என் மலர்
கன்னியாகுமரி
- தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- கனமழை எதிரொலியாக கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
- காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதற்கு முன்பாக, காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ நடைபெற்றது. இதைதொடர்ந்து, பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த ரோடு-ஷோவில் பங்கேற்ற கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அன்னை சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் உடனிருக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் படைசூழ இன்று பிரியங்கா காந்தி வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. அதற்கான ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சி. மாபெறும் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றிப் பெற்று பாராளுமன்றத்தில் அவரது குரல் உயர்ந்து இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அசாதாரண பயணத்தின் முடிவைக் குறிக்கிறது.
- மின்சார பேருந்துகளின் நடைமுறை சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டுகிறது.
கீரீன்செல் மொபிலிட்டியின் கீழ் இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் இன்டர்சிட்டி பஸ் பிராண்டான நியுகோ (NueGo), தனது வரலாற்றுச் சிறப்புமிக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான (E-K2K) மின்சாரப் பேருந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதை அறிவித்துள்ளது.
இந்த அற்புத பயணம் 4,000 கிலோமீட்டர்களுக்கு மேல் நீடித்தது, 200 க்கும் மேற்பட்ட டவுன்கள் மற்றும் நகரங்களில் பொது ஈடுபாடுகளை மேற்கொண்டது. இந்த பயணம் நீண்ட தூர பயணத்திற்கான மின்சார பேருந்துகளின் நடைமுறை சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நீண்ட பயணத்தை எம்.பி. விஜய் வசந்த் கன்னியாகுமரியில் இறுதி E-K2K பேருந்தைக் கொடியசைத்து முடித்துவைத்தார். இது அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கி பல்வேறு நிலப்பரப்புகளைக் கடந்து பசுமையான நடமாட்டத்தின் செய்தியை ஊக்குவிக்கும் ஒரு அசாதாரண பயணத்தின் முடிவைக் குறிக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த விஜய் வசந்த், "NueGoவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான (E-K2K) மின்சாரப் பேருந்து பயணம் உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சி! 200 டவுன்கள் மற்றும் நகரங்கள் வழியாகச் செல்லும் போது, 4,000-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர்களைக் கடந்து, பல்வேறு சமூக ஈடுபாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், NueGo நாடு முழுவதும் மின்சார வெகுஜன இயக்கம் மற்றும் மக்களுக்கும் பூமிக்கும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பியுள்ளது. இந்த பயணம் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளில் மின்சார பேருந்துகளின் தாங்குதிறனை நிரூபிக்கிறது" என்று கூறினார்.
- மைதானம் சரி செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.
- தியாகி கொடிகால் ஷேக் அப்துல்லாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மைதானத்தை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
அதாவது பல ஊர் மற்றும் ஊர் மக்களின் தேவைகளுக்காக சொந்த செலவில் JCB எந்திரம் ஒன்றினை இயக்கி வந்தனர்.
அவர்களுக்கு விஜய் வசந்த் எம்பி தனது சொந்த செலவில் JCB எந்திரம் ஒன்றை வாங்கி மக்களின் தேவைகளுக்காக வழங்கி அர்பணித்துள்ளார்.

மேலும் கோணம் அரசு கல்லூரியில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க மைதானம் சரி செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து எல்லைப் போராட்ட தியாகி கொடிகால் ஷேக் அப்துல்லா குந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த விஜய் வசந்த் எம்பி அவரையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
- மீனவர்கள் மனித சங்கிலியாக சைமன்காலனி முதல் கொட்டில்பாடு வரை கைகோர்த்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
குளச்சல்:
மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை குமரி மாவட்டத்தில் மேலும் சில கடற்கரை கிராமங்களில் இருந்து புதிதாக மண் எடுக்கும் திட்டத்தை தொடங்க உள்ளது.
இதற்கான கருத்துரு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு கடந்த 1-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடத்தவிருந்தது. இதற்கு மீனவர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கருத்து கேட்பு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. மணல் ஆலைக்கு மணல் அள்ளுவதை கண்டித்து கடற்கரை கிராமங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மணல் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
குளச்சலில் நடந்த போராட்டத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக புனித காணிக்கை அன்னை திருத்தலம் முன்பாக மீனவர்கள் புறப்பட்டு பீச் சந்திப்பு வரை பேரணியாக சென்றனர். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் டங்ஸ்டன், குளச்சல் பங்குத்தந்தை ஜெகன் மற்றும் புனித காணிக்கை அன்னை திருத்தல நிர்வாகிகள், விசைப்படகு சங்க நிர்வாகிகள், துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள் அமைப்பு, பக்தர்கள் சபை, அனைத்து அமைப்பினர் உள்பட திரளான மீனவர்கள் கலந்துகொண்டனர்.
மீனவர்கள் மனித சங்கிலியாக சைமன்காலனி முதல் கொட்டில்பாடு வரை கைகோர்த்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த மனித சங்கிலியை அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்க துணை தலைவர் ஜாண்சன் ஒருங்கிணைத்தார்.
இதுபோல் குறும்பனையில் புனித இக்னேசியஸ் ஆலயம் சார்பில் ஊர்மக்கள் வாணியக்குடி முதல் ஆலஞ்சி வரை கை கோர்த்து நின்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பங்கு பேரவை நிர்வாகிகள், அனைத்து அமைப்புகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குளச்சல் டி.எஸ்.பி. (பொறுப்பு)மதியழகன், இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மணவாளக்குறிச்சி, இணையம், கொட்டில்பாடு, தேங்காய்ப்பட்டினம் உள்பட 200-க்கும மேற்பட்ட கிராமங்களில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 100-க்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
- கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
- காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது.
சீசன் இல்லாத காலங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.
மேலும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்க முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இன்று வழக்கம் போல் 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகு போக்குவரத்து தொடங்கியதும் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரத மாதாகோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம்பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் திரண்டு பார்வையிட்டு விடுமுறையை கொண்டாடினார்கள். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது.
இந்தசுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில் போன்ற கோவில்களிலும் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் 250 கனஅடியில் இருந்து 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 64.12 அடி நீர்மட்டம் உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
வானிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், மலையோர கிராமங்களில் கனமழை நீடித்தது. இதன் காரணமாக குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட் டது.
இந்த நிலையில் மாவட்டத்தில் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டதால், அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.
திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. மாம்பழத்துறையாறு பகுதியில் 10 மி.மீட்டர், ஆணைக்கிடங்கு பகுதியில் 9.6, முள்ளங்கினாவிளை 7.2, அடையாமடை 6.8 என மிதமான அளவிலேயே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் வரத்து குறைந்துள்ளது.
இதனை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் 250 கனஅடியில் இருந்து 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக 556 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது நீர்மட்டம் 42.74 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 278 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 64.12 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 91 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதகுகள் வழியாக 160 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 50.11 அடியாக உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு1 மற்றும் 2 அணைகளில் 14.46 மற்றும் 14.56 அடி நீர்மட்டம் உள்ளது. 25 அடி கொண்ட முக்கடல் அணையில் 16.4 அடியாக நீர்மட்டம் உள் ளது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டாலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவே கொட்டுகிறது. இதனால் இன்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினமான இன்று திற்பரப்பு வந்த பலரும் ஏமாற்றமடைந்தனர்.
- வெள்ளம் புகுந்த வீடுகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
- பிள்ளைதோப்பு, அழிக்கால் பகுதியில் ஒரு சில பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். இது தவிர அமாவாசை தினங்களிலும், புயல் சின்னங்கள் ஏற்படும் போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.
வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி, சின்னமுட்டம், அழிக்கால், கணபதிபுரம், தேங்காய்பட்டினம், பிள்ளைத்தோப்பு, பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பின. குறிப்பாக அழிக்கால், பிள்ளைதோப்பு பகுதியில் எழும்பிய ராட்சத அலைகள் குடியிருப்பு பகுதியிலும் புகுந்தது. சுமார் 150-க்கு மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.
வெள்ளம் புகுந்த வீடுகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். பிள்ளைத்தோப்பு, அழிக்கால் பகுதியில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது 235 பேர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளை சூழ்ந்த தண்ணீர் நேற்று மாலை முதலே வடிய தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிந்துள்ளது.
பிள்ளைதோப்பு, அழிக்கால் பகுதியில் ஒரு சில பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மோட்டார் மூலமாக தண்ணீரை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலமாக ரோடுகள் சீரமைப்பு மற்றும் தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்கள் அங்குள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிந்தாலும் அழிக்காமல், பிள்ளைத்தோப்பு பகுதியில் வீடுகளுக்குள் மணல் அதிகளவு காணப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதையடுத்து வீடுகளுக்குள் கிடக்கும் மணல் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது. பிள்ளை தோப்பு பகுதியில் 34 வீடுகளும் அழிக்கால் பகுதியில் 41 வீடுகளிலும் மணல் குவியல்கள் உள்ளன. அந்த மணல் குவியல்களை பேரூராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முதலே 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். பிள்ளைத்தோப்பு, அழிக்கால் பகுதியில் அதிகாரிகள் முகாமிட்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அழிக்கால் பகுதியில் இன்றும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
லெமூர் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் இன்று 2-வது நாளாக கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. லெமூர் கடற்கரை நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது .போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர். சுற்றுலா பயணிகள் யாரையும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்க வில்லை. இதேபோல் கன்னியாகுமரி, குளச்சல், தேங்காய்பட்டினம் பகுதியிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
- வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் நீர் மட்டம் தாழ்வு, சீற்றம், உள்வாங்குதல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்று பவுர்ணமி என்ற நிலையில் நேற்றே கன்னியாகுமரியில் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. இன்று 2-வது நாளாகவும் காலையில் கடல் நீர்மட்டம் தாழ்வு நீடித்தது.
இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகியவை சீற்றமாக காணப்பட்டன. சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.
அதே நேரம் வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அங்கு கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இந்த மாற்றங்களை தொடர்ந்து திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் சுற்றுலா போலீசார் 2-வது நாளாக தடை விதித்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்தும தொடங்கப்படவில்லை. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று பகலும் கடலில் அதே நிலை நீடித்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
- ராட்சத அலைகள் 10 முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பின.
- வீட்டின் வாசலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கள்ளக் கடல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாக காணப்பட்டது.

ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால், பிள்ளை தோப்பு பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் 10 முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பின. இதனால் கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
அந்த பகுதியில் உள்ள தெருக்களில் கடல் நீர் புகுந்ததுடன் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததையடுத்து அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். சிலர் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தனர்.
மேலும் சிலர் கடல் நீர் வீட்டிற்குள் செல்லாமல் இருக்கும் வகையில் வீட்டின் வாசலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். இன்று காலையிலும் அழிக்கால் பிள்ளை தோப்பு பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. லெமூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரை ஓரத்தில் இருந்த தற்காலிக கடைகள் வரை வந்து சென்றன. இதனால் அங்குள்ள கடைகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன.
கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் உள்ள நுழைவாயில் மூடப்பட்டிருந்ததுடன் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வைத்தனர்.
தேங்காய் பட்டினம், இரவிபுத்தன் துறை, வள்ளவிளை, பூத்துறை, தூத்தூர் பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையை ஓட்டியுள்ள வீடுகள் வரை வந்து சென்றன. அந்த பகுதியில் உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீதும் வேகமாக மோதியது. இதனால் கடற்கரையில் உள்ள மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் சொத்தவிளை, கன்னியாகுமரி, முட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- செக்காரவிளையில் ரூ. 20 லட்சம் செலவில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறந்துவைத்தார்.
- கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
குமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினேன்.
நெய்யூர் இரண்டாம் நிலை பேரூராட்சி கண்ணோடு 1-வது வார்டில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி 11.80 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தேன்.

இதேபோல், கக்கோட்டுத்தலை ஊராட்சி செக்காரவிளை அருள்மிகு ஸ்ரீ வரப்பிரசாத விநாயகர் ஆலயம் அருகே பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறந்து வைத்தேன் என பதிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
- அனைத்து பாசன குளங்களும் நிரம்பி வழிகின்றன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்க்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் கலெக்டர் அழகு மீனாவும் குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அனைத்து துறை அதிகாரிகளும் பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர நீர் நிலைகள் பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் நீர் நிலைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
ஏற்கனவே குமரி மாவட் டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று மாலை பேச்சிப்பாறை அணையில் இருந்து 250 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக 551 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 43.75 அடியாக உள்ளது. அணைக்கு 566 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து கோதையாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.12 அடியாக உள்ளது. அணைக்கு 285 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
சிற்றாறு 1-அணையின் நீர்மட்டம் 14.24 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.58 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 50.11 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 17.10 அடியாகமும், பொய்கை நீர்மட்டம் 14.80 அடியாகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி வழிகின்றன. குளங்களின் நீர்மட் டத்தையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சில குளங்களின் கரைப்பகுதியை பலப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மழை எச்சரிக்கை காரணமாக காளிகேசத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் அந்த கோவிலில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.






