search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிமங்கலம் அருகே வேன் மோதி தம்பதி பலி
    X

    குடிமங்கலம் அருகே வேன் மோதி தம்பதி பலி

    • கிடா விருந்துக்கு உறவினர்களை அழைத்து விட்டு வந்தபோது வேன் மோதி தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து தொடர்பாக குடிமங்கலம் போலீசார் வேனை ஓட்டி வந்த கருணாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்புதூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி பொன்னுத்தாய் (55). இவர்களது தோட்டத்தில் வருகிற 12-ந் தேதி கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக உறவினர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இந்தநிலையில் ஆத்துக்கிணத்துப்பட்டியில் உள்ள உறவினரை அழைக்க தம்பதி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் உறவினரை சந்தித்து அழைப்பு விடுத்து விட்டு லிங்கமநாயக்கன்புதூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    சுங்காரமடக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். பொதுமக்கள் தம்பதியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தம்பதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 பேரும் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக குடிமங்கலம் போலீசார் வேனை ஓட்டி வந்த கருணாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கிடா விருந்துக்கு உறவினர்களை அழைத்து விட்டு வந்தபோது வேன் மோதி தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×