என் மலர்tooltip icon

    மதுரை

    • 500-க்கும் மேற்பட்டோர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வேளாண் மண்டலமாக்கிட சட்டம் இயற்ற வேண்டும்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அரிட்டாப்பட்டி ஏற்கனவே பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

    எனவே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த முத்து வேல்பட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், செட்டி யார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மேலூர் பகுதி விவசாயிகள், வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சுரங்க ஏல திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். தொன்மையான தொல்லியல் சின்னங்கள்-பல்லுயிர் சூழல்கள் அடங்கியுள்ள மதுரை மாவட்டத்தை பாரம்பரிய தமிழ் பண்பாட்டு மண்டலமாக அறிவித்திட வேண்டும்.

    முல்லை பெரியாறு பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கிட சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
    • சென்னையைச் சார்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1118.35 கோடிக்கு (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகளை கடந்தும் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் இருந்து வந்ததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

    இதனைதொடர்ந்து கடந்த மார்ச் 14 ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனமான L&T நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்.டி.ஐ.யில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் ஆர்.டி.ஐ.யில் கேள்வி எழுப்பி இருந்தார்.

    அதற்கு ஆர்.டி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மதுரை எய்ம்ஸ்-இன் கட்டுமான ஒப்பந்தத்தின்படி, தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவு கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, சேவை பிரிவு கட்டடங்கள் ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையைச் சார்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1118.35 கோடிக்கு (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 22 மே 2024 அன்று கட்டுமானம் தொடங்குவதற்கு கடிதம் வழங்கப்பட்டு 33 மாதங்களில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ்-க்கான திட்ட மதிப்பீடு ரூ.2021.51 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு, 33 மாதங்களில் மொத்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 18 ஆயிரத்து 927 சதுர மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை கட்டடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டடங்கள், விடுதிகட்டடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், உணவகங்கள், விளையாட்டுக் கூடங்கள் கட்டப்பட இருக்கின்றன. தற்காலிக கட்டடங்களாக திட்ட அலுவலகம், சேமிப்பு கிடங்குகள், காங்கிரீட் தயாரிப்பு ஆலை, மெடிக்கல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கட்டடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டிய தேவை எழவில்லை.
    • என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதவர்கள் எந்த மட்டத்தில் பொறுப்பில் இருந்தாலும் அவர்களின் மீது நடவடிக்கை என்று வருகிற போது தலைவர், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட உயர்நிலைக்குழுவின் கவனத்திற்கு சென்று அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு முகாந்திரமானவை என்பதை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஒரு நடைமுறையாக கொண்டு இருக்கிறோம். ஏன் என்றால் தலித் அடையாளத்துடன் இந்த இயக்கம் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தது. இது முழுமையாக அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்பதற்கு வேளச்சேரி தீர்மானம் என்பதை நாங்கள் 2007-ல் நிறைவேற்றினோம்.

    தலித் அல்லாத ஜனநாயக சக்திகள் இந்த கட்சியில் அதிகார மையங்களுக்கு வரவேண்டும். பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்மானம். அப்படி வருகின்ற போது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது தலைவரின் கடமை. அந்த பொறுப்பிலே அவர்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது.

    ஆகவே தான், ஆதவ் அர்ஜூனாவின் அண்மைகால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதை தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதுகுறித்து முன்னணி தோழர்களுடன் கலந்து பேசியிருக்கிறோம். ஆதவ் அர்ஜூனா மீதான நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

    அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் நிலையில் நான் இல்லை. தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே உள்ள வி.சி.க. புதிதாக உருவாகும் கூட்டணியில் இடம்பெறாது. புதிய கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டிய தேவை எழவில்லை.

    விஜய் மீது எனக்கு எந்த சங்கடமும் இல்லை. அவருடன் நிற்பதிலும் சங்கடம் இல்லை. அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்பதிலும் மகிழ்ச்சி தான். ஆனால் நானும், விஜயும் ஒரே மேடையில் நின்றால் அதை வைத்து இங்கே அரசியல் சூதாட்டம் ஆட விரும்புபவர்கள் தமிழக அரசியல் களத்தில் களேபரத்தை உருவாக்குவார்கள். குழப்பத்தை உண்டாக்குவார்கள். அதை நான் விரும்பவில்லை. இதனை நான் ஏற்கனவே கூறி விட்டேன். எனக்கு எந்த அழுத்தழும் கிடையாது. சுதந்திரமாக எடுத்த முடிவு. தொலைநோக்கு பார்வையுடன் எடுத்த முடிவு. தமிழக அரசியலின் எதிர்காலம் கருதி எடுத்த முடிவு. வி.சி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி நலன் கருதி எடுத்த முடிவு. என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. அதற்கான சூழலும் இல்லை என்றார். 

    • வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
    • சினிமா படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் விரட்டியடிப்பு

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பல்லுயிர் வனக்காப்பக்கமாக அரிட்டாபட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் மிகுந்த மற்றும் 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் வசித்து வரும் இந்த பகுதியில் திரைப்பட குழுவினர் அவ்வப்போது வந்து திரைப்படங்களை சூட்டிங் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட குழுவினர் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகளை பிடித்து வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சிகளை படமாக்கினர். இதன் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறும், பறவைகள் மற்றும் வன விலங்குகளுக்கும் அச்சம் எழுந்தது.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் சினிமா படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த குழுவினரை விரட்டினர்.

    இதற்கிடையே தற்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழக அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்காது என்று அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முதல் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புதியதாக ஒரு திரைப்படத்திற்கு படப்பிடிப்பு குழுவினர் பெட்ரோல் கேன்கள் போன்ற பொருட்களுடன் பல்லுயிர் வனகாப்பகம் அருகே வந்து முகாமிட்டு உள்ளனர். தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் படப்பிடிப்பு காட்சியை நடத்திக் கொண்டிருந்தனர்.


    அப்போது அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. மேலும் ஜே.சி.பி., கிரேன், கம்ப்ரசர்களை கொண்டு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பாறைகளை வெடிவைத்து தகர்த்தாக தெரிகிறது.

    மேலும் அதிக அளவில் மண்எண்ணை, பெட்ரோல் கேன்களும் அங்கு இருந்தன. அந்த படக்குழுவினர் ஜே.சி.பி. எந்திரம், வெடிமருந்து பொருட்கள், கிரேன்கள் ஆகியவற்றையும் கொண்டு வந்திருந்தனர்.

    அந்த வழியாக விவசாய பணிகளுக்காக சென்ற உள்ளூர் மக்கள் இது குறித்து அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து படப்பிடிப்பு குழுவினர்களை சிறைபிடித்து சரமாரி கேள்வி கேட்டனர்.

    தாங்கள் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளதாக கூறியதை ஏற்க மறுத்த கிராம மக்கள் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தளத்தில் எவ்வாறு வெடிவைத்து தகர்க்கலாம் என கேள்வி எழுப்பி அவர்களை வாகனங்களோடு சிறைப்பிடித்ததனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு திருப்பி அனுப்பி உள்ளனர்.

    டங்ஸ்டன் பிரச்சனையால் பரபரப்பாக இருக்கின்ற சூழலில் அரிட்டாப்பட்டி பகுதியில் சினிமா படப்பிடிப்பு என்று கூறி பல்வேறு வாகனங்களோடு குவிந்தவர்களால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்.
    • கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம்.

    மதுரை:

    மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளயில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் 146 நபர்களின் வீடுகள், நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இந்தநிலையில் சின்ன உடைப்பு கிராம நிலம் கையப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தங்களை மீள்குடி அமர்த்தாமல் இங்கிருந்து வெளியேற்றக் கூடாது என நேற்று மதுரை ஐகோர்ட்டில் கிராம மக்கள் சார்பாக வழக்கு தொடர்ந்த நிலையில் சின்ன உடைப்பு பகுதியில் மீண்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதுதொடர்பான வழக்கு நேற்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 19-ந்தேதி வரை சின்ன உடைப்பு கிராம மக்களின் வீடுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு எடுக்கப்பட்டு இன்று தொடர்ந்த சின்ன உடைப்பு கிராம மக்கள் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

    • மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளியை புறக்கணித்து தர்ணா.
    • மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக ரகசியமாக விசாரணை.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில், நான் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறேன். இந்த பள்ளிக்கு வந்து சேர்ந்த புதிதில் இங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் மூர்த்தி என்னை அடிக்கடி அழைத்து பேசுவார். நான் ஆசிரியர் என்ற முறையில் பேசி வந்தேன்.

    ஒரு நாள் அவரது அறைக்கு என்னை மட்டும் வரச்சொன்னார். உள்ளே சென்றபோது என்னை சுவற்றில் சாய்த்து உடல் முழுவதும் முகர்ந்து உதட்டில் முத்தம் கொடுத்து தகாத செயலில் ஈடுபட்டார்.

    பின்னர் உனக்கு இது பிடித்திருந்தால் தினமும் இதே மாதிரி செய்கிறேன் என்று என்னை வற்புறுத்தினார். ஆசிரியர் மீதான பயத்தால் யாரிடமும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தேன்.

    ஆசிரியர் மூர்த்தி ஒருவர்தான் எங்களுக்கு அனைத்து படங்களையும் எடுத்ததால் என்னால் என் படிப்பிற்கு பிரச்சனை வந்து விடும் என்று பயந்து யாரிடமும் சொல்லவில்லை.

    மேலும் அவரிடம் படித்த மாணவர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பொறுப்புகளில் இருந்தததால் இதை வெளியில் சொன்னால் எதுவும் நடக்காது என்று அமைதியாக இருந்துவிட்டேன்.

    நாளுக்கு நாள் அத்துமீறல் அதிகமானதால் இதை எனது தோழிகளிடம் சொன்னேன். அவர்கள் உனக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை, இதேபோல் இந்த பள்ளியில் பலருக்கு நடந்துள்ளது என்றனர்.

    இதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரின் தொடர்ச்சியான தொந்தரவுகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன்.

    மேலும் ஆசிரியர் மூர்த்தி ஆசிரியர் என்னிடம் போக போக உனக்கு பழகிவிடும் என்றும், என்னுடைய வாரிசு உன்னுடைய வயிற்றில் வளரும் எனவும் பலமுறை கூறியிருக்கிறார். அவரின் ஆசைக்கு சில சமயம் இணங்க மறுத்ததால் என்னை பயமுறுத்தும் உள்நோக்கத்தோடு உள்ளூர் மாணவர் ஒருவரை அடித்து மண்டையை உடைத்துள்ளார்.

    எனக்கு மட்டும் இவ்வாறு நடக்கவில்லை எனவும் பள்ளி விடுதியில் தங்கி இருக்கும் பெரும்பாலான மாணவிகளுக்கு இந்த மாதிரி பாலியல் தொந்தரவு ஆசிரியர் மூர்த்தியால் நடந்துள்ளது.

    இவரின் சீண்டல்கள் எல்லை மீறவே இந்த சம்பவம் குறித்து எனது பெற்றோர்களிடம் சொல்லி விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து பெற்றோரிடம் சொன்னேன். அதற்கு நீ இறந்ததற்கு பிறகு இந்த உலகத்தில் நாங்களும் வாழ விரும்பவில்லை. ஆகவே மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எனது பெற்றோர்கள் சொன்னதன் பேரில் நடந்த சம்பவத்தைச் சொன்னேன். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு மூர்த்தி ஆசிரியரே முழு பொறுப்பாகும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    மேலும் அந்த மனுவில் அதே பள்ளியை சேர்ந்த சில மாணவிகள் தங்கள் கைப்பட எழுதிய மனுவும் இணைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஆசிரியர் மூர்த்தி என்பவர் மீது மாணவி அளித்த புகார் குறித்து தகவல் அறிந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இன்று காலை பள்ளியை புறக்கணித்து பள்ளி நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி, போலி புகார் மீது நடவடிக்கை எடுக்காதே என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை ஏந்தி பங்கேற்றனர்.

    இதனால் பள்ளி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்த செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகரணி மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவ, மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    பள்ளி தலைமை ஆசிரியரும் மாணவர்களுடன் பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் கலைந்து வகுப்புகளுக்கு சென்றனர்.

    இதற்கிடையே ஆசிரியர் மூர்த்தியிடம் பயின்ற மாணவர் ஒருவர் தற்போது அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தன்னிடம் டியூசன் படிக்காமல், பலர் மூர்த்தியிடம் டியூசனுக்கு செல்வது பிடிக்காமல் அவர் சில மாணவிகளை ஆசிரியர் மூர்த்திக்கு எதிராக திசை திருப்பிவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ஆசிரியர் மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முறையாக விசாரணை நடத்தி உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.

    தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஆசிரியர் மீது மாணவிகள் புகார் அளித்த போதிலும், உண்மைத் தன்மை குறித்து கண்டறிய ஒரு குழு அமைத்து ஒவ்வொரு மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக ரகசியமாக கருத்துக்களை கேட்டு அறிந்தால் மட்டுமே குட்டு வெளிப்படும்.

    • 13-ந்தேதி தேரோட்டம்-மகாதீபம்
    • வருகிற 12-ந் தேதி சுப்ரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம்

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது.

    கார்த்திகை மாதம் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர்.

    அங்கு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை முன்னிலையில் தர்பை புல், மாவிலை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கொடிகம்பத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.

    தீபத்திருவிழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில், வெள்ளி பூதவாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ந் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் . தொடர்ந்து 13-ந் தேதி காலையில் கார்த்திகை தேரோட்டமும், மாலையில் கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டு மலைமேல் மகாதீபம் ஏற்றப்படும்.

    • பணிகள் அனைத்துக்கும் பேக்கேஜிங் டெண்டர் முறையை பின்பற்றி காண்டிராக்டர்களுக்கு பணிகள் வழங்கப்பட நடவடிக்கை.
    • இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார், ராயர், ரெங்கராஜன் உள்ளிட்ட 8 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நாங்கள் அனைவரும் தமிழக அரசின் முதல் நிலை காண்டிராக்டர்கள். திருச்சி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சாலைப்பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார்.

    இந்தப் பணிகளின் மதிப்பு ரூ.2 கோடி முதல் ரூ.6 கோடி வரை உள்ளது. இதில் மொத்தம் 49 சாலைப் பணிகள் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்துக்கும் பேக்கேஜிங் டெண்டர் முறையை பின்பற்றி காண்டிராக்டர்களுக்கு பணிகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அதிகாரிகளின் இந்த நடவடிக்கையினால் எங்களைப் போன்ற காண்டிராக்டர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர். பல்வேறு பணிகளையும் ஒரு சிலரிடம் ஒப்படைப்பதால் சம்பந்தப்பட்ட பணிகள் முழுமையாக சிறப்பாக நிறைவேற்றப்படுவது இல்லை.

    நபார்டு வங்கி மூலம் நிறைவேற்றப்படும் சாலை பணிகளுக்கு தனித்தனியாக டெண்டர் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இதுபோல பொதுப்பணித்துறையில் நடைமுறையில் இருந்த பேக்கேஜிங் டெண்டர் முறை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையிலும் பேக்கேஜிங் டெண்டர் முறைக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்." என குறிப்பிட்டிருந்தது.

    இதே போல மேலும் சிலரும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, புதுக்கோட்டை மாவட்டத் தில் சுமார் 50 முதல் நிலை காண்டிராக்டர்கள் உள்ளனர். சாலை பணிகளுக்கான பேக்கேஜிங் டெண்டர் முறையினால் சில காண்டிராக்டர்கள் மட்டுமே பயனடைகின்றனர். இதனால் விரைவாக பணிகளை முடிக்க இயலாததால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என வாதாடினார்.

    பின்னர் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்படுவது வெவ்வேறு துறை சார்ந்த நடவடிக்கை. எனவே அவர்களின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.

    அப்போது நீதிபதிகள், குறிப்பிட்ட சில காண்டிராக்டர்கள் மட்டும் முன்னேற்றம் அடைந்தால் சரியாக இருக்குமா? சிறிய காண்டிராக்டர்கள் உள்பட அனைத்து தரப்பு காண்டிராக்டர்களும் வேலை பெறுவது தான் சரியானது என கருத்து தெரிவித்தனர்.

    இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • கடந்த 20-ந் தேதி நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை உத்தரவு விதித்தனர்.
    • வருகிற 11-ந் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணை வர உள்ளது.

    மதுரை:

    மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் விரிவாக்கத்திற்காக 146 நபர்களின் வீடுகள் மற்றும் நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக கடந்த 2009-ம் ஆண்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதற்கான பணிகளை செய்து வந்த நிலையில் அந்த ஆண்டு அப்போதைய நில மதிப்பீடு கணக்கிடப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு நிதி வழங்கப்பட்ட தாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தற்போது ஊருக்கு வெளியே விமான நிலைய சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கிடையில் அந்த கிராம மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும், 2009 கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்ட நிதியை, 2013 நில எடுப்பு சட்டப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் வீடுகளை இழந்த தங்களுக்கு அரசு 3 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்து அதில் மீள் குடியேற்றம்-குடியிருப்புகள் அனைத்து வசதிகளுடன் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து அதுவரை தங்கள் வீடுகளை காலி செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 13-ந் தேதி சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த 20-ந் தேதி நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை உத்தரவு விதித்தனர். மேலும் நிலம் கையகப்படுத்துதல் சட்ட பிரிவின்படி நோட்டீஸ் வழங்க வேண்டும். அதனைப் பின்பற்றி நிலங்களை கையகப்படுத்தலாம். அதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

    மேலும் வருகிற 11-ந் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணை வர உள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி சின்ன உடைப்பு கிராம மக்கள் இன்று மீண்டும் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    • நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ- மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
    • தடுத்து நிறுத்தி, தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டுள்ளனர்.

    மதுரையில் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் இன்று நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ- மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

    அப்போது, திடீரென அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பின்னர், தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டுள்ளனர்.

    அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஏற்கனவே, ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடம்' என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    தற்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.


    • மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார்.
    • வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    திருச்சியை சேர்ந்த முருகேசன் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஈரோட்டை சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரால் மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டப்பட்டு வரும் இடம் அரசுக்கு சொந்தமான இடம். மேலும் கட்டுமான பொருட்கள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே வைத்து உள்ளனர். இங்கு கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே தங்கி உள்ளனர்.

    இவ்வாறு அரசுக்கு சொந்தமான நிலத்தில் கோவில் கட்டுவதற்கும், பணியாளர்கள் அங்கே தங்குவதற்கும் எந்த அனுமதியும் அரசு வழங்கவில்லை. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார். மேலும் தனியார் ஒப்பந்ததாரருடன் இணைந்து செயல்படுகிறார்.

    அரசுக்கு சொந்தமான நிலத்தில் எந்தவித வகை மாற்றமும் செய்யாமல் சட்டவிரோதமாக தனியார் ஒப்பந்ததாரருடன் மாவட்ட வருவாய் அதிகாரி இணைந்து இதுபோன்ற கட்டுமானங்களை கட்டி வருகிறார். இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் உள்ளேயே அரசு நிலத்தில் உரிய அனுமதி இல்லாமல் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்படுவதற்கான புகைப்படங்களையும் ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதிகள் மனுதாரர் புகார் குறித்து உள்துறை செயலர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சசூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
    • கிராமங்கள் தோறும் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி தமிழகத்தின் முதல் பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்டது. அழகர் மலைக்கும், பெருமாள் மலைக்கும் அரிட்டாபட்டி பல்வேறு சிறப்புகளை கொண்டது.

    அரிட்டாப்பட்டி மலையில் சமணர் படுகைகள், மகாவீரர் சிற்பம், கிமு 2-ம் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், பாண்டியர் காலத்து வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளது.

    பல்லுயிர் பெருக்கம் நிறைந்துள்ளதுடன் வரலாற்று முக்கியத்துவமும் உள்ள அரிட்டாபட்டி பகுதியில் உள்ள மலைக்குன்றுகள் 250 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள், மற்றும் மூன்று தடுப்பணைகளுக்கு நீராதாரமாக விளங்குகிறது.

    இதுபோன்று பல்வேறு சிறப்புகளை கொண்ட அரிட்டாபட்டி மற்றும் அருகில் உள்ள மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ.வல்லாளப் பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கரை ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழு மத்தின் ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அப்பகுதி கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மேற்கண்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சசூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    எனவே இதற்கான முடிவை கைவிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிமும் மனு அளிக்கப்பட்டது.

    அரிட்டாபட்டியில் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என உறுதியுடன் தெரிவித்தார்.


    இருப்பினும் அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் டங்ஸ்டன் திட்டத்தை கொண்டுவரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக கிராமங்கள் தோறும் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக இன்று கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள், வணிகர்கள் என அனைத்து சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.

    அதன்படி இன்று மேலூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலூர் பஸ் நிலையம், செக்கடி பஜார், பெரிய கடை வீதி, பேங்க் ரோடு, அழகர் கோவில் ரோடு, சந்தை பேட்டை, திருவாதவூர் ரோடு, சிவகங்கை ரோடு மற்றும் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப் பட்டு இருந்தன. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடை அடைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


    இதேபோல் அரிட்டா பட்டி, அ.வல்லாளப்பட்டி, மீனாட்சிபுரம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

    மேலூரில் பல்வேறு சங்கத்தினர் சார்பில் பென்னி குவிக் பஸ் நிலையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கடையடைப்பு, ஆர்ப்பாட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    ×