என் மலர்
விழுப்புரம்
- சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் பகுதிக்கு உயர்ரக மது பாட்டில்கள் கடத்திய வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார், ஐ.ஜி. மயில்வாகனன், போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி உத்தரவின் பேரில் விழுப்புரம் மண்டல இன்ஸ்பெக்டர் சின்ன காமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஸ்வ நாதன் இணையத் பாஷா தலைமையில் போலீசார் பட்டானூர் நாவர்குளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான 2 சொகுசு கார்களை மடக்கி சோதனை செய்ததில் அதில் புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக கடத்திவரப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து செய்தனர். விசாரணையில் அவர் புதுச்சேரியை சேர்ந்த செங்குட்டுவன் மகன் பால முருகன் (25) என்பதும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக உயர்ரக மதுபாட்டில்களை கடத்தி செல்வதும் தெரிய வந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 6-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்த முயன்றனர்.
- ஆந்திர மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீஸ்காரர் கணேஷ் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம்:
ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா, பாக்ரா பேட்டை உள்ளிட்ட ஷேஷாசலம் வனப்பகுதியில் விலையுயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன. இந்த செம்மரங்கள் வெளிநாடுகளில் அதிக அளவு விலைபோவதால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த செம்மர வியாபாரிகள் தமிழக பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களை கொண்டு செம்மரங்களை வெட்டி எடுத்து கடத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டம் குண்ட்ரவாரி பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 6-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்த முயன்றனர். அப்போது அந்த கார் நிற்காமல் வழிமறித்த போலீஸ்காரர் மீது மோதி சென்றுவிட்டது. இந்த சம்பவத்தில் ஆந்திர மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீஸ்காரர் கணேஷ் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக செம்மர கடத்தல் கும்பல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கீழ்நிலவூர் பகுதியை சேர்ந்த ராமன் (வயது 31) உள்ளிட்ட 8 பேர் மீது ஆந்திர மாநிலம் கே.வி.பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள 6 பேரை தனிப்படை அமைத்து ஆந்திர மாநில போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2 தினங்களாக கல்வராயன்மலையில் முகாமிட்டு ஆந்திர மாநில போலீசார் தேடி வரும் நிலையில், முக்கிய குற்றவாளியான ராமன், விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அகிலா முன்பாக இன்று சரணடைந்தார்.
- போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
- தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.
கண்டமங்கலம்:
விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் ரெயில்வே கேட் சர்வீஸ் சாலை உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு ரக கார்களை ஏற்றி வந்த கனரக கண்டெய்னர் லாரி ரெயில்வே பாதையை கடக்க முற்பட்டது. கண்டமங்கலம் ரெயில்வே கிராசிங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் உயர் மின்னழுத்த பாதுகாப்பு தடுப்பு கட்டையை கடந்து செல்ல முடியாமல் கனரக வாகனம் பாதியிலேயே நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர்களுக்கு மேலாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் தனியார் பள்ளி, கல்லூரிகள் பஸ்களும் நெரிசலில் சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முற்பட்டனர்.
கண்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒரு புற வாகனங்களை மாற்று வழியில் திருப்பப்பட்டு சொகுசு கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை விழுப்புரத்திற்கு திருப்பி அனுப்பினர். பின்னர் கண்டமங்கலம் ரெயில்வே கேட் சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த திடீர் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
- கீழ் கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்து 500 அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
விழுப்புரம்:
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் அவரது உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2 பேரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த நிலையில் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ்தாஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, பிப்ரவரி 23-ந்தேதிக்குள்ளாகவோ அதற்கு முன்னரோ விசாரித்து முடிக்க வேண்டுமென விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ராஜேஷ்தாஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பவம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி தற்போது தனி மாவட்டமாகி விட்டது என்பதால் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, அம்மனுவை தள்ளுபடி செய்ததோடு ராஜேஷ்தாசின் மேல்முறையீட்டு மனுவை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமாவே விசாரிப்பார் என்று உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் இன்று (12-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ராஜேஷ்தாஸ் தரப்பில் வக்கீல்கள் பழனிவேல், ரவீந்திரன், ஹேமசந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள். நாங்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளோம். எனவே, காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அதனை நீதிபதி பூர்ணிமா ஏற்கவில்லை.
அதற்கான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கீழ் கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்து 500 அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.500 அபராத தொகையையும் உறுதி செய்து உத்தரவிட்டார்.
- மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் பொய்யாப்பாக்கம் புதுக்காலனியை சேர்ந்தவர் ராஜி (வயது 32).
இவரும் பில்லூர் பள்ளிக் கூட தெருவை சேர்ந்த பிரபாகரனும் மோட்டார் சைக்கிளில் முண்டியம்பாக்கத்திற்கு சென்றனர். அங்கு நடைபெற்ற உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்று நேற்று இரவு வீடு திரும்பினர்.
முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டிலிருந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முற்பட்டனர். அப்போது சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலமாக இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் சென்ற வழியிலேயே ராஜி உயிரிழந்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பிரபாகரன் இன்று அதிகாலை உயிரிழந்தார். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு அளித்திருந்தது.
- மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம். 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக,
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து 3 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து ராஜேஸ்தாஸ் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீடு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மேல் முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கை மாற்றக்கோரிய ராஜேஸ் தாசின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்காக ஜன.12-ந்தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி-க்கு உத்தரவிட்டார். மேலும் ஜன.18-ந்தேதி இறுதி விசாரணையை துவங்கி 24-ந்தேதிக்குள் முடிக்க விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
- பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள் பேரணியாக வந்து வரவேற்பு அளித்தனர்.
- அன்புமணி ராமதாஸ் உடனடியாக ஆம்புலன்ஸ் செல்வதற்காக, சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழியை ஏற்படுத்தினார்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ம.க. கட்சி கொடியை ஏற்ற பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து திண்டிவனத்திற்கு வந்தார். அவருக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள் பேரணியாக வந்து வரவேற்பு அளித்தனர்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியது.
இதனைக் கண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உடனடியாக ஆம்புலன்ஸ் செல்வதற்காக, சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழியை ஏற்படுத்தினார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.
- திண்டிவனம் நகராட்சியில், கடந்த 2 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
- ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல் கூறி இருப்பதாவது:-
திண்டிவனம் நகராட்சியில், கடந்த 2 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளதோடு, சாலைகள் முறையாக மறுசீரமைப்பு செய்யப்படாததன் காரணமாக ஏற்படும் புழுதியால் பொது மக்கள் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பொது மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அ.தி.மு.க. விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற 16-ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில், திண்டிவனம் ஆர்.எஸ். பிள்ளை வீதி, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. 2-ம் கட்ட தலைவர்கள் ரகசியமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை சேர்ப்பதற்கு நேரடியாக நடத்தப்பட்டிருக்கும் முதல் பேச்சுவார்த்தை இது என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
திண்டிவனம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனியாக கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய 2 கட்சிகளையும் மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் பா.ம.க. தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேல்சபை எம்.பி. சீட்டை தரும் கட்சியுடனேயே கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது. இதனை மனதில் வைத்தே அந்த கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை, அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நேற்று இரவு 7.45 மணி அளவில் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்ற சி.வி. சண்முகம், டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்.
சுமார் ½ மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்புவதாக இந்த சந்திப்பின்போது டாக்டர் ராமதாசிடம், சி.வி. சண்முகம் கூறி இருப்பதாக தெரிகிறது.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. 2-ம் கட்ட தலைவர்கள் ரகசியமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தங்களது கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை சேர்ப்பதற்கு திரைமறைவிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம், டாக்டர் ராமதாசை சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை சேர்ப்பதற்கு நேரடியாக நடத்தப்பட்டிருக்கும் முதல் பேச்சுவார்த்தை இது என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது என்னென்ன விவரங்கள் பேசப்பட்டன? என்பது பற்றி இரு தரப்பினரும் அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி தொடர்பாகவே பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாக 2 கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவித்து உள்ளன.
டாக்டர் ராமதாசுடனான இந்த பேச்சுவார்த்தைக்கு சி.வி.சண்முகத்தை எடப்பாடி பழனிசாமியே அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து சி.வி. சண்முகம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய விவரங்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற வேண்டுமென்றால் பா.ம.க.வுக்கு 12 தொகுதிகள் வரையில் தர வேண்டும் என்று அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ 7 இடங்களை தருவதாக கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் பா.ம.க.வுக்கு பாரதிய ஜனதா தருவதாக உறுதி அளித்திருக்கும் 7 தொகுதிகளைவிட கூடுதலாக 2 தொகுதிகளை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் ஏதும் இல்லாத நிலையில் பா.ம.க.வை தங்களது அணியில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே தி.மு.க. அணியை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதே அ.தி.மு.க.வின் எண்ணமாக உள்ளது.
கடந்த தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியிலேயே இடம் பெற்றிருந்தது. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் பா.ம.க.வை தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்வதற்கு அ.தி.மு.க. தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பலன் கிடைக்குமா? அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம்.
- தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏழுமலை தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
1972-ம் ஆண்டில் 11 லட்சம் தொண்டர்களுடன் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி வழிநடத்தினார். அனைத்து தரப்பு மக்களாலும் சாதி, மத வித்தியாசம் இன்றி இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட பல்வேறு சட்டவிதிகளை எம்.ஜி.ஆர். வகுத்துச்சென்றார்.
அவரது மறைவுக்குப் பிறகு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கொடுத்த பல்வேறு இடையூறுகளை தாண்டி 1½ கோடி தொண்டர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளராக 30 ஆண்டுகள் பணியாற்றி இந்த இயக்கத்தை வழிநடத்தினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
தற்போது எடப்பாடி பழனிசாமி, அடிப்படை தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்து கபளீகரம் செய்துள்ளார்.
இன்றைக்கு சாதாரண தொண்டர்கள், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கூடிய சட்டவிதியை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார். அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டருக்கும் உரிமையைப் பெற்றுத்தரும் நோக்கில், மாநிலம் முழுவதும் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள தொடங்கி, இதுவரை 24 மாவட்டங்களில் முடித்துள்ளேன்.
எஞ்சிய மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.
தமிழக முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்ற பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் என 8 தேர்தல்களை சந்தித்தார். அத்தனை தேர்தல்களிலும் தோல்வியைத்தான் கண்டார்.
ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம். ஆனால் இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை.
தற்போது கூட்டணிக்கு யாரேனும் வருவார்களா என கட்சித்தலைமை அலுவலகத்தில் கதவை திறந்து வைத்துக்கொண்டு தலைவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டணிக்கு வாருங்கள் வாருங்கள் என அழைத்தாலும், அவர்களை நம்பி யாரும் வருவதில்லை. அ.தி.மு.க.வில் இந்த நிலை உருவாக யார் காரணம். மிகவும் பரிதாப நிலையில் கட்சி உள்ளது.
தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர். இந்திய அரசியலில் தமிழ்நாடு அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக இருந்த காலம் மாறி விட்டது. தி.மு.க.வில் கருணாநிதி இருந்தார்.
இப்போது ஸ்டாலின் உள்ளார். பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, மாநில வக்கீல் அணி செயலாளரும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான செஞ்சி கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, விஜய் சிறந்த திரைப்பட நடிகர். புதிய கட்சியை தொடங்கி உள்ள அவருக்கு எங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எதிர்வரும் சவால்களை சமாளித்து தமிழக அரசியலில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் கூட்டணி அமைக்க இருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் பா.ஜனதாவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். 10 ஆண்டுகள் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.
உலகத்தில் இருக்கும் 20 வளர்ந்த நாடுகள், நரேந்திர மோடியின் நிர்வாகத்தையும், அயல்நாட்டின் அணுகுமுறையையும் பாராட்டியிருக்கிறார்கள். எனவே 3-வது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என்ற பொதுவான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக பா.ஜனதா பெரும்பான்மை பெற்று மீண்டும் மோடி, பிரதமராக வலம் வருவார் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏராளமான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கிடா விருந்தை மகிழ்ச்சியுடன் சுட சுட சாப்பிட்டனர்.
- சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
சின்னசேலம்:
நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம், நகரம் சார்பில் புதிய பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து நைனார்பாளையம் முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கிடா வெட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர்.
இதில் ஏராளமான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கிடா விருந்தை மகிழ்ச்சியுடன் சுட சுட சாப்பிட்டனர். இந்த விருந்து சின்னசேலம் ஒன்றிய தலைவர் செல்வசுதா, நகரத் தலைவர் கில்லி செல்வம், ஒன்றிய அமைப்பாளர் மகேந்திரன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது மேலும் கட்சி நிர்வாகிகளிடையே 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் ஏராளமான ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
- கோயம்பேட்டில் பசுமைப்பூங்கா அமைக்க வேண்டும்.
- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை.
விழுப்புரம்:
கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அங்கு லுலு மால் அமைப்பதாக வரும் தகவல்கள் வதந்தி என்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி விளக்கம் அளித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கோயம்பேட்டில் பசுமைப்பூங்கா அமைக்க வேண்டும்.
* கோயம்பேட்டில் வேறு ஏதாவது அமைத்தால் எதிர்ப்போம்.
* பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை.
* கூட்டணி குறித்து பா.ம.க. நிறுவனர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.






