என் மலர்
மதுரை
- புதிய ரெயில் பாலம் கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டபம்:
தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் பாக் ஜலசந்தியில் அமைந்துள்ளது பாம்பன் ரெயில் பாலம். ராமேசுவரம் தீவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் கடந்த 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. கடல் வழி வணிகத்தில் நம் நாடு தழைத்தோங்கிய காலத்தில் இந்த ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
அதற்கேற்ப கப்பல்கள் செல்லும் வகையில் பாலத்தின் நடுப்பகுதியில் தண்டவாளத்தை இரண்டாக பிரிப்பது போன்று தூக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 2.05 கி.மீ. நீளமுள்ள இது இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெயரையும் பெற்றது. 1964-ம் ஆண்டு பாம்பன் தீவை பெரும் புயல் தாக்கியது. அப்போது இந்த பாலம் சேதம் அடைந்து, விரிவான பழுது பார்க்கும் பணிகள் நடந்தது.
இதற்கிடையே கடந்த 1988-ல் பாம்பன் ரெயில் பாலத்துக்கு இணையான ஒரு சாலைப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதுவரை இந்த ரெயில் பாலம் மட்டுமே மண்டபத்திற்கும் ராமேசுவரத்திற்கும் இடையிலான ஒரே இணைப்பாக இருந்தது. தற்போது 110 ஆண்டுகளை கடந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பு காரணமாக பாலம் அதன் ஸ்திரத்தன்மையை இழுந்து பலத்த சேதம் அடைந்தது.
மேலும் இந்த பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாலும் பழைய பாலம் அருகிலேயே புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான முடிவினை மத்திய ரெயில்வே அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது. முதற்கட்டமாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2019 மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து 2019, ஆகஸ்டு 11-ந்தேதி பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்டுவதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின. அப்போது 2021, செப்டம்பர் மாதத்திற்குள் புதிய பாம்பன் ரெயில் பாலத்திற்கான பணிகள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது ஏற்பட்ட கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நாளில் முடிக்க முடியவில்லை. தொடர்ந்து, புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்திய ரெயில்வேயின் பொறியியல் பிரிவான ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மூலம் பணிகள் நடைபெற்றன.
இந்தநிலையில் பழைய பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2023 டிசம்பர் மாதம் முதல் ராமேசுவரத்துக்கு முற்றிலுமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ராமேசுவரத்துக்கு வரும் ரெயில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரெயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்படுகிறது. இதனால் கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்துக்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கட்டப்படும் புதிய பாம்பன் ரெயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர் ஆகும். கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 101 தூண்களைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கடலில் இரட்டை வழித்தடத்துடன் மின்சார ரெயில்களை இயக்கும் வகையில் பாலத்தின் தூண்கள் வடிவைமைக்கப்பட்டுள்ளது.
தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, இந்தத் தூண்கள் இடையே ஒரு வழித்தடத்துக்கான 60 அடி நீளம் கொண்ட 100 இணைப்பு கர்டர்களில் மண்டபம் பகுதியில் தூக்குப் பாலம் வரையிலுமான 76 கர்டர்கள் பொருத்தப்பட்டு விட்டன. அவை 18.3 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
புதிய ரெயில் பாலம் கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது பழைய ரெயில் பாலத்தை விட சுமார் 1½ (ஒன்றரை) மீட்டர் உயரம் அதிகம் என்பதால், பாம்பன் பக்க நுழைவு பகுதியில் இருந்த தண்டவாளங்களும், சிலீப்பர் கட்டைகளும் அகற்றப்பட்டு இருப்புப்பாதையை உயரமாக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதன் மூலம் ரெயில் பாலத்துக்கு கீழ் பெரிய அளவிலான கப்பல்கள், விசைப்படகுகள் தடையின்றி செல்ல முடியும்.
பாம்பன் சாலை பாலத்துக்கு இணையான உயரத்தில், புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் அருகில் செங்குத்து தூக்கு பாலத்துக்கான ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக இரண்டு மாடி கட்டிடமும் கடலிலேயே கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் நடுப்பகுதியான தூக்கு பாலம் இணைக்கும் பணியும் முடிவடைந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் ராமேசுவரம்-மண்ட பம் இடையேயான ரெயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்திக்குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே புதிய பாம்பன் ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் மற்றும் பல திட்டங்களையும் திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- சில அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கிய பணியில் மெத்தனமாக நடந்துகொண்டது தெரியவந்தது.
- 2 விடுதி காப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளின் பணி ஆய்வுக்கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.
இளைஞர்நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அரசின் சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது சில அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கிய பணியில் மெத்தனமாக நடந்துகொண்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மதுரை தெற்கு வட்ட தாசில்தார் சரவணன், திருப்பரங்குன்றம் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதேபோல செல்லம்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
இதுதவிர ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு சமையலர் ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் தாசில்தார் உள்ளிட்ட 4 பேர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் 2 விடுதி காப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அதிரடி நடவடிக்கையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்துள்ளார்.
- சிலையை எடுத்துச்சென்று அருகில் உள்ள கண்மாயில் கரைத்தனர்.
- சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதூர்த்தியை யொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் விநாயகர் கையில் லட்டு வைத்து பூஜைகள் நடந்தன. நேற்று இந்த சிலையை எடுத்துச்சென்று அருகில் உள்ள கண்மாயில் கரைத்தனர்.
முன்னதாக சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அதே ஊரை சேர்ந்த மூக்கன் (வயது 45) என்பவர், ஒரு லட்டை ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.
இதனால் ஆச்சரியம் அடைந்த கிராம மக்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலம் விடப்படும் எனவும், இந்த ஆண்டு ஏலம் எடுத்த மூக்கனுக்கு அடுத்த ஆண்டு 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
லட்டை ஏலம் எடுத்த மூக்கன் வெளியூரில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறாராம்.
- செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
- இந்த விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தமுக்கம் மைதானத்தில் வைத்து தமிழக அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. புத்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களை ஈர்க்க பிரபலங்களும் மேடைப் பேச்சாளர்களும் அழைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் மதுரையில் தற்போது நடக்கும் புத்தகத் திருவிழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், மதுரை எம்பி சு. வெங்கடேசன், பேச்சாளர்கள் ஞானசம்பந்தன், ஐ லியோனி, பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் ராமர் அழைக்கப்பட்டிருந்தார்.
ராமர் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். நகைச்சுவை என்ற தனித்திறமையால் அவரை அழைத்தோம், அவருக்கென்று தனி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை, பர்வீன் சுல்தானா பேசிய பிறகு சிறிது நேரம் அவர் பேசுவார் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் வாசகர்களுக்கான புத்தகக் கண்காட்சியில் புத்தகம் சார்ந்த எழுத்து சார்ந்த நபர்களை அழைக்காமல் தொலைக்காட்சி பிரபலங்களை அழைப்பதற்குப் பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் புகைப்படம் இடம்பெற்ற விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் காகிதம் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிகழ்ச்சியில் ராமர் பங்கேற்கவில்லை மாட்டார் என்று கூறப்படுகிறது.
- 2 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
- மதுரையில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் பசியாறி வருகிறார்கள்.
மதுரை:
மதுரையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
வரலாற்று சிறப்பு மிக்க மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் இந்த விழா நான் அமைச்சர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே கடந்த 2024-ம் ஆண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியதிலும், 72 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழு வினருக்கு கடனுதவி வழங்கியதிலும் இடம் பிடித்துள்ளது.
மதுரை என்றாலே அமைச்சர் மூர்த்தி, மூர்த்தி என்றாலே மதுரை என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆவார். இன்று நடைபெறும் விழாவில் 12 ஆயிரத்து 307 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 17 ஆயிரம் பேருக்கு ரூ.108 கோடியில் கடனுதவியும், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.298 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2024 பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை நான் மதுரையில் தான் தொடங்கினேன். மதுரை, விருதுநகர், தேனி ஆகிய தொகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு கேட்டேன்.
அவர்களும் வாக்களித்து எங்கள் கூட்டணியை வெற்றிபெற செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளி மாணவர் என்றால் தேர்வு நடத்தியும், விளையாட்டு வீரராக இருந்தால் விளையாட்டுத் திறன் மூலமாகவும் மதிப்பீடு செய்யப்படுகிறது.
தேர்தல் என்றால் வாக்காளர்கள் மூலம் அவர்கள் அளிக்கும் வெற்றியின் அடிப்படையில் அரசின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
அந்த வகையில், திராவிட மாடல் அரசுக்கு நற்சான்றிதழ் அளிக்கும் விதமாக பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை 40-க்கு 40 என்ற விகிதத்தில் வெற்றி பெறச்செய்து இன்னும் எங்களை கூடுதலாக உங்களுக்கு உழைக்க நிர்பந்தித்து உள்ளீர்கள்.
தமிழ் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மதுரையை நோக்கி ஏராளமான திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இன்று நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவிக்குழுவினர் அதிகளவில் வந்துள்ளார்கள்.
அரசின் சேவைகளை நீங்கள் தேடிச்சென்ற காலம் மாறி இன்று உங்களை தேடி அரசின் திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த காலத்தில் ரூ.30 ஆயிரத்து 75 கோடி என்று இருந்த வங்கி கடன் இணைப்பு தற்போது ரூ.35ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.17 ஆயிரம் கோடி வங்கிக்கடன் இணைப்புகளை திராவிட மாடல் அரசு வழங்கி உள்ளது.
31 ஆயிரம் மகளிர் குழுவைச்சேர்ந்த 3 லட்சத்து 74 ஆயிரம் பேருக்கு ரூ.290 கோடி கடன் வழங்கியிருக்கிறோம். 2 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வீட்டுமனை பட்டா பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து இருக்கிறார்கள்.
ஆனால் இன்றைய விழாவின் மூலம் வீட்டுமனை பட்டா பெற்ற 12 ஆயிரம் பேரும் இனிமேல் தங்கள் வீடுகளில் நிம்மதியாக தூங்கலாம். உங்களின் உரிமைகளை திராவிட மாடல் அரசு நிலைநாட்டி இருக்கிறது.
2-வது முறையாக தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் 520 பேர் பயணம் செய்துள்ளனர். மதுரையில் மட்டும் 21 கோடி பேர் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பசியுடன் செல்லக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் காலை உணவுத்திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளார். இந்த காலை உணவுத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்.
மதுரையில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் பசியாறி வருகிறார்கள். இதேபோல் கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேரும், மதுரையில் மட்டும் 15 ஆயிரம் பேரும் பயனடைந்து உள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 16 லட்சம் பேர் மாதந்தோறும் ரூ.1000 பெறுகிறார்கள். மதுரையில் மட்டும் 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் இந்த உரிமைத்தொகையை பெறுகின்றனர்.
இதேபோல் உயர்கல்வியில் தமிழக முதலிடத்தை பிடித்துள்ளது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம் ஆகியவற்றிலும் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.
இன்று நலத்திட்ட உதவிகள் பெற்ற பொதுமக்கள், மகளிர் குழுவினர் அரசின் சாதனைகளை பிறருக்கும் எடுத்துக்கூற வேண்டும். மகளிர் குழுவுக்கு வழங்கப்பட்டது வெறும் கடன் அல்ல.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. இந்த கடன் உதவியை கொண்டு மகளிர் குழுவினர் தொழில் முனைவோராக உருவாக வேண்டும். அதற்கு அரசும், முதல்-அமைச்சரும் துணை நிற்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி மற்றும் தொடக்கக்கல்வி அதிகாரி உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
- தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் பட்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த நிலையில் பள்ளியின் கழிவறையை அங்கு படிக்கும் மாணவிகள் சுத்தம் செய்வது போன்ற வீடியோ ஒன்று வலைத்தளங்களில் பரவியது.
அந்த ஊரை சேர்ந்த பெண் ஒருவரின் தூண்டுதலின் பேரில் மாணவிகள் சிலரை நடிக்க வைத்து இந்த வீடியோ எடுத்ததாகவும் பரபரப்பானது. இதுகுறித்து தெரியவந்ததும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி சாந்தி மற்றும் தொடக்கக்கல்வி அதிகாரி உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா கூறுகையில், "இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தொடக்கக்கல்வி அதிகாரிகளின் அறிக்கையை தொடர்ந்து, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கூறப்படும் பிற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது" என்றார்.
- மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர்கள் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
- பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
மதுரை:
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி. ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் தொடங்குகிறது.
இன்று தொடங்கி 11 நாட்கள் 16-ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. தினந்தோறும் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை புத்தக திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தக திருவிழாவில் தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், இன்று புத்தக திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போது பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அதைக் கேட்டு புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த சில மாணவிகள் திடீரென சாமி ஆடத் தொடங்கினர். அதில் சிலர் மயங்கி விழுந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவர்களை இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் அந்த மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர்கள் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
- நாங்கள் யாரை கண்டும் பொறாமை கொள்ள மாட்டோம்.
- தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக தி.மு.க. பாடுபட்டு வருகிறது.
மதுரை:
மதுரையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்னகப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி மதுரையில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.
கட்டுமான பராமரிப்பு மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 212 பணிகளை 1015 கோடி ரூபாயில் 281 கிலோமீட்டர் பராமரிப்பு பணிகளை எடுக்கப்பட்டு தற்போது 200 கிலோமீட்டர் பணிகள் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும்.
அதேபோல் இந்த நிதியாண்டில் 116 கோடி ரூபாய் மதிப்பில் 30 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகளும் சிறப்பாக இந்த ஆண்டுக்குள் முடிவடைந்து விடும். மதுரை மாவட்டத்தில் மட்டும் தரைமட்ட பாலங்கள், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் இருவழி சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று இருக்கிறது.
தி.மு.க. அரசு 234 தொகுதிகளிலும் மிக சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக மதுரை மாவட்டம் இருக்கிறது.
பெரிய மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி திகழ்கிறது. மதுரையில் முக்கிய சந்திப்புகளாக இருக்கக் கூடிய கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பில் ஒரு பாலம். அதேபோல் அப்பல்லோ மருத்துவமனை அருகே ஒரு பாலம் என 2 பாலங்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த பால கட்டுமான பணிகள் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு பெறும்.
நடிகர் விஜய் கட்சி மற்றும் அவர் நடித்த படத்தை தடுக்க தி.மு.க. முயற்சிக்கிறது என்பது தவறான செய்தி. தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியபோது விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் செயல்படுகின்றன. பல கட்சிகள் காணாமல் போய்விட்டது.
விஜய் கட்சியை தடுப்பது தி.மு.க.வின் நோக்கமல்ல. நாங்கள் யாரை கண்டும் பொறாமை கொள்ள மாட்டோம். தடுக்க மாட்டோம். முடிந்தால் வாழ்த்து சொல்வோம். புதிய கட்சிகளை தொடங்குவது ஜனநாயக உரிமை. தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக தி.மு.க. பாடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக்கூடியது.
- ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை.
மதுரை:
மதுரையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அமெரிக்காவில் முதலமைச்சர் சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன்பு போட்டோ எடுக்கிறார். முடிவில் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பார்ப்போம். ஏற்கனவே பல நாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகளை அவர்கள் ஈர்த்தனர், இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என தெரியவில்லை.
மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனுமில்லை. அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகும். அவற்றிற்கு மாற்றாக தமிழ்நாட்டிலேயே அணைகளை கட்ட திட்டமிட வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக்கூடியது. சினிமா துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பெண்களை தவறாக பயன்படுத்தும் மனப்பான்மை மாற வேண்டும். பசுத்தோல் போர்த்திய புலிகள் போல பெரிய மனிதர் போர்வையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். சில ஆண்களின் தவறான செயல்களால் மொத்த ஆண்களுக்கும் தலைகுனிவாக உள்ளது.
நடிகர் விஜயின் கோட் படத்திற்கு எனது வாழ்த்துக்கள். விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சனை? கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது.
ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை. பல ஊழல்கள் நடக்கிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டியது அரசாங்கம். ஆனால் தடுக்காமல் தவறிவிட்டது
முதலமைச்சர் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும். ஒரே இரவில் ரூ.5000 கோடிகள் செலவு செய்து கார் ரேஸ் நடத்துவதால் யாருக்கு என்ன பலன்? அந்த பணத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
விஜய் மாநாடு நடத்தி, கட்சி துவங்கி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர்தான் அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும்.
- சாதியை குறிக்கும் வண்ணக்கயிறுகள், சாதியை குறிக்கும் நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தர டீன்களை நியமிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை, திருச்சி, விருதுநகர் மருத்துவ கல்லூரிகளில் டீன்களை உடனடியாக நியமிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது விரைந்து நியமனப்படுத்துவதில் காலதாமதம் ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில், பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்கான ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுப்பிரமணியன் விமர்சித்தார்.
"பள்ளிகளில் சாதிய மோதல்களை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அளித்த பரிந்துரைகள் என்னைப் பொறுத்த அளவில் ஏற்புடையது அல்ல. சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கைக்கு பிறகே, நான் பொட்டு வைத்து வருகிறேன்" என்று நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களின் கைகளில் சாதியை குறிக்கும் வண்ணக்கயிறுகள், சாதியை குறிக்கும் நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்கான ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழக ரெயில்வே துறைக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.
- 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தனுஷ்கோடி ரெயில்வே திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
உசிலம்பட்டி:
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா தலைமை தாங்கினார். உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது அக்கறை இல்லாமல், ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதியை தர மறுத்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம், ஆசிரியர் கல்வி திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மழலையர் முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைவருக்கும் தரமான கல்வி, ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட தேவைகள் இந்த நிதி மூலம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் 60 சதவீதம் மத்திய அரசு பங்கும், 40 சகவீதம் மாநில அரசு பங்கும் உள்ளது. கடந்த 2024-2025 ஆம் ஆண்டில் இதற்காக ரூ.3,586 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகை நான்கு தவணையாக வழங்கப்படும். முதல் தவணையான ரூ.573 கோடியை ஜூன் மாதமே வழங்கப்பட வேண்டும், ஆனால் செப்டம்பர் மாதம் பிறந்தும் இதுவரை வழங்கப்படவில்லை.
புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தை இணைக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இணைந்த பின்பு தான் நிதி ஒதுக்கப்படும் என்றும், ஏற்கனவே தமிழக அரசு இந்த திட்டத்தில் சேர ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் மத்திய கல்வி துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் தமிழக கல்வித்துறை அமைச்சரோ புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு சொல்வது நியாயமில்லை என்று கூறுகிறார்.
இன்றைக்கு கல்விக் கொள்கையில் மாநில அரசு இரட்டை வேடம் கொண்டு, நீலிக் கண்ணீர் வடித்து வருகிறது. 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்த கடமையும் ஆற்றவில்லை. கல்வி நிதியில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரெயில்வே துறைக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரெயில்வேக்கு புதிய திட்டத்திற்கு மட்டும் ரூ.976 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது வெளியான பிங்க் புத்தகத்தில் அந்தத் தொகை ரூ.301 கோடியாக குறைத்து வெளியிடப்பட்டுள்ளது. இரட்டை ரெயில் பாதை திட்டத்திற்கு தேர்தலுக்கு முன்பு ரூ.2,214 கோடி ஒதுக்கப்பட்டது, தற்போது அது ரூ.1,978 கோடியாக சுருங்கிவிட்டது.
மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு ரூ.25 கோடியாக ஒதுக்கப்பட்டது, தற்போது ரூ.18 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை, மாமல்லபுரம், கடலூர் கடற்கரை சாலைக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது, தற்போது ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தனுஷ்கோடி ரெயில்வே திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.56 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை, கோவை போன்ற மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை, ஆனால் கர்நாடகத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி வழங்கினார்கள். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி இல்லை, ரெயில்வே துறைக்கு நிதியில்லை, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை, வளர்ச்சிக்கு நிதி இல்லை, வறட்சிக்கு நிதி இல்லை என தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்யலாமா? மத்திய அரசு நிதி தரவில்லை, அதைப் பெற்றுத்தர மாநில அரசுக்கு வக்கில்லை. இதற்கெல்லாம் ஒரே நிரந்தர தீர்வு 2026 இல் எடப்பாடியார் முதலமைச்சராக ஆவது தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், தவசி, தமிழரசன், மாநில நிர்வாகிகள் துரை தனராஜன், வெற்றி வேல், டாக்டர் விஜயபாண் டியன், நகர செயலாளர் பூமா ராஜா, ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், மாவட்ட அணி நிர்வாகிகள் செல்லம் பட்டி ரகு, காசிமாயன், மகேந்திரபாண்டி, சிவசக்தி, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் எம்.செல்வகுமார், சிந்து பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான வாடகை ரூ.59 லட்சத்தை அறநிலையத்துறை பாக்கி வைத்துள்ளது.
- வாடகை பாக்கியை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை செலுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அறநிலையத்துறை மண்டல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு வாடகை அடிப்படையில் மண்டல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான வாடகை ரூ.59 லட்சத்தை அறநிலையத்துறை பாக்கி வைத்துள்ளது.
ஆர்டிஐ சட்டத்தின் கீழ், வாடகை பாக்கி ரூ.59 லட்சம் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
வாடகை பாக்கியை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை செலுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.






