என் மலர்
சிவகங்கை
- பாறைகள் மற்றும் மண் சரிவால் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மண்ணில் புதைந்தனர்.
- தனியார் கல்குவாரி நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டையில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறைகள் மற்றும் மண் சரிவால் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மண்ணில் புதைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பாறை இடுக்குகளில் சிக்கி இருந்த மற்றொருவரை நேற்று பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்டனர்.
இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு தொழிலாளியான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மைக்கேல் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.4 லட்சமும், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1.5 லட்சமும், கல்குவாரி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் என உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்ட மேகா மெட்டல்ஸ் என்ற தனியார் கல்குவாரி நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விபத்தையடுத்து தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்ய தமிழக கனிமவளத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டாஸ்மாக் கடைக்குள் இருந்த அனைத்து வகையான மது பாட்டில்களும் எரிந்து நாசமானது.
- கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றை ஒட்டி அதன் கரையோர பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கடைக்கும் மானாமதுரை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மது பிரியர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை தீப்பற்றி எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது கடை முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பின்னர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விபத்து நடந்த பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்க போராடினர்.
நேற்று காலையில்தான் சிவகங்கை மாவட்ட குடோனில் இருந்து விற்பனைக்காக பல லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த ரேக்குகள், அட்டை பெட்டிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடைந்த பாட்டில் சிதறல்கள் பல மீட்டர் தூரம் வரை சென்று விழுந்தன.
கடுமையான போராட்டத்துக்கு பிறகு தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் டாஸ்மாக் கடைக்குள் இருந்த அனைத்து வகையான மது பாட்டில்களும் எரிந்து நாசமானது. அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது தீ வைத்துவிட்டு சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.
ஆனால் நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரிந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக வைகை ஆற்றையொட்டி செயல்பட்ட டாஸ்மாக் கடை தீ விபத்தில் முழுமையாக எரிந்து சேதமாகி இருப்பது மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் கல்குவாரி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
- காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையை அடுத்த மல்லாங்கோட்டை கிராமத்தில் மேகா மெட்டல் குவாரி என்ற பெயரில் கல்குவாரி ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகைளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண் சரிந்ததில் குவாரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-,
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், மல்லாக்கோட்டை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் இன்று (20.5.2025) காலை எதிர்பாராதவிதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் கல் குவாரியில் பணி செய்துகொண்டிருந்த முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேரந்த ஹர்ஷித் ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் அறிவுத்தினேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
- தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- விபத்தில் மேலும் பலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையை அடுத்த மல்லாங்கோட்டை கிராமத்தில் மேகா மெட்டல் குவாரி என்ற பெயரில் கல்குவாரி ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகைளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இங்கு சுமார் 450 அடி ஆழமுள்ள குவாரி இயங்கி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கு முன்பாக அந்த குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வெடி திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது மண் சரிந்ததில் குவாரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.
உடனே அங்கிருந்த சக தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்ததாக தெரிகிறது.
இறந்தவர்கள் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் மேலும் பலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே விபத்து குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மண்ணில் புதைந்து இறந்தவர்களில் ஒருவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்து விரோதிகள்.
- தி.மு.க. ஆட்சிக்கு வருவது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 1300 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்த கரிகாலன் கட்டிய சந்திர சுவாமிகள் கோவில் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.
* வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்து விரோதிகள்.
* மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சிக்கு வருவது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து.
* வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த எது வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறினார்.
- இருட்டில் மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று பயிற்சி மருத்துவரின் முன்பாக வந்து நின்றுள்ளார்.
- மருத்துவமனை ஊழியர் ஒருவர் அலறல் சத்தம் கேட்ட பகுதியை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.
சிவகங்கை:
சிவகங்கையில் அரசு மருத்துவக்கல்லூரி கீழவாணியங்குடி பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகிறார்கள். அதே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அவர்களுக்கான விடுதிகளும் தனித்தனியாக இயங்கி வருகிறது.
இதில் இறுதியாண்டு படிக்கும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் நேற்று நள்ளிரவில் பணிகளை முடித்துவிட்டு, மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது, இருட்டில் மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று பயிற்சி மருத்துவரின் முன்பாக வந்து நின்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேகமாக விடுதியை நோக்கி நடையை கட்டினார். இருந்தபோதிலும் அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் பயிற்சி மருத்துவரின் முகத்தை தான் வைத்திருந்த துணியால் மூடி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
உடனடியாக அந்த பயிற்சி மருத்துவர் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட மருத்துவமனை ஊழியர் ஒருவர் அலறல் சத்தம் கேட்ட பகுதியை நோக்கி வேகமாக ஓடி வந்தார். அவரை பார்த்ததும் மர்ம நபர் மாணவியை விட்டுவிட்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தப்பித்து மறைந்தார்.
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சத்தியபாமா உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் பாலியல் துன்புறுத்தலுக்கு முயற்சிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் நடந்த பாலியல் அத்துமீறல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் சிவகங்கையில் பயிற்சி பெண் மருத்துவரை மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது.
- ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
காரைக்குடி:
திருச்சியில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அரசு பஸ் வந்தது. காரைக்குடி வருமானவரித்துறை அலுவலகம் அருகே வரும்போது அரசு பேருந்தில் திடீரென பிரேக் செயல்படவில்லை. டிரவைர் பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பலனில்லை.
தொடர்ந்து தாறுமாறாக சென்ற அரசு பஸ்சை சாலை தடுப்பின் மீது மோதி நிறுத்த முயன்றுள்ளார். ஆனாலும் பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் ரயிலில் ஏறி சிவகங்கை சென்றுள்ளார்
- பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே 20 ஆண்டுகளுக்கும் மேல் கொத்தடிமையாக ஆடு மேய்த்த முதியவர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளி அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயிலில் செல்கையில் டீ குடிக்க இறங்கியவர் தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறி, விபரம் அறியாமல் சிவகங்கை சென்றுள்ளார்
கடம்பங்குளம் பகுதியைச் சேர்ந்த மலைக்கண்ணு, அவரை கூட்டிச் சென்று ஆடு மேய்க்க வைத்துள்ளார். மலைக்கண்ணு இறந்துவிட, அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவரும் ஊதியம் இல்லாமல் உணவு மட்டும் கொடுத்து ஆடுமேய்க்க வைத்துள்ளார்.
சொந்த ஊருக்கும் செல்ல அனுமதிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்து விசாரணை நடத்தி குடும்பத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.
அப்பாராவின் மனைவி சீத்தாம்மா இறந்து விட்டதாகவும் மகளுக்கு திருமணமான தகவலும் தெரியவந்துள்ளது. மகள் மற்றும் மருமகனை அதிகாரிகள் வரவழைத்து அப்பாராவை ஒப்படைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எங்கள் பொதுச்செயலாளர் சொல்லவில்லை.
- எங்களுடைய அரசியல் எதிரி தி.மு.க. தான் என்று சொல்லி இருக்கிறார்.
சிவகங்கையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம், பா.ஜ.க. கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை. அவர் எங்களை சொல்லவில்லை.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எங்கள் பொதுச்செயலாளர் சொல்லவில்லை. எங்களுடைய அரசியல் எதிரி தி.மு.க. தான் என்று சொல்லி இருக்கிறார்.
* இவர் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அதைப்பற்றி கண்டு கொள்ளவும் இல்லை என்று கூறினார்.
- சிவகங்கையில் திருடிய பைக்கை, ரூ.1500 பணத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்தியுள்ளார்.
- தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து பைக்கை கொண்டுவந்துள்ளேன்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திருடிய பைக்கை, ரூ.1500 பணம் மற்றும் மன்னிப்புக் கடிதத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளாக் பாண்டா என்ற பெயரிலான அந்த மன்னிப்பு கடிதத்தில், "அவசரத்துக்கு பைக்கை எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து பைக்கை கொண்டுவந்துள்ளேன்.
ரூ.1500 பணம் பெட்ரோல் டேங்க்கில் இருக்கு. எப்படியும் கெட்ட வார்த்தை பேசியிருப்பீர்கள். அதற்கு நீங்கள் வருந்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வருந்த வைப்போம்" என எழுதப்பட்டுள்ளது"
- இளைஞர் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிக்கொண்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார்.
- கைதான தண்டாயுதபாணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான தண்டாயுதபாணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இளைஞர் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிக்கொண்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார்.
அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததாலும், தூங்க விடாமல் பயணிகள் தொந்தரவு செய்ததாலும் எரிச்சல் அடைந்து ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து மதுபோதையில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
- விவசாயிகள் விவசாயத்திற்கு கண்மாயில் உள்ள தண்ணீரை எடுத்தால், அதைத் தடுக்கின்றனர்.
- அ.தி.மு.க.வுடன் த.வெ.க. ஒன்றாக போராட்டத்தில் கலந்துகொண்டதை இருகட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்று உள்ளனர்.
சிவகங்கை:
2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் தற்போதே தங்கள் களப்பணிகளை தொடங்கியுள்ளன. உறுப்பினர் சேர்க்கை, மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா, பூத் கமிட்டி அமைப்பு என்று பம்பரமாக சுழன்று வரும் நிர்வாகிகளுக்கு அந்தந்த கட்சி தலைமையும் ஏராளமான பொறுப்புகளை அள்ளிக்கொடுத்துள்ளது.
அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சற்று முதல் வரிசையில் உள்ளது. முதலாம் ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடிய கட்சி தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து அதற்கான செயலாளர்களையும், நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்தார். அதே போல் பல்வேறு அணிகளையும் உருவாக்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
எதிரணியினரின் விமர்சனங்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வரும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன், த.வெ.க. தலைவர் இரண்டு கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார். அப்போது கட்சியின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் சிவகங்கையில் கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் அ.தி.மு.க.வுடன், த.வெ.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்களில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதில் விதிமீறல்கள் நடப்பதாகப் புகாா் எழுந்தது. அதேபோல் அந்த பகுதியில் இயங்கிவரும் குவாரியால் கிராமத்திற்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மேற்கண்ட கிராமத்தினர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனற்ற நிலையில், போலீஸ் நிலையம், கோர்ட்டு மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கினர். இதற்கிடையே கிராம மக்கள் சாா்பில் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு வேம்பங்குடி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில் நாதன் உள்ளிட்டோரும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெற்கு மாவட்ட செயலர் முத்துபாரதி தலைமையில் நகரச் செயலர் தாமரைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அப்போது தி.மு.க. அரசுக்கு எதிராகவும், கிராவல் மண் கொள்ளைக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், கிராம மக்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தி பேசவே வந்தோம். மாவட்டம் முழுவதும், கிராவல் மண் கொள்ளை நடக்கிறது. அதை அரசு அதிகாரிகள் தடுக்கவில்லை. அமைச்சர்கள் கனிம வள கொள்ளை மூலம் கிடைக்கும் பணத்தை வெளி நாடுகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால், விவசாயிகள் விவசாயத்திற்கு கண்மாயில் உள்ள தண்ணீரை எடுத்தால், அதைத் தடுக்கின்றனர்.
வேம்பங்குடி கிராமத்தில் அரசு விதியை மீறி பல அடி ஆழத்திற்கு கிராவல் மண் எடுத்துள்ளனர். வேம்பங்குடியில் நடந்துள்ள கிராவல் மண் கொள்ளையை, அதிகாரிகள் ஆய்வு செய்து, அதில் அரசு விதியை மீறி, மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதேபோல் உண்ணாவி ரதப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் மணல் கொள்ளைக்கு எதிராக பேசினர். அ.தி.மு.க.வுடன் த.வெ.க.வும் கைகோர்த்து போராட்டத்தில் பங்கேற்றது சிவகங்கை அரசியல் வட்டாரத்தில் பேசும்பொ ருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து த.வெ.க. தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துபாரதி கூறுகையில், இந்த மணல் கொள்ளை, குவாரி பிரச்சனை தொடர்பாக பல்வேறு போராட்டங்களை கிராமமக்களுக்காக நடத்தி இருக்கிறோம். கிராமமக்கள் அழைப்பின் பேரில் தமிழக வெற்றிக் கழகம், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொண்டன.
மக்களுக்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கட்சி தலைமை எங்களுக்கு உத்தர விட்டுள்ளது. அந்த வகையில் தான் நாங்கள் நேற்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டோம். மற்றபடி தேர்தல், கூட்டணி என்பது தொடர்பாக நாங்கள் யோசிக்கவில்லை. கிராம மக்களையும், விவசாயத்தையும் காப்பதற்காகவே எந்தவித பாகுபாடும் பார்க்காமல் நாங்கள் பங்கேற்றோம் என்றார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் எந்ததெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி சேரப்போகிறது, களம் மாறலாம், சூழ்நிலையும் மாறலாம் என்ற கருத்துகள் நிலவி வரும் நிலையில், அ.தி.மு.க.வுடன் த.வெ.க. ஒன்றாக போராட்டத்தில் கலந்துகொண்டதை இருகட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்று உள்ளனர்.






