search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது: அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
    X

    பாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது: அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

    • ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது.
    • தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளதைத்தான் அ.தி.மு.க. காப்பியடித்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசியதாவது:-

    இந்த தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு பெற வேண்டும்.

    அதேநேரத்தில் கடந்த 10 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். 10 ஆண்டுகளில் பா.ஜனதா எதையும் செய்யாத நிலையில் 3 ஆண்டுகளில் சொன்னதை செய்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது. சர்வாதிகாரியாக வேண்டுமென்று மோடி செயல்படுகிறார். தமிழன் தமிழன் என்று தமிழகம் வந்தால் பேசும் பிரதமர் மோடி, குடியுரிமை சட்டம் கொண்டு வந்து இலங்கையில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாத செயலைத்தான் அவர் செய்கிறார்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்தபோதே மார்ச் 19-ந் தேதியே சபாநாயகர், என்னை சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார். அதன் பிறகும் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை. கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நபராக உள்ளார். பதவிப்பிரமாணம் செய்யவில்லை என்றால் கவர்னர் மீது நடவடிக்கை எடுப்பேன் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கூறியதை தொடர்ந்துதான் எனக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    அமலாக்கத்துறையை கையில் வைத்துக்கொண்டு முதலமைச்சரையே கைது செய்துள்ளவர்கள்தான் பா.ஜனதா அரசு. அமலாக்கத்துறையை அனுப்பித்தான் பா.ஜனதாவிற்கு ரூ.2,500 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளதைத்தான் அ.தி.மு.க. காப்பியடித்துள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது கூட நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்துவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் டாக்டர் பொன்.கவுதம சிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×