என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    பொன்னமராவதி அருகே வகுப்பறையில் பேராசிரியர் அவதூறாக திட்டியதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் கார்த்திக் (வயது 18). இவர் மேலைச்சிவபுரியில் உள்ள கல்லூரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார். இவரை அதே கல்லூரியில் வணிகவியல்  துறையில் பேராசிரியராக பணிபுரியும் துரைப்பாண்டி என்பவர் வகுப்பறையில் வைத்து அவதூறாக திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த கார்த்திக் எலிமருந்தை தின்று விட்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கார்த்திக் இறந்தார். 

    இதுகுறித்து பொன்னமராவதி போலீசில், கார்த்திக்கின் தாய் புஷ்பவள்ளி புகார் செய்தார்.  

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து, பேராசிரியர் திட்டியதால் கார்த்திக் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.
    கறம்பக்குடி அருகே கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பள்ளத்தான்மனை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே பணி புரிந்து வருகிறார். அவர் விடுப்பு எடுத்து சென்றால் பள்ளிக்கு விடுமுறை விடவேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளிக்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் துப்புரவு பணியாளர்களும் இல்லை.

    இதுகுறித்து அப்பகுதி பெற்றோர்கள், இளைஞர் அமைப்பினர் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் பள்ளி குழந்தைகளுடன் நேற்று கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி கோட்ட ஆதிதிராவிட நல தாசில்தார் பவானி, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூடுதல் ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வனத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், பேச்சுப்போட்டிகள் மற்றும் வினாடி-வினா போட்டிகள் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையின் சார்பில் அக்டோபர் மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்ட அளவில் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.

    வழக்கம்போல் இந்த ஆண்டு வன உயிரின வார விழாவை முன்னிட்டு, வன உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் மற்றும் வினாடி-வினா போட்டிகள் நேற்று புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தண்ணீருக்கு கீழே வாழ்க்கை என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும், சுற்றுச் சூழல் காடுகள் மற்றும் வன விலங்குகள் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டியும், மனித வனவிலங்கு மோதல்கள் மற்றும் தணிப்பு என்ற தலைப்பிலும் பேச்சுப்போட்டியும் நடைபெற்றது.

    இதில் எல்.கே.ஜி. முதல் 4-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும், 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றது. இதேபோல கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் பார்வையிட்டார். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 635 கலந்து கொண்டனர்.

    இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோல போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் வனச்சரக அலுவலர்கள் சதாசிவம், சங்கர், வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    முன்னால் மத்தி மந்திரி பா.சிதம்பரம் கைதை கண்டித்து கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    ஆலங்குடி:

    முன்னால் மத்தி மந்திரி பா.சிதம்பரம் கைதை கண்டித்து கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு மாவட்டத் தலைவர் தர்மதங்கவேல் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், திருவரங்குளம் வட்டார தலைவர் சுந்தரம், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு, மற்றும் சிபிஜ-க்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில பொதுக்குழு உறுப்பினர் மகாதேவன், மாநில எஸ்.சி., எஸ்.டி., துணைத்தலைவர் கண்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் சுந்தரம், ஜெயபால், மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயராஜ், பாலகிருஷ்ணன், தர்மசெல்லத்துரை, சின்னப்பா, சாகுல்ஹமீது ,கணேசன், உட்பட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    தமிழிசை அரசியல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் ஓய்வு கொடுக்கும் வகையிலேயே ஆளுநர் பதவி வழங்கியது ஏனென்று தெரியவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டிருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி காவி மயமாவதை இந்த சம்பவம் உறுதிபடுத்துகிறது. இதுபோன்ற‌ கேள்வி கேட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடப்புத்தகத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வினா எழுப்பும்படியான பாடத்திட்டத்தை நீக்க வேண்டும்.

    தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்ற தமிழிசைக்கு வாழ்த்துக்கள். பா.ஜ.க. தலைமை தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலேயே ஆளுநர் பதவி வழங்கியது ஏனென்று தெரியவில்லை. துடிப்புடன் செயல்படும் தமிழிசைக்கு அரசியலில் இன்னும் செயல் பட மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி இருக்கலாம்.

    தமிழிசை


    ராம்ஜெத்மலானியின் இழப்பு அரசியல் மற்றும் சட்டத்துறைக்கு பேரிழப்பு. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயண முடித்துக்கொண்டு திரும்பி வந்து அவர் தொழிலில் முதலீடு எவ்வாறு பெற்று உள்ளார் என்ற அறிக்கையை பொறுத்தே அது குறித்து விமர்சனம் செய்ய முடியும்.

    சிதம்பரத்தை போன்று ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறிவருவது, அது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறாது. இஸ்ரோ விஞ்ஞானிகள் படைத்திருப்பது மிகப்பெரிய சாதனைதான். சந்திரயான்-2 பின்னடைவு சந்திப்பதற்காக விஞ்ஞானிகள் கலங்க வேண்டியதில்லை தொடர்ந்து முயற்சிகளை விஞ்ஞானிகள் செய்யவேண்டும் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டை அருகே தோட்டத்தில் தீ வைத்த தகராறில் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட கூட்டுறவு சங்க தலைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடியை சேர்ந்தவர் தனசேகரன். திருவரங்குளம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் சேர்மனான இவரது மகன் விமல் (வயது 35). நகரம் கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. 

    இந்த நிலத்துக்கு அருகே அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைச்செல்வனின் நிலத்தில் வேலை செய்யும் விவசாய தொழிலாளி சுரேஷ் என்பவர் காய்ந்த சருகுகளுக்கு தீ வைத்துள்ளார். 

    அந்த தீ அருகே உள்ள விமலின் தோட்டத்திற்கும் பரவி அங்குள்ள மரம் மற்றும் செடிகள் கருகின. இதுகுறித்து விமலின் தாயார் வசந்தா தட்டிக்கேட்டபோது, சுரேஷ் அநாகரீகமாக பேசியுள்ளார். இது பற்றி தனது மகன் விமலிடம் வசந்தா முறையிட்டார். 

    இதையடுத்து விமல் மற்றும் அவரது கார் டிரைவர் ராஜராஜன் ஆகியோர் தோட்டத்திற்கு சென்றபோது, அங்கு சுரேஷ் இருப்பதை பார்த்து அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து தப்பி ஓடிய சுரேசை தனது கைத்துப்பாக்கியால் விமல் 2 முறை சுட்டுள்ளார். குறி தவறியதால் சுரேஷ் தப்பினார். 

    இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ராஜராஜனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விமலை தேடி வருகின்றனர்.
    விராலிமலை அருகே விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவ 108 ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    விராலிமலை:

    சென்னையை சேர்ந்தவர் கிருஷ்ணாசங்கர் (வயது 42). இவரது மனைவி மகாமாலினி. இந்த தம்பதியின் மகன் அஸ்வின், மகள் மோகித். இவர்கள் 4 பேரும் சென்னையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகாமாலியின் தாத்தா இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு காரில் புறப்பட்டனர்.

    இன்று காலை அவர்கள் விராலிமலை சுங்கச்சாவடியை கடந்து சென்று கொண்டிருந்தனர். காரை கிருஷ்ண சங்கர் ஓட்டினார்.
    திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் இ.மேட்டுப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் மகாமாலினி மற்றும் மகள் மோகித் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.

    உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். மேலும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். டோல் பிளாசாவில் தயார் நிலையில் ஆம்புலன்சு வேன் இருந்தும் சம்பவ இடத்திற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாகியும் வரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த இ.மேட்டுப்பட்டி பொதுமக்கள் டோல் பிளாசாவிற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மறியலிலும் ஈடுபட்டனர். சுங்கச் சாவடியில் கட்டணம் மட்டும் வசூலிக்கிறார்கள். ஆனால் ஆம்புலன்சு, தீயணைப்புத்துறையினர் எந்தவிதமான உதவி கேட்டாலும் செய்து தருவதில்லை. இந்த பிரச்சினையில் விரையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் காயம் அடைந்தவர்கள் வேறு வாகனம் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    அரியாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பாகூர்:

    அரியாங்குப்பம் வீராம்பட்டினம் அருகே உள்ள சுண்ணாம்பாற்று முகத்துவாரத்தில் மணல் கடத்தப்படுவதாக அரியாங்குப்பம் ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்று அந்த வழியாக வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து டிராக்டர் ஓட்டி வந்தவரையும், மற்றொருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் அம்பேத்கார் நகரை சேர்ந்த நாகமுத்து (வயது35) மற்றும் ராமு(36) என்பது தெரியவந்தது. பின்னர்  நாகமுத்து, ராமுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் கைது செய்தார். இதில் சம்பந்தப்பட்ட முனுசாமி என்பவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் மணல் கடத்த பயன்படுத்தபட்ட டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
    புதுக்கோட்டையிலிருந்து போஸ்நகர் வழியாக மணிப் பள்ளம் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையிலிருந்து போஸ்நகர் வழியாக மணிப்பள்ளம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதைக் கண்டித்தும், புதிய தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தியும் கடந்த 17.6.2019 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், சாலையில் பரப்பப்பட்ட சரளைக் கற்களால் வாகனம் ஓட்ட முடியாமலும், அந்தப் பகுதியில் தூசி படர்ந்ததாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதனைத் தொடர்ந்து சாலையை உடனடியாக சீரமைக்ககோரி இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தின் சார்பில் நேற்று போஸ் நகரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித் தார். நகரச்செயலாளர் எஸ்.பாபு, பொருளாளர் டேவிட், துணைச் செயலாளர் ஜெகன், சிபிஎம் நகரக்குழு உறுப்பினர் ஆர்.சோலையப்பன், சிஐடியு சார்பில் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    போராட்டத்தைத் தொடர்ந்து கோட்டாட்சியர் சண்முக நாதன் தலைமையில், நெடுஞ்சாலை துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சரவணன் முன்னிலையில் பேச்சுவார்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடனடியாக சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    வேப்பங்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10 ந்தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆலங்குடி:

    திருவரங்குளம் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேப்பங்குடி கிளை கூட்டம் நடைபெற்றது. அடைக்கலம் தலைமை வகித்தார். கிளை செயலாளர் சங்கர்கணேஷ் அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார், துணை செயலாளர் செல்வராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் குமார் ஆகியோர் பங்கேற்று கூட்டத்தை நடத்தினர்.

    கூட்டத்தில் படுமோசமான திருவரங்குளம் வேப்பங்குடி சாலையை செப்பனிட வேண்டும், அடிப்படை வசதிகள் இல்லாத மயானத்தை சரி செய்ய வேண்டும், ஆமை வேகத்தில் நடைபெறும் வேப்பங்குடி திருகட்டளை இணைப்புச்சாலையை துரிதப்படுத்த வேண்டும், வேப்பங்குடி கிராமத்தில் தனியாக போர் போட்டு குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10.9.2019 அன்று மாநில அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கலெக்டர் தேவை என போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள வெட்டுக்குளம் ஆக்கிரமிப் பால் முற்றிலும் மறைந்தது. குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக கறம்பக்குடி பகுதியில் கருத்தாயுதக்குழு என்ற அமைப்பு சார்பில் திடீரென பல்வேறு இடங்களில் வித்தியாசமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

    அதில், வேலைக்கு ஆட்கள் தேவை என்ற தலைப்பில், மதுரை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி, புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பட்டு கிராம வெட்டுக் குளத்தை எப்படியாவது மத்திய புலனாய்வு துறை மூலமாவது கண்டுபிடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, இந்திய அரசியல் அமைப்பு விதிகளின்கீழ் பணிபுரிய உண்மையான அரசு பணியாளர்கள் தேவை என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

    மேலும் அதில் காலி பணியிடங்களானது மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் என்றும், அதற்கான தகுதி பொது அறிவு, சுயமரியாதை, தன்னொழுக்கம் என்றும், விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி 10.9.2019. விண்ணப்பங்களை தபாலிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பி வைக்கலாம்.

    நேர்முக தேர்வுக்கு வரும் போது அமைச்சர், ஆளும் கட்சி பிரமுகர்கள், சிபாரிசு கடிதங்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இப்படிக்கு கருத்தாயுதக்குழு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள ஒரு போன் நம்பரையும் பிரசுரித்து இருந்தனர்.

    இந்த போஸ்டர்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்டுத்தியதுடன், அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த போஸ்டர்களை ஒட்டியது அதே பகுதியை சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான துரை குணா என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குளந்திரான்பட்டு கிராம நிர்வாக அலுவலர், கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், துரை குணா மீது அரசு அதிகாரிகளை இழிவுப்படுத்தியது, அவதூறு பரப்பியது 170, 501 என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    நேற்று மாலை அவரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் துரை குணாவை புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

    முன்னதாக துரைகுணா நிருபர்களிடம் கூறுகையில், என் மீது போடப்பட்ட வழக்கு 3 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நான் பிறக்கும்போதும் குளம் இல்லை. நான் சிறைக்கு போகும் போதும் குளம் இல்லை. நான் வெளியே வரும் போதாவது குளம் இருக்குமா? என்று பார்ப்போம். அரசுக்கு எதிராக யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று அரசு கருதுகிறது. நான் ஒரு எழுத்தாளர். நியாயம், நீதியை தட்டிக்கேட்பேன் என்றார்.

    ஆலங்குடி அருகே மது போதையில் தகராறு செய்த கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள அம்மையன்புரத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது மகன் முத்துக்கருப்பன் (வயது 35). தச்சுத்தொழிலாளி. இவருக்கு அஞ்சலை (34) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். முத்துக்கருப்பன் தினமும் கிடைக்கும் வருமானத்தில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, அஞ்சலையுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 31-ந்தேதி முத்துக்கருப்பன் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலை, கணவரை கட்டிலில் தள்ளியுள்ளார். பின்னர் அஞ்சலை தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார். இந்நிலையில் இரவில் அவர், முத்துக்கருப்பனை பார்த்தபோது அவர் பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்தார். மேலும் அவரை எழுப்பிய போது, அவர் எழவில்லை. இதையடுத்து முத்துக்கருப்பன் இறந்து கிடந்தது அஞ்சலைக்கு தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து அஞ்சலை, யாருக்கும் தெரியாமல் முத்துக்கருப்பனின் உடலை இழுத்துச்சென்று வீட்டருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு, ஒன்றும் நடக்காதது போல் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று கிணற்றுக்குள் முத்துக்கருப்பன் பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் இறங்கி முத்துக்கருப்பனின் உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அஞ்சலை தள்ளி விட்டதில் முத்துக்கருப்பன் இறந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அஞ்சலையை கைது செய்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இதற்கிடையே தந்தையையும், தாயையும் பிரிந்த குழந்தைகள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. தொழிலாளியை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×