என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்தியும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய 8 டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அழைப்பு விடுத்தது.

    இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், இயக்கத்தினர், அமைப்பினர், வணிகர் சங்கத்தினர், மாணவர் அமைப்பினர் முழு ஆதரவு தெரிவித்தனர்.

    அதன்படி இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் காய்கறி, மளிகை, ஓட்டல், செல்போன், பேன்சி, அரிசிக்கடை உள்பட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டன.

    தஞ்சையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பர்மா பஜார், கீழவாசலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் நகரில் பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டன. காமராஜர் மார்க்கெட், உழவர் சந்தை மூடப்பட்டதால் வெறிச்சோடின.

    கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பூதலூர், வல்லம், திருவையாறு உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. அதே போன்று ஆட்டோக்களும் ஓடவில்லை. ஆட்டோக்கள் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.

    திருவாரூர் விஜயபுரம் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதனால் திருவாரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதேபோன்று காவல்துறை வாகனங்களும் திருவாரூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் 45 அரசு பஸ்களும் இன்று இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம், திருப்பூண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட கடைகள், 3000 உணவகங்களை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 13 மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார் கோவில், திருக்கடையூர், சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் 11,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பால், மருத்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

    உணவகம், பேக்கரி, டீக்கடைகள், ஸ்டேஷனரி என மொத்தம் 54 கடைகளில் 53 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஒரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது.

    திருச்சி மாநகரின் பிரதான மார்க்கெட் ஆன காந்தி மார்க்கெட் இன்று வழக்கம் போல் இயங்கியது. பஸ்கள், ஆட்டோ, கார்கள் வழக்கம் போல் இயங்கியது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய வட்டங்கள் டெல்டா பாசனத்தில் காவிரி நதிநீர் மூலம் பாசனம் பெரும் பகுதியாக இருந்து வருகிறது.

    இதில் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கீரமங்கலம் மற்றும் கடைமடை பகுதியான மேற்பனைக்காடு உள்ளிட்ட 2 ஊர்களில் மட்டும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    கீரமங்கலம் பேரூராட்சியில் டீக்கடைகள், உணவகங்கள், பூ கமிஷன் கடைகளை தவிர்த்து 80 சதவீத வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே போல மேற்பனைகாடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் சுமார் 210 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புத்தூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    முழு அடைப்பு காரணமாக டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விவசாயிகள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    திருச்சியில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டெல்டா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. அரசு, தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. ஆட்டோ, வேன்களும் இயக்கப்பட்டது.

    மேலும் டெல்டா மாவட்டங்களில் மருந்து, பால் கடைகள் மட்டும் இயங்கின. பெட்ரோல் பங்குகளும் செயல்பட்டது.

    எனினும் கடைகள் அடைக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்கள் முடங்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரலாற்றுப்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் காவிரி மேல் ஒரு உரிமை உள்ளது.
    • காவிரி கர்நாடக மக்களின் தனிப்பட்ட சொத்து என்று நம்ப வைத்துள்ளனர்

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனையில் ஆளும் கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் மற்ற கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. காவிரி பிரச்சனையின் வரலாற்றை இன்றைய இளையதலைமுறையினர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    வரலாற்றுப்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் காவிரி மேல் ஒரு உரிமை உள்ளது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 75 சதவீத உரிமை உள்ளது.

    காவிரி கர்நாடக மக்களின் தனிப்பட்ட சொத்து என்று நம்ப வைத்துள்ளனர். காவிரியில் நமக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்பக்கூடாது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்காது.
    • தற்போது அளவிற்கு 2 மடங்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி கிராமம் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள திருமானூர் நீரேற்று நிலையத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் மற்றும் ஆணையர் மகேஷ்வரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருமானூர் நீரேற்று நிலையத்தில் முதலில் உறிஞ்சும் ஆழ்குழாய் கிணறு போடப்பட்டது.

    இது 18 எம். எல்.டி. அளவிற்கு அமைக்க ப்பட்டு தஞ்சைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இதை தவிர மற்றொரு ஆழ்குழாய் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டு உள்ளன.

    இதுவும் 18 எம்.எல்.டி. அளவிற்கு அமைக்கப்பட்டு தயாரான நிலையில் உள்ளது.

    இந்த பணிகள் இன்னும் 2 மாதத்திற்குள் முடிந்து விடும்.

    இது இரண்டும் சேர்த்தால் 36 எம். எல்.டி அளவுக்கு தஞ்சை மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    இதுதவிர முன்பு இருக்கக்கூடிய 23 எம். எல்.டி.யும் சேர்த்தால் சுமார் 60 எம்.எல்.டி. அளவிற்கு தண்ணீர் தஞ்சை மாநகருக்கு விநியோகம் செய்ய இருக்கிறது.

    நம்முடைய மக்கள் தொகை கணக்கெடுப்பு சுமார் 30 எம்.எல்.டி. 'அளவிற்கு தஞ்சைக்கு தண்ணீர் வந்தாலே போதுமானது.

    தற்போது அளவிற்கு 2 மடங்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் தஞ்சை மாநகராட்சியில் இன்னும் 13 ஊராட்சிகளை இணைத்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    இந்த பணிகள் மாநகராட்சிக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தமிழ்நாடு முதல்- அமைச்சர் மற்றும் இத்துறை அமைச்சரின் ஒப்புதலோடு செய்து வருகிறோம்.

    இதன் திட்ட மதிப்பீடு ரூ.73 கோடி ஆகும். குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்காது.

    இன்னும் 10 மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

    இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற்றவுடன் 24 மணி நேரமும் எவ்வித தடையும் இன்றி பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாநகராட்சி செய ற்பொறியாளர் பொறுப்பு ராஜசேகரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை தாங்கினார்.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சம் 100 மருத்துவ மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை தாங்கினார்.

    முன்னதாக தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி அனைவரையும் வரவேற்றார்.

    மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் குணசேகரன், காப்பாளர்கள் ஜெயராமன் அய்யனார், தலைமை அமைப்பாளர் குருசாமி, மாவட்ட தலைவர்கள் நிம்மதி வீரையன், மாவட்ட செயலாளர்கள் சிதம்பரம், துரைராஜ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிராமப்புற பிரச்சார மாநில அமைப்பாளர் அன்பழகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    முடிவில் தஞ்சை மாநகர தலைவர் நரேந்திரன் நன்றி கூறினார்.

    தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்.
    • சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    அரியலூர் வெடிவிபத்தில் காயமடை ந்தவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை அமைச்சர்கள் சிவசங்கர், கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணத்தொகை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அரியலூர் வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்கி வர வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதன்படி, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களை அறிவுறுத்தி உள்ளோம்.

    தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    விதிகளை மீறும் தொழில் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சி யர் இலக்கியா, தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் பொறுப்பு செல்வகுமார், தாசில்தார் சக்திவேல் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

    • சில குழுக்களிடம் பணம் வாங்கி அதனை கட்ட முடியாமல் இருந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிபட்டி பகுதியை சேர்ந்தவர் மதிவாணன்.

    இவரது மனைவி கமலம் ( வயது 64).

    இவர் சில குழுக்களிடம் பணம் வாங்கி அதனை கட்ட முடியாமல் இருந்தார்.

    இதனால் கமலம் மன வேதனையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென கமலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழை நின்றபின் குழந்தை லோகிதா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.
    • அருகில் இருந்த கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த பெருமகளூர் பேரூராட்சி கல்யாண ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் - பிரியா தம்பதியரின் குழந்தை லோகிதா ( வயது 2).

    பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்து வந்தது.

    மழை நின்றபின் குழந்தை ேலாகிதா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.

    அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகில் இருந்த கம்பியை தொட்ட போது அதிலிருந்து மின்சாரம் தாக்கி குழந்தை யோகிதா தூக்கி வீசப்பட்டது.

    உடனடியாக குழந்தையை மீட்ட அக்கம் பக்கத்தினர் பெருமகளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தகவல் அறிந்த பேராவூ ரணி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற பிடிவாதத்தில் உறுதியுடன் உள்ளது.
    • காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து நாளை டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுவதில் மேட்டூர் அணை முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீரை நம்பி தான் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது. மேலும் குடிநீர் தேவையும் மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. சில இடங்களில் பம்ப் செட் மூலம் சாகுபடி செய்தாலும் மேட்டூர் அணையை நம்பி தான் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி திறந்து விடப்பட்டது. அந்த சமயத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்தது. குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை விஞ்சியும் சாகுபடி செய்யப்பட்டன.

    விவசாயிகள் நம்பிக்கையுடன் குறுவையில் நல்ல விளைச்சல் பெறலாம் என்ற பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் சில நாட்களில் நிலைமை மாறியது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைய தொடங்கியது. தென்மேற்கு பருவமழையும் கை கொடுக்கவில்லை. மேலும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்புப்படி தமிழகத்திற்கு மாத வாரியாக வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காமல் வஞ்சித்தது. இந்த காரணங்களினால் குறுவை பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர். 3 லட்சம் ஏக்கர் அளவுக்கு தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து கருகின.

    இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்கள். தொடர் போராட்டங்கள் நடத்தியும் கர்நாடகா அரசு இறங்கி வரவில்லை. தமிழக அரசு பலமுறை உரிய அழுத்தம் கொடுத்தும் தண்ணீர் திறந்து விட மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்டாவில் குறுவை பயிர்கள் காவிரி நீரின்றி காய்ந்து சேதம் அடைந்தன. எஞ்சிய பயிர்களை காப்பாற்றவும் தண்ணீர் திறந்து விடவில்லை. அடுத்து சம்பா சாகுபடி தொடங்குவதே கேள்வி குறியாக தான் உள்ளது.

    இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வந்தன. இன்று அணையின் நீர்மட்டம் 30 அடியாக குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீன் வளம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமான மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி தண்ணீர் நிறுத்தப்படும்.

    இந்நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் நிறுத்தப்படுவதால் டெல்டா விவசாயிகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளனர். எஞ்சிய குறுவை பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். பல இடங்களில் பம்பு செட் மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களுக்கு பாய்ச்சும் அவல நிலை நடந்து வருகிறது.

    மேலும் அரசு அறிவித்த இழப்பீடு தொகையும் குறைவானது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் கூறும்போது:-

    வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் பெருமளவில் கருகிவிட்டன. கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற பிடிவாதத்தில் உறுதியுடன் உள்ளது.

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி தான் தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீர் கேட்கிறோம். ஆனால் அதையும் தராமல் வஞ்சிக்கிறது. இவ்வளவுக்கும் கர்நாடகாவில் பெரும்பாலான அணைகளில் 80 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளது. ஆனால் காவிரியில் அவர்கள் போதிய தண்ணீர் திறந்து விடாததால் குறுவை பயிர்கள் வீணாகி விட்டது. இன்று நீர்மட்டம் குறைந்து வந்ததால் மேட்டூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். எஞ்சிய குறுவை பயிர்களை காப்பற்றவும் தண்ணீர் இல்லை. அடுத்து சம்பா சாகுபடி தொடங்கவும் தண்ணீர் இல்லை. இதற்கும் மேலாக நீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு தொகையும் கண்டிப்பாக போதாது. ஏனென்றால் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு கேட்டிருந்தோம். ஆனால் அறிவித்ததோ ஏக்கருக்கு ரூ.5300 தான். நாங்கள் கேட்டதிலிருந்து கால் பங்கு கூட இழப்பீடு தொகை அறிவிக்கவில்லை.

    ஒருபுறம் கர்நாடக அரசு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடாமல் ஏமாற்றி வருகிறது. மறுபடியும் மத்திய அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது. இன்று மேட்டூர் அணையில் தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டது. இப்படி பல்வேறு கட்ட பிரச்சனைகளால் டெல்டாவில் குறுவை பயிர்கள் வீணாகி விட்டன. கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற முடியாமல் பரிதவிப்பில் உள்ளோம். அடுத்து சம்பா சாகுபடி தொடங்கலாமா? வேண்டாமா ? என்பதை அரசு உறுதியுடன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் காவிரி நீரை நம்பி தான் பெருமளவில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. கர்நாடக அரசு உரிய காவிரி நீரை வழங்கினால் மட்டுமே அடுத்து சாகுபடி பற்றி யோசிக்க முடியும்.

    காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து நாளை டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடைபெறும். அதன் பிறகும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் போராட்டம் மேலும் விரிவடையும் என்றார்.

    • மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்களை சுகாதார துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
    • குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    மக்களை தேடி மருத்துவ தன்னார்வ லர்களை தொழிலாளியாக அங்கீகரித்து பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஊக்கத்தொகை என்பதை மாற்றி ஊதியமாக வழங்க வேண்டும், ஸ்கோரிங் முறையிலான ஊக்கத்தொகையை ரத்து செய்து பேறு காலவிடுப்பு வழங்க வேண்டும்.

    நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மக்களை தேடி மருத்துவ தன்னா ர்வலர்களை சுகாதார துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

    குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வள்ளி தலைமை தாங்கினார்.

    சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஜெயபால் விளக்க உரையாற்றினார்.

    மாவட்ட செயலாளர் சாய் சித்ரா, மாவட்ட பொருளாளர் பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • டெல்டா மாவட்ட ங்களில் கடையடைப்பு போராட்டமும், மறியல் போராட்டமும் 11-ந் தேதி நடக்கிறது.
    • போராட்டத்திற்கு அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கம் சார்பில் ஆதரவு தர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர அளவு நீரை கர்நாடக அரசு முறையாக திறந்து விடாததை கண்டித்தும், உடனடியாக தண்ணீர் திறந்து விட மத்திய அரசை வலியுறுத்தியும், வருகிற 11-ந்தேதி டெல்டா மாவட்ட ங்களில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் கடையடைப்பு போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடக்கிறது.

    இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, தி.க.மாவட்ட தலைவர் அமர்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் செந்தில்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகர பொருளாளர் துரைசிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் அண்ணாதுரை, விவசாய கட்சி பிரதிநிதிகள் கண்ணன், கோவிந்தராஜ் மற்றும் விவசாய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ள கடை அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கம் சார்பில் ஆதரவு தருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • போட்டிகளில் 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    • போட்டியானது 3 நிலைகளாக நடைபெற்றது.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.இ)பள்ளியில் மாவட்ட அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி நடைபெற்றது.

    போட்டிகளில் தமிழ்நாட்டின் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளைச் சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமத்தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தலைமை வகித்தார்.

    ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமச் செயலர் . ஜெனட் ரம்யா முன்னிலை வகித்தார்.

    போட்டிகள் 12 வயதிற்குட்பட்டோர், 15 வயதிற்குட்பட்டோர், 19 வயதிற்குட்பட்டோர் என 3 நிலைகளில் போட்டி நடைபெற உள்ளது. விளையாட்டுப் போட்டிகளை ரம்யா சத்தியநாதன் கல்விக் குழும தலைவர் சத்தியநாதன் தொடக்கி வைத்தார். போட்டிகள் சி.பி.எஸ்.இ. வாரியத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்றது.

    • கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபட்டனர்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

    பூதலூர்:

    தமிழ்நாட்டில் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்று பூண்டி மாதா பேராலயம்.

    பேராலயத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் நாட்டு மக்கள் நலம் பெறவும் நாடு வளம் பெறவும் வேண்டி புதுமை இரவு குணமளிக்கும் நற்செய்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை அரசடி பட்டி பங்குத்தந்தை அமல வில்லியம் ஒருங்கிணைத்து நிறைவேற்றினார்.

    பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலிக்கு பின்னர் பூண்டி மாதா சுருபவம் வைக்கப்பட்ட சிறிய தேர் பவனி நடைபெற்றது. அப்போது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபட்டனர்.

    அதன் பின்னர் குணமளிக்கும் இரவு ஜெப வழிபாடு நடைபெற்றது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

    ×