search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு: சிறுவர்கள் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது
    X

    சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு: சிறுவர்கள் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது

    • பாம்பை பிடிப்பதற்காக வனத்துறையினர் பாம்பு நடமாட்டம் இருந்த பகுதியில் கூண்டில் கோழியை அடைத்து வைத்தனர்.
    • பிடிபட்ட மலைப்பாம்பை வன ஊழியர்கள் கிண்டியில் உள்ள சிறுவர்கள் பூங்காவில் கொண்டு சென்று விட்டனர்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டது. 12 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாம்பை அங்கு பணியில் இருந்த காவலாளிகள் பார்த்தனர். அவர்களை பார்த்ததும் பாம்பு தப்பியோடி விட்டது.

    இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையில் உள்ள பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து மலை பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது தப்பி ஓடி மறைந்து கொண்டது. இந்த நிலையில் மீண்டும் மற்றொரு முறை அந்த மலைப்பாம்பை காவலாளிகள் பார்த்தனர். இதுபற்றி மீண்டும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர், ஐஐடி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாம்பை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மாதமாக மலைப்பாம்பை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. பாம்பு பிடிக்கும் இருளர் சமூகத்தை சேர்ந்த 2 பேர் அழைத்து வரப்பட்டு அவர்களும் மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பாம்பை பிடிப்பதற்காக வனத்துறையினர் பாம்பு நடமாட்டம் இருந்த பகுதியில் கூண்டில் கோழியை அடைத்து வைத்தனர். இந்த நிலையில் கோழியை உண்ண வந்த போது மலைப்பாம்பு வனத்துறையினரிடம் சிக்கிக் கொண்டது. அதை வனத்துறையினர் பிடித்தனர். அந்த மலைப்பாம்பு 12 அடி நீளம் கொண்டது. அதன் எடை 30 கிலோ ஆகும்.

    பிடிபட்ட அந்த மலைப்பாம்பை வன ஊழியர்கள் கிண்டியில் உள்ள சிறுவர்கள் பூங்காவில் கொண்டு சென்று விட்டனர். இந்த மலைப்பாம்பு சில ஆண்டுகளுக்கு முன்பு கிண்டி சிறுவர் பூங்காவில் இருந்து தப்பி சென்ற பாம்பு என்று கருதப்படுகிறது. ஒருமாத கால தேடுதல் வேட்டைக்கு பிறகு மலைப்பாம்பு பிடிபட்டு உள்ளதால் ஐஐடி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    Next Story
    ×