search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன சோதனை: ஒரே நாளில் ரூ.18 லட்சத்து 6 ஆயிரம் பணம் பறிமுதல்
    X

    வாகன சோதனை: ஒரே நாளில் ரூ.18 லட்சத்து 6 ஆயிரம் பணம் பறிமுதல்

    • தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்:

    ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணமின்றி ரூ.10 லட்சம் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஓசூர் சீதாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்த லோகேஷ் குமார் (35) என்பவர், பேரண்ட பள்ளி பகுதியில் கிரஷர் கம்பெனி நடத்தி வருவதாகவும், அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, பெங்களூரிலிருந்து பணம் வாங்கி வந்ததாகவும் தெரிய வந்தது. உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட அந்த பணத்தை, அதிகாரிகள் ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில், உதவி கலெக்டர் பிரியங்காவிடம் ஒப்படைத்தனர்.

    இதே போல், ஓசூர் அம்பாள் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்த தினேஷ்குமார் (45) என்பவர் வங்கியில் செலுத்த, உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.60,000/- பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஓசூர் அருகே உள்ள கக்கனூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், பெங்களூரை சேர்ந்த காய்கறி வியாபாரி அன்னையப்பா (65) என்பவர் காரில் எடுத்து வந்த 2 லட்சத்தி 76 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் ஓசூர் கொத்தூரில் காய்கறி வாங்கியதற்காக செலுத்த வேண்டிய பணம் என்பது தெரிய வந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல், ஓசூர் அருகே மாசிநாயக்கனப்பள்ளி கிராம பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் (23) என்பவர் இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் பெட்ரோல் பங்கில் வசூலான பணம் என தெரிய வந்தது. ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும், ஓசூர் இஎஸ்ஐ ரிங் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, காரில் சென்ற ஓசூர் கீழ் கொல்லர் தெருவை சேர்ந்த சின்னராஜ் (40) என்பவரிடமிருந்து 3 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கட்டுமான தொழிலுக்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்த பணத்திற்கு எந்த ஆவணங்களும் இல்லாததால் பணம் முழுவதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் சப் கலெக்டர் அலுவலகத்தில், சப் கலெக்டர் பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. ஓசூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 18 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×