என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.
    • தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாஞ்சோலையில் 16 மணி நேர வேலை, குடியிருப்புகளை பழுது பார்க்காதது உள்ளிட்ட 20 பிரச்சனைகளை முன்நிறுத்தி கடந்த 1997-ம் ஆண்டு புதிய தமிழகம் போராட்டம் நடத்தியது.

    மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 6 தலைமுறையாக 1929-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து விருப்ப ஓய்வு பெறுவதாகவும், கடந்த 15-ந்தேதி முதல் பணிநிறைவு பெற்று விட்டதாகவும், அடுத்த மாதம் 7-ந்தேதிக்குள் வீடுகளை காலி செய்யவும் அந்த தனியார் நிறுவனம் தவறான செயலை செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    மாஞ்சோலையை விட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 45 நாட்களில் வெளியேற வேண்டும் என தனியார் நிறுவனம் நிர்பந்தப்படுத்தி உள்ளது. தொழிலாளர்கள் தங்களை வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறி இதுகுறித்து புகார் தெரிவிக்க மாவட்ட கலெக்டரிடம் சென்றனர். ஆனால் அவர் அவர்களை உதாசீனப்படுத்தி உள்ளார்.

    முதலமைச்சர் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் நேரடியாக பார்க்க முடியாது. முதலமைச்சருக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பாக இருக்க கூடியவர் கலெக்டர்தான். ஆனால் அவரே தொழிலாளர்களை உதாசீனப்படுத்தியது தவறு.

    ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். பேசி முடிக்க வேண்டிய செயலை பிரச்சனையாக்கி உள்ளார். எனவே மாஞ்சோலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும். தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் தொழிலார்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்காத போது அவர்களிடம் தனித்தனியாக பேசி கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தனியார் நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிமுத்தாறு அருவிக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள்.
    • கடந்த 6 நாட்களுக்கு முன்பு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்தது.

    இந்நிலையில் மணிமுத்தாறு அருவிக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள்.

    இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்தனர். அருவியில் தண்ணீர் வரத்து இன்று காலை முதலே குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    • ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கமிஷனரிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை வழங்கினர்.
    • மேயர், கவுன்சிலர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேரும் இருக்கின்றனர்.

    மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த சரவணன் இருந்து வருகிறார். அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து அவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    இதனால் பலமுறை மாநகராட்சி கூட்டங்கள் உள்ளிட்டவற்றை கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் மக்கள் திட்ட பணிகள் நடைபெறாமல் முடங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கமிஷனரிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை வழங்கினர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மாநகராட்சிக்கு நேரில் வந்து அனைவரையும் சமாதானப்படுத்தி சென்றனர்.

    ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்து மேயர், கவுன்சிலர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


    இந்த கூட்டத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மீதமுள்ள கவுன்சிலர்கள் மேயர் சரவணனை கண்டித்து புறக்கணித்தனர்.

    இந்நிலையில் தி.மு.க தலைமையகத்தில் இருந்து மேயர் சரவணனுக்கு அழைப்பு வந்ததன் பேரில் அவர் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டு உள்ளார்.

    அவரை அமைச்சர் கே.என். நேரு நேரில் அழைத்து மாநகராட்சி பிரச்சனை குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். இந்நிலையில் தற்போது மேயர் சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் வழங்கி விட்டதாக பரவலான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சி தலைமையால் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், புதிய மேயரையும் கட்சியே அறிவிக்கும் என்றும் தகவல்கள் பரவலாக இருந்து வருகிறது.

    • பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
    • மாஞ்சோலை செல்வதற்கு வனத்துறை சார்பில் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி ஆகஸ்டு 7-ந் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை உறுதிப்படுத்தப்படும் வரை தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஏற்கனவே தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டதால் தொழிலாளர்கள் கடந்த 15-ந் தேதி முதல் வேலையின்றியும், ஊதியம் இல்லாமலும் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கி உள்ளனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் புதிய தமிழக கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதற்காக சென்றார். அப்போது அவரது காரை மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவரது கட்சியினர் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    மாஞ்சோலை செல்வதற்கு வனத்துறை சார்பில் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணசாமி மற்றும் அவரது கட்சியினர் உரிய அனுமதி இல்லாமல் அதிகமான வாகனங்களில் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடன் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • 10 ஆண்டு காலமாக இதே நிலை தான் நீடித்து வருகிறது.
    • இந்தியா வலுவான கட்டமைப்பு உள்ள நாடு.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்த பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடுமுடியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலமாக நாங்குநேரி, ராதாபுரம் வட்டத்தில் சுமார் 16 கிராம மக்கள் பயன் அடைவார்கள். விவசாயிகள் சிக்கனமாக தண்ணீரை செலவழித்து நல்ல முறையில் கார் பருவ சாகுபடி செய்ய வேண்டும்.

    இலங்கை அரசு நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களையும், அவர்களது படகுகளையும் சிறைபிடித்துள்ளனர். இந்தியா வலுவான கட்டமைப்பு உள்ள நாடு. ஆனால் இலங்கை போன்ற சிறுநாடுகள் இந்திய மீனவர்களை அடிக்கடி கைது செய்து வரும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பும் மீனவர்கள் கைது செய்யப்படும் நிலை இருந்த போதிலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், அப்போதைய மேலவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு சென்று மீனவர்களின் படகுகளை திரும்ப கொடுக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்.

    அதன் விளைவு இன்றளவும் மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்படாத ஒன்றாக இருந்து வருகிறது.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதியும், மத்திய அரசும், பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் அதனை பொருட்டாக எடுக்காமல், அந்த கோரிக்கையை பரிசீலனை கூட செய்வது இல்லை. 10 ஆண்டு காலமாக இதே நிலை தான் நீடித்து வருகிறது.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். அவர் மீனவர்களையும், மீன்வளத்துறை அதிகாரிகளையும், இலங்கை அரசின் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

    இதற்கு முன்பு கச்சத்தீவை தாண்டி சென்றால் தான் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்யும். மேலும் வழக்கமாக நாட்டுப்படகை பிடிக்கமாட்டார்கள். ஆனால் தற்போது அதனையும் சிறை பிடிக்கின்றனர் என்றால், மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தேயிலை நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாஞ்சோலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு நிலம், வீடு வழங்க வேண்டும், வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வருவாய்துறை, வனத்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் தேயிலை நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    • குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.
    • வில்லுப்பாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று.

    நெல்லை:

    தமிழகத்தில் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை மீறி பல மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத குழந்தைகள் சிலருக்கு குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.

    அந்த வகையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவுக்கு உட்பட்ட பாப்பாக்குடி பகுதியில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    எனவே அந்த பகுதியில் உள்ள சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழந்தை திருமணங்களை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    இதுபோன்ற விஷயங்களில் அதிகாரிகள் வழக்கமாக பள்ளி மாணவர்களை கொண்டும், தன்னார்வலர்களை கொண்டும் விழிப்புணர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.

    ஆனால் சற்று வித்தியாசமாக குழந்தை திருமணங்களை தடுக்க நெல்லையை சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவர் தானே களத்தில் இறங்கி கிராமிய கலையான வில்லுப்பாட்டு மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

    நெல்லையை அடுத்த தச்சநல்லூரை சேர்ந்தவர் கோமதி கிருஷ்ணமூர்த்தி. இவர் குரூப்-4 தேர்வு மூலம் தமிழக அரசுத்துறையில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த பதவி உயர்வு பெற்று தற்போது நெல்லை மாவட்டம் முக்கூடல் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வருவாய் கட்டுப்பாட்டில் தான் பாப்பாக்குடி கிராமம் அமைந்துள்ளது.

    அங்கு அதிக குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை அறிந்து வேதனை அடைந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். இதற்காக அவரே களத்தில் இறங்கி கிராமிய கலையான வில்லுபாட்டை பாடி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு சென்றார்.

    இந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பள்ளிகளில் வருவாய் ஆய்வாளர் கோமதி கிருஷ்ணமூர்த்தி வில்லுப்பாட்டு மூலம் மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

    வில்லுப்பாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று. அந்த கலை நயத்தை சற்று கூட குறைவில்லாமல் அதிகாரியாக இருந்தாலும் வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்ற கலைஞரை போன்று கோமதி கிருஷ்ணமூர்த்தி வில்லு பாடகியாகவே மாறி இருப்பார்.

    இதற்காக பிரத்யேகமாக வில்லு கலைக்கு தேவைப்படும் மண்பானை, வில்லு வீசுகோல் ஆகியவற்றை அவரே தயார் செய்து வைத்துள்ளார். அவருடன் சேர்ந்து சமூக நலத்துறையை சேர்ந்த சமூகநலத்துறை அலுவலரான பத்மா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து வில்லுப்பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் போதை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய தினம் கோமதி கிருஷ்ணமூர்த்தி முக்கூடலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தானே வேடமிட்டு நாடகம் ஒன்றை நடத்தி இருந்தார். அதில் எமதர்மராஜா வேடம் போட்டு மது, கஞ்சா போன்ற போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து தத்ரூபமாக நடித்துக் காட்டி இருந்தார்.

    இது குறித்து கோமதி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, `பாப்பாக்குடி பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறுவதாக அதை தடுக்க வேண்டும் என நாங்கள் வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    பொதுவாக நான் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் இதுபோன்ற பொது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் வைத்திருப்பேன். எனவே கிராமிய கலையான வில்லுப்பாட்டு மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் எளிதில் புரியும் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறேன் என்று கூறினார்.

    • குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.
    • மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் தொடர்மழையால் பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 100 அடியை எட்டிய அந்த அணையில் இன்று மேலும் 2 அடி நீர் இருப்பு அதிகரித்து 102 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது.

    ஆனாலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில், இன்று 2 ஆயிரம் அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 806 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 115.81 அடியாக உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 78.64 அடி தண்ணீர் உள்ளது. திருக்குறுங்குடி அருகே உள்ள 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் 20 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. அந்த அணையில் இருந்து கார் பருவ சாகுபடி பணிக்காக வருகிற 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே மலைப்பகுதிகளில் மழை குறைந்தாலும், தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால், மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று 4-வது நாளாக தடை நீடிக்கிறது.

    அதே நேரம் களக்காடு மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கடந்த 26-ந்தேதி முதல் தலையணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி மாவட்டத்திலும் மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது. எனினும் அணைகளுக்கு நீர் வரத்து இருப்பதால், அவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 76 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 2 அடி உயர்ந்து 92 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் அதிகபட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்தது.
    • தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகள் மற்றும் அருவிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றும் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக 143 அடி உயரம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்தது. நேற்று 97.50 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று மேலும் 2.5 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 99.90 அடியாக இருந்தது. தொடர்ந்து பிற்பகலில் 100 அடியை எட்டியது. கடந்த 3 நாட்களில் 14 அடி உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று இரவு முதல் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 2,576 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதேபோல் 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 78.64 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 7 அடி உயர்ந்து 112 அடியாகவும், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 114.76 அடியாகவும் உள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நாலு முக்கில் 42 மில்லி மீட்டர், ஊத்து பகுதியில் 33 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதிகளில் 24 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 9 மில்லி மீட்டரும் மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதி நீர்மட்டம் நேற்று 4 அடி உயர்ந்து 57 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 59 அடியாக உள்ளது.

    84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 75 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 37.40 அடியாகவும் உள்ளது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 80 அடியாக இருந்த நிலையில் நேற்று 5 அடி உயர்ந்து 85 அடியாகவும், இன்று மேலும் 5 அடி உயர்ந்து 90 அடியாகவும் உள்ளது.

    கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.50 அடியாகவும், நேற்று 50.50 அடியை எட்டிய நிலையில் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்துள்ளது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடியே உள்ளது.

    அம்பை வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடை உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.

    • இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான களக்காடு, மூலக்கரைப்பட்டி, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், நாங்குநேரி, ராதாபுரம், அம்பை உள்ளிட்ட இடங்களில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது.

    ஒரு சில இடங்களில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. மாநகரிலும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று வரை 2800 கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு வரை சுமார் 18 மில்லிமீட்டர் மழை கொட்டியதால் இன்று காலை நீர் வரத்து அதிகரித்து 4912 கனஅடியாக உள்ளது.

    அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் சுமார் 6 அடி உயர்ந்து 97.15 அடியை எட்டியுள்ளது. சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதால் ஓரிரு நாட்களில் அணை கொள்ளளவு 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 7 அடி உயர்ந்து 112.53 அடியை எட்டியுள்ளது.

    கடந்த 2 நாட்களில் அணை நீர் இருப்பு சுமார் 13 அடி அதிகரித்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78.44 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1033 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கொடுமுடியாறு அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 2 அடி மட்டுமே நீர் தேவைப்படுகிறது. 52.50 அடி கொண்ட அந்த அணையில் 50.50 அடி நீர் இருப்பு உள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 12.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், கார் பருவ சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வழக்கத்திற்கு மாறாக விரைவாகவே பாளை யங்கால்வாய் வரையிலும் வந்து சேர்ந்துவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணியை தொடங்கி உள்ளனர்.

    வழக்கமாக பாளை யங்கால்வாய்க்கு தாமதமாக தண்ணீர் வரும். இதனால் ஒரு போகம் மட்டுமே நெல் விளைவிக்க முடியும். ஆனால் இந்த முறை 2 போகம் நெல் விளையும் என்பதால் விவசாயிகள் துரிதமாக நடவு பணி செய்து வருகின்றனர்.

    மாநகரை கடந்து ஏராளமான பகுதிகளில் தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பண்படுத்தும் உழவு பணி முழுவீச்சில் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு பணிகள் நடந்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வேகம் எடுத்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பால் அவற்றின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 57 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 172 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து இன்று 74 அடியாக உள்ளது. அந்த அணையில் இருந்து விவசாயத்திற்காக 60 கனஅடி நீர் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு 136 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குண்டாறு அணை முழு கொள்ளளவான 36 அடியை எட்டி 2-வது நாளாக நிரம்பி வழிகிறது.

    மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 85 அடியை எட்டியுள்ளது. நேற்று 80 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. குண்டாறு, அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தலா 20 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி, செங்கோட்டை, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் அதிகபட்சமாக 26.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    சிவகிரியில் 8 மில்லிமீட்டரும், தென்காசி யில் 7.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டம் முழுவதும் கார் சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்த விசாரணையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 2 பேர் ஆஜராகினர்.
    • முழுமையாக நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னரே சி.பி.சி.ஐ.டி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையிலும் உறுதியான முடிவுக்கு வர முடியாமல் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் திணறி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜெயக்குமார் தனது கைப்பட எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்த விசாரணையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 2 பேர் ஆஜராகினர்.

    இதுவரை சுமார் 50 பேரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறுகையில், இந்த வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதே நேரத்தில் அவரது உடல் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை.

    அவை முழுமையாக நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னரே சி.பி.சி.ஐ.டி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.

    அந்த அறிக்கைகள் முழுமையாக கிடைத்த பின்னரே இறுதியாக ஒரு முடிவுக்கு வர முடியும் என்றனர்.

    • பாபநாசம் அணை பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் வாட்டிய நிலையில், பிற்பகலில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.

    இதனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை, டவுன் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பரவலாக பெய்தது.

    மாவட்டத்தில் சேரன்மகா தேவி, கன்னடியன் கால்வாய் பகுதிகளில் மட்டும் சாரல் அடித்தது. களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    மேலும் இதமான காற்றும் வீசியது. இதனால் குளிர்ச்சி யான சூழ்நிலை நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. பிற்பகலில் தொடங்கி இரவிலும் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 9 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 3.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 88.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 98 அடியாக இருந்த நிலையில் இன்று 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,258 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கார் பாசனத்திற்காக 804 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 77.49 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணையில் 3.8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கார் சாகுபடிக்கான பணியில் அவர்கள் ஆர்வமுடன் இறங்கி உள்ளனர்.

    மேலும் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணி முத்தாறு அருவி, களக்காடு தலையணை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால், அதில் குளிக்க சுற்றுலாp பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தமிழகத்தில் அதிக மழை பொழியும் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலையில் கனமழை பெய்துள்ளது. அங்குள்ள ஊத்து எஸ்டேட்டில் இன்று காலை வரை 6.8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நாலுமுக்கில் 6.6 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 56 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை யில் 4.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கும் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக ராமநதி அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. நேற்று 66 அடியாக இருந்த நிலையில், இன்று 69 அடியாக அதிகரித்துள்ளது.

    அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 71 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 30 அடியை கடந்துள்ளது. 36 அடி கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 33 அடியை எட்டியுள்ளது. இதனால் இன்னும் ஒருசில நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக அடவிநயினாரில் 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடனா மற்றும் ராமநதியில் தலா 10 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் திடீர் சாரல் மழை பெய்தது. இரவிலும் விட்டு விட்டு சாரல் அடித்தது. செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 4.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதே நேரம் அவ்வப்போது லேசான மேகமூட்டமும், காற்றும் வெயிலை தணித்து வந்தது. அதன்படி நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

    ×