என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை கொள்ளை
    X

    கடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை கொள்ளை

    கடலூரில் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் சுப்பராயலுநகர் பகுதியை சேர்ந்தவர் ராணி(வயது68). இவர் வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    இரவில் ராணி கோவிலில் தங்கிவிட்டார். இதை அறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 16 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.

    இன்று காலை ராணி கோவிலில் இருந்து வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. மொத்தம் கொள்ளைப்போன நகைகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ராணி புகார் செய்தார். உடனே போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×