என் மலர்tooltip icon

    சேலம்

    • மனைவி மற்றும் 2 குழந்தைகளை ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
    • பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.

    சேலம்:

    சேலம் திருவா கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் ஆர்த்தி (28), இவருக்கு கண்ணன் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணன் இறந்து விட்டார்.

    இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான அமெரிக்காவில் வசித்து வரும் 57 வயதான பாஸ்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற போது பாஸ்கர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சீலநாயக்கன்பட்டி பகுதியில் சாலையில் ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி, கணவர் பாஸ்கரை இரவு முழுவதும் தேடினார். அப்போது சேலம் முள்ளுவாடி கேட் அருகே பாஸ்கருக்கு சொந்தமான விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். அங்கு பாஸ்கரிடம், ஆர்த்தி முறையிட அங்கிருந்த போலீசார் ஆர்த்தியை விசாரணைக்கு அழைத்தனர்.

    அப்போது நான் ஏன் விசாரணைக்கு வர வேண்டும் என ஆர்த்தி கேட்டார். மேலும் தன்னை அடித்து கொடுமைபடுத்திய கணவர் மீது நான் தான் புகார் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.


    இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்த்தி போலீசாரின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அவர் கூறுகையில், 2 மகன்களையும் பார்த்து கொள்வதாக கூறி பாஸ்கர் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது எனது 2 மகன்களையும் பார்த்து கொள்ள முடியாது என கூறி என்னையும் எனது குழந்தைகளையும் அடித்து துண்புறுத்துகிறார்.

    இதனால் மன வேதனை அடைந்த நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டேன், இதையறிந்த பாஸ்கர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.

    மேலும் 40 வயது என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் 57 வயது என தெரிய வந்துள்ளது. எனது வயது கொண்ட அவரது முதல் மனைவியின் மகள் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வருகிறார். தற்போது அமெரிக்காவுக்கு செல்ல தயாராகி விட்ட அவர் தன்னை அடித்து விரட்டி டார்ச்சர் செய்கிறார். என்னை கொடுமைபடுத்தி எனது 2 மகன்களை வெளியேற்றி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

    இதற்கிடையே ஆர்த்தியை அப்புறப்படுத்திய போலீசார் அங்கிருந்து போலீஸ் காரில் பாஸ்கருடன் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று இது தொடர்பாக ஆர்த்தி புகார் அளித்தார்.

    மேலும் போலீசார் விசாரணை நடத்திய போது, சீலநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது காரில் இருந்து பாஸ்கர், ஆர்த்தி மற்றும் அவரது குழந்தைகளை கீழே தள்ளி விட்டதாக புகார் கூறினார். மேலும் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலானது.

    இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பாஸ்கர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பாஸ்கர் சேலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
    • டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3-ந் தேதி முதல் திறந்து விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் நேற்று வரை பாசனத்திற்கு 3 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டது.

    அதன்பிறகு மாலை 6 மணியுடன் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 45 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் நேற்று 66.52 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 66.21 அடியாக சரிந்தது. அணையில் 29.53 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

    • தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது.
    • மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வியாபாரிகள், தொழில் முனைவோர், நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்கள். கோவையில் நேற்று கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் இன்று சேலம் 5 ரோடு ஜென்னிஸ் கேட்வே ஓட்டலில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவ அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பங்கேற்றனர்.


    கருத்து கேட்பு கூட்டத்தில் நாமக்கல் முட்டை கோழி பண்ணையாளர்கள், லாரி உரிமையாளர்கள், பஸ் உரிமையாளர்கள் சங்கம் , துணி ஏற்றுமதியாளர்கள், பட்டு உற்பத்தியாளர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்கள், ட்ரெய்லர் உரிமையாளர்கள், மோட்டார் மெக்கானிக் சங்கம், பழங்குடியினர் மக்கள் சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், நெசவாளர் சங்கம், நூல் உற்பத்தியாளர் சங்கம், மரவள்ளி கிழங்கு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை மனுவாக வழங்கினர். அப்போது முக்கிய கருத்துக்களை அவர்கள் நேரடியாக நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

    அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து தேர்தல் அறிக்கையில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக குழுவினர் உறுதி அளித்தனர்.

    தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து நேரடியாக பெற்று தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினர் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்வதுடன் சில முக்கியமானவற்றை நேரடியாக எங்களிடம் தெரிவிக்கலாம்.


    தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது. வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்து வருகிறது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல குழப்பங்கள் அதில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை. கோரிக்கையை காது கொடுத்து கேட்கவும் தயாராக இல்லை.

    மத்திய அரசு நாம் சொல்வதை கேட்கும் அரசாக அமைய வேண்டும். மக்களை ஒருங்கிணைத்து அழைத்து செல்லும் அரசாக அது இருக்க வேண்டும். ஒற்றுமையான மத்திய அரசாக , வேலைவாய்ப்பு உருவாக்கும் அரசாங்கமாக உரிமைகளை மதிக்கும் அரசாக இருக்க வேண்டும். மக்களையும், மொழி உணர்வையும் மதிக்கும் அரசாக உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த பாராளுமன்ற தேர்தலை அனைவரும் இணைந்து எதிர் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
    • கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பூமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் தட்டி கேட்டனர். இதையடுத்து 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மோதலில் ஈடுபட்ட 2 தரப்பை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு ஒருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மோதல் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வரவே மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபடாமல் இருக்க வேண்டி முன்எச்சரிக்கையாக போலீசார் பூமிரெட்டிபட்டி கிராமத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.
    • ஜன 18 ஆம் தேதி முதல் ஜன 29 ஆம் தேதி வரை இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிப் 11 ஆம் தேதி முதல் பிப்19 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை சேலத்தில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சேலத்தில் இன்று (10-02-2024) நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் திரு. ஸ்ரீனிவாசன் மற்றும் திரு. பாலாஜி ஆகியோர் பங்கேற்று பேசியதாவது:

    "கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 11 அன்று தர்மபுரி மாவட்டத்தை வந்தடைய இருக்கிறது. பின்னர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலக்கோடு, காவேரிப்பட்டிணம் பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் பிப் 19 ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. முன்னதாக, சேலம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜன 18 ஆம் தேதி முதல் ஜன 29 ஆம் தேதி வரை இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

    ரதம் பயணிக்கின்ற ஊர்களில் இருக்கும் பெருமக்கள் இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.

    இதோடு, சிவ யாத்திரை என்னும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய 7 தேர்களை இழுத்தபடி மொத்தம் 7 குழுக்களாக, வருகின்றனர். இந்த யாத்திரை பிப் 23 அன்று சேலத்தை வந்தடைகிறது.

    மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம், கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள லிங்க பைரவி கோவிலில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. மேலும் அன்றைய நாள் இரவு முழுவதும் லிங்க பைரவி கோவில் தரிசனத்திற்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மக்களுக்கும் மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது.

    இதை போலவே, தர்மபுரியில் பாரதி புரம், சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மதுரபாய் திருமண மண்டபத்திலும், ஓசூரில் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, சப் ஜெயில் எதிரில் உள்ள மீரா மஹாலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழகத்தில் பா.ஜனதா கட்சி பெரிய எழுச்சியை கண்டுள்ளது.
    • தி.மு.க.வினரிடம் வாய் சவடால் உள்ளது.

    சேலம்:

    சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பட்டியில் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை திறந்து வைத்த பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதா கட்சி பெரிய எழுச்சியை கண்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தேசியமும், தெய்வீகமும் இனி இந்த நாட்டுக்கு தேவை என்று நினைக்கிறார்கள். கடவுளுக்கு பயப்படுபவர்கள் தான் நியாயமாக இருக்க முடியும், கடவுளை நம்புகிறவன் நியாயமாக இருப்பான் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வளவு காலமும் சமூக நீதி, சமுதாய மாற்றம் என்று பேசி அந்தந்த குடும்பத்தினர் தான் வளர்ச்சி பெற்றனர். ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதாக கூறினர். ஆனால் அவர்கள் குடும்பத்தை மட்டும் தான் பார்த்து கொண்டார்கள். எங்கேயும் ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் அமைக்கவில்லை.


    பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இருக்கும் குடும்பம் வாரிசு அரசியல் செய்யவில்லை. வாரிசுகள் அரசியலுக்கு வருவார்கள், ஆனால் வாரிசுககள் தலைமைக்கு வரக்கூடாது என்பது பா.ஜ.க.வின் திட்டம். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசும் போது கட்சியை விட, இயக்கத்தை விட தேசம் தான் முக்கியம் என பேசியுள்ளார். பா.ஜனதா கட்சியை நோக்கி பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    வருகிற 11-ந் தேதி பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா 200-வது ஜென்ம ஜென்மத்தில் யாத்திரையில் கலந்து கொள்வதற்காகவும் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவை சந்திக்கவும் மாவட்ட தலைவர்களை சந்திக்கவும் தமிழகம் வருகிறார். பாரத பிரதமர் வருகிற 25-ந் தேதி என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ள பல்லடத்திற்கு வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு எவ்வளவு உதவி செய்தது என்று அவர் முதலமைச்சராக இருந்த போதும் எதிர்கட்சி தலைவராக இருந்த போது கூறி உள்ளார். அவர் கேட்ட போதெல்லாம் மத்திய அரசு நிதி கொடுத்தது. இதனை சட்டமன்றம் மற்றும் வெளியிலும் அவர் சொல்லி உள்ளார். எங்கள் இயக்கத்தால் அவர் பயன்பெற்றுள்ளார். ஏதோ ஒரு காரணத்திற்காக அவரை போல லாவனி கச்சோரி நடத்த நாங்கள் தயாராக இல்லை.


    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை லேகியம் விற்பவர் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளாரே என்ற கேள்விக்கு,

    உடல் நலம் சரியில்லை என்றால் லேகியம் வாங்குவார்கள், நோய் பிடித்தவர்கள், ஊழல் வாதிகளை திருத்துவதற்கும், குடும்ப ஆட்சி நடத்துபவர்களை திருத்துவதற்கும் அவர் லேகியம் விற்கிறார். அந்த நோய் தமிழகத்தில் வேகமாக வளர்ந்திருக்கிறது, அரசை நடத்துபவர்கள் மத்தியில் அந்த நோய் இருக்கிறது. அந்த நோயை தீர்க்க எங்கள் தலைவர் லேகியம் விற்பது உண்மை தான், ஊழல் நோயை ஒழிக்க அதனை வேரறுக்க லேகியம் விற்கிறார்.

    தி.மு.க.வினரிடம் வாய் சவடால் உள்ளது. ஆனால் உள்ளூர பயந்து தான் உள்ளனர். மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துள்ளது. 95 சதவீத மக்கள் பா.ஜ.க.வுக்கு அதரவாக உள்ளனர். கருத்து கணிப்புகளை விட மக்கள் மன நிலையே தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.
    • பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கை குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கணிப்பொறி, உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்தது நிரூபணமானது. தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • வாகனத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டனர்.
    • வாகனத்தில் சீட் பின் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ராசிபுரம் பிரிவு ரோட்டில் ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது வாகனத்தை எடுக்க வந்தார்.

    அப்போது அங்கு இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சீட் பகுதியில் பாம்பு சென்றதை பார்த்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இருசக்கர வாகனத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டனர். பாம்பை மீட்டவுடன் இருசக்கர வாகன ஓட்டி நிம்மதி அடைந்தார். பின்னர் உயிருடன் பிடித்த பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இருசக்கர வாகனத்தில் சீட் பின் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி.
    • நம்முடைய உரிமைகளை பாதுகாக்க பிரிந்து விட்டோம்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த ஆலோசனை கூட்டத்தின் நோக்கம் எதிரிகளை வேரோடும், கூண்டோடும் உங்களது திறமையால் அறிவு கூர்மையால் வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம் ஆகும். நான் தகவல் தொழில் நுட்ப பிரிவு கூட்டத்தில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறையாகும்.

    இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு அ.தி.மு.க. மீது வீண் பழி சுமத்திக்கொண்டு இருக்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம்முடைய ஐ.டி. விங் நிர்வாகிகள் உண்மை செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

    தி.மு.க. அரசு நம்முடைய திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்துகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மாவட்டத்தில் ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லை. இங்கு என் முன் அமர்ந்து இருக்கக்கூடிய இளைஞர்கள் தான் வருங்கால இந்தியாவை ஆளக்கூடிய சிப்பாய்கள். தமிழ்நாட்டை ஆள பிறந்தவர்கள். உங்கள் உள்ளத்தில் திறமை புதைந்து கிடக்கிறது. அதை வெளிப்படுத்துங்கள். இந்த தேர்தலின் மூலமாக. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. செய்த சாதனைகள் இந்த தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்களை மக்களிடத்தில் நேரடியாக வலைதளங்கள் மூலமாக கொண்டு சேர்ப்பது உங்களின் தலையாய கடமை.

    விஞ்ஞான உலகத்தில் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்பதை வலைதளம் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 40 சதவீத இளைஞர்கள் தற்போது சமூக வலைதளத்தை பயன்படுத்துகின்றனர். எனவே வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவது முக்கியம் ஆட்சியாளர்கள் பணத்தை நம்பியுள்ளனர். ஆனால் நாம் மக்களை நம்பி கட்சி நடத்துகிறோம்.

    அ.தி.மு.க. ஜனநாயக கட்சி., தி.மு.க. ஒரு வாரிசு அரசியல். தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் ஏதோ தில்லுமுள்ளு செய்து ஆட்சிக்கு வந்துள்ளார். இதையடுத்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை விளையாட்டு துறை அமைச்சராக்கி அவரை முன்னிலை படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. கட்சிக்காக உழைத்தவர்கள் பல ஆண்டு காலமாக அந்த கட்சியில் உயர் பதவிகள் பெற்று பல ஆண்டுகாலமாக கட்சியில் இருக்கிற மூத்த அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி. பாராளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம். மக்களுடைய குரல்களை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவது நம்முடைய எம்.பி.க்கள்.

    இன்றைக்கு கூட்டணி என்று வந்து விட்டால் தேசிய அளவில் இருக்கின்ற கட்சிகளோடு கூட்டணி வைத்துவிட்டால் தேசிய அளவில் பார்வை சென்று விடுகிறது. நம்முடைய மாநிலத்தின் பிரச்சனையை காதுகொடுத்து கேட்பது கிடையாது. அதனால் பாதிக்கப்படுவது நாம். ஆகவே தான் தமிழ்நாட்டின் மக்களுடைய உரிமைகளை பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர, நிதியை பெற்று வர, புயல், வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் படுகின்ற துன்பங்களை யார் நிவர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு நாம் மத்தியில் பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு கொடுப்போம்.

    ஓட்டு போட்ட மக்கள் தமிழ்நாடு, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது தமிழ்நாட்டு மக்கள். ஆகவே நாட்டு மக்கள் பிரச்சனைகள் வருகிற போது அவர்களுடைய பிரச்சனைகளை எடுத்துச் சொன்னால் அவர்கள் காது கொடுத்து கேட்பது கிடையாது. ஆகவே தான் நாங்கள் தனியாக பிரிந்து விட்டோம். நம்முடைய உரிமைகளை பாதுகாக்க பிரிந்து விட்டோம்.

    காரில் இருந்து ஒவ்வொரு டயர் கழண்டு ஓடுவது போல் இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக பிரிந்து செல்கிறது. கடந்த முறை ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் அறிவித்தார். தற்போது இந்தியா கூட்டணி அறிவித்தார் அவர் ஒரு ராசியானவர்.

    அ.தி.மு.க.வை பொறுத்த வரைக்கும் பொறுத்து இருந்து பாருங்கள் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இருதரப்பினர் இடையே போலீசார் பேசிக் கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
    • அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் அரசியல் கட்சி தலைவரின் பாடலுக்கு அவரது கட்சியினர் ஆட்டம் போடுவது போல திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டு வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

    அதில் மற்றொரு தரப்பினர் ஜாதி பெயரை குறிப்பிட்டு அவதூறான கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர். அதற்குக் கீழ் கல்பகனூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு சமுதாயம் குறித்து அவதூறு வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார்.

    தலையில் காயம் அடைந்த ஏட்டு முருகவேல்

    தலையில் காயம் அடைந்த ஏட்டு முருகவேல்

    மேலும் அதனை தனது வாட்ஸ்-அப் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். அதனைப் பார்த்த மற்றொரு சமுதாயத்தினர் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் பச்சமுத்து தலைமையில் ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்னர்.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில் 3 போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது இருதரப்பினர் இடையே போலீசார் பேசிக் கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினரும் செங்கற்களை மாறி மாறி வீசினர்.


    இதனால் அப்பகுதியில் உள்ள இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் மற்றும் அந்த பகுதியில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் அடித்து சேதப்படுத்தினர். அப்போது அந்த பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது. தொடர்ந்து நடைபெற்ற கல்வீச்சில் பாதுகாப்பு பணிக்காக வந்த வீரகனூர் போலீஸ் ஏட்டு முருகவேல் என்பவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் கல்பகனூரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்திய போலீசார் இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர்.

    இது குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் ஆகியோரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் வெளியூர் நபர்கள் உள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • டாக்டராக இருந்தாலும் சரி, ஆக்டராக இருந்தாலும் சரி யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,
    • பசுமை பூங்காவை தவிர வேறு என்ன கொண்டு வந்தாலும் நானே முதல் ஆளாக இறங்கி கடுமையாக போராடுவேன்.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ம.க. தயாராக உள்ளதாகவும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். மேலும் தமிழகத்தில் குறுவை சம்பா பாதிப்பு காரணமாக அரிசி விலை இன்னும் ஏற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத தி.மு.க.விற்கு சமூகநீதி குறித்து பேச தகுதியில்லை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்த சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் முதலமைச்சருக்குதான் மனசு இல்லை.

    நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அன்புமணி, டாக்டராக இருந்தாலும் சரி, ஆக்டராக இருந்தாலும் சரி யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் பா.ம.க. போல சாதனைகளை செய்ய வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இருக்கும் ஈகோ பிரச்சனையால் பொதுமக்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் தான் பாதிப்பு என்ற அவர் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு குறித்து அரசு கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திட்டமிட்டு திறந்திருக்க வேண்டும். கோயம்பேடு பஸ் நிலையத்தை அவசரம் அவசரமாக அப்புறப்படுத்த பார்க்கிறார்கள். இங்கு பசுமை பூங்காவை தவிர வேறு என்ன கொண்டு வந்தாலும் நானே முதல் ஆளாக இறங்கி கடுமையாக போராடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்

    பேட்டியின்போது எம்.எல்.ஏக்கள் அருள், சதாசிவம், வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, துணை தலைவர் தேவதாஸ் மாவட்ட செயலாளர்கள் ராஜசேகர், நாராயணன் மற்றும், கதிர் ராசரத்தினம், சத்திரிய சேகர் விஜயராசா, உள்பட பலர் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    சேலம்:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    * தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடக காவிரி படுகையில் எதுவும் கட்ட முடியாது.

    * இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது அண்ணாவின் ஆசை.

    * அண்ணா நினைவு நாளில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு வருமா என ஏங்கி கொண்டிருக்கிறோம்.

    * தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முதலமைச்சரும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கினால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறினார்.

    ×