என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று ஆழித்தேரோட்டம் கோலாகலம்
    X

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று ஆழித்தேரோட்டம் கோலாகலம்

    • கடந்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    திருவாரூர்:

    சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும், தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 87-வது தலமாகவும் விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசை யாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர், கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார்.

    பின்னர், இன்று காலை பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன், போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் இழுக்கப்பட்டன.

    ஆழித்தேரில் சுமார் 425 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு இருந்த 4 வடங்களை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா.. தியாகேசா... பக்தி கோஷம் விண்ணதிர பிடித்து இழுத்து சென்றனர்.

    தேரின் முன்பாக சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களை இசைத்தவாறும், தேவார திருமுறைகள் ஓதியவாறும் வீதிஉலா சென்றனர். ஆழித்தேரானது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக இழுத்து வரப்பட்டு மாலை நிலையை அடையும்.

    ஆழித்தேரோட்டதை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் தலைமையில், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர், நடமாடும் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோரும் தயார் நிலையில் இருந்தனர்.

    மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடை பெறுவதால் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, அதுகுறித்து மாவட்ட போலீஸ் துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    ஆழித்தேரோட்டதை யொட்டி மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார். பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்வை காண டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    Next Story
    ×