என் மலர்tooltip icon

    சென்னை

    • கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
    • ஓரிரு இடங்களில் மட்டும் மழைக்கான சூழல் ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை முதல் 2 சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து பருவமழை குறைந்து காணப்படுகிறது. இடையிடையே வெப்பச்சலன மழை சற்று கைகொடுத்தாலும், இம்மாதத்துக்கான வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்யாத நிலையே இருந்து வந்தது.

    இந்த நிலையில், தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும் வந்து வடகிழக்கு காற்றாக 11-ந் தேதி அதாவது நாளை முழுமையாக உள்ளே வருகிறது.

    இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) இரவில் இருந்தே பருவமழை பெய்யத் தொடங்க இருக்கிறது. அதிலும் நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுதினமும் (புதன்கிழமை) கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

    இதனைத் தொடர்ந்து 13 முதல் 15-ந் தேதி வரை சற்று இடைவெளி ஏற்படும் என்றும், அந்த நாட்களிலெல்லாம் இரவில் பனிப்பொழிவு அதிகமாகவும், பகலில் மேகக்கூட்டங்களுடனும் வானிலை இருக்கும் எனவும், ஓரிரு இடங்களில் மட்டும் மழைக்கான சூழல் ஏற்படும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது. அதன்படி, இலங்கையையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 16-ந் தேதியில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து வடகிழக்கு பருவமழையை மீண்டும் தீவிரப்படுத்தும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    இதனால் 16, 17-ந் தேதிகளில் காவிரி டெல்டா, தென் மாவட்டங்களிலும், 17-ந் தேதி இரவில் இருந்து 19-ந் தேதி வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறி உள்ளார்.

    20-ந் தேதிக்கு பிறகு தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி வருகிறது. இதில் 21-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், 25-ந் தேதிக்கு பின் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுவடையவும் வாய்ப்பு உள்ளதாகவும், இதன்படி, இம்மாத இறுதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் கூறியிருக்கிறார். அதன் பின்னரும் அதாவது, டிசம்பர் மாதம் முதல் பாதி வரை நல்ல மழைக்கான சூழல் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

    • தீயசக்தி தி.மு.க-வின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை தமிழக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது.
    • தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி, 54 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை.

    தீயசக்தி தி.மு.க-வின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை தமிழக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாரும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கொடுமையின் உச்சம்.

    பல ஊடகங்களின் பலத்தைப் பயன்படுத்தி, 54 மாத கால விடியா திமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகளை மறைத்துவிடலாம், தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என்ற மமதையில் ஆட்சியாளர்கள் இருப்பது, அவர்களின் குரூர புத்தியின் வெளிப்பாடாகும்.

    அதிமுக ஆட்சிக் காலங்களில் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரும்பாடுபட்ட தமிழக காவல்துறை, தற்போது, நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரின் செயல்பாடற்ற நிலையினால் சீர்கெட்டிருப்பது வேதனையான ஒன்று. இந்த ஆட்சியில் நிர்வாகத் திறனற்ற காவல் துறையின் அனைத்து அவயங்களும் செயலிழந்துவிட்டதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

    கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை மருந்து புழக்கம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட அனைத்துக் குற்ற நிகழ்வுகளிலும், குற்றவாளிகளுடன் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கைகோர்த்து இருப்பதும், அவர்களைக் காப்பாற்றும் பணியில் காவல் துறை சட்டப்படி செயல்படாத நிலை மற்றும் இந்த ஆட்சியின் அவலங்களை தைரியமாக எடுத்துரைக்கும் சமூக ஊடகங்களை முடக்குவது மற்றும் சட்ட விரோத என்கவுண்டர்களில் ஈடுபடுவதும்தான் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் சாதனை.

    மேலும், தங்களது குற்றங்களில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகளைக் காப்பாற்ற CBI விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடும் இந்த விடியா திமுக அரசு, கிட்னி மாற்று முறைகேடு மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல், அவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர்களை வைத்து முறையாக வாதிடாததால், தவறிழைத்த மருத்துவமனை மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றது.

    சமூக நலத்துறை அமைச்சர் தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நான்கு ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில், 6999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி உள்ளனர் என்றும்; அவர்களுக்கு சுமார் 104 கோடி ரூபாயை நிவாரணமாக மாநில அரசு வழங்கி உள்ளதாகவும் கூறி இருப்பது, தமிழ் நாட்டின் சட்டம்-ஒழுங்கு தோல்வியின் வெளிப்பாடா? அல்லது வெட்கக்கேடா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக 104 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது என்று பெருமையுடன் குறிப்பிட்டது அரசின் சாதனையா? அல்லது சட்டம்-ஒழுங்கின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதா? என்பதை அமைச்சர்தான் விளக்க வேண்டும்.

    ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கடந்த 4 மாதங்களில், தமிழ் நாட்டில் சுமார் 501 கொலைகளும், சுமார் 156 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    * செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையில் இரண்டு காவலர்களே, அண்டை மாநிலப் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது.

    * சென்னை அடையாறு அருகே காந்தி நகரில் குணா என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.

    * தேனி அருகே இரண்டரை சவரன் தங்க நகைக்காக இளைஞரை அடித்துக் கொலை செய்து ஆற்றில் வீசியது.

    * திருப்பூரில் மதுபோதையில் அசாம் இளைஞரை வெட்டிக் கொன்றது.

    இப்படி பல நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதையும்; பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாக 'Compromise' செய்திருப்பதையும் பார்க்கும்போது, விளம்பர மாடல் திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம்கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.

    'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்' என்று கூறிய ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சி, 'சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில், தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது'.

    புரட்சித் தலைவி அம்மா ஆட்சி காலத்திலும்; தொடர்ந்து எனது தலைமையிலான அம்மா அரசிலும், சட்டப்படி சிறப்பாக இயங்கிய காவல்துறை, கடந்த 54 மாத கால விடியா திமுக ஆட்சியில் தனது கம்பீரத்தை இழந்துள்ளது.

    விடியா திமுக ஆட்சியில் நிரந்தர DGP இருந்தபோதே காவல்துறை சிறப்பாக செயல்படாத நிலையில், தற்போது காவல் துறையின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குறியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் DGP பதவி காலியானவுடன் தகுதியான காவல் உயர் அதிகாரிகள் பலர் இருக்கும் நிலையில், விடியா திமுக அரசின் தாளத்திற்கு ஏற்ப ஆடக்கூடிய ஜூனியர் அதிகாரிகளின் பெயர்களை மத்திய தேர்வாணையம் பரிந்துரைக்காத நிலையில், வேண்டுமென்றே DGP நியமனத்தை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு, தற்காலிக DGP-யை நியமித்துள்ளார் பொம்மை முதலமைச்சர். தமிழகத்தில் DGP நியமிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்தும், இன்றுவரை இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத விடியா திமுக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி 7.11.2025-அன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றமும் தமிழ் நாடு அரசுக்கு 3 வார காலத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    நிர்வாகத் திறனற்ற இந்த செயல்பாடுகளைப் பார்க்கும் போது, புரட்சித் தலைவரின் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.

    காட்டு புலியை வீட்டில் வைத்தாலும்,

    கறியும், சோறும் கலந்து வைத்தாலும்,

    குரங்கு கையில் மாலையை கொடுத்து

    கோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும்,

    மாறாதய்யா மாறாது, மனமும், குணமும் மாறாது

    என்ற வரிகள் ஸ்டாலினுக்கு அப்படியே பொருந்துகிறது.

    நான்கரை ஆண்டு கால நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தோல்வி. குறிப்பாக, மக்களைக் காக்கும் சட்டம்-ஒழுங்கின் தோல்வியால் தமிழகம் பாதிப்படைந்து வருவதை இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அரசியல் சாசன சட்டப்படி மக்களைக் காப்பதாக உறுதிமொழி ஏற்று ஆட்சியமைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் சுயநலத்திற்காக விளம்பர மடல் ஆட்சி நடத்துவதை தமிழக மக்கள் இனியும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் வகையில், காவல்துறை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்துவதோடு, மத்திய தேர்வாணைய விதிகளின்படி, அவர்கள் அனுப்பிய பட்டியலில் இருந்து ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை தலைமை DGP-ஆக உடனடியாக நியமனம் செய்ய வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    • இருப்பு மற்றும் நுகர்வின் அடிப்படையில் 20-ந்தேதிக்குள் அனைத்துப் பொருள்களும் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.
    • ஆனாலும் 15.11.2025-க்குள் 100% கோதுமையும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.

    உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இன்று ஒரு நாளிதழில் வந்த செய்தியை வைத்து எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

    ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை கோதுமை ஒதுக்கீடு மாதம் 8,576 மெட்ரிக் டன் மட்டுமே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வந்தது.

    தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி தமிழ்நாட்டிற்கான கோதுமை ஒதுக்கீட்டினை உயர்த்திட ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 8,576 மெட்ரிக் டன்னிலிருந்து 17,100.38 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுப் பொது மக்களுக்குத் தங்குதடையின்றி நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    தற்போது மார்ச் 2025 முதல் கோதுமை ஒதுக்கீட்டைப் பழைய அளவிற்கே குறைத்துத் தற்போது மாதம், 8,576 மெட்ரிக் டன் கோதுமை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 2025 மாதத்திற்கு 8722 மெட்ரிக் டன் கோதுமை மாவட்டங்களுக்கு நுகர்வின் அடிப்டையில் உப ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கடந்த மூன்று மாதங்களில் கோதுமையின் நுகர்வு சதவீதம் சராசரியாக 92% எனப் பதிவாகி உள்ளது. நவம்பர் மாதத்தில் 08.11.2025 வரை 63% (5,386 மெட்ரிக் டன்) கோதுமை நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யபட்டுள்ளது.

    இருப்பு மற்றும் நுகர்வின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 20-ஆம் நாளுக்குள் அனைத்துப் பொருள்களும் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனாலும் 15.11.2025-க்குள் 100% கோதுமையும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வழக்கம்போல் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்.

    நடப்புக் குறுவைப் பருவத்தில் 9/11/25 வரை 1923 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 13.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1.75 லட்சம் விவசாயிகளுக்கு ரூ3249.38 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் கடைசி ஆண்டில் இதே காலகட்டத்தில் 4.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. அவர் ஆட்சியில் பொது ரகத்திற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.1918, சன்ன ரகத்திற்கு ரூ1958 மட்டுமே வழங்கப்பட்டது.

    ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 2500, சன்ன ரகத்திற்கு ரூ2545 வழங்கப்பட்டு வருகிறது.

    ஆதலால் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சக்கரபாணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை தி.நகர் திலக் தெருவில் உள்ள பாமக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    14 மற்றும் 15-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன.
    • நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன.

    இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது.

    திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும்.

    நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட Total Failure ஆக இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • S.I.R. சதி என்பதை உணர்ந்தே ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.
    • வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்காக கொடுக்கப்பட்ட படிவங்களிலேயே குழப்பம் உள்ளது.

    சென்னை:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், வாக்காளர் தீவிர திருத்த படிவத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி கூறியிருப்பதாவது:-

    * சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை.

    * அவசர அவசரமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதை தான் எதிர்க்கிறோம்.

    * S.I.R. சதி என்பதை உணர்ந்தே ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.

    * வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்காக கொடுக்கப்பட்ட படிவங்களிலேயே குழப்பம் உள்ளது.

    * உறவினர்கள் பெயரை தேர்தல் ஆணையம் கேட்கிறது, உறவினர் என்றால் யார்?

    * தற்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.

    * ஏதாவது பொய்யை சொல்லி ஏழை, எளிய மக்களின் வாக்குகளை பறிக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாக குற்றம் சாட்டினார். 



    • முதல் கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த மின்சார மைக்ரோபஸ் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • பஸ்களை இயக்க உள்ள வழித்தடம், பஸ்கள் இயக்கும் நேரம், சார்ஜிங் இடம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய போக்குவரத்தாக மெட்ரோ ரெயில் சேவை மாறி உள்ளது. மெட்ரோ ரெயில் பயணிகள் வீட்டின் அருகில் இருந்தே எளிதில் மெட்ரோ நிலையங்களை சென்றடைய வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 220 புதிய மின்சார ஏ.சி.மைக்ரோ பஸ்களை அறிமுகப்படுத்த போவதாக கடந்தமாதம் தெரிவித்து இருந்தது.

    இந்த மைக்ரோ பஸ்கள் மினி பஸ்களை விட அளவில் சிறிதாக இருக்கும். சுமார் 5 முதல் 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏ.சி.மைக்ரோ பஸ்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 5 கி.மீட்டர் சுற்றளவில் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் முக்கிய குடியிருப்பு மற்றும் வணிக மையங்களை மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் செயல்படும்.

    இது தொடர்பாக கடந்த 3-ந்தேதி மெட்ரோ ரெயில், மாநகர போக்குவரத்து கழகம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பஸ்களை இயக்க உள்ள வழித்தடம், பஸ்கள் இயக்கும் நேரம், சார்ஜிங் இடம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த மின்சார மைக்ரோபஸ் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி திருமங்கலம், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், நங்கநல்லூர், பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை, விம்கோநகர், விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரெயில்நிலைய பகுதியில் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே இந்த பகுதிகளில் 22 மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன.அவை 20 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படுகின்றன. புதிய மைக்ரோபஸ்கள் அறிமுகமானதும் 5 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும். இது மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு மட்டுமே இயக்கப்படும். பயணிகள் தங்களது பகுதியில் இருந்து எளிதாக மெட்ரோ நிலையத்தை அடையலாம். மெட்ரோ ரெயில் இயக்கப்படும் நேரத்திற்கு ஏற்ப இந்த பஸ் சேவை திட்டமிடப்படும், மேலும் பயணிகள் மைக்ரோ பஸ்கள் வரும் நேரத்தை கண்காணித்து "சென்னை ஒன்" செயலியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த மைக்ரோ பஸ் சேவைக்கு பயணிகளிடையே உள்ள வரவேற்பை பொறுத்து மற்ற வழித்தடங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

    • வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு வரும் புறநகர் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-ம் தளத்துக்கு வரும்.
    • பயணிகள் ரெயில்களை வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    சென்னையை பொறுத்தவரை புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில் சேவைகள் பொதுமக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மின்சார ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த ரெயில்களை நம்பி நீண்ட தூரத்தில் இருந்தும் பொதுமக்கள் சென்னைக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். சென்னை மக்களின் ஒரு வரப்பிரசாதமாக புறநகர் ரெயில் சேவைகள் இருந்து வருகிறது.

    சென்னையில் தீராத தலைவலியாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பஸ், கார், இருசக்கர வாகனங்களில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியுமா...? என்பது கேள்விக்குறிதான். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் கேட்கவே வேண்டாம். சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் நத்தை போலதான் ஊர்ந்து செல்லும். இதில் இருந்து தப்பிக்க ரெயில் சேவைகள் பொதுமக்களுக்கு, பெரிதும் கை கொடுத்து வருகிறது.

    கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவை பயன்பாட்டில் இருந்த நிலையில் மற்றொரு புதிய வழித்தடமாக கடற்கரை, வேளச்சேரி வழியாக பரங்கிமலைக்கு பறக்கும் ரெயில் பாதை திட்டம் 1995-ல் உருவாக்கப்பட்டது.

    இந்த திட்டத்தில் முதற்கட்டமாக கடற்கரையில் இருந்து சிந்தாதிரிபேட்டை, கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், தரமணி, பெருங்குடி வழியாக வேளச்சேரி வரை ரெயில் இயக்கப்பட்டது.

    சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வேளச்சேரி- பரங்கிமலையை இணைக்கும் வகையில் ரூ.730 கோடி செலவில் கடந்த 2008-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு பாதை அமைப்பதில் நிலம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட்டு நேரடியாக தலையிட்டதால் தீர்வு ஏற்பட்டது. இதனால் பணிகள் மீண்டும் வேகமெடுத்தன. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததால் மீண்டும் பணிகள் முடங்கியது.

    பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. 17 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வேளச்சேரி-பரங்கிமலை இணைப்பு பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ளகரம், ஆதம்பாக்கம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளது.

    தண்டவாளம் அமைக்கும் பணிகள் நூறு சதவீதம் நிறைவடைந்ததால் ரெயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) அல்லது ஜனவரிக்குள் இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இணைப்பின் மூலம் பரங்கிமலை ரெயில் நிலையம் பெரிய சந்திப்பாக மாறி இருக்கிறது.

    பறக்கும் ரெயில், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் ஆகிய 3 ரெயில் சேவைகளும் சந்திக்கும் மிகப்பெரிய ரெயில்வே முனையமாக பரங்கிமலை மாறி உள்ளது.

    வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு வரும் புறநகர் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-ம் தளத்துக்கு வரும். இதில் ஆதம்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் பாதைக்கு மேலே மேம்பாலத்தின் மீது மெட்ரோ ரெயில் செல்லும். பரங்கிமலை வழியாக சோழிங்கநல்லூர் செல்லும் மெட்ரோ ரெயில்கள் இந்த வழித்தடத்தில் மடிப்பாக்கம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம் வழியாக செல்லும்.

    வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரெயில் வந்து செல்லும் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தின் 2-ம் தளத்தில் பயணச்சீட்டு வழங்குமிடம், அலுவலக அறைகள், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளன.

    மெட்ரோ ரெயில் நிலையத்தின் தரை தளத்தில் இருந்து பறக்கும் ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், பரங்கிமலை மின்சார ரெயில் நிலையம் ஆகியவற்றுக்கு பயணிகள் எளிதாக செல்லும் வகையில் படிக்கட்டுகள், நகரும் படிக்கட்டுகள், லிப்ட் வசதிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து ரெயில் சேவைகளும் பரங்கிமலையில் செயல்பட தொடங்கியதும் பரங்கிமலையின் முகமே மாறி இருக்கும்.

    வேளச்சேரி- பரங்கிமலை வழித்தடத்தில் ஒரு ரெயில் என்ஜீன் மற்றும் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு தண்டவாளம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதை அறிய சோதனை நடத்தப்பட்டது.

    வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை ஒவ்வொரு நிலையத்திலும் நிறுத்தி ரெயிலின் இயக்கம், பிரேக் சிஸ்டம், மின் இணைப்புகள், சிக்னல் இணைப்புகள், ஆகியவை பரிசோதிக்கப்பட்டது.

    இந்த சோதனை ஓட்டம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து பயணிகள் ரெயில்களை வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சோதனைக்கு பின்னர் ரெயில்களை இயக்க ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளிப்பார். அதன்பிறகு ரெயில்கள் வேளச்சேரி-பரங்கிமலை இடையே இயக்கப்பட இருக்கிறது.



    இதன் மூலம் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு பகுதி மக்களின் கனவு நிறைவேற இருக்கிறது. சென்னை புறநகர் பகுதியான பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் சென்னையின் பிறபகுதிகளுக்கு இனி விரைவாக பயணிக்க முடியும்.

    சென்னை ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர்., அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி போன்ற சென்னையின் மையப்பகுதிக்கு செல்வது புறநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பயணம் இனி எளிதாகி விடும்.

    குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த பறக்கும் ரெயில் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் போக்குவரதது நெரிசலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

    பரங்கிமலை ரெயில் நிலையம் சமீபத்தில் தான் நவீன மயமாக்கப்பட்டு புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. தற்போது பறக்கும் ரெயில் நிலையமும் செயல்பட இருப்பதால் பரங்கிமலையின் முகமே மாறிவிடும். தாம்பரம் போல மிகமிக, முக்கியமான ரெயில் நிலையமாக உருவெடுக்கும். இங்கிருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அது மட்டுமின்றி இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

    பரங்கிமலையில் புறநகர் மின்சார ரெயில் சேவை, மெட்ரோ ரெயில் சேவை, பறக்கும் ரெயில் சேவை, மாநகர பஸ் சேவைகள் ஒரே இடத்தில் கிடைப்பதாலும் இங்கிருந்து வேளச்சேரி போன்ற பகுதிகளுக்கு மிகவும் எளிதாக செல்லலாம் என்பதாலும் எப்போது பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.  

    • விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரையில் பெறப்பட்டது.
    • தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    சென்னை:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

    இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகள் இதில் அடங்கும்.

    தமிழகம் முழுவதும் 45 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை வாலிபர்கள் பலர் ஆர்வமுடன் எழுதினார்கள். இதற்கான கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட்டதாரி இளைஞர்களும் என்ஜினியர்களும் தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர். தமிழை ஒரு மொழி பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னையில் 10 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. 9, 915 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 9000 மேற்பட்டோர் இந்த தேர்வு எழுதினார்கள். இதையொட்டி தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரையில் பெறப்பட்டது.

    எழுத்து தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கே உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட அடுத்தடுத்த தேர்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் 2 ஆயிரத்து 248 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை குற்றப்பிரிவு காவல் துறை தலைவர் செல்விகுமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹரிக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கங்காதரன், தமிழரசு ஆகியோர் சென்று கண்காணித்தனர்.

    • பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.
    • காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகரில் வீடுகளில் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் அதனை சரியாக பராமரிக்க முடியாத சூழலில் தெருக்க ளில் விட்டுவிடுகிறார்கள்.

    இது போன்ற வளர்ப்பு நாய்கள் தெரு நாய்களிடம் இருந்து விலகியே இருக்கும். அந்த நாய்களோடு ஒன்றோடு ஒன்று கலக்காது.

    இப்படி கைவிடப்படும் வளர்ப்பு நாய்களை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து கொன்றுவிடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

    வளர்ப்பு நாய்களை சாலைகளில் அழைத்துச் செல்லும்போது அவை ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிப்பதும் தொடர்கிறது.

    வளர்ப்பு நாய்களுக்கு பலர் உரிய முறையில் தடுப்பூசிகளை போடாத காரணத்தால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.

    இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கடிவாளம் போடும் வகையில் மாநகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று 6 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்று தங்களது வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களை அழைத்து வந்து மைக்ரோ சிப்களை பொருத்திச் சென்றனர்.

    இன்றைய முகாமில் பங்கேற்ற மாநகராட்சி அதிகாரிகள் இணையதளத்தில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தார்கள். மைக்ரோசிப் பொருத்தும்போது கொடுக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் எளிதாக பதிவு செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

    வருகிற 24-ந் தேதிக்குள் நாய்களை பதிவு செய்து மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செல்ல பிராணிகள் வளர்ப்போர், இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இணைய தளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுகளையும் நாய்களை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.

    செல்ல பிராணிகள் பதிவுக்கு சிறப்பு முகாம்களை நடத்தினால் வசதியாக இருக்கும் என, பலரும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே இன்று முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

    இதுகுறித்து, சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் செல்ல பிராணிகள் பதிவுக்கான நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதால், அவற்றை வளர்ப்போர், எளிதில் பதிவு செய்து பயன்பெறும் வகையில், 'மைக்ரோசிப்' பொருத்தி ஆவணங்கள் வழங்கவும், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தவும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வருகிற 16 மற்றும் 23-ந் தேதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள், உரிமையாளர்களால் கைவிடப்பட்டு சென்னையில் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் சென்னை மாநகர சாலைகளில் ஆதரவின்றி சுற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவற்றையெல்லாம் தடுக்கும் வகையில் தான் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • தேர்தலுக்காக இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.
    • நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

    பூத் வாரியாக கட்சி நிர்வாகிகள் நியமித்து அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். வீடு வீடாக வாக்காளர் பட்டியலை சரி பார்த்து யார் யாருக்கு ஓட்டுகள் விடுபட்டுள்ளது. வீட்டு முகவரி மாறியவர்கள் யார் யார்? என்ற பட்டியலை சேகரித்து அவர்களது ஓட்டுகளையும் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் இந்த மாதம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதால், அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    அது மட்டுமின்றி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கண்டித்து வருகிற 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போது கட்சிப் பணிகள் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்காக இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.

    அது மட்டுமின்றி தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்தும் விரிவாக பேசினார்.

    சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஒன்றிய அரசின் கைப்பாவையாக எதேச்சதிகார போக்குடன் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும், கூறினார்.

    சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலை தேர்தலுக்கு பிறகு நடத்தலாம் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியும் அதை தேர்தல் ஆணையம் கேட்கவில்லை.

    சிறுபான்மையினர் வாக்குகள் பா.ஜ.க.வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றை குறிவைத்து நீக்கும் நோக்கோடு தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்கும் சதித் திட்டம் நடைபெறாமல் இருக்க அனைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    தேர்தலுக்காக ஆரம்ப கட்ட பணிகள் ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்து முடித்திட வேண்டும் என்றும் நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இது தவிர கட்சி பணிகள் குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன் விரிவாக ஆலோசித்தார்.

    இந்த ஆலோசனையில் மாவட்ட கழக செயலாளர்களுடன் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் உடன் இருந்தனர்.

    ×