என் மலர்
சென்னை
- இஸ்ரோ விஞ்ஞானிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
- தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என்றார்.
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளைச் சந்தித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணனுடன் ஒரு முக்கிய சந்திப்பை மேற்கொண்டேன்.
தமிழ்நாடு அரசுப் பள்ளியிலிருந்து சென்று இந்திய விண்வெளி நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு வந்துள்ள வி.நாராயணனின் பயணமானது நிறையவே பேசக்கூடியது
பொதுக் கல்வியால் எட்டக்கூடிய உயரங்களை அவர் உள்ளடக்கி உள்ளார். தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என பதிவிட்டுள்ளார்.
- புதிய கைதிகளை அனுமதிக்கும்போது சாதி தொடர்பான தகவல்களை கேட்கக் கூடாது.
- சிறை ஆவணங்களில் எந்த இடத்திலும் சாதி தொடர்பான தகவல்கள் இருக்கக்கூடாது.
சிறைகளில் சாதி ரீதியிலான பாகுபாடு கூடாது என தமிழ்நாடு சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய கைதிகளை அனுமதிக்கும்போது சாதி தொடர்பான தகவல்களை கேட்கக் கூடாது. சிறை ஆவணங்களில் எந்த இடத்திலும் சாதி தொடர்பான தகவல்கள் இருக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
- ஈரோடு இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு.
- இந்நிகழ்வின்போது, தலைமை செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, களவுச் சொத்துகளை மீட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பெருந்துறை காவல் உபகோட்ட துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
இந்நிகழ்வின்போது, தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- வீட்டு இணைப்புகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- வீடுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்பது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகம் தான்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும் போது, அதிலிருந்து வீட்டு இணைப்புகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வீடுகளைத் தவிர கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற மின் இணைப்புகள் அனைத்துக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதை அனுமதிக்க முடியாது.
தமிழகத்தின் வரலாற்றில் 3 ஆண்டுகளில் 4 முறை மொத்தம் சுமார் ரூ.45 ஆயிரம் கோடிக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய மனிதநேயமற்ற அரசு திராவிட மாடல் அரசு தான். வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என்று அரசு அறிவித்திருப்பது மக்களின் மீதுள்ள கருணையால் அல்ல, மாறாக, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறதே என்ற அச்சத்தால் தான்.
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, 2023-ம் ஆண்டில் வீடுகளுக்கான மின்கட்டண உயர்வை அரசே ஏற்கும் என்று அறிவித்த ஆட்சியாளர்கள், கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி விட்டு, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் முடிவடைந்த பிறகு, பின்தேதியிட்டு வீடுகளுக்கும் சேர்த்து மின்கட்டணத்தை உயர்த்தியவர்கள் தான் என்பதை தமிழ்நாடு மறக்கவில்லை. எனவே, வீடுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்பது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகம் தான்.
கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே 3 மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அவற்றின் செலவு மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மூடப்பட்டு விட்டன. கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையே குறைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இரக்கமே இல்லாமல் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தத் துடிப்பது சரியல்ல.
எனவே, வணிகம் மற்றும் தொழில்துறையினரை பாதுகாக்கும் வகையில் வீடுகளுக்கு மட்டுமின்றி, கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
- வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?, படுத்தே விட்டாரய்யா... எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு!
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவியில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க. ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
அன்று
2G-க்காக அப்பா டெல்லி சென்றார்...
இன்று...
டாஸ்மாக்... தியாகி... தம்பி...
வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?
படுத்தே விட்டாரய்யா...
எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு!
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்த எக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
- திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது அதிகரித்துள்ளது.
- பல பாலியல் தொல்லை சம்பவங்களில், முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படுவதில்லை.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மேலும், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை ஏவல் துறையாக மாறி. திமுக நிர்வாகிகள் செய்யும் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில்கூட பாரபட்சம் காட்டுகின்றன.
கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் தனியார் கடை ஒன்றில் வேலை செய்து வந்து 34 வயதுடைய பெண் ஒருவர். பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில், சண்முக பிரபூ பாஸ்கர், பிரகதீஸ்வரன் மற்றும் சரவணன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து அந்த நான்கு குற்றவாளிகளும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலுடன் தனது குடும்பத்தினருடன், தான் பாதிக்கப்பட்டதை காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது அதிகரித்துள்ளது. பல பாலியல் தொல்லை சம்பவங்களில், முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படுவதில்லை. குறிப்பாக, திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச் சம்பவங்களில், பேச்சுவார்த்தை மூலம் சரிகட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் இத்தகைய சர்வாதிகாரப் போக்கிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
2026-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவியேற்றவுடன், அண்ணா பல்கலைக்கழக நிகழ்வில், 'யார் அந்த சார்' குற்றத்தில் சம்பந்தப்பட்ட பிற 'சார்'கள் விவரம் கண்டிப்பாக வெளிக் கொண்டுவரப்பட்டு, உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும். அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு. மீண்டும் முழுமையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு நீதி வழங்கப்படும்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நீதி கிடைத்திடவும்; பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திடவும்; தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் திராணியற்று வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் மாநகரத்தின் சார்பில், 23.5.2025 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில், தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. R.B. உதயகுமார், M.L.A., தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர்களான R. காந்தி, திரு. துரை, செந்தில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. R.K. பாரதிமோகன், Ex. M.P., தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M. ரெத்தினசாமி, Ex. M.L.A., தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M. சேகர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. C.V. சேகர், Ex. M.L.A., தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர் திரு. N.S.சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், மாநகராட்சி, நகர, பேரூராட்சி மன்றங்களின் இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
- தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.
போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.
எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கன்னித் தமிழை வளர்த்தவர்களில் முதன்மையாக இடம்பெறுபவர் பெரும்பிடுகு முத்தரையரே ஆவார்.
- திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சூரிய குல சத்திரியர் வம்சமாக போற்றப்படுபவர்; சங்க காலத்தில் உதித்த சரித்திர நாயகர்; முத்தரையர் இனத்தின் குலதெய்வக் கடவுள்களில் ஒருவராக போற்றப்படுபவர்; முது தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரியவர், பெரும்பாட்டன் பேரரசர் சுவரன்மாறன் முத்தரையர் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார்.
தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து அவை, காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பேரரசர் பெரும்பிடு முத்தரையர் ஆற்றிய பணிகளை வரலாறு பதிவு செய்கிறது. கன்னித் தமிழை வளர்த்தவர்களில் முதன்மையாக இடம்பெறுபவர் பெரும்பிடுகு முத்தரையரே ஆவார்.
போற்றுதலுக்குரிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன.
- அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் கலைஞரால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன. அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சென்னையில் கைலாசபுரம் திட்டப்பகுதியில் தூண் மற்றும் 14 தளங்களுடன் 63 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் 392 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;
காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் பகுதி 1 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 51 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் 420 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 527 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 152 திட்டப் பகுதிகளில் 5,946.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 52,397 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில், 773.64 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3113 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள், 841.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1447 அடுக்குமாடி குடியிருப்புகள், 56.31 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1603 மனை மேம்பாட்டு திட்டம்,
117.17 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 10 வணிக வளாகங்கள், 67.32 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 7 வாரிய கோட்ட அலுவலகங்கள் மற்றும் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு 10.88 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 கோட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டம், நெற்குன்றத்தில் 25 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், சி.ஐ.டி நகர் பகுதி 6-ல் 64 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், சி.ஐ.டி நகர் பகுதி 7-ல் 66 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் மதுரை மாவட்டம், தோப்பூரில் 51 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் என மொத்தம் 207 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்கள் சு.முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நீதி கிடைத்திடவும்; பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திடவும்; தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் திராணியற்று வேடிக்கை பார்த்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. தஞ்சாவூர் மாநகரத்தின் சார்பில், 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில், தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர்களான காந்தி, துரை. செந்தில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பாரதி மோகன், தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ரெத்தினசாமி, தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் சேகர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேகர், தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாளை மேல்காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் மத்தியகிழக்கு அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். நாளை மேல்காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்தம் உருவாகலாம்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள்.
- ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு!
ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது மு.க.ஸ்டாலின் உணர்வாரா?
அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே-
திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய்! பொய்! பொய்!
ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், ED ரெய்டுக்கு பயந்து "தம்பி"யை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. (#யார்_அந்த_தம்பி?)
இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்? அத்தனையும் நாடகம்! திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்!
ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள்.
இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள்.
NEVER EVER GIVE UP!
தம்பி கௌதமின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டாலின் அவர்களே- வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்! என்று கூறியுள்ளார்.






