என் மலர்tooltip icon

    சென்னை

    • தங்கம் விலை ராக்கெட் வேகம் என்றால், வெள்ளி விலை 'ஜெட்' வேகத்தில் இருக்கிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம், வெள்ளி விலை கடந்த ஓராண்டுக்கு மேலாக புதிய பாதையில் பயணிக்கிறது. ஏற்றம்-இறக்கம் என்ற நிலை நீடித்தாலும், பெருமளவில் ஏறுமுகத்திலேயே இரண்டும் இருந்து புதிய உச்சத்தை தாண்டுகிறது.

    தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டுமா? என பேசி வந்த நிலையில், அதனையும் கடந்து இப்போது ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்தை கடக்குமா? என பலர் கேட்டு வந்த சூழலில், ரூ.1 லட்சம் மட்டுமல்ல, ரூ.2 லட்சம் ஏன் ரூ.3 லட்சத்தையும் தாண்டி, அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

    இவ்வளவு நிலைகளை கடந்தும், மேலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து கொண்டே வருவதைதான் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் நேற்றும் விலை உயர்ந்து இருந்தது.

    தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்திருந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், பவுனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது.

    ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், பவுனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது.

    இதன் மூலம் தங்கம் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.730-ம், பவுனுக்கு ரூ.5,840-ம் அதிகரித்துள்ளது.

    தங்கம் விலை ராக்கெட் வேகம் என்றால், வெள்ளி விலை 'ஜெட்' வேகத்தில் இருக்கிறது. தினமும் தாறுமாறாக அதிகரிக்கிறது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.12-ம், கிலோவுக்கு ரூ.12 ஆயிரமும், பிற்பகலில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.22-ம், கிலோவுக்கு ரூ.22 ஆயிரமும் எகிறி, ஒரு கிராம் ரூ.340-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

    வெள்ளி விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிலோ ரூ.3½ லட்சத்தை தாண்டிவிடும் என கணிக்கப்பட்டு வந்த நிலையில், அது இந்த மாதம் இறுதிக்குள்ளாகவே அந்த நிலையை எட்டிவிடும் என்றே சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.340-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

    19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600

    18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-1-2026- ஒரு கிராம் ரூ.340

    19-1-2026- ஒரு கிராம் ரூ.318

    18-1-2026- ஒரு கிராம் ரூ.310

    17-1-2026- ஒரு கிராம் ரூ.310

    16-1-2026- ஒரு கிராம் ரூ.306

    • சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.
    • வைத்திலிங்கம் தி.மு.க.வில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தார். அதேபோல், ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் ஐக்கியமானார்.

    இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.

    இதையடுத்து வைத்திலிங்கம் தி.மு.க.வில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார்.

    • கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சென்னை அடையாறில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்தவகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    தற்போது வரை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று தே.மு.தி.க.வுடன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் டி.டி.வி.தினகரன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

    சென்னை அடையாறில் காலை 10 மணிக்கு அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணியில் இணைய டி.டி.வி.தினகரன் முடிவெடுத்துள்ளதாகவும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் பியூஸ்கோயலை டி.டி.வி. தினகரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒருவேளை 2 கட்சிகளுடனும் கூட்டணி உறுதி செய்யப்பட்டால் அந்த கட்சிகளின் தலைவர்கள் 23-ந்தேதி நடக்கும் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்பார்கள்.

    கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடனே, எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் என்பது குறித்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

    பியூஸ்கோயல் முன்னிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்.

    • தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, நாகர்கோவில்-நியூ ஜல்பாய்குரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, நாகர்கோவில்-நியூ ஜல்பாய்குரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தாம்பரத்தில் இருந்து வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை மட்டும்) மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (வண்டிஎண்.16107), மறுநாள் இரவு 8.15 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும். மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை மட்டும்) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (16108), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 9.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்கள் எழும்பூர் வழியாக இயக்கப்படும்.

    திருச்சி-நியூ ஜல்பாய்குரி

    * திருச்சியில் இருந்து வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை மட்டும்) காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பாய்குரி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20610), புறப்பட்டத்தில் இருந்து 3-வது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரி சென்றடையும்.

    மறுமார்க்கமாக, நியூ ஜல்பாய்குரியில் இருந்து வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை மட்டும்) புறப்பட்டு திருச்சி வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20609), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மாலை 4.15 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரெயில்கள் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், சூலூர்பேட்டை ஆகிய வழித்தடம் வழியாக இயக்கப்படும்.

    * நாகர்கோவிலில் இருந்து வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11 மணிக்கு புறப்பட்டு நியூ ஜல்பாய்குரி செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20604), புறப்பட்டதில் இருந்த 4-வது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரி சென்றடையும்.

    மறுமார்க்கமாக, நியூ ஜல்பாய்குரி வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை மட்டும்) மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் (20603), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் இரவு 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரெயில்கள் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய வழித்தடம் வழியாக இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.
    • தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    சென்னை:

    ஒரு பொருளின் தரம், அதன் உற்பத்தி முறை மற்றும் சிறப்பம்சங்கள் அந்த இடத்தின் மண், காலநிலை அல்லது அங்கு வாழும் மக்களின் பாரம்பரியத் திறமையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்போது அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இது ஒரு பொருளின் பூர்வீகத்தை உலகிற்குப் பறைசாற்றும் முத்திரையாகச் செயல்படுகிறது. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும்போது, அது உண்மையான இடத்திலிருந்து வந்த தரமான பொருள்தான் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.

    இந்த புவிசார் குறியீடு விவசாயம், கைவினை, உணவு, இயற்கை மற்றும் கைத்தொழில் சார்ந்த பொருட்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் புவிசார் குறியீடு என்பது ஒரு மண்ணின் பாரம்பரியத்தையும், அந்த மக்களின் உழைப்பையும் அங்கீகரிக்கும் உலகளாவிய கவுரவம் ஆகும். இது போலித் தயாரிப்புகளிடம் இருந்து உண்மையான உள்ளூர் உற்பத்தியாளர்களை காக்கும் ஒரு கேடயமாகவும் திகழ்கிறது.

    அந்த வகையில் புவிசார் குறியீடு பெறுவதில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சமீபத்தில் உறையூர் பருத்திச் சேலை, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை, நாமக்கல் கல்சட்டி, தூயமல்லி அரிசி, அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றன.

    இதுவரை புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற 74 பொருட்களில் கைவினை பொருட்கள் பிரிவில் 38 பொருட்களுக்கும், உணவுப் பொருட்கள் பிரிவில் 9 பொருட்களுக்கும், உற்பத்திப் பொருட்கள் பிரிவில் 3 பொருட்களுக்கும், விவசாயப் பொருட்கள் பிரிவில் 24 பொருட்களுக்கும் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை புள்ளி விவரங்களாக தெரிவித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் வரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்த நிலையில், கடந்த 21 மாதங்களில் 16 பொருட்களுக்கு மேலும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த புவிசார் குறியீடு மாநிலத்தின் செழுமையான பாரம்பரியம், திறமையான கைவினைத்திறன் மற்றும் விவசாய சிறப்பை பிரதிபலிக்கிறது. அத்துடன் புகழ்பெற்ற கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் முதல் தனித்துவமான விவசாய விளைபொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் வரை, புவியியல் குறியீடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுகின்றன.

    இதன் மூலம் புவிசார் குறியீடு பெறுவதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.

    • கறிக்கோழி வளர்ப்போர் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இயங்கி வரும் கறிக்கோழி பண்ணைகளில் கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி, கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 காசுகள் வளர்ப்பு கூலியாக வழங்கி வருகின்றன. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் வளர்ப்பு கூலியாக வழங்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

    இதனை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் ஜனவரி 21-ம் தேதி (நாளை) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை-கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோழி வளர்ப்புக் கூலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு சாத்தியக்கூறு இல்லை என கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பில், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் வர்த்தக ரீதியிலான ஒப்பந்த விவசாய முறையில் (Contract farming on Commercial basis) கோழிப்பண்ணைகள் நடத்துகின்றனர். அவர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் இருதரப்பினரும் பரஸ்பர உடன்பாட்டுடன் விலை, அளவு, தரம், நேரம் தொடர்பாக கையெழுத்திடுகின்றனர்.

    இந்த ஒப்பந்தங்கள் ஏதும் கால்நடை பராமரிப்புத் துறையின் பார்வையின் கீழ் வருவதில்லை. இந்த ஒப்பந்தங்களில் ஒத்துக் கொள்ளப்பட்ட விவரங்கள் ஏதும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு தெரிவிக்கப்படுவதில்லை. எனவே இதுதொடர்பாக எழும் பிரச்சனைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை நிலவுகிறது. மேலும் இது வர்த்தக ரீதியிலான தனிநபர்/குழுக்களிடையிலான ஒப்பந்தங்கள் என்பதால், இந்திய ஒப்பந்ததாரர்கள் சட்டம் 1872- ன் (Indian Contracts act,

    1872) படி சட்ட நடவடிக்கைகளின் மூலமே தீர்வு காண முடியும்.

    இக்காரணங்களால் அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என தெரிவிக்கப்படுகிறது. தனிநபர்/குழுக்களிடையிலான ஒப்பந்தங்கள் தொடர்பான இப்பிரச்சனையை உரிய சட்ட அமைப்பினை நாடி சட்டத்தீர்வு காணும்படி தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோழி வளர்ப்பவர்களின் தொடர் போராட்டத்தால், சந்தையில் கறிக்கோழி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடக்க சாத்தியக்கூறு இல்லாத நிலையில் கறிக்கோழி விலை கிலோ ரூ.400-ஐ எட்டும் அபாயம் இருப்பதாகச் சந்தை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

    முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்தான பிறகும் போராட்டத்தை தொடர தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு தொழில் நுட்ப களப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று 24-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் திரண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம், முதல்-அமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் என்று கோஷமிட்டனர். பல்வேறு பகுதியிலிருந்து கோட்டை ரெயில் நிலையத்தில் ஒன்று சேர்ந்த அவர்கள் மொத்தமாக பாரிமுனை பகுதியில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல பகுதி நேர ஆசிரியர்கள் இன்று 13-வது நாளாக கல்லூரி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முகாமிட்டு அவர்கள் போராடி வருகிறார்கள். அரசின் ஊதிய உயர்வை ஏற்காமல் தொடர்ந்து போராடி வரும் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

    சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு தொழில் நுட்ப களப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு ஊழியர் மயக்கம் அடைந்தார். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மயக்கமடைந்த அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    • ஆளுநர் மாளிகையின் அறிக்கை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருக்கிறது.
    • ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு விட்டது என்று ஆளுநர் அலுவலகம் உண்மைக்கு மாறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, வழக்கம் போல ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதன் மூலம் சட்டமன்ற மரபுகளை துச்சமாகக் கருதி அவமதித்து இருக்கிறார்.

    பேரவை தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுவதும்தான் மரபு என்பதை ஆளுநருக்கு சட்டப்பேரவை தலைவர் பலமுறை எடுத்துக் கூறியும் தேசிய கீதம் பாடவில்லை என்று காரணம் காட்டி வேண்டுமென்றே ஆளுநர் சட்டமன்றத்தைப் புறக்கணித்துள்ளார். ஆளுநர் பேச அனுமதிக்கப்படவில்லை; ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு விட்டது என்றும் ஆளுநர் அலுவலகம் உண்மைக்கு மாறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

    மேலும், ஆளுநர் மாளிகையின் அறிக்கை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருக்கிறது. மாநில அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள தகவல்களை நீக்குவதுடன் தனது விருப்பம் போல கருத்துக்களை சேர்ப்பதும் ஆளுநரின் வரம்பை மீறும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும்.

    அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்றும், இதற்காக, நாடு முழுவதும் ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து தி.மு.க. செயலாற்றும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கதாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • கடந்த 5 ஆண்டுகளில் 22 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    சட்டசபையில் ஆளுநர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

    * விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 41 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

    * மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ.2 ஆயிரம் ஆக அதிகரிப்பு.

    * ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

    * 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    * 2640 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உடன்குடி, எண்ணூர் அனல் மின் நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    * நீர் மேலாண்மையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அரசின் திட்டங்களால் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.

    * கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2086 கோடி செலவில் 121 தடுப்பணைகள், 101 அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    * மதுரை, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    * கடந்த 5 ஆண்டுகளில் 22 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    * ரூ.450 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    * உழவர் சந்தைகள் மூலம் தினமும் ரூ.10 கோடிக்கு விற்பனை நடைபெற்று 8 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

    * கடந்த 5 ஆண்டுகளில் 125 உழவர் சந்தைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    * கடந்த 5 ஆண்டுகளில் திருக்கோவில்களுக்கு சொந்தமான ரூ.2261 கோடி மதிப்பிலான 2307 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என #ConstitutionalAmendment கோருவோம்!
    • #DravidianModel அரசின் நான்காண்டு சாதனைகளைப் பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என #ConstitutionalAmendment கோருவோம்!

    அரசு தயாரித்தளித்த அறிக்கையை ஆளுநர் படிக்காமல் வெளியேறுவதால், #DravidianModel அரசின் நான்காண்டு சாதனைகளைப் பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது.

    அரசியலமைப்புக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவைக்கும் மதிப்பளிக்காமல் மக்கள்நல நடவடிக்கைகளை முடக்கி வைத்து முரண்டு பிடிக்கும் தமிழ்நாடு ஆளுநரை 'Recalcitrant Governor' என @The_Hindu தலையங்கத்தில் நேற்று குறிப்பிட்டிருந்தார்கள். அவரது இன்றைய செயல்பாடும் அதனை மெய்ப்பித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோர்ட்டில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைத்து இருக்கிறது என்று இனிப்பு கொடுத்து வெற்றியை கொண்டாடினார்கள்.
    • இந்த வழக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, அவர்களுக்கு கிடைப்பது பட்டை நாமம்தான்.

    சென்னை:

    பா.ம.க. டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், டாக்டர் அன்புமணி தலைமையிலும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. டாக்டர் அன்புமணிதான் பா.ம.க. தலைவர் என்றும் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் அவரிடம்தான் இருக்கும் என்றும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையில் டாக்டர் ராமதாஸ் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட்டில் ஒரு தீர்ப்பு வெளிவந்தது. இந்த நிலையில் இப்போது சென்னையில் உரிமையியல் கோர்ட்டில் கட்சி தனக்கே சொந்தம் என்று உரிமைக்கோரி டாக்டர் ராமதாஸ் நேற்று மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக டாக்டர் அன்புமணி தரப்பு கொள்கை பரப்பு செயலாளர் வக்கீல் பாலு கூறியதாவது:-

    எந்த அரசியல் கட்சியிலும், எந்த கட்சி தலைவரும் செய்யாத வேடிக்கை மற்றும் வினோதங்களை டாக்டர் ராமதாஸ் தலைமையில் செய்து வருவதுதான் மிகப் பெரிய வேடிக்கை.

    டாக்டர் அன்புமணிக்குத் தான் கட்சி சொந்தம், சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இது நீதிமன்ற அவமதிப்பாகும். நான்தான் கட்சி தலைவர் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

    கோர்ட்டில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைத்து இருக்கிறது என்று இனிப்பு கொடுத்து வெற்றியை கொண்டாடினார்கள். தங்களுக்கு வெற்றி கிடைத்தால் மீண்டும் மீண்டும் டாக்டர் ராமதாசை தலைவராக தேர்வு செய்வதாக ஏன் அறிவிக்க வேண்டும்? ஒரே வருடத்தில் 4 முறை அவரை தலைவராக தேர்வு செய்ததாக அறிவித்து உள்ளார்கள்.

    எந்த கோர்ட்டிலும் அவர்கள் வெற்றி பெற முடியாது என்பது சட்டம் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். டெல்லி கோர்ட்டில் தங்களுக்குத்தான் வெற்றி கிடைத்தது என்று கொண்டாடியவர்கள்.

    அப்படியென்றால் 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏன் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். இது முழுக்க முழுக்க டாக்டர் ராமதாசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரை சுற்றி இருக்கும் பூசாரிகளான ஜி.கே.மணி, அருள் போன்றவர்கள் நடத்தும் நாடகம். இந்த வழக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, அவர்களுக்கு கிடைப்பது பட்டை நாமம்தான். வழக்குகளை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு ஊழியர்களும் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள்.
    • சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரத்து 38 சத்துணவு மையங்களில் இப்போதைய நிலையில் 71 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களும் முடங்கி விடும்; அதனால், அந்த மையங்களை நம்பியுள்ள 40.82 லட்சம் மாணவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படும்.

    சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு ஊழியர்களும் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள்; அவர்கள் தான் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்குபவர்கள். எனவே, இனியும் தாமதிக்காமல் சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×