search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK election office"

    செங்கல்பட்டில் அதிமுக தேர்தல் அலுவலகம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு, திம்மராஜ குளம், ஜி.எஸ்.டி. சாலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதன் திறப்பு விழாவை வரும் நாட்களில் நடத்த அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் கீற்று கொட்டகை முழுவதும் தீப்பற்றி கரும் புகை ஏற்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த சேர்கள் மற்றும் பேனர்கள்எரிந்து நாசமானது.

    தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    டி.எஸ்.பி. கந்தன் மற்றும் போலீசார் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் குமார் செங்கல்பட்டுபோலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தேர்தல் அலுவலகத்தை மர்ம கும்பல் தீ வைத்து எரித்து இருப்பதாக கூறி உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×