என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் சுப்பராயலுநகர் பகுதியை சேர்ந்தவர் ராணி(வயது68). இவர் வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
இரவில் ராணி கோவிலில் தங்கிவிட்டார். இதை அறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 16 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.
இன்று காலை ராணி கோவிலில் இருந்து வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. மொத்தம் கொள்ளைப்போன நகைகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ராணி புகார் செய்தார். உடனே போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்த எழுத்தூர் பகுதியில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அந்த பெண் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கடலூர்:
கடலூரை அடுத்த சித்திரைபேட்டை பகுதியை சேர்ந்தவர் பெரியாண்டவர். இவரது மகன் சரண்குமார் (வயது 23). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சரண்குமார் தனது சொந்த ஊரான சித்திரைப் பேட்டைக்கு வந்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு கடலூர் முதுநகர் சாலையில் சரண்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சரண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சரண்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சரண்குமாரின் உறவினர்கள் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை அந்த வாகனத்தை கண்டுபிடிக்கவில்லை. இதைக்கண்டித்து இன்று சரண்குமாரின் உறவினர்கள் மற்றும் சித்திரைபேட்டையை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் பச்சையாங்குப்பம் பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் கடலூர்-சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சரண்குமாரின் இறப்பிற்கு காரணமான வாகனத்தை கண்டுபிடித்து, டிரைவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அந்த வாகனத்தின் டிரைவர் கைது செய்யப்படுவார். நீங்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது அந்த பகுதி இளைஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைந்துபோக செய்தனர். இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கொடுக்கூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 24). இவரது உறவினர் ஆசை (20). இவர்கள் 2 பேரும் நேற்று கேமரா வாங்குவதற்காக வேப்பூர் அருகே உள்ள நல்லூர் பகுதிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
நல்லூர் பகுதியில் கேமரா வாங்கிக் கொண்டு நேற்று இரவு 10 மணிக்கு அவர்கள் சொந்த ஊரான கொடுக்கூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மேமாத்தூர் அணைக்கட்டு அருகே உள்ள சாலையோரவளை வில் மோட்டார் சைக்கிள் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ், ஆசை 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து அந்த பகுதி பொதுமக்கள் வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த சந்தோஷ், ஆசை ஆகிய 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கடலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டு பேசினார். அப் போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆரை அண்ணா அரசியலுக்கு கொண்டு வந்தார். ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அரசியலுக்கு கொண்டு வந்தார். என்னை நீங்கள் அழைத்து வந்திருக்கிறீர்கள். உங்களை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. ஜெயலலிதாவின் தியாகத்தால் வலுப்பெற்றது. அவரது வழியில் மக்களுக்காக பணியாற்றுவதே என்னுடைய லட்சிய பயணமாக இருக்கும்.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக எழுத இருக்கிறேன். அந்த பணியை அவரது பிறந்த நாளில் தொடங்க இருக்கிறேன். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து செய்வேன்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை கமிஷன் தேவையில்லை. ஏனென்றால் உண்மை வெளிவராது. விசாரணை கமிஷன் தேவையில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மை நிலையை தமிழக அரசு வெளியிடவில்லை. நீங்கள் வழக்கு தொடர வேண்டியது தானே என்று சிலர் கேட்டார்கள். நான் வழக்கு தொடர்ந்தால் நியாயம் கிடைக்குமா? உண்மை வெளிவருமா? அதற்கும் தடை ஏற்படுத்துவார்கள். அந்த தீய சக்திகளிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்டு எடுப்போம்.
ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் உண்மையான மக்களாட்சியை மலர செய்வோம். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை, நலத்திட்டங்களை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை. எடுத்துக்காட்டாக அவர் கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம் முழுமையாக செயல்படாமல் உள்ளது. இதேபோல் பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு பின்பற்றவில்லை. மக்கள் வரிப்பணத்தில் இந்த அரசு விழா நடத்துகிறது.

சினிமாவில் வருவதுபோல் யாரும் ஒரே நாளில் முதல்-அமைச்சர் ஆகிவிட முடியாது. அ.தி.மு.க.வையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு.
இவ்வாறு ஜெ.தீபா பேசினார்.
பின்னர் ஜெ.தீபாவிடம் உங்கள் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கூறப்பட்டுள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து ஜெ.தீபா கூறியதாவது:-
என் மீது ரூ.1.12 கோடி மோசடி செய்ததாக புகார் சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே என் மீது பல்வேறு புகார்கள், வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதில் இதுவும் ஒன்று. சசிகலா குடும்பத்தினரால் பின்னப்பட்ட சதி தான் இந்த புகார். இது பற்றி நான் ஏற்கனவே கமிஷனரிடம் புகார் தெரிவித்து இருக்கிறேன்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் வழக்கு குறித்த விவரங்களை சசிகலாவுக்கு வழங்கக்கூடாது என்று எதிர்மனு தாக்கல் செய்துள்ளேன். மத்திய அரசின் எந்திரமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவரிடம் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டபோது,
எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவும் நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். ஆகவே நடிகர்கள் அரசியலுக்கு வந்து வெற்றி பெறுவதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.
பண்ருட்டி:
பண்ருட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் பாலமுரளிகிருஷ்ணன் (வயது 52). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் திருமணம் திருப்பதியில் நடந்தது. அதற்காக பாலமுரளி கிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் திருப்பதி சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை பாலமுரளி கிருஷ்ணன் திருப்பதியில் இருந்து பண்ருட்டிக்கு வந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென் றது தெரியவந்தது.
இது குறித்து பாலமுரளி கிருஷ்ணன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக் கியராஜ், சப்-இன்ஸ்பெக் டர் லூயிஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.
கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவு படி தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
விருத்தாசலம்:
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று விருத்தாசலம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரியலூரில் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு நீதிவிசாரணை நடத்தவேண்டும். ஆணவக்கொலையை தடுக்க தனிசட்டம் கொண்டு வரவேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் விடுவிக்கப்படவில்லை. ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிலாவது ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விடக்கோரி பிரதமரை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #thirumavalavan
கடலூர்:
கடலூர் துறைமுகம் அருகே உள்ள அக்கரைக் கோரியை சேர்ந்தவர் பத்மாவதி(வயது 51). இவர் அந்த பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு 7 மணியளவில் அவர் கடையில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவா, ஜலேந்திரன், சுரேஷ், முத்து ஆகியோர் கடையின் அருகே மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் மது குடித்தவர்களை விரட்டினர்.
இதுபற்றி போலீசுக்கு பத்மாவதிதான் தகவல் தெரிவித்துள்ளார் என்று சிவா உள்பட 4 பேரும் கருதினர். பின்னர் அவர்கள் பெட்டிக்கடைக்கு சென்று அங்கிருந்த பத்மாவதிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்று விட்டனர்.
இதுகுறித்து வீட்டுக்கு சென்ற பத்மாவதி தனது மகன் பிரகாசிடம் கூறினார். உடனே பிரகாஷ் தனது நண்பர்கள் யுவராஜ், லோகு ஆகியோருடன் சிவாவிடம் சென்று என் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்தாய்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தார்.
பின்னர் அவர்கள் சிவாவை தாக்கி கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த சிவா கடலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவாவின் தந்தை பாஸ்கரன் கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பிரகாஷ், யுவராஜ், லோகு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பிராகஷ் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் பத்மாவதியும் சிவா உள்பட 4 பேர் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் சிவா, ஜலேந்திரன், சுரேஷ், முத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் இமயராஜா (வயது 52). இவர் தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை அவர் மீன்சுருட்டி என்ற இடத்தில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு காட்டுமன்னார் கோவில் கடை வீதிக்கு வந்து கொண்டிருந்தார். அந்த வேனுக்கு பின்னால் ஆதனூரைச் சேர்ந்த ராஜகுமார் (36), ரஞ்சித் (19) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் பள்ளி வேனை முந்தி செல்ல முயன்றனர். ஆனால், வேன் டிரைவர் வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் வேனை மறித்து டிரைவர் இமயராஜாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீ சில் இமயராஜா புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரை தாக்கிய ராஜகுமார், ரஞ்சித் ஆகியோரை கைது செய்தார். #tamilnews






