என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
    X

    பண்ருட்டியில் பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

    பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் பாலமுரளிகிருஷ்ணன் (வயது 52). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் திருமணம் திருப்பதியில் நடந்தது. அதற்காக பாலமுரளி கிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் திருப்பதி சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை பாலமுரளி கிருஷ்ணன் திருப்பதியில் இருந்து பண்ருட்டிக்கு வந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென் றது தெரியவந்தது.

    இது குறித்து பாலமுரளி கிருஷ்ணன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக் கியராஜ், சப்-இன்ஸ்பெக் டர் லூயிஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.

    கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவு படி தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    Next Story
    ×