என் மலர்
சென்னை
- காலையில் சவரனுக்கு ரூ.360 குறைந்தது.
- சர்வதேச அளவில் பொருளாதரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று குறைந்து விற்பனையான நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது.
காலையில் சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் தற்போது கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,060-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,480-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகி உள்ளது.
* தமிழகத்தில் வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ள நிலையில் திருப்பத்தூரில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. ஃபாரன்ஹீட்டில் 102 டிகிரியாக பதிவாகி உள்ளது.
* இன்று முதல் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
* தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
* தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* இன்று முதல் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
- திட்டம் நடைமுறைக்கு வந்தால் ராமநாதபுரம், குமரி உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடற்பகுதிகளில் 30ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், ஆழமான கடற்பகுதியில் 95 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திறந்த வெளி அனுமதி அடிப்படையில் 10-வது சுற்று ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ராமநாதபுரம், குமரி உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விகடனின் இணையதளம் கடந்த 15-ந்தேதி முடக்கப்பட்டது.
- இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் வாதிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியிடப்பட்டது.
இந்த கார்ட்டூன் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், விகடனின் இணையதளம் கடந்த 15-ந்தேதி முடக்கப்பட்டது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.
மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு நடைபெற்றது.
ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார். இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு விகடன் நிறுவனத்துக்கும் அறிவுறுத்தி உள்ளார்.
- திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது.
- கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை.
சென்னை:
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழக பா.ஜ.க சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், அக்கா தமிழிசையை கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை.
அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும்.
இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சர் அவர்களே?
தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்? என வினவியுள்ளார்.
- தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
- தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற இருந்தது.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை விவகாரத்தை மேலும் பூதாகாரமாக மாற்றியுள்ளது. மும்மொழி கொள்கை தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
பா.ஜ.க. உள்பட சில கட்சிகள் மட்டுமே மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு பா.ஜ.க. கட்சியின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று காலை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கைவெுத்து இயக்கம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று காவல் துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைதியான முறையில் கையெழுத்து இயக்கம் நடத்துவேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி வந்தார்.
எனினும், இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிய காவல் துறையினர் கட்டாயம் கையெழுத்து இயக்கத்தை நடத்த முற்பட்டால் கைது செய்வோம் என்று கூறியுள்ளனர். எனினும், கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற அவரை காவல் துறையினர் கைது செய்வதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், கையெழுத்து இயக்கம் நிச்சயம் நடைபெறும் என்று கூறிய தமிழிசை சவுந்தரராஜன் காவல் துறை வாகனத்தில் ஏற மறுத்தார். இதையடுத்து, காவல் துறையினர் தமிழிசை சவுந்தரராஜனை சுற்றி நின்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் இருதரப்பும் ஆவேசமாக பேசிக் கொண்டதை அடுத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே காவல் துறையினரை கண்டித்து பா.ஜ.க.வினர் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை நடத்துவேன் என்று கூறிய நிலையில், தமிழிசை சவுந்தரராஜனை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னையில் கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி செய்தது மற்றும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து மாவட்ட செயலாளர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்த வேண்டும்.
- உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியதில் இருந்து மக்களை சந்திக்காமல் அறிக்கை மூலமாக விஜய் அரசியல் செய்து வருவதாக பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரச்சனை தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஆளுங்கட்சி உள்பட யார் தவறு செய்திருந்தாலும் தவறு எங்கே நடைபெறுகிறது என்பதை தெளிவாக தெரிந்து போராட வேண்டும். மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து மாவட்ட செயலாளர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்த வேண்டும். விருப்புவெறுப்பின்றி மக்கள் பிரச்சனையின் தீவிரம் உணர்ந்து மக்களுக்கு இடையூறின்றி உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்தி தமிழக வெற்றிக்கழகத்தினர் போராட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
அதன்பின் 28-ந்தேதி சவரன் ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதற்கிடையே நேற்றுமுன்தினம் சவரன் மீண்டும் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது. சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 80-க்கு விற்றது. இதனை தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 520-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ. 8 ஆயிரத்து 65-ஆக இருந்தது. இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 அதிகரித்தது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,020-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
01-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-03-2025- ஒரு கிராம் ரூ.107
04-03-2025- ஒரு கிராம் ரூ.107
03-03-2025- ஒரு கிராம் ரூ.106
02-03-2025- ஒரு கிராம் ரூ.105
01-03-2025- ஒரு கிராம் ரூ.105
- 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் தேர்வு எழுத இருப்பதாக அரசுத் தேர்வுத்துறை தெரிவித்து இருந்தது.
- வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) பிளஸ்-1 வகுப்புக்கான ஆங்கிலம் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதில் தமிழ் தேர்வை 11 ஆயிரத்து 430 பேர் எழுதவில்லை (ஆப்சென்ட்). இதற்கிடையே பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
இந்த தேர்வை பள்ளி மாணவர்களாக 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 பேரும், பள்ளி மாணவிகளாக 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 பேரும், தனித்தேர்வர்களாக 4 ஆயிரத்து 755 பேரும், சிறைவாசி தேர்வர்களாக 137 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் எழுத இருப்பதாக அரசுத் தேர்வுத்துறை தெரிவித்து இருந்தது.
முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 11 ஆயிரத்து 90 பள்ளி மாணவ-மாணவிகள் எழுதவில்லை (ஆப்சென்ட்) என தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) பிளஸ்-1 வகுப்புக்கான ஆங்கிலம் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.
- தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்!
- வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!
சென்னை:
1967-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதியன்று பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளை சுட்டிக்காட்டி, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்! என்று கூறியுள்ளார்.
- தனி வார்டுகளில் வெப்பத்தை தணிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது.
- வார்டுகளுக்கு சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரித்துள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், வெப்பவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அரசு ஆஸ்பத்திரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வெப்பவாத சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வார்டு முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 படுக்கைகள் உள்ளது. இதனை தவிர 2 ஐ.சி.யூ. படுக்கைகளும் இருக்கிறது. இந்த தனி வார்டுகளில் வெப்பத்தை தணிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓ.ஆர்.எஸ். கரைசல், ஆக்சிஜன் வசதி, ஐஸ் பாக்கெட்டுகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளுக்கு சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஆஸ்பத்திரியின் மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் சாய் வித்யா கூறும்போது, "அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக வெப்பவாதத்துக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது" என்றார். இதே போல ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகே வெப்பவாதத்துக்கு என 10 படுக்கைகளுடன் கூடிய தனிவார்டு அமைக்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி உள்பட சென்னையில் உள்ள மற்ற அரசு ஆஸ்பத்திரிகளிலும் வெப்ப வாதத்துக்கு தனி வார்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
- வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படும்.
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது. தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படும்.






