search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மாதம் முடிவடைவதால் முட்டை விற்பனை அதிகரிப்பு
    X

    புரட்டாசி மாதம் முடிவடைவதால் முட்டை விற்பனை அதிகரிப்பு

    • தினசரி சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 2-வது இடம் வகிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைக் கொண்ட, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மற்ற மாநிலங்களில் நிலவும் முட்டை விலைக்கேற்ப, நாமக்கல் என்.இ.சி.சி முட்டைக்கான விற்பனை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது.

    இந்த விலையை தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் பின்பற்றி வருகின்றனர். முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு, விற்பனைக்கான கமிஷனுக்காக, என்இசிசி விலையில் இருந்து, மைனஸ் விலையை, நெஸ்பாக் என்ற பண்ணையாளர்கள் மற்றும் முட்டை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிவிக்கிறது.

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட, கோழிப்பண்ணைகளில், மொத்தம் 5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 2-வது இடம் வகிக்கிறது.

    இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. இதனால் முட்டை விற்பனை சரிந்திருந்தது. தற்போது புரட்டாசி முடிவடைவதால் முட்டை விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து நாமக்கல் மண்டல தேசிய ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.30ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 4.05 கிடைக்கும்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 460, பர்வாலா 435, பெங்களூர் 445, டெல்லி 457, ஹைதராபாத் 412, மும்பை 477, மைசூர் 447, விஜயவாடா 435, ஹெஸ்பேட் 405, கொல்கத்தா 500.

    கோழிவிலை பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.109 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டை க்கோழி ஒரு கிலோ ரூ. 84 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    Next Story
    ×