என் மலர்tooltip icon

    சென்னை

    • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
    • தூதரக முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு விடுத்த தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை 27.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் அதிகளவில் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், முத்தரப்புப் பேச்சைவார்த்தை நடத்திட ஏற்பாடு செய்யவும், இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக மற்றும் சட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (27.03.2025) கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் 27.03.2025 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினர் கடந்த 3 மாதங்களில், 11 வெவ்வேறு சம்பவங்களில் 147 மீனவர்கள் மற்றும் 19 படகுகளை சிறை பிடித்துள்ளதை தனது கடிதத்தில் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

    இந்தச் சூழலில், 2024 டிசம்பர் மாதம் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, நமது மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் பிரச்சனையை இலங்கை அதிபரிடம் தனிப்பட்ட முறையில் எழுப்பியதாகவும், இந்திய மீனவர்களின் நலனை உறுதியாகக் காப்பதில் ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் தனது 09.02.2025 நாளிட்ட கடிதத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதை தனது கடிதத்தில் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

    எனவே, நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும், தூதரக முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு விடுத்த தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், சட்ட உதவிகளை வழங்குமாறும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசாரின் என்கவுண்டரில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் உயிரிழந்தார்.

    சென்னையில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னையில் ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக விமான நிலையத்தில் வைத்து சூரஜ், ஜாஃபர் என்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் ரெயில் மூலம் தப்ப முயன்ற சல்மானை, ஆந்திராவில் போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் என்கவுண்டரில் ஜாஃபர் உயிரிழந்த நிலையில், தொடர் நகைப்பறிப்பு சம்பவத்தில் கைதான சல்மான், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், சல்மானுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

    • அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
    • உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்.

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.

    இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    மேலும், உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
    • கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை எண்ணூர் ரெயில் நிலையத்தில் மின் வயர் அறுந்து விழுந்ததால் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

    இதனால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    • ரெயில் நிலைய அலுவலகத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள டெலிகாம் அலுவலகத்தின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

    அலுவலகத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட தகவல் வெளியானது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வேப்பேரியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

    பின்னர், தண்ணீரை பீய்த்து அடித்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.

    மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
    • தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.

    தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களில் 29ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுக்கவில்லை என்றும் சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே கொள்கையாக மத்திய அரசு வைத்துள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் ஆர்ப்பாட்ட அழைப்பு மடல்.

    தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் நம்மிடம் வழங்கிய ஆட்சியை அனைவருக்கும் பலனளிக்கும் சாதனைத் திட்டங்களுடன் நாம் நடத்திக் கொண்டிருந்தாலும், நாளொரு போராட்டத்தை முன்னெடுத்தே நம் உரிமைகளைப் பெறக்கூடிய வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை, தமிழ்நாட்டிற்கான திட்டங்களும் இல்லை, தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியும் ஒதுக்கவில்லை. இதனைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த பிப்ரவரி 8-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

    ஆவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினேன்.

    தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கையாக விளங்கும் பேரறிஞர் அண்ணா நமக்கு வழங்கிய - முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த இருமொழிக் கொள்கைக்கு எதிராக இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆதிக்கப் போக்கையும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மார்ச் 12-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. உங்களில் ஒருவனான நான் திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாக நிறைவேற்றி, மக்கள் தொகையை மனிதவள ஆற்றலாகச் சிறப்பாக மாற்றியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும், ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் தங்கள் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் மார்ச் 5-ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள 54 கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் நடத்தியதுடன், தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தை கடந்த 22-ஆம் தேதி சென்னையில் நடத்தி, ஒருமித்த உணர்வுடன் ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தோம். இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்திடச் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.

    மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களே தங்களின் நியாயமான உரிமைக்காகவும், மாநிலத்திலிருந்து வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து உரிய பங்கு கிடைப்பதற்காகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஏழை - எளிய தொழிலாளர்களின் வாழ்வு, பா.ஜ.க. ஆட்சியில் அவலமான நிலையில் உள்ளது.

    திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பொதுவுடைமை அமைப்புகள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களின் ஆதரவுடன் 2004-இல் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களின் பட்டினிச் சாவைத் தடுத்திடும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 100 நாள் வேலை உறுதி செய்யப்பட்டது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனைச் சரியாகவும் முறையாகவும் நிறைவேற்றக்கூடிய மாநிலமான தமிழ்நாடு, 100 நாள் வேலைத் திட்டத்தையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

    சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே தனது கொள்கையாகக் கொண்டிருக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஜனவரி 13-ஆம் நாள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கிட ஏதுவாக அந்த நிதியினை விடுவிக்கக் கோரியிருந்தேன்.

    அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்களுடன் கடந்த ஜனவரி 27-ஆம் நாள் டெல்லியில் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களைக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் நேரில் சந்தித்து, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை மூலம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தார்கள். தொடர்புடைய துறையின் அமைச்சரிடமும் வலியுறுத்தப்பட்டது.

    ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடங்கி, ஒவ்வொரு திட்டத்திலும் தமிழ்நாட்டிற்குரிய நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு உரிய அளவிலும், உரிய நேரத்திலும் ஒதுக்குவதில்லை. அரசியல் பார்வையுடன் தமிழ்நாட்டை ஓரங்கட்ட நினைக்கிறது. இந்த நிலையிலும், உங்களில் ஒருவனான என் தலைமையிலான தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு, 100 நாள் வேலைத்திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்புக்குரிய நிதியின் மூலம் ஊதியத்தை வழங்கி வருகிறது.

    எனினும், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பே இதில் முதன்மையானது என்பதால் உழைக்கும் ஏழை - எளிய மக்களுக்கு முழுமையான அளவில் ஊதியம் வழங்கிட இயலவில்லை. தமிழ்நாட்டைப் போலவே கேரளா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்ற முறையீடுகள் வைக்கப்பட்டுள்ளன.

    உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குரிய நிலுவைத் தொகையான 4,034 கோடி ரூபாயை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றும், 5 மாதங்களாக இந்தத் தொகை விடுவிக்கப்படாமல் இருப்பதால் கிராமப்புற ஏழைத் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதையும் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. மக்களவையில் எடுத்துரைத்தார்.

    மாநிலங்களவையிலும் திருச்சி சிவா எம்.பி. இது குறித்துப் பேசினார். இரு அவைகளிலும் கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இது குறித்து வலியுறுத்தியும், நிலுவைத் தொகையை வழங்குவதற்குப் பதில், "உத்தர பிரதேசத்தைவிட தமிழ்நாட்டிற்குக் கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது" என்று திசைதிருப்பும் பதில்களே ஒன்றிய பா.ஜ.க அரசிடமிருந்து கிடைத்தது.

    மாநிலங்களின் பரப்பளவையும் மக்கள்தொகையையும் காரணம் காட்டி, திறமையாகத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களின் உரிமைகளை நசுக்கி, மக்களை வஞ்சிக்கும் போக்கைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

    மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமது உரிமைக்கான குரல் எழுப்பி வரும் நிலையில், மக்கள் மன்றத்திலும் அதனை எதிரொலித்திடச் செய்யும் வகையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்கக்கோரி, தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அளவில் மார்ச் 29-ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இது நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, நாள்தோறும் உழைத்து நாட்டை முன்னேற்றிடும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். எனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை ஆண் - பெண் தொழிலாளர்களையும் பங்கேற்கச் செய்திட வேண்டும். அவர்களின் உரிமை முழக்கமாக உடன்பிறப்புகள் களம் காண வேண்டும்.

    வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்பிற்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும். உழைத்தவர்கள் ஓடாய்த் தேய்கிற வரை, அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதன் உழைப்புச் சுரண்டலையும், உரிமைப் பறிப்பையும் உரக்க முழங்கிடுவோம். உரிமைகளை வென்றிடுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இருப்பதும், மேற்கூரைகள் இடிந்து விழுவதும் தொடர்ந்து செய்திகளில் வெளிவருகின்றன.
    • நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் இத்தனை தாமதம், தயக்கம்?

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சியில், பள்ளிக்கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதைப் பார்த்தோம். இதோ, அதற்கு அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொன்னகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இது போல எத்தனை பள்ளிகள் இருக்கின்றனவோ தெரியவில்லை.

    தமிழகத்தில் திமுக ஆட்சியில், 6,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில், அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார். பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கும், தரம் உயர்த்துவதற்கும் மொத்தம் ரூ. 7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 2497 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுவருவதாகவும், இந்த ஆண்டும், ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார்.

    தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இருப்பதும், மேற்கூரைகள் இடிந்து விழுவதும் தொடர்ந்து செய்திகளில் வெளிவருகின்றன. நாங்கள் கேட்பதெல்லாம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன, குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை, திமுக அரசு வெளியிட வேண்டும் என்பதுதான். ஆனால் பல நாட்கள் கடந்தும் இதுவரை அதற்கு பதில் இல்லை.

    திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் வெள்ளை அறிக்கை வெளியிடக் கேட்கிறோம். உண்மையில் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் இத்தனை தாமதம், தயக்கம்? என வினவியுள்ளார். 



    • இசைஞானி இளையராஜா இசையை உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.
    • 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பது என்பது தற்போது சாத்தியமில்லை.

    சென்னை:

    இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ந்தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இசைஞானி இளையராஜா இசையை உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். அந்த இசையை தமிழ்நாடும் ரசிக்க வேண்டும். எனவே தமிழ்நாடு அரசு இளையராஜா சிம்பொனியை இசையை இசைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டசபை உறுப்பினர் சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நானும் இளையராஜாவை சந்திக்கும் போது இதே கோரிக்கையை முன்வைத்தேன். ஆனால் 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பது என்பது தற்போது சாத்தியமில்லை. ஆனால் விரைவில் அதை கண்டிப்பாக செய்வதாக இளையராஜா உறுதி அளித்துள்ளார்.

    மேலும், தமிழக அரசின் சார்பில் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றியதற்காகவும், இளையராஜாவின் 50 ஆண்டு கால திரையுலக பணிக்காகவும் அவருக்கு பாராட்டு விழா ஜூன் மாதம் 2-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவித்தார்.

    முன்னதாக, லண்டனில் சிம்பொனியை நிகழ்ச்சியை அரங்கேற்றுவதற்கு முன்னதாக இளையராஜாவை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பாமக எம்.எல்.ஏக்களுடன் பேசிக்கொண்டே அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் சட்டப்பேரவைக்கு வந்தார்.
    • கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்.

    சட்டப்பேரவைக்கு வரும்போது பாமக எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டே வந்தார்.

    அப்போது "பாஜக, நம்ம (அதிமுக), அப்புறம் பாமக" என சிரித்துக்கொண்டே பேசி வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "நாங்க கூட்டணிங்க" எனச் சொல்லிச் சென்றதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இன்று மதியம் திண்டுக்கல் சீனிவாசனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "பாமகவுடன் கூட்டணி என நான் யாரிடமும் கூறவில்லை. கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்" என்று கூறிவிட்டு சென்றார்.

    • சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார்.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று உடல்நலக்குறைவுடன் பேரவைக்கு வந்திருந்தார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார். இதேபோல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறையான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை-சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மானிய கோரிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வராதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று உடல்நலக்குறைவுடன் பேரவைக்கு வந்திருந்தார். இன்று கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே, நான் மானியக் கோரிக்கையை முன் வைக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

    • "ஸ்ட்ராபெர்ரி குயிக்" எனப்படும் புதிய போதைப்பொருள்.
    • மாணவர்கள் சாப்பிட்டு விட்டால் அதில் இருந்து மீள முடியாது.

    தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் இருக்கும் பகுதிகளில் சாக்லேட் வடிவில் புதுவகை போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.


    "ஸ்ட்ராபெர்ரி குயிக்" எனப்படும் ஒரு புதிய போதைப்பொருள். பள்ளி கூடங்களின் அருகில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டு அது வேகமாக பரவி வருகிறது.

    வாயில் போட்டால் வெடித்து சிதறுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த போதைப் பொருளில் மெத்த பெட்டமின் போதைப் பொருள் கலந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஸ்ட்ராபெரி வாசனையுடன் கூடிய இந்த வகை சாக்லேட் போதைப் பொருள் மாணவப் பருவத்தில் இருந்தே மாணவர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் போலீசார் பள்ளிக்கூடங்களில் அருகில் உஷார் படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த போதைப் பொருளை மிட்டாய் என்று நினைத்து மாணவர்கள் சாப்பிட்டு விட்டால் அதில் இருந்து அவர்கள் மீள முடியாது என்கிற எச்சரிக்கை தகவலும் வெளியாகி உள்ளது.

    இது சாக்லேட், வேர்க்கடலை வெண்ணெய், கோலா, திராட்சை மற்றும் ஆரஞ்சு சுவைகளிலும் இந்த போதைப் பொருட்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களில் அருகில் அறிமுகமில்லாத நபர்கள் எந்தவித சாக்லேட்டுகளை கொடுத்தாலும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

    எனவே உஷாராக செயல்பட்டு போதைப் பழக்கத்தில் இருந்து மாணவர்களை காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

    • புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • வண்டலூர்-பாடியநல்லூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.115 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வண்டலூர் முதல் திருவொற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையிலான தொலைவிற்கு சுங்கக்கட்டணம் புதிதாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த வெளிவட்டச் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு வகையான வாகனங்களுக்கு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்-நசரேத்பேட்டை இடையே கார், ஜீப், வேன்களுக்கு ரூ.60, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனங்களுக்கு ரூ.95, லாரி மற்றும் பஸ்களுக்கு ரூ.200, இதர கனரக வாகனங்களுக்கு ரூ.220, ரூ.315, ரூ.385 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்- நெமிலிச்சேரி வரை கார், ஜீப், வேன்களுக்கு ரூ.85, இலகுரக வணிக வாகனம் ரூ.135, லாரி, பஸ்கள் ரூ.285, கனரக வாகனங்கள் ரூ.310, ரூ.445, ரூ.545.

    வண்டலூர்-பாடிய நல்லூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.115, இலகுரக வணிக வாகனம் ரூ.190, லாரி, பஸ்களுக்கு ரூ.395, கனரக வாகனங்களுக்கு ரூ.430, ரூ.615, ரூ.750 என்ற விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்-மீஞ்சூர் வரை ரூ.140, ரூ.225, ரூ.470 மற்றும் கனரக வாகனங்களுக்கும் ரூ.510, ரூ.735, ரூ.895 வசூலிக்கப்பட உள்ளது.

    நசரேத்பட்டை- நெமிலிஞ்சேரி வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20, இலகுரக வணிக வாகனம் ரூ.40, லாரி, பஸ்கள் ரூ.85. 3 வகையான கனரக வாகனங்களுக்கு ரூ.90, ரூ.130, ரூ.160 புதிய கட்டணம்.

    நசரேத்பேட்டை- பாடியநல்லூர் இடையே கார், ஜீப் ஆட்டோவிற்கு ரூ.55, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.90, லாரி, பஸ்கள் ரூ.195, 3 வகையான கனரக வாகனங்களுக்கு ரூ.210, ரூ.300, ரூ.370. நசரேத்பேட்டை - மீஞ்சூர் வரை கார், ஜீப், வேன் ரூ.80, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.125, லாரி, பஸ்கள் ரூ.265, இதர கனரக வாகனங்கள் ரூ.290, ரூ.420, ரூ.510.

    ×