search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவில் சுப்பிரமணியர் தேருக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் இரும்பு சக்கரங்கள்-திருச்செந்தூர் கோவிலில் இருந்து வழங்கப்பட்டது

    • தேர் செய்து பல ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் மரக்கட்டை சக்கரங்கள் பழுதாகி சிதில மடைந்து காட்சி அளித்தது.
    • சுப்பிரமணியர் தேருக்கு இரும்பு சக்கரங்கள் மற்றும் ஆக்சில்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.

    தேரோட்டம்

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர்கள் நெல்லை ரத வீதிகளில் வீதி உலா வரும்.

    தேரோட்டத்தின் அன்று முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு செல்லும். பின்னர் சுப்பிரமணியர் தேரும், அதனைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் தேர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வலம் வரும்.

    சுப்பிரமணியர் தேர்

    நெல்லையப்பர் கோவில் சுப்பிரமணியர் தேர் 12 அடி அகலமும் அலங்காரம் ஏதும் செய்யாத நிலையில் 15 அடி உயரமும் உள்ளதாகும். அலங்காரம் செய்த பின்னர் சுமார் 40 அடி உயரத்தில் அழகுற காட்சி அளிக்கும்.

    இந்த தேர் செய்து பல ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் மரக்கட்டை சக்கரங்கள் பழுதாகி சிதில மடைந்து காட்சி அளித்து வருகிறது.

    இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சிறிய முருகன் தேருக்கு புதிதாக இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டதால் அங்கு பொருத்தப்பட்டிருந்த பழைய சக்கரங்கள் அறநிலையத்துறை அனுமதியுடன் நெல்லையப்பர் கோவில் சுப்பிரமணியர் தேருக்காக வழங்கப்பட்டுள்ளது.

    சுமார் ரூ.16 லட்சம் மதிப்பிலான 2,400 கிலோ எடை கொண்ட 4 இரும்பு சக்கரங்கள் மற்றும் அதனை பொருத்த வசதியாக 2 ஆக்சில் ஆகியவை லாரி மூலம் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுப்பிர மணியர் தேருக்கு இரும்பு சக்கரங்கள் மற்றும் ஆக்சில்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×