுபற்றி விசாரித்த போது மதுரையில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து பல்வேறு ஊர்களின் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட நகைகள் என தெரிய வந்தது.
வேனில் வந்த கடை மேலாளர் ஹரிகரன், காவலாளி பீட்டர்ஜோசப், டிரைவர் நாகராஜன் ஆகியோர் இதனை தெரிவித்தபோதும், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என அவை பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ. 2 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரத்து 377 மதிப்பிலான தங்க நகைகளும், ரூ. 7 லட்சத்து 52 ஆயிரத்து 818 மதிப்பிலான வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. #LokSabhaElections2019

தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் கமிஷன் விதிமுறைகள் குறித்து திருச்சியை சேர்ந்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது :-
பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட எல்லா வேட்பாளர்களின் வாக்குச் சாவடி ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மட்டுமே தங்கள் செல்போன்களை பயன்படுத்தலாம்.
அவர்கள் செல்போனை தேர்தல் அதிகாரிகள் எந்த நேரமும் தொடர்பு கொள்வார்கள். அதே சமயம் வாக்குச் சாவடி தலைமை அலுவலர் தங்கள் தேவைகளுக்கு உடனடியாக தொடர்புடைய அதிகாரிகளுடன் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும். வெளிநபர்களோ அல்லது வெளிநபர்களுக்கோ இந்த செல்போனில் இருந்து தொடர்பு கொள்ளக்கூடாது. இந்த செல்போன் எப்போதும் ஆன் செய்து இருக்க வேண்டும். வேறு செல்போன்களுக்கு வாக்குச்சாவடியில் கட்டாயமாக அனுமதியில்லை.
அதே சமயம் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குப் பதிவை கண்காணிக்கும் திட்டத்தை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன் படி வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் எஸ்.எம்.எஸ். குறியீடுகள் கொண்ட அட்டை, வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கு முன்பாகவே வழங்கப்படும்.
இந்த திட்டம் மூலம் வாக்குச்சாவடியின் செயல்பாடு குறித்த ஒவ்வொரு விவரமும், அதாவது முதல் நாள் வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடியை சென்றடைதல், வாக்குப்பதிவு பொருட்கள் சென்றடைதல், மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், ஒவ்வொரு நேரத்துக்கும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் வாக்குப் பதிவு விவரம் தெரிவித்தல், முக்கிய நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் மற்றும் வாக்குப்பதிவு நிறைவடைதல் ஆகியவற்றை குறிப்பிட்ட குறியீட்டின் மூலம் வாக்குப் பதிவு தலைமை அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் மாநில தலைமை தேர்தல் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.
எஸ்.எம்.எஸ். முறையில் பயிற்சி பெற ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அந்தந்த வாக்குச்சாவடியில் உள்ள வெப் கேமிரா ஆபரேட்டர் இருந்தால் அவரது உதவியுடன் தகவல்களை தெரிவிக்கலாம். அதனால் வாக்குச் சாவடி அலுவலர்கள் எஸ்.எம்.எஸ். தகவல் முறையை நன்கு அறிந்து கொண்டு அதற்குரிய வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #LSPolls
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி அலை ஓய்ந்து விட்டது. அவரால் இனி ஆட்சிக்கு வரமுடியாது. பசு மாட்டுக்கு கொடுக்கும் பாதுகாப்பு நமக்கு இல்லை. திராவிடர் கழகம் இந்தியாவை பற்றி கவலைப்படும் கழகம். நாங்கள் பதவி கேட்கவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். மூடிய பள்ளிகளை திறந்தவர் காமராஜர். அதேபோல் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் மருத்துவக்கல்லூரிகளை மாவட்டம் தோறும் உருவாக்கினார். ஆனால் தற்போது அந்த கல்லூரிகளில் நம் பிள்ளைகளுக்கு இடம் இல்லை.
2014-ம் ஆண்டு வேலை கிடைக்கும் என்ற உறுதியில் பா.ஜனதாவுக்கு இளைஞர்கள் வாக்களித்தனர். ஆனால் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. பா.ஜனதா வெற்றி பெற்ற பின் ரூ.15 லட்சம் தருவதாக மோடி கூறினார். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. தமிழகத்தை மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.

பா.ஜனதா கட்சி நோட்டாவுடன் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். #kveeramani #bjp #parliamentelection






