என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • கடந்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    திருவாரூர்:

    சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும், தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 87-வது தலமாகவும் விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசை யாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர், கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார்.

    பின்னர், இன்று காலை பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன், போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் இழுக்கப்பட்டன.

    ஆழித்தேரில் சுமார் 425 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு இருந்த 4 வடங்களை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா.. தியாகேசா... பக்தி கோஷம் விண்ணதிர பிடித்து இழுத்து சென்றனர்.

    தேரின் முன்பாக சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களை இசைத்தவாறும், தேவார திருமுறைகள் ஓதியவாறும் வீதிஉலா சென்றனர். ஆழித்தேரானது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக இழுத்து வரப்பட்டு மாலை நிலையை அடையும்.

    ஆழித்தேரோட்டதை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் தலைமையில், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர், நடமாடும் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோரும் தயார் நிலையில் இருந்தனர்.

    மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடை பெறுவதால் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, அதுகுறித்து மாவட்ட போலீஸ் துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    ஆழித்தேரோட்டதை யொட்டி மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார். பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்வை காண டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • ராஜகோபாலன் மீது வெண்ணையை வீசி அன்பை பொழிந்தனர்.
    • நாளை காலை தேரோட்டம்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் பெருமாள் சன்னதியில் மூலவராக பரவாசுதேவ பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    உற்சவராக ராஜகோபால சுவாமி, ருக்மணி, சத்தியபாமா சமேதராக மாடு மேய்க்கும் கண்ணன் திருக்கோலத்திலும், செங்கமலத் தாயார் தனி சன்னதியிலும் அருள்பாலித்து வருகின்றனர்.

    பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் உற்சவம் நடக்கும் கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் ஒரு மாத திருவிழா இக்கோவிலின் முக்கியமான விழாவாகும். அப்போது 18 நாட்கள் உற்சவமும், 12 நாட்கள் விடையாற்றியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெரிய கொடிமரத்திற்கு பூஜைகள் நடைபெற்று, கருட பகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது. இதனை காண தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத் தாழி உற்சவம் இன்று (புதன்கிழமை) காலை விமரிசையாக நடந்தது. இதையொட்டி காலை நவநீத சேவையில் ராஜகோபாலன் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு 4 வீதிகளையும் வலம் வந்து, பெரிய கடைத்தெரு வழியாக சென்று காந்தி ரோட்டில் உள்ள வெண்ணெய் தாழி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    வீதிஉலா சென்ற வழியெங்கும் பக்தர்கள் அலைகடலென திரண்டு தவழும் கண்ணனாக வரும் ராஜகோபாலன் மீது வெண்ணையை வீசி அன்பை பொழிந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வெண்ணையை வீசி வழிபட்டதால் மன்னார்குடி நகரமே விழாக்கோலம் பூண்டது.

    அதனைத் தொடர்ந்து, இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருகிறார். தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.
    • மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது.

    திருவாரூரில் வானில் திடீரென ஒலித்த பலத்த சத்தத்தால் மக்கள் பீதியமடைந்துள்ளனர். சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.

    மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது. சத்தம் கேட்ட அதே நேரத்தில் விமானமும் சென்றதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி காரணமாக சத்தம் எழுந்ததாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனம் விளக்கம் அளித்துள்ளார்.

    மேலும், "பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட்டனர்" என்றார்.

    • மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
    • போலீசார் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ வீதம் 200 பார்சல்கள் சுமார் 400 கிலோ உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாகவும், சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் அதிரடியாக தனியார் தங்கும் விடுதியில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த பால கோலானு விஷ்ணுவர்த ரெட்டி என்பவரின் ஆதார் அடையாள அட்டையை கொடுத்து இந்த தனியார் தங்கும் விடுதியில் 2 கார்களில் வந்த 5 பேர் தங்கியுள்ளது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் கைது செய்தனர்.

    மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தங்கும் விடுதிக்குள் சென்ற போது, 5 பேரை அழைத்துச் செல்வதற்காக வந்த நபர் அங்கிருந்து தப்பி விடுதியின் கேட்டில் ஏறி சாலையில் ஓடிவிட்டார்.

    அவரை பின்தொடர்ந்து போலீசார் ஒருவரும் விரட்டி பிடிக்க முயற்சி செய்கிறார். இந்த சி.சி.டி.வி. காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போலீசார் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ வீதம் 200 பார்சல்கள் சுமார் 400 கிலோ உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கஞ்சா முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் வழியாக படகு மூலமாகவும் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து படகுகள் மூலமாகவும் இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் தெரிகிறது.

    மேலும் இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த இந்த நபர்களிடமிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சாவை பெற்று இலங்கைக்கு அனுப்பி இருக்கலாம் என்கிறரீதியிலும் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேரிடம் தனியார் தங்கும் விடுதியில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா தொடர்ந்து எவ்வாறு பல சோதனை சாவடிகளை கடந்து எடுத்து வரப்படுகிறது என்பது குறித்தும் இதுவரை இந்த கும்பல் எத்தனை முறை இதே போன்று இலங்கைக்கு கஞ்சா கடத்தி இருக்கிறது என்பது குறித்தும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று திருவாரூர் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 50 சதவீதம் டாக்டர்கள் இல்லை.
    • அரசால் வினியோகிக்கப்படும் சத்துமாவு குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படவில்லை.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்துள்ள ஜாம்புவானோடையில் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது.

    இங்கு ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு நேற்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்க சசிகலா வருகை தந்தார். முன்னதாக அவர் சேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுடன் ஒன்றாக அமர்ந்து இப்தார் நோன்பு திறந்தார்.

    பின்னர், சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடக்கும் 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஏதும் முழுமையாக நடைபெறவில்லை. தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 50 சதவீதம் டாக்டர்கள் இல்லை.

    இதனை நான் அடிக்கடி கூறிய பிறகு, தற்போது கிராம சுகாதார நிலையங்களில் சுமார் 2 ஆயிரத்து 500 டாக்டர்களை அரசு நியமனம் செய்துள்ளது. ஆனால், அவர்களின் கீழ் பணிபுரியும் செவிலியர்களை இன்னும் நியமனம் செய்யவில்லை.

    அரசால் வினியோகிக்கப்படும் சத்துமாவு குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படவில்லை. ஏழைகளுக்கு பயன்படுகிற எந்த வசதியையும் தி.மு.க. அரசு சரிவர செய்யவில்லை, 5 ஆண்டுகளுக்கு நமக்கு லைசன்சு கொடுத்து விட்டனர், நம்மை யாரும் எதுவும் கேட்ட முடியாது என தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    நமது பணிகளை, செயல்திட்டங்களை திறம்பட செய்துவிட்டு, மத்திய அரசிடம் நிதி கேட்டல் நியாயம். ஆனால், அதற்கு மாறாக குழாய் அடி சண்டை போல மத்திய, மாநில அரசுகள் மோதிக்கொள்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக்கூடாது.
    • ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை சேர்த்தார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பின்னர், உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்திற்கு இதுவரை 3 முறை அரசு முறை பயணமாக வந்துள்ளேன். அரசு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் திருப்திகரமாக உள்ளது.

    திருத்துறைப்பூண்டி நகரில் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் முதல்வர் விளையாட்டு அரங்கம் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், திருவாரூரில் ரூ.18 கோடி மதிப்பில் 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    திருத்துறைப்பூண்டி வீரன் நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் வீட்டு மனை கேட்டு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற முதலமைச்சர் 77 குடும்பத்தினருக்கு பட்டா வழங்குவது மட்டுமல்லாமல் ரூ.5 லட்சம் மதிப்பில் அவர்களுக்கு வீடும் கட்டித்தர உத்தரவிட்டு உள்ளார்.

    ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு ஆகியவற்றை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதால் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருகிறது.

    குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக்கூடாது. நாங்கள் நீட் தேர்வுக்கு கிட்டத்தட்ட 1 கோடி கையெழுத்து வாங்கினோம். அப்போது பள்ளி மாணவர்களை தவிர்த்துவிட்டு தான் கையெழுத்து வாங்கினோம்.

    ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை சேர்த்தார்கள். அதனுடைய தொடர்ச்சியாக இதை பார்க்கிறேன் என்று கூறினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மார்ச் 8-ந்தேதி முதலமைச்சர் ரூ. 3,019 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க உள்ளார்.
    • ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி வங்கி கடனாக பெற்று தந்துள்ளோம்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகிலுள்ள பழவனக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் குழு கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்களை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    சுய தொழில் தொடங்க ஊக்குவிப்பது வங்கி கடன் வழங்குவது என துறைக்கு அமைச்சராக, முதலமைச்சர் இருந்தபோது பல்வேறு முன்னேற்றங்களை செய்துள்ளார்.

    கிராமப்புறங்களில் 3.30 லட்சம் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1.50 லட்சம் என மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரம் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

    இதில் 54 லட்சம் மகளிர்கள் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர். இந்த அரசு பொறுப்பேற்ற நாட்களில் இருந்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி வங்கி கடனாக பெற்று தந்துள்ளோம்.

    மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8-ந்தேதி சென்னையில் முதலமைச்சர் ரூ. 3,019 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க உள்ளார்.

    இப்படி வழங்கப்படுகின்ற இந்த கடன்களை எந்த அளவிற்கு பயனுள்ள வகையில் செலவிடுகின்றார்கள்.

    அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது ஆய்வு செய்ய வேண்டும், அவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்.

    குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் வாழ்வாதார மேம்பாடு, மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமத்தில் இந்த ஆய்வினை தொடங்கி உள்ளோம்.

    இங்குள்ள 30 குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் தங்களது செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டனர்.

    அது மட்டுமல்லாமல் உள்ளூர் தேவைகளாக வாய்க்கால்கள் தூர்வார வேண்டும், பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும், பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திராவிட மாடல் அரசு அமைய காரணமாக இருந்த பெண்களை சந்தித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார்.
    • திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார். இதனையொட்டி இன்று, நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருவாரூர் மார்க்கமாக நாகைக்கு செல்ல இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

    இதை மீறி இந்த வழிதடத்தில் சிவில் ரிமோட் பைலட் விமான அமைப்பு மற்றும் டிரோன் கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • பச்சைப்பயிர் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
    • சம்பா பயிரானது அறுவடை நேரத்தில் மழையினால் சாய்ந்து சேதம் அடைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடைக்குப் பிறகு பச்சைபயிறு சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாகுபடிக்கு முற்றிலும் தண்ணீர் தேவைப்படாது. தற்பொழுது 35 நாட்களான பச்சைப் பயிறு சங்கு வைத்து பூக்கும் தருவாயில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பகல் முழுவதும் விட்டு விட்டு மழை கொட்டியது. இன்று 2-வது நாளாகவும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாகுபடி வயல்களில் பச்சைப் பயிர்களை தண்ணீர் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் பச்சைப்பயிர் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பூக்கள் அனைத்தும் கொட்டி பழுப்பு நிறத்தில் மாறியுள்ளது.

    குறிப்பாக கமலாபுரம், வடபாதிமங்கலம், கொரடாச்சேரி, கூத்தா நல்லூர், கோட்டூர், பூந்தாலங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான பயிர் செடிகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா பயிரானது அறுவடை நேரத்தில் மழையினால் சாய்ந்து சேதம் அடைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு பச்சைப் பயிறு சாகுபடி செய்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு டானிக் மற்றும் பூச்சி மருந்துகள் சுமார் ரூ.4000-க்கு தெளித்து செலவு செய்தோம். எனவே அரசு உடனடியாக பாதிப்புகளை பார்வையிட்டு பயிர் காப்பீட்டு தொகை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    • மொழி மூலம் பிரிவினையை உருவாக்குவது மாநில அரசு அல்ல, மத்திய அரசுதான்.
    • மும்மொழி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வருகை தந்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக அரசு இருமொழி கொள்கையை கடைபிடிப்பது என்பது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வந்த பிறகு நடைபெறவில்லை. காமராஜர், அண்ணா காலங்களில் இருந்து தற்போது வரை இருமொழி கொள்ளை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    மத்திய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை திணிக்கவும், இந்தி பேசுகிற மாநிலங்களில் சமஸ்கிருத்தை திணிக்கவும் மும்மொழி கொள்கையை கொண்டு வர நினைக்கிறது. மொழி மூலம் பிரிவினையை உருவாக்குவது மாநில அரசு அல்ல, மத்திய அரசுதான். எனவே, மும்மொழி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

    5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி கொடுத்துவிட்டு, கேரளா மற்றும் தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதி வழங்காதது பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களை தண்டிப்பது போன்றதாகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக உள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு, மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது எதற்கு? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நூற்றுக்கணக்கான லாரிகள் நீண்ட தூரத்திற்கு சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.

    மன்னார்குடி:

    கட்டுமான தொழிலுக்கு பயன்படும் பி சாண்ட், எம் சாண்ட், ஜல்லி, அரளை உள்ளிட்ட பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை கண்டித்தும் விலையேற்றத்திற்கு காரணமான கிரஷர் கம்பெனிகளை கண்டித்தும் , தமிழக அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தும் விதமாகவும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஒப்பந்தக்காரர்கள் கூட்டமைப்பு அகில இந்திய கட்டுனர் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று கரூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து எம் சாண்ட் ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளை மன்னார்குடி அருகே உள்ள கோவில்வெண்ணி, செருமங்கலம், காரிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்தக்காரர்கள் ஏராளமானோர் திரண்டு மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக நூற்றுக்கணக்கான லாரிகள் நீண்ட தூரத்திற்கு சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து லாரிகள் அங்கேயே நிற்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இதற்கான பாராட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.
    • சான்றிதழை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கினார்.

    முத்துப்பேட்டை:

    இந்தியாவிலேயே சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் சான்றிதழ் வழங்கினார்.

    மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களின் பணிகளையும் ஆராய்ந்து போலீஸ் நிலையங்களின் வருடாந்திர தர வரிசையில் சிறந்த போலீஸ் நிலையமாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தை மத்திய அரசு தேர்வு செய்யப்பட்டு அங்கீகரித்துள்ளது.

    இதற்கான பாராட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. இதனையொட்டி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார், அதற்கான சான்றிதழை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கினார்.

    அப்போது தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிலிப் பிராங்களின் கென்னடி மற்றும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் கூறுகையில்:-

    இன்றியமையாத காவல் துறை பணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தையும் முறையாக கையாண்டு, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறையின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத முயற்சிகளுக்கும் நான் மனதார பாராட்டுகிறேன் என்றார்.

    ×