search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான சமூக ஆர்வலர் துரை குணா
    X
    கைதான சமூக ஆர்வலர் துரை குணா

    கலெக்டர் தேவை என போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர் திடீர் கைது

    கலெக்டர் தேவை என போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள வெட்டுக்குளம் ஆக்கிரமிப் பால் முற்றிலும் மறைந்தது. குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக கறம்பக்குடி பகுதியில் கருத்தாயுதக்குழு என்ற அமைப்பு சார்பில் திடீரென பல்வேறு இடங்களில் வித்தியாசமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

    அதில், வேலைக்கு ஆட்கள் தேவை என்ற தலைப்பில், மதுரை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி, புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பட்டு கிராம வெட்டுக் குளத்தை எப்படியாவது மத்திய புலனாய்வு துறை மூலமாவது கண்டுபிடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, இந்திய அரசியல் அமைப்பு விதிகளின்கீழ் பணிபுரிய உண்மையான அரசு பணியாளர்கள் தேவை என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

    மேலும் அதில் காலி பணியிடங்களானது மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் என்றும், அதற்கான தகுதி பொது அறிவு, சுயமரியாதை, தன்னொழுக்கம் என்றும், விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி 10.9.2019. விண்ணப்பங்களை தபாலிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பி வைக்கலாம்.

    நேர்முக தேர்வுக்கு வரும் போது அமைச்சர், ஆளும் கட்சி பிரமுகர்கள், சிபாரிசு கடிதங்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இப்படிக்கு கருத்தாயுதக்குழு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள ஒரு போன் நம்பரையும் பிரசுரித்து இருந்தனர்.

    இந்த போஸ்டர்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்டுத்தியதுடன், அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த போஸ்டர்களை ஒட்டியது அதே பகுதியை சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான துரை குணா என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குளந்திரான்பட்டு கிராம நிர்வாக அலுவலர், கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், துரை குணா மீது அரசு அதிகாரிகளை இழிவுப்படுத்தியது, அவதூறு பரப்பியது 170, 501 என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    நேற்று மாலை அவரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் துரை குணாவை புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

    முன்னதாக துரைகுணா நிருபர்களிடம் கூறுகையில், என் மீது போடப்பட்ட வழக்கு 3 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நான் பிறக்கும்போதும் குளம் இல்லை. நான் சிறைக்கு போகும் போதும் குளம் இல்லை. நான் வெளியே வரும் போதாவது குளம் இருக்குமா? என்று பார்ப்போம். அரசுக்கு எதிராக யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று அரசு கருதுகிறது. நான் ஒரு எழுத்தாளர். நியாயம், நீதியை தட்டிக்கேட்பேன் என்றார்.

    Next Story
    ×