என் மலர்tooltip icon

    சேலம்

    • சஞ்சய் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆனந்தா பிரிஜ் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சஞ்சய் (வயது 23). இவர் சேலம் அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பகுதி நேர வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற சஞ்சய் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். பின்னர் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்த போது சஞ்சய் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அவர்கள் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தாய் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து சஞ்சய் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளநீர் 30 முதல் 60 ரூபாய் வரையும், தர்பூசணி ஒரு கிலோ 25 ரூபாய் வரையும் விற்பனையானது.
    • கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அதிக அளவிலான நீர் பருக வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், ஆனால் இந்தாண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.

    சேலம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து நேற்று உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் 102.2 டிகிரியாக இருந்த வெயிலின் தாக்கம் நேற்று மேலும் அதிகரித்து 103.3 டிகிரியாக பதிவானது.

    இதனால் காலையில் தொடங்கிய வெயில் மாலை 6 மணி வரை சுட்டெரித்தது. மேலும் 7 மணி வரை அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சாலைகளில் சென்றவர்கள் குடைகள் பிடித்தபடியும், துணிகளால் தலையை மூடியபடியும் சென்றனர். நேற்றிரவும் கடும் புழுக்கம் நீடித்ததால் இரவிலும் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பான கடைகளான நுங்கு, பழச்சாறு, இளநீர், தர்பூசணி, கம்பங்கூழ், மோர் கடைகளில் அதிக அளவில் குவிந்தனர். குளிர்பானங்களை பருகி உஷ்ணத்தை தவிர்த்தனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதியது. இளநீர் 30 முதல் 60 ரூபாய் வரையும், தர்பூசணி ஒரு கிலோ 25 ரூபாய் வரையும் விற்பனையானது. இதனால் அதிக அளவில் தர்பூசணிகளை வாங்கி சாப்பிட்டனர்.

    இன்று மேலும் 2 முதல் 3 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அதிக அளவிலான நீர் பருக வேண்டும், மோர், இளநீர், உப்பு கலந்த அரிசி கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ஆகியவற்றை அதிக அளவில் பருகலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • காரை சோதனை செய்த போது காரில் குட்கா, ஹான்ஸ் உள்பட 440 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
    • கொள்முதல் மதிப்பு 2 லட்சத்து 27 ஆயிரம் என்றும், விற்பனை மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை போலீசார் நேற்றிரவு உடையாப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே வெகுநேரமாக நின்று கொண்டிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட முயன்றனர்.

    அப்போது காருக்குள் இருந்த 2 பேர் தப்பியோட முயன்றனர். இதனை பார்த்த போலீசார் தப்பியோட முயன்ற ராஜஸ்தானை சேர்ந்த லெட்சமணன் (19) என்பவரை மடக்கி பிடித்தனர். மேலும் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தப்பியோடி விட்டார்.

    தொடர்ந்து காரை சோதனை செய்த போது காரில் குட்கா, ஹான்ஸ் உள்பட 440 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் கொள்முதல் மதிப்பு 2 லட்சத்து 27 ஆயிரம் என்றும், விற்பனை மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த குஜராத் பதிவெண் கொண்ட அந்த காரையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரில் இருந்து ஆத்தூருக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதாகவும், கார் பழுது ஆனதால் அங்கு நிறுத்தி வைத்திருந்த நிலையில் போலீசாரிடம் சிக்கி கொண்டதாகவும் கூறி உள்ளார்.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்தது.
    • அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    சேலம்:

    தமிழகம்-கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து பெங்களூரு நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும், தமிழகத்திற்கும் சேர்த்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    நேற்று காலை விநாடிக்கு 67 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று அதிகரித்து 148 கன அடியாக வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 62.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 62.24 அடியானது. நீர் இருப்பு 26.38 டி.எம்.சி.யாக உள்ளது.

    • கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களின் போதும், கன்னியாகுமரியில் இருந்து தான் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டங்களை தொடங்கினார்.
    • பிரதமர் மோடி வருகிற 18-ந் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    சேலம்:

    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பாராளுமன்ற தேர்தல் களம் நாடு முழுவதும் களை கட்டி உள்ளது. பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசி வருகிறார்.

    இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடி கடந்த ஒரு மாத காலத்தில் 2 முறை தமிழகத்துக்கு வந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    கடந்த மாதம் 27-ந் தேதி கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். பின்னர் மதுரைக்கு புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இரவில் மதுரையில் தங்கிய அவர் மறுநாள் (28-ந்தேதி) தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த விழாவில் குலசேகர பட்டணம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் கடந்த 4-ந் தேதி 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    தற்போது 3-வது முறையாக பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார். சேலத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது.

    இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதி வாக்காளர்களிடம் பிரதமர் மோடி பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வருகிறார். பின்னர் காலை 11 மணி அளவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்காளர்கள் மத்தியில் பேசுகிறார்.

    இதையொட்டி அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திரட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். பிரதமர் மோடிக்கு பல்லாயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி சேலம் வருகையையொட்டி பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் தொண்டர்கள் அமருவதற்கான இடமும், வாகனம் நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சேலம் கூட்டத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கோவைக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி பேச உள்ள மேடை அமையும் இடத்தில் நேற்று பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே நேற்று சேலம் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மாநில துணை செயலாளருமான கே.பி.ராமலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்முருகன், சேலம் தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரவி, வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். அவர்கள் சேலத்திற்கு வருகை தரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது குறித்தும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்தனர்.

    சேலம் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி 16-ந்தேதி கன்னியாகுமரி செல்கிறார். அவர் அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அவர் அந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    அப்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 5 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

    பிரதமர் மோடி பேசுவதற்காக கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களின் போதும், கன்னியாகுமரியில் இருந்து தான் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டங்களை தொடங்கினார்.

    இந்த முறை பாராளுமன்ற தேர்தலோடு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்த வாய்ப்பு உள்ளது. கடந்த முறை இந்த தொகுதியில் பா.ஜனதா, அ.தி.மு.க.வுடன் இணைந்து களம் இறங்கியது. தற்போது இந்த கட்சிகள் தனித்து களம் இறங்க உள்ளன.

    இந்த தொகுதிக்கான பா.ஜனதா வேட்பாளரையும் 16-ந்தேதி கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்து ஆதரவு திரட்ட உள்ளார்.

    பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பிரதமர் மோடி வருகிற 18-ந் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் கோவையில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

    இந்த 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் மைய பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். கோவையில் ஏற்கனவே கொடிசியா மைதானத்தில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். அங்கு ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் குவியும் வகையில் இட வசதி உள்ளன. இதனால் அந்த இடத்திலேயே இந்த முறையும் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    கோவை பாராளுமன்ற தொகுதியை வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக பா.ஜ.க. பார்க்கிறது. இதனால் இந்த தொகுதியில் வெற்றி பெறும் வகையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசார கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை திரட்ட பா.ஜ.க.வினர் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்களை பங்கேற்க செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது பிரதமர் வருகை தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வந்தவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்குவோம். பிரதமர் கேரளாவில் இருந்து கோவை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    • சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார்.
    • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள சினிமா தியேட்டர் வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர்.

    அப்போது சூரமங்கலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேஸ்திரி குமரேசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினர். அப்போது உழவர் சந்தை அருகில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது தனது குழந்தையின் கையில் இருந்த தங்க காப்பு கீழே விழுந்து விட்டதாகவும் தியேட்டரில் எங்கும் தேடி பார்த்து கிடைக்கவில்லை.

    எனவே அங்கு வரும் குப்பையில் உள்ளதா? என்று பார்க்குமாறு கூறினார். இதனையடுத்து குப்பை எடுத்து செல்லப்பட்ட வண்டியை ஓரங்கட்டிய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உடனடியாக வண்டியில் இருந்த குப்பைகளை தரம் பிரிக்க தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு காணாமல் போன தங்க காப்பு கிடைத்துவிட்டதாக தகவல் தரப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் நேரடியாக தியேட்டருக்கு வந்து தங்க காப்பை பெற்றுச் மகிழ்ச்சியுடன் சென்றனர். தியேட்டரில் தவறவிட்ட தங்க காப்பை குப்பைக்கு சென்ற போது மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

    • மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
    • பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    சேலம்:

    சேலத்தில் மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஆடு, கோழிகளை கடித்தபடி பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் மாசி அமாவாசை அன்று நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் மிகவும் பிரபலமானது. பல 100 ஆண்டுகளாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

    குறிப்பாக சேலம் டவுன் தேர்வீதி, ஜான்சன்பேட்டை, வின்சென்ட், கிச்சிப்பாளையம் நாராயண நகர் ஏரிக்கரை மற்றும் ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த கோவில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து பக்தர்கள் மேளதாளங்களுடன் ஆங்காங்கே உள்ள சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, அங்காள பரமேஸ்வரி உள்பட பல்வேறு அம்மன்கள் வேடம் அணிந்து ஆடியவாறு சென்றனர். அப்போது, வழிநெடுக திரளான பக்தர்கள் நின்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி, சாமியாடியவாறு வந்தவர்களிடம் ஆடு, கோழிகளையும், முட்டைகளையும் கொடுத்து வேண்டிக்கொண்டனர்.

     மேலும் ஆட்டுகுட்டிகளை வாங்கிய பக்தர்கள், அதை தங்கள் கழுத்து மேல் தூக்கி போட்டு ஆடியதோடு, ஆட்டின் குரல்வளையை கடித்து ரத்தம் குடித்ததையும் காண முடிந்தது. இது ஒருபுறம் இருக்க, சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வியபடி அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டு சுடுகாட்டை நோக்கி சென்றனர்.

    மேலும், சில பக்தர்கள் சுடுகாட்டின் புதைக்குழியில் கிடந்த இறந்த மனிதர்களின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆகியவற்றுடன் ஆடு, கோழிகளை வாயில் கவ்வியபடி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

    இந்த காட்சிகள் சாலையில் நின்றிருந்த பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்தது. சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள காக்காயன் சுடுகாட்டில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சியை யொட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    அப்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ரோஷத்துடன் சாமியாடி வந்த பக்தர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினர். மேலும், தீராத நோய்கள் குணமாகவும், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சாமி வேடம் அணிந்திருந்தவர்கள் தாண்டி ஆக்ரோஷமாக சென்றனர்.

    • இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும்
    • பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடய மாம்பழங்கள் தான், அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்ப ழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    குறிப்பாக சேலம் மாவ ட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், காரிப்பட்டி அயோத்தியாப்பட்டனம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும்,

    மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அதனை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து இருக்கும், இந்தாண்டு பருவம் தவறிய மழை பெய்ததால் மாம்பழம் வரத்து 20 நாட்கள் காலதாமதமாகி உள்ளது.

    தற்போது தான் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கி உள்ளது. குறிப்பாக இமாம்பசந்த், சேலம்-பெங்களூரா, சேலம் குண்டு, கிளிமூக்கு பழங்கள் மா ர்க்கெட்டுகளுக்கு வரதொடங்கி உள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் வரை மாங்காய்கள் சேலம் மார்க்கெட்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும், அப்போது குறிப்பாக சேலம் சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, ஏற்காடு ரோடு, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதி களில் மாம்பழங்கள் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்கப்படும். இதனால் எங்கு பார்த்தலும் மாம்பழ மனம் வீசும்.

    தற்போது கடை வீதி மற்றும் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள், பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாம்பழங்கள் ஒரு கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரிக்கும்.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டில் காலம் கடந்து பெய்த மழையால் 20 நாட்கள் காலதாமதமாக மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இன்னும் 20 நாட்களில் மாம்பழ சீசன் உச்சம் பெறும். ஆனாலும் வழக்கத்தை விட இந்தாண்டு மாந்தளிர் தான் அதிகம் உள்ளது. பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.
    • 5-வது நாளாக இன்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    சேலம்:

    தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் 5-வது நாளாக இன்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் பணியை புறக்கணித்து, கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சேலம் கோட்டை மெயின் ரோட்டில் 5-வது நாளாக இன்று சாலையோரம் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் சுமார் 180-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை 5-வது நாளாக இன்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    • பலியான மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் சுக்கம்பட்டியை அடுத்த கோனூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 42). விவசாயி. இவருக்கு ஏற்காடு அடிவாரத்தில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து வருகிறார். இதனால் மாதையன் தினமும் காலையில் தோட்டத்திற்கு செல்வது வழக்கம்.

    வழக்கம்போல் இன்று காலை 7 மணிக்கு அவர் தோட்டத்திற்கு சென்றார். அப்போது கால்நடைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு குடத்தை எடுத்துக்கொண்டு அங்குள்ள வாழை தோட்டத்தில் உள்ள கிணறு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த காட்டெருமை மாதையனை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் தொடை, கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து காட்டெருமையை விரட்டி விட்டு படுகாயம் அடைந்த மாதையனை மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். அதன் ஊழியர்கள் பரிசோதித்து பார்த்து மாதையன் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீராணம் போலீசுக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், சேர்வராயன் வனச்சரகர் பழனிவேல் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பலியான மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே காட்டெருமை முட்டி பலியான மாதையன் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் நிவாரணம் தொகை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. பலியான மாதையனுக்கு சரஸ்வதி (40) என்ற மனைவியும் புவனேஸ்வரன் (13), நவனேஸ்வரன் (5) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    • இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட நடப்பாண்டில் 6 சதவீதம் அளவுக்கு குறைவாக பெய்திருந்தது. இதனால் தற்போதே மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்கு மேல் கோடை வெயில் அதிக அளவில் இருக்கும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தை அடையும், அப்போது மதிய நேரங்களில் அனல் பறக்கும், இதனால் பொது மக்கள் சாலைகளில் நடமாட்டம் குறைந்து வீட்டில் முடங்குவார்கள்.

    ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக சேலத்தில் 96.8 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. படிப்படியாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

    இதனால் பொது மக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணி வரை வெயில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கம்பங்கூழ், மோர், தர்பூசனி, இளநீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகி பொது மக்கள் வெப்பத்தை தணித்து வருகிறார்கள். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    சேலம் சத்திரம் உள்பட பல பகுதிகளில் திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தர்பூசனி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

    இது குறித்து வானிலை அதிகாரிகளிடம் கேட்ட போது, வழக்கத்தை விட இந்தாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது பனிப்பொழிவு இருப்பதால் சற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும், மழை வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில்சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
    • போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே கொளத்தூர் கோட்டை மடுவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமிகளை ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் நேற்று அந்த இளைஞர்களை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மயில்சாமி (வயது 22) சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், சேது (20) தனுஷ் (24) ஆகிய 2 பேர் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் குமார், ரத்தினகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து மேட்டூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில்சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கருங்கல்லூர், காவேரிபுரத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    ×