search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur accident"

    • சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
    • விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பல்லடம் வழியாக மதுரை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் 46 பயணிகள் பயணம் செய்தனர்.

    பஸ்சை மதுரையைச் சேர்ந்த முருகானந்தம்(36) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் பல்லடத்தில் அண்ணா நகர் என்ற பகுதியில் திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ஓட்டுநர் கவனிக்காததால் அதில் மோதி பஸ் தாறுமாறாக சென்று தலைகீழாக கவிழ்ந்தது.

    விபத்தில் சிக்கிய பயணிகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பல்லடம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்தது. அவர்களை உடனடியாக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் லேசான காயங்கள் ஏற்பட்ட 36 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.

    தொடர்ந்து திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் பஸ்சை அப்புறப்படுத்தும் பணியில் பல்லடம் போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மாடுகள் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று, லட்சுமி மீது ஏறியது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆத்துப்பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவர் திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். மகள், குழந்தைகளை பார்த்து விட்டு இன்று வீடு திரும்பினார். லட்சுமியை மருமகன் தனசேகர், தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    இவர்கள் செல்லாண்டி அம்மன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்ற போது சாலையில் இருந்த மண்ணில் இருசக்கர வாகனத்தின் சக்கரம் சரிந்து சாலையோரம் இருந்த குப்பைத்தொட்டி மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி லட்சுமி சாலையின் நடுவே விழுந்தார். அப்போது மாடுகள் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று, லட்சுமி மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனது உறவினரான தமிழரசன் கறிக்கடையில் பகுதி நேரமாக கறி வெட்டும் வேலை செய்து வருகிறார்.
    • கறி வெட்டிக்கொண்டிருந்த பிரகாஷ் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர் பிரகாஷ் (வயது 30). இவர் மகளிர் சுய உதவிக்குழுவில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

    மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனது உறவினரான தமிழரசன் கறிக்கடையில் பகுதி நேரமாக கறி வெட்டும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலையில் இருந்து கறிவெட்டி கொண்டிருந்தார். அப்போது காலை சுமார் 9.30 மணி அளவில் உடுமலையில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அங்குள்ள தமிழரசன் கறிக்கடைக்குள் புகுந்து நின்றது.

    இதில் கறி வெட்டிக்கொண்டிருந்த பிரகாஷ் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரகாஷ் பரிதாமாக இறந்தார். மேலும் கடைக்கு கறி வாங்க வந்த 2 பேர் மற்றும் கார் டிரைவர் செல்வராஜ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர்களை தாராபுரம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார்.
    • விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாயி லே அவுட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் தேவானந்த் (வயது 20). சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் காலை உடல் பயிற்சி செய்வது வழக்கம்.

    இன்று காலை வழக்கம் போல் உடற்பயிற்சி செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குமரன் ரோடு எம்ஜிஆர்., சிலை அருகே செல்லும் போது, குமரன் ரோட்டை கடந்து பார்க் ரோடு வழியாக செல்ல முயன்றார். அப்போது குமரன் ரோட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார். இதில் அவரது வலது கை டயரில் சிக்கி சிதைந்தது.

    வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் திடீரென தேவானந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 5 சொகுசு வேன்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்துக்கு புறப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலைக்கடை பகுதியில் செல்லும் போது ஒரு வேனின் டிரைவர் சீர்காழியை சேர்ந்த விஜய் (வயது 38) என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரமுள்ள வயலுக்குள் புகுந்து கவிழ்ந்தது.

    இதில் வேனில் பயணித்த சரோஜா, பத்மா, அரிய முத்து, மது, சுமதி, சரோஜினி உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த விவசாயி ஒருவர் உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் பள்ளி பஸ் மோதி இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராதா. இன்று காலை ராதா அவரது குழந்தையை திருப்பூர் கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே தனியார் பள்ளி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராதா பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கினார். சக்கரம் ஏறி இறங்கியதில் ராதா சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியானார்.

    இதையடுத்து பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனிடையே அங்கு திரண்டு வந்த ராதாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், தப்பியோடிய டிரைவரை கைது செய்ய வேண்டும். உயிரிழந்த ராதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலைமறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த ராதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ராதாவின் உறவினர்கள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி பஸ் மோதி இளம்பெண் பலியான சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வேனின் அடியில் சிக்கி பச்சாபாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (47), சரோஜா (50), தமிழரசி (17) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட பூங்கொடி (48) காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பாப்பினி பச்சாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர் சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு திதி கொடுக்க கொடுமுடிக்கு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி சந்திரனின் உறவினர்களான பச்சாபாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (வயது 47), அதே ஊரை சேர்ந்த சரோஜா (50), காங்கயம்பாளையத்தை சேர்ந்த தமிழரசி (17), பூங்கொடி (48), குமரன் (50), வளர்மதி (26), இந்துமதி (23), காயத்ரி (12) உள்பட 34 பேர் ஒரு வேனில் பச்சாபாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு நேற்று காலை சென்றனர். அந்த வேனை நத்தக்காட்டுவலசை சேர்ந்த அருண்குமார் (30) என்பவர் ஓட்டிச்சென்றார். அங்கு திதி கொடுத்துவிட்டு மீண்டும் அதே வேனில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அந்த வேன் முத்தூர் - காங்கயம் சாலை வாலிபனங்காடு பஸ் நிறுத்தம் அருகில் வந்தது. அப்போது எதிரே கேரள மாநிலத்தில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் பக்கவாட்டில் வேன் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் வேனின் அடியில் சிக்கி பச்சாபாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (47), சரோஜா (50), தமிழரசி (17) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட பூங்கொடி (48) காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த 30 பேரை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர், ஈரோடு, கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி(50), வளர்மதி (26), இந்துமதி, (23) மற்றும் காயத்ரி (12) ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 4 பேர் பலியான சம்பவத்தால் பாப்பினி பச்சாப்பாளையம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    • உடுமலை பழனி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே உடுமலையிலிருந்து பழனி நோக்கி பாலச்சந்திரன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
    • எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த மடத்துக்குளம் கணியூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (32). கூலித் தொழிலாளியான இவர் தன்னுடன் வேலை பார்க்கும் செல்லபாண்டியன் (30) என்பவருடன் தனது வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    உடுமலை பழனி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே உடுமலையிலிருந்து பழனி நோக்கி பாலச்சந்திரன் (32) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் 3 பேரையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிர் இழந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மடத்துக்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பனியன் நிறுவன பேருந்தில் இருந்த பலருக்கு காயம் ஏற்பட்டது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மிபாளையம் பிரிவில் இருந்து அய்யம்பாளையம் ரோட்டுக்கு செல்வதற்காக தனியார் பனியன் நிறுவன பேருந்து இன்று காலை கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக பனியன் நிறுவன பேருந்து மீது பின்பக்கமாக மோதியது.

    இதனால் நிலை தடுமாறி அருகே உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. பனியன் நிறுவன பேருந்தில் இருந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் பனியன் நிறுவனத்தைச் சேர்ந்த சரஸ்வதி, புவனேஸ்வரி, மாடசாமி, செல்வராஜ் உள்பட 27 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பூர் குமரன் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
    • விபத்து காரணமாக இன்று காலை குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு மிசின் வீதியை சேர்ந்தவர் முகமது இசாக். இவரது மனைவி ரபியதுல் பகிரியா. இவர்கள் இன்று காலை திருப்பூர் குமரன் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையம் நோக்கி அரசு டவுன் பஸ் வந்தது. இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக பஸ் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் உரசியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து முகமது இசாக், ரபியதுல் பகிரியா ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது ரபியதுல் பகிரியா மீது பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே கணவன் கண்முன்னே பலியானார். முகமது இசாக் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    உடனே இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த முகமது இசாக்கை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ரபியதுல் பகிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் குமரன் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். விபத்து காரணமாக இன்று காலை குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருப்பூர் மாநகர் பகுதியில் காலை,மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே பயணிக்க வேண்டியுள்ளது. இதில் சிலர் விபத்துக்களில் சிக்குகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தீர்க்கவும், விபத்துக்களை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விபத்துக்குள்ளான தனியாா் பேருந்துக்கு பின்னால் வந்த காா் பேருந்து மீது மோதியது.
    • காரில் பயணித்தவா்கள் அதிா்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினா்.

    காங்கயம்:

    கோவை மாவட்டம், சூலூா் பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் உள்ளிட்ட 6 போ் திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து அவிநாசிபாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். தாராபுரத்தில் இருந்து குண்டடம் வழியாக பல்லடம் செல்லும் சாலையில் தற்போது சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், காரில் வந்தவா்கள் அவிநாசிபாளையம் நோக்கி சென்றுள்ளனா்.

    இந்நிலையில் திருப்பூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி நோக்கி பயணிகளுடன் தனியாா் பேருந்து வந்தது. கொடுவாய்-சக்திவிநாயகபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவிநாசிபாளையம் நோக்கி சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை தாண்டி எதிரே வந்த தனியாா் பேருந்து மீது மோதியது.

    இதில் காரின் முன்பகுதி முற்றிலும் உருக்குலைந்தது. மேலும் பேருந்தின் முன்சக்கரம் தனியாக கழன்றது. இதில் காரில் பயணித்த வீரக்குமாா் (31), முருகேசன் (32), சஜீத் (33), வெற்றிச்செல்வன் (38) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், படுகாயமடைந்த மகேஷ்குமாா் (34), கிஷோா்குமாா் (35) ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 போ் லேசான காயத்துடன் உயிர் தப்பினா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும், விபத்துக்குள்ளான தனியாா் பேருந்துக்கு பின்னால் வந்த காா் பேருந்து மீது மோதியது. இதில் காரில் பயணித்தவா்கள் அதிா்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினா்.

    விபத்து குறித்து தகவலறிந்த காங்கயம் டி.எஸ்.பி., பாா்த்திபன், காங்கயம் இன்ஸ்பெக்டர் காமராஜ் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இந்த விபத்து குறித்து ஊதியூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ்குமார் இன்று காலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கிஷோர்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆத்துப்பாளையம் ஜே.சி.கே. கார்டன் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். கார் டயர்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சண்முகபிரியா (வயது 34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை சண்முக பிரியா வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக திரு முருகன்பூண்டிக்கு சென்றார்.அங்கு காய்கறிகள் வாங்கி விட்டு மொபட்டில் ஆத்துப்பாளையத்திற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகபிரியா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் திரு முருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சண்முகபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவி மரணமடைந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனடியாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றார். அங்கு அவரிடம் போலீசார் சண்முகபிரியா அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் அவர் வைத்திருந்த பொருட்களை ஒப்படைத்தனர். அப்போது சண்முகபிரியா அணிந்திருந்த 3½ பவுன் மதிப்புள்ள தங்க தாலி செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும்.

    இது பற்றி தியாகராஜன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நகைகளை திருடிய மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சண்முகபிரியாவின் நகைகளை மர்மநபர்கள் திருடினார்களா? அல்லது தனியார் ஆம்புலன்சில் உடலை கொண்டு செல்லும் போது திருடப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 

    ×