search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பையில்லா மாவட்டமாக உருவாக்கிட  பொதுமக்கள் அனைவரும்  முழு ஒத்துழைப்பு தர வேண்டும்-  தருமபுரி கலெக்டர் வேண்டுகோள்
    X

    ஆலோசனை கூட்டத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்ட காட்சி.

    குப்பையில்லா மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்- தருமபுரி கலெக்டர் வேண்டுகோள்

    • துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • தருமபுரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தருமபுரி நகராட்சியின் சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் எனது குப்பை எனது பொறுப்பு என்பதை தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் முழுமையாக செயல்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையேற்று துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசு, தனது வளர்ச்சிக்கான திட்டத்தில், நகரத் தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

    சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் பொருட்டு நகரங்களில், பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட உத்தரவிட்டு, இம்முகாம்களில் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு ஊக்கப்படுத்திடவும் ஆணையிட்டுள்ளது.

    எனவே துறை அலுவலர்கள் இது குறித்து விழிப்புணர்வை முழுமையாக ஏற்படுத்துவதோடு, நாடும் நகரமும் தூய்மையானால் நமக்கு தான் பெருமை என்பதை உணர்ந்து, துறை அலுவலர்கள் உள்ளார்ந்த எண்ணத்தோடு சிறப்பாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திடுவதோடு, குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க அனைவரும் முன்வர வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர்சாந்தி தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், உதவி இயக்குநர் குருராஜன், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர் சாமுவேல் ராஜ்குமார், தருமபுரி நகராட்சி செயற்பொறியாளர் ஜெயசீலன், உட்பட தொடர்புடைய அலுவலர்கள், தொண்டு நிறுவன உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×