என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கையில் திருடிய பைக்கை, ரூ.1500 பணத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்தியுள்ளார்.
    • தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து பைக்கை கொண்டுவந்துள்ளேன்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திருடிய பைக்கை, ரூ.1500 பணம் மற்றும் மன்னிப்புக் கடிதத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ப்ளாக் பாண்டா என்ற பெயரிலான அந்த மன்னிப்பு கடிதத்தில், "அவசரத்துக்கு பைக்கை எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து பைக்கை கொண்டுவந்துள்ளேன்.

    ரூ.1500 பணம் பெட்ரோல் டேங்க்கில் இருக்கு. எப்படியும் கெட்ட வார்த்தை பேசியிருப்பீர்கள். அதற்கு நீங்கள் வருந்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வருந்த வைப்போம்" என எழுதப்பட்டுள்ளது"

    • இளைஞர் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிக்கொண்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார்.
    • கைதான தண்டாயுதபாணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைதான தண்டாயுதபாணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இளைஞர் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிக்கொண்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார்.

    அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததாலும், தூங்க விடாமல் பயணிகள் தொந்தரவு செய்ததாலும் எரிச்சல் அடைந்து ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மதுபோதையில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    • விவசாயிகள் விவசாயத்திற்கு கண்மாயில் உள்ள தண்ணீரை எடுத்தால், அதைத் தடுக்கின்றனர்.
    • அ.தி.மு.க.வுடன் த.வெ.க. ஒன்றாக போராட்டத்தில் கலந்துகொண்டதை இருகட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்று உள்ளனர்.

    சிவகங்கை:

    2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் தற்போதே தங்கள் களப்பணிகளை தொடங்கியுள்ளன. உறுப்பினர் சேர்க்கை, மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா, பூத் கமிட்டி அமைப்பு என்று பம்பரமாக சுழன்று வரும் நிர்வாகிகளுக்கு அந்தந்த கட்சி தலைமையும் ஏராளமான பொறுப்புகளை அள்ளிக்கொடுத்துள்ளது.

    அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சற்று முதல் வரிசையில் உள்ளது. முதலாம் ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடிய கட்சி தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து அதற்கான செயலாளர்களையும், நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்தார். அதே போல் பல்வேறு அணிகளையும் உருவாக்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

    எதிரணியினரின் விமர்சனங்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வரும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன், த.வெ.க. தலைவர் இரண்டு கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார். அப்போது கட்சியின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் சிவகங்கையில் கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் அ.தி.மு.க.வுடன், த.வெ.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்களில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதில் விதிமீறல்கள் நடப்பதாகப் புகாா் எழுந்தது. அதேபோல் அந்த பகுதியில் இயங்கிவரும் குவாரியால் கிராமத்திற்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மேற்கண்ட கிராமத்தினர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனற்ற நிலையில், போலீஸ் நிலையம், கோர்ட்டு மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கினர். இதற்கிடையே கிராம மக்கள் சாா்பில் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு வேம்பங்குடி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில் நாதன் உள்ளிட்டோரும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெற்கு மாவட்ட செயலர் முத்துபாரதி தலைமையில் நகரச் செயலர் தாமரைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    அப்போது தி.மு.க. அரசுக்கு எதிராகவும், கிராவல் மண் கொள்ளைக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், கிராம மக்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தி பேசவே வந்தோம். மாவட்டம் முழுவதும், கிராவல் மண் கொள்ளை நடக்கிறது. அதை அரசு அதிகாரிகள் தடுக்கவில்லை. அமைச்சர்கள் கனிம வள கொள்ளை மூலம் கிடைக்கும் பணத்தை வெளி நாடுகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால், விவசாயிகள் விவசாயத்திற்கு கண்மாயில் உள்ள தண்ணீரை எடுத்தால், அதைத் தடுக்கின்றனர்.

    வேம்பங்குடி கிராமத்தில் அரசு விதியை மீறி பல அடி ஆழத்திற்கு கிராவல் மண் எடுத்துள்ளனர். வேம்பங்குடியில் நடந்துள்ள கிராவல் மண் கொள்ளையை, அதிகாரிகள் ஆய்வு செய்து, அதில் அரசு விதியை மீறி, மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அதேபோல் உண்ணாவி ரதப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் மணல் கொள்ளைக்கு எதிராக பேசினர். அ.தி.மு.க.வுடன் த.வெ.க.வும் கைகோர்த்து போராட்டத்தில் பங்கேற்றது சிவகங்கை அரசியல் வட்டாரத்தில் பேசும்பொ ருளாக மாறியுள்ளது.

    இதுகுறித்து த.வெ.க. தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துபாரதி கூறுகையில், இந்த மணல் கொள்ளை, குவாரி பிரச்சனை தொடர்பாக பல்வேறு போராட்டங்களை கிராமமக்களுக்காக நடத்தி இருக்கிறோம். கிராமமக்கள் அழைப்பின் பேரில் தமிழக வெற்றிக் கழகம், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொண்டன.

    மக்களுக்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கட்சி தலைமை எங்களுக்கு உத்தர விட்டுள்ளது. அந்த வகையில் தான் நாங்கள் நேற்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டோம். மற்றபடி தேர்தல், கூட்டணி என்பது தொடர்பாக நாங்கள் யோசிக்கவில்லை. கிராம மக்களையும், விவசாயத்தையும் காப்பதற்காகவே எந்தவித பாகுபாடும் பார்க்காமல் நாங்கள் பங்கேற்றோம் என்றார்.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் எந்ததெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி சேரப்போகிறது, களம் மாறலாம், சூழ்நிலையும் மாறலாம் என்ற கருத்துகள் நிலவி வரும் நிலையில், அ.தி.மு.க.வுடன் த.வெ.க. ஒன்றாக போராட்டத்தில் கலந்துகொண்டதை இருகட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்று உள்ளனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே பொய்யான புகார் அளித்து நாடகமாடிய விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பிரணிதா. இந்தநிலையில் நேற்று இரவு அவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது கோவில் நிலத்தில் கட்டுமானம் தொடர்பாக சர்ச்சைக்குரிய புகார் மனு தொடர்பாக விசாரணைக்கு சிலர் வந்திருந்தனர்.

    அவர்களுக்கு ஆதரவாக சோமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய கவுதமன் மற்றும் சிலரும் வந்திருந்தனர். அவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதாவிடம் புகார் மனு தொடர்பாக கேட்ட போது, நான் தற்போது இந்த மனுவை விசாரணை செய்ய முடியாது, உயர் அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள்க கட்சியினர் சப்-இன்ஸ்பெக்டர் ஒருத்தரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டு தங்களை அலைய வைப்பதாகவும் நினைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சனையில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா போலீஸ் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் எதிர்தரப்பினர் கையில் கத்தியால் கீறிவிட்டதாக கூறி காயமடைந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா, காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபனிடம் கேட்டபோது, பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா சிவகங்கைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அவர் அங்கு செல்ல விருப்பமில்லாமல் கடந்த 10 நாட்களாக சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து பணி விடுப்பு ஆகாமல் இருந்து வருகிறார்.

    நேற்று காரைக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறியது உண்மையில்லை. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும், பொய்யாக புகார் அளித்து நாடகமாடிய சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே பொய்யான புகார் அளித்து நாடகமாடிய விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் சமூக வலைதளங்களில் அரசின் மீதும் பலர் குற்றச்சாட்டு கூறுவதற்கு காரணமாக அமைந்துள்ளதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை தேவை என கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

    • அரசுப் பள்ளியில் குழந்தைகள் நல குழுமத்தினர் இலவச சேவை மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்ததினர்.
    • கலந்துரையாடலில் சிறுமிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இந்திரா நகர் கிராம நடுநிலைப்பள்ளியில், 8 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 7 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மானாமதுரை அருகே அரசுப் பள்ளியில் குழந்தைகள் நல குழுமத்தினர் இலவச சேவை மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்ததினர்.

    அப்போது நடந்த கலந்துரையாடலில் சிறுமிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்தனர்.

    யாரேனும் தவறாக நடந்துள்ளார்களா? என்ற கேள்விக்கு கிடைத்த பதிலால் அதிர்சியடைந்த பெண் அதிகாரிகள், தனித்தனியாக விசாரித்துள்ளனர்.

    சிறுமிகள் தெரிவித்த பகீர் பாலியல் தொல்லை புகார்கள் மீது தீவிரமாக விசாரணை நடத்தியதில், பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் பாலியல் தொல்லை அளித்த அதே ஊரைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அதன்படி, பள்ளிக்கு செல்லும் போது பாலியல் தொல்லை அளித்ததாக கூற, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு முனியன் (66), மூக்கன் (72), மு (46), பழனி (46), மணி (50), சசி வர்ணம் (38) லட்சுமணன் (46) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • இந்து அமைப்பினர் ஒன்றுகூடி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
    • திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதல் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

    காரைக்குடி:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு அருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையைப் பாதுகாப்போம் என இந்து அமைப்பினர் ஒன்றுகூடி இன்று போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    இதற்கிடையே, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்து, திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், திருப்பரங்குன்றம் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீசார் அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

    மலையைச் சுற்றி 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சீமானின் கருத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பெரியார் குறித்து அவதூறாக சீமான் பேசி வருவது தொடர்பாக இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், "ஜெயக்குமார் ஏற்கனவே அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நானும் எக்ஸ் பக்கத்தில் இது தொடரபாக பதிவிட்டிருந்தேன். சீமானை இந்நேரம் சிறையில் பிடித்துப் போட்டிருக்க வேண்டும். ஆளுங்கட்சிதான் அழுத்தம் கொடுக்கணும். ஒவ்வொரு முறையும் முதல்வரும் அவரது மகனும் பெரியார் நினைவிடத்திற்கு சென்று உறுதிமொழி எடுக்கிறார்கள். இது எல்லாம் நாடகம் என்று தெரிகிறது பாருங்கள்" என்று தெரிவித்தார்.

    • கொடுத்த வாக்குறுதிகளில் 20 விழுக்காடு கூட நிறைவேற்றவில்லை.
    • மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

    சிவகங்கை:

    சிவகங்கையில் இன்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்துக்கு வரும்போது எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுகிறது. வீரம் பிறந்த இந்த மண்ணில் முத்துவடுகநாதர், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி போன்ற வீரமிக்க தியாகிகள் வாழ்ந்த மண் சிவகங்கை மண்.

    வீரமும், ஆற்றலும் மிக்க அமைச்சராக இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பெரியகருப்பன் செயல்படுகிறார். மாவட்டத்தை எல்லாவகையிலும் மேம்படுத்துவதில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    நம்பி பொறுப்புகளை கொடுக்கலாம் என்ற பட்டியலில் பெரியகருப்பன் இடம் பெற்றுள்ளார். செயல்களில் வேகமும், நேர்த்தியும் கொண்டவர் அவர். இந்த விழாவை மாநாடு போல் பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ள அவருக்கும் மற்றும் மாவட்ட கலெக்டருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


    சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க. அரசு மிகப்பெரிய பங்கு உண்டு. தி.மு.க. அரசு அமையும் போதெல்லாம் சிவகங்கை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வரும். தி.மு.க. திராவிட மாடல் ஆட்சியில் மாவட்டத்தின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், நெற்குப்பை, இளையான்குடி, கல்லல், காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரூ. 616 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மருத்துவமனை ரூ.14 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி இளையான்குடியில் சார்பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், கருவூலம், அரசு மருத்துவமனை விரிவாக்கம், இளையான்குடி புறவழிச்சாலை, சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், பள்ளி கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை, சிவகங்கை நகராட்சி கட்டிடம், மகளிர் கல்லூரி இப்படி எண்ணற்ற திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

    திராவிட மாடல் ஆட்சி அமைந்து 3½ ஆண்டு காலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன்.

    ரூ.2452 கோடி மதிப்பில் ஊரக குடியிருப்புகள், ரூ.1753 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், மினி விளையாட்டு அரங்கம், ரூ.35 கோடி மதிப்பில் ஐ.டி. பார்க், ரூ.100 கோடி மதிப்பில் சட்டக்கல்லூரி, சிராவயல் கிராமத்தில் தியாகி ஜீவானந்தம் நினைவு மணிமண்டபம், செட்டிநாடு வேளாண் கல்லூரி, சிவகங்கை அரசின் மருத்துவக்கல்லூரியில் மகப்பேறு மற்றும் அதிதீவிர சிகிச்சைக்கான கட்டிடங்கள், சிவகங்கை பஸ் நிலையம் சீரமைப்புகள், மானாமதுரையில் ஐ.டி.ஐ. கல்லூரி, 248 குடியிருப்புகள், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், திருப்புவனம் வைகையாற்றில் உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதுவரை சிவகங்கை மாவட்டத்திற்கு கடந்த 3½ ஆண்டுகளில் அரசின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் மக்களின் உரிமைத்தொகை மூலம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 426 பேர் மாதந்தோறும் ரூ.1000 தொகையினை பெற்று வருகிறார்கள். அதனை வாங்கிய சகோதரிகள் தாய் வீட்டு சீதனமாக இந்த தொகையை அனுப்பி இருப்பதாக மகிழ்ச்சியடைகிறார்கள்.

    இதேபோல் கல்லூரிக்கு செல்வதற்கும், சிறு சிறு செலவுகளை சமாளிப்பதற்கும் கஷ்டப்பட்டு வரும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்தை ஒரு அப்பாவாக இருந்து தருகிறார் என கூறுகிறார்கள்.


    மேலும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 7,210 பேரும், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 4,076 பேரும் பயனடைகிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நான் மணிக்கணக்கில் துணை முதல்வராக இருந்தபோதும், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் கடன்னுதவி வழங்கியுள்ளேன். அந்த சுழல் நிதியை பெற்ற மகளிர் குழுவினர் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளனர். அந்த வகையில் ரூ.855 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பசியால் அவதிப்படக்கூடாது என்பதற்காக காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டு அதன் மூலம் இன்று சிவகங்கை மாவட்டத்தில் 37 ஆயிரம் மாணவர்கள் சுவையாகவும், வயிறாரவும் சாப்பிடுகிறார்கள்.

    "மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தின் மூலம் 12 லட்சம் பேரும், "மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்" மூலம் 1 லட்சத்து 34 ஆயிரம் பேரும் பயனடைந்து உள்ளனர்.

    22 ஆயிரம் முதியோர்களுக்கு ஓய்வூதியம், 27 ஆயிரத்து 938 பேருக்கு வீட்டுமனை பட்டா, 23 ஆயிரத்து 553 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி, 29 ஆயிரத்து 909 பேருக்கு பயிர்க்கடன்கள், 8 லட்சம் உழவர்களுக்கு பல்வேறு உதவிகள், 3,822 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 65 கோவில்களுக்கு குடமுழுக்கு, கழனிவாசல் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்படும் பணி என்பது உள்பட சிவகங்கை மாவட்டத்தில் 91 ஆயிரத்து 265 பணிகளுக்கு ரூ.38கோடியே 55லட்சத்து 55ஆயிரத்து 426 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    தி.மு.க. அரசு துல்லியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்னென்ன செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு மேடையிலும் நான் புள்ளி விவரத்தோடு சொல்லி வருகிறேன்.

    இதையெல்லாம் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வது? வாய்க்கு வந்தபடி எல்லாம் பொத்தாம்பொதுவாக கூறி வருகிறார். கொடுத்த வாக்குறுதிகளில் 20 விழுக்காடு கூட நிறைவேற்றவில்லை என்று எரிச்சலோடு புலம்பி கொண்டிருக்கிறார்.

    இன்றைக்கு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வெட்டிப்பேச்சு பேசுற மாதிரி வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சி தலைவர் பேசலாமா? மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய கடமை எங்களுக்கு இருக்கிறது. இதற்கான புள்ளி விவரங்களை உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.

    2021 சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கொடுத்த வாக்குறுதிகள் 505. அதில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இன்னும் நிறைவேற்ற வேண்டியது 116 வாக்குறுதிகள் தான்.

    அரசின் 34 துறைகளுக்கும் 2,3 திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இது தெரிந்தும், தெரியாத மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். பாவம் அவர் இன்னொரு கட்சி தலைவரின் அறிக்கையை அப்படியே வாங்கி வெளியிட்டு இருக்கிறார்.

    2011, 2016 சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. அரசின் சார்பில் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள், அதனை வெளியிட்ட நாள், அரசாணை எண், அதனால் பயனடைந்தவர்கள் எத்தனை பேர்? போன்ற விவரங்களை எதிர்க்கட்சி தலைவர் புத்தகமாக வெளியிட தயாராக உள்ளாரா?

    கடந்த 10 ஆண்டுகள் முழுவதுமாக ஆட்சி செய்த அ.தி.மு.க. தமிழகத்தை அதள பாதாளத்தில் தள்ளியுள்ளது. இதனை மக்கள் மறக்க மாட்டார்கள்.

    சென்னை-கன்னியாகுமரி கடலோர சாலை திட்டம் என்று கூறினார்கள். அந்த திட்டத்தை நிறைவேற்றினார்களா? மகளிருக்கு 50 விழுக்காடு மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கப்படும் என கூறினார்கள். யாராவது வாங்கியுள்ளீர்களா? எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன் வழங்கப்படும் என்று கூறினார்கள். செய்தார்களா?

    தென் தமிழகத்தில் ஏரோபார்க், 10 ஆடை அலங்கார பூங்காக்கள், 58 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச பஸ் பாஸ் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியதா?

    பொது இடங்களில் இலவச வை-பை என்று கூறினார்கள். அது எங்கேயாவது அமல்படுத்தப்பட்டு உள்ளதா? இப்படி வெற்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டை பாழாக்கினார்கள். தமிழக அரசையும் திவாலாக்கினார்கள்.

    தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தரைமட்டமாக்கினார்கள். பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி வருகிறார்கள். இப்படி பேசக்கூடிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அவர்களுக்கு இணக்கமான ஒன்றிய அரசு இருந்தது. அப்போது எதையும் அவர்கள் வாங்கவில்லை. பதவி பெற மட்டும் டெல்லிக்கு சென்றார்கள்.

    ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஒன்றிய அரசு தமிழக அரசு என்று பார்க்காமல் கொள்கை எதிரிகளாக பார்த்து திட்டங்களை முடக்கி வருகிறார்கள். ஒன்றிய அரசின் தடைகளை மீறி நாம் தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம்.

    ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியே செலவிடப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு, தமிழக அரசை எப்படி வஞ்சிக்கிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2 நாட்களுக்கு முன்பு விரிவாக பேட்டி அளித்திருந்தார்.

    ஆனால் எதிர்க்கட்சி தலைவர் அதை படிக்கவும் இல்லை. காதில் வாங்கிக்கொள்ளவும் இல்லை. சாதாரணமாக தமிழ்நாடு திவாலாகி விட்டதாக கூறி வருகிறார். தமிழ்நாடு திவாலாக வேண்டும் என்பது தான் அவரது விருப்பமா?

    தமிழக அரசு வெட்டிச்செலவு செய்கிறது என்று கூறுகிறார். அவர் எதை வெட்டிச்செலவு என்கிறார். மகளிர் உதவித்தொகை, காலை உணவுத்திட்டம் போன்றவற்றை கொச்சைப்படுத்தி பேசுகிறாரா? மக்கள் நலத்திட்டங்களுக்கு எவ்வாறு செலவு செய்வது என்பது எங்களுக்கு தெரியும்.

    எதிர்க்கட்சிகள் போடும் கணக்கு அனைத்தும் தப்பு கணக்கு தான். இன்றைக்கு சிவகங்கை மாவட்டத்தில் மக்களின் வரவேற்பை பார்க்கும் போது உதயசூரியன் மீண்டும் உதிக்கும் என உறுதிபட கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
    • மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை செலவு செய்கிறோம்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * வீரமும், விவேகமும் விளைந்த மண் சிவகங்கை. திமுக ஆட்சி அமைந்தாலே நலத்திட்ட உதவிகள் சிவகங்கையை தேடி வரும். உங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் உறவாக நான் இருக்கிறேன்.

    * பள்ளி கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை, சிவகங்கை புதிய நகராட்சி கட்டிடம், 59 திருக்கோவிலில் ரூ.14 கோடி செலவில் கோவில் திருப்பணி, மாணவர்களுக்கு தங்கும் விடுதி, மருத்துவமனை விரிவாக்கம், நியோ ஐ.டி.பார்க், தியாகி ஜீவானந்தம் மணிமண்டபம், செட்டிநாடு வேளாண் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்தில் பல ஊர்களில் ரூ.616 கோடி செலவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    * எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    * சிங்கம்புணரி, திண்டுக்கல், காரைக்குடி செல்லும் வாகனங்கள் திருப்பத்தூருக்குள் வராமல் செல்ல ரூ.50 கோடியில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும்.

    * சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு புதியதாக ரூ.89 கோடியில் கட்டடம் கட்டப்படும்.

    * காரைக்குடி மாநகராட்சிக்கு ரூ.30 கோடியில் புதிய அலுவலகம் கட்டித்தரப்படும்.

    * இன்னொருவரின் அறிக்கையை காப்பியடித்து அறிக்கை கொடுக்கிறார். திண்ணையில் அமர்ந்து பேசுவது போல் வெட்டிக்கதை பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சி தலைவர் போடும் கணக்குகள் அனைத்தும் தப்பு கணக்குகள் தான்.

    * மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என கூறிய அதிமுக அதனை நிறைவேற்றியதா? 58 வயதுக்கு மேல் உள்ளோருக்கு இலவச பஸ் பாஸ், பொது இடத்தில் Wifi வசதி என வெற்று வாக்குறுதி அளித்தது அதிமுக தான். பதவிக்காக மட்டும் டெல்லிக்கு சென்றனர் அதிமுகவினர்.

    * 2013-ம் ஆண்டு முதல் தமிழகத்தை பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது எடப்பாடி பழனிசாமிதான். தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தரைமட்டத்திற்கு கொண்டு வந்த எடப்பாடி திமுக அரசை வீழ்த்த நினைக்கிறார்.

    * 2021 தேர்தலுக்கு திமுக சார்பில் கொடுத்த 505 வாக்குகுறதிகளில் 389 வாக்குறுதிகள் நிறைவேற்றம். 116 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

    * மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை செலவு செய்கிறோம்.

    * தமிழ்நாட்டை திவாலாக்க வேண்டும் என்பது தான் எடப்பாடியின் நோக்கமா? அரசின் எந்த திட்டத்தை வீண் செலவு என கூறுகிறார்?

    * எங்களில் செயல்பாடுகளை நினைவில் கொண்டு திமுக ஆட்சி திட்டங்களுக்கு மக்கள் அளிக்கும் முதல் மதிப்பெண் போதும் என்றார். 

    • மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கு மு.க. ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
    • சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினை மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

    சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்கள் சிலைக்கு நாளை அடிக்கல் நாட்ட உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழினத்தின் வீரமரபின் அடையாளம், மண் விடுதலைக்கான முதல் முகவரி மாமன்னர்கள் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் 22.01.2025 புதன் அன்று அடிக்கல் நாட்டுகிறார்.

    ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமையப்பெறும் திருவுருவச் சிலைகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு மட்டுமல்லாமல், ரூ.50 இலட்சம் செலவில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினைத் திறந்துவைக்கிறார்.

    சிவகங்கைச் சீமையின் பெருமைக்கு மேலும் வலுசேர்க்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்து நன்றியை நான் சார்ந்த முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் மனமார தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொண்டார்.
    • அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தமிழக அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் .

    கடந்த ஆண்டு நவம்பவர் கோவையில் முதலாவது கள ஆய்வை தொடங்கிய முதல்வர், அடுத்ததாக விருதுநகர், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    அவ்வகையில் சிவகங்கையில் இன்று முதல்வர் களஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தாரால் ரூ.12 கோடி நிதியில் 30,450 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து காரைக்குடியில் சாலையில் ரோடு ஷோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் பலரும் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    • தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும்.
    • தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த நூலக திறப்பு விழாவில் முன்னாள் மந்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும், வாழ்வதற்கும் வளர்வதற்கும் வேறுபாடு உண்டு. தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும். தமிழில் எழுத வேண்டும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும். தமிழ் வளர வேண்டும் என்றால் பல புதிய வடிவங்களில் மாற வேண்டும். இந்த சிறிய நூலகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இது தனி நூலகம் அல்ல. ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் அங்கம் இந்த நூலகம்.

    சிவகங்கை பூமி தமிழ் வளர்த்த பூமி. தமிழ் வளர்த்தவர்களை தாங்கிய பூமி. புலவர்கள் மட்டுமல்ல தமிழ் புரவலர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் பல்கலைக்கழகத்தின் விதைகளை விதைத்தது வள்ளல் அழகப்பர் எங்களுக்கு கிடைத்த வரம்.

    இந்த பல்கலைக்கழகம் வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை நிறுவ முடிந்தது என் குடும்பத்தாருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த நூலகத்தில் கொள்ளளவு மிக மிக அதிகம். இன்னும் விரிவுபடுத்தலாம்.

    எங்களுக்கு யானை பசி. முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அரசே இங்கே இருக்கிறது. இந்த நூலகம் யானை பசிக்கு தமிழ் அன்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பிடி சோறு தர வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு பெரிய பிடிச்சோறு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×