search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்- அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு
    X

    முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்- அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு

    • பணிக்கான அட்டவணை தயார் செய்து அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
    • அனைத்து நாட்களிலும் சென்னைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற வகையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும் என மின்வாரியம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.) வருகை தரும் இடங்களில் பராமரிப்புக்காக மின்தடை செய்யக் கூடாது என்றும், தடையற்ற வகையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் பலமுறை தலைமையகத்தில் இருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    எனினும், இதனை சில மின் பகிர்மான வட்டங்களில் பின்பற்றுவதில்லை.

    இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் மீண்டும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும், அதன்படி, அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் (அவசர காலங்களைத் தவிர) பராமரிப்பு மின்தடை செய்யக் கூடாது, நிகழ்ச்சி முடியும் வரை உதவி பொறியாளர் நிலைக்கு குறையாத அதிகாரி மின் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும்.

    மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, அமைச்சர்கள் நிகழ்வு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும், துணை மின் நிலையங்களில் போதிய பணியாளர்கள் இருப்பதையும், அவசர கால மின் தடையை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு இருப்பதையும் உதவி பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயற் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    அதுமட்டுமின்றி, பணிக்கான அட்டவணை தயார் செய்து அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும், அனைத்து நாட்களிலும் சென்னைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அனைத்துத் தலைமைப் பொறியாளர்களுக்கு, மின்பகிர்மானப் பிரிவு இயக்குநர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×