search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய திட்டம்-போலீஸ்சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பேட்டி
    X

    பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய திட்டம்-போலீஸ்சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பேட்டி

    • காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
    • குழந்தைகள் தான் வீட்டின், நாட்டின் எதிர்காலம். அவர்களது பிரச்சினையை எதிர்கொள்ள அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

    கோவை

    கோவையில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் 105 செல்போன்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 110 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது. 3 மாதங்களில் இதுவரை ரூ.35 லட்சம் மதிப்பிலான 235 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், பிராஜக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    குழந்தைகள் அவர்களது பிரச்சினையை முதலில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் தான் வீட்டின், நாட்டின் எதிர்காலம். அவர்களது பிரச்சினையை எதிர்கொள்ள அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக கோவை உட்கோட்டத்தில் வரும் திங்கட்கிழமை பிராஜக்ட் பள்ளிக்கூடத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளிகளிலும் டே ஜீரோ என தொடங்கப்படுகிறது.

    அன்றைய தினம் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், பள்ளி தாளாளர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருடன் கூட்டம் நடத்தப்படும். அந்த கூட்டத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்கள் எவ்வாறு கையாள்வார்கள், குழந்தைகள் தங்களது பிரச்சினைகளை அவர்களிடம் கூறினால் போலீசாரிடம் புகார் அளிப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றை அவர்களிடம் விளக்கப்படும்.

    அதனைத் தொடர்ந்து 997 பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் ஒரு போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    10 வயது குறைந்த குழந்தைகள், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என பிரிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    மேலும் எந்தெந்த போலீஸ் நிலையங்களில் குழந்தைகள் சம்பந்தமான அதிக வழக்குகள் பதிவாகியுள்ளது என கண்டறியப்படும். அந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் குழந்தைகளுக்கு யாரால் பிரச்சினை என்பதை கண்டறியப்பட்டு அதிகப்படியான விழிப்புணர்வுகள் ஏற்படும். இந்த விழிப்புணர்வு சம்பந்தமாக நோட்டீசும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

    Next Story
    ×