என் மலர்tooltip icon

    சென்னை

    • தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.
    • எப்போது வாக்குறுதி கொடுத்தோம் என கேட்டவர்கள் எப்படி பணி பாதுகாப்பு அளிப்பார்கள்.

    தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநாகராட்சி வலியுறுத்தி உள்ளது.

    இந்நிலையில் சென்னை மாநகராட்சி அழைப்பை தூய்மை பணியாளர்கள் புறக்கணித்தனர்.

    இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கூறுகையில்,

    எங்கள் துறை அமைச்சரான கே.என்.நேரு எங்கே? போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை துறை அமைச்சரான நேரு சந்திக்காதது ஏன்? அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

    தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். எப்போது வாக்குறுதி கொடுத்தோம் என கேட்டவர்கள் எப்படி பணி பாதுகாப்பு அளிப்பார்கள்.

    மேலும் கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்களை மிரட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். பணத்தாசை காட்டி போராட்டத்தை கலைக்க முயல்வதாகவும் அவர்கள் கூறினர்.

    • பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
    • எந்த தற்காலிக தூய்மை பணியாளரும் பணிநீக்கம், பணி மறுப்பு செய்யப்படவில்லை.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    போராட்டத்தை கைவிட்டு சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை மாநகராட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநாகராட்சி வலியுறுத்தி உள்ளது.

    எந்த தற்காலிக தூய்மை பணியாளரும் பணிநீக்கம், பணி மறுப்பு செய்யப்படவில்லை. பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்துகொள்ள வேண்டும். பணிப்பாதுகாப்பு மற்றும் பணப்பலன்கள் வழங்குவதை மாநகராட்சி உறுதி செய்யும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    • நேற்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. கடந்த வாரம் முழுவதும் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் நேற்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.75ஆயிரத்துக்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையாகிறது.  இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,000

    10-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    09-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    08-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,760

    07-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-08-2025- ஒரு கிராம் ரூ.127

    10-08-2025- ஒரு கிராம் ரூ.127

    08-08-2025- ஒரு கிராம் ரூ.127

    08-08-2025- ஒரு கிராம் ரூ.127

    07-08-2025- ஒரு கிராம் ரூ.127

    • அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்தில்தான் மது பிரியர்கள் மது அருந்தவேண்டும்.
    • பொதுஇடங்களில் யாராவது மது அருந்தினால், அவர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், அரியலூரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''பொது இடங்களில் மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசாருக்கு தகுந்த உத்தரவை எடுக்கவேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். பின்னர், ''அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்தில்தான் மது பிரியர்கள் மது அருந்தவேண்டும். பொதுஇடங்களில் யாராவது மது அருந்தினால், அவர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது இடங்களில் மது அருந்துவோரினால் பாதிக்கப்படும் மக்கள் எளிதில் புகார் தெரிவிக்க வசதியாக ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்களது செல்போன் எண், இ-மெயில், வாட்ஸ்ஆப் எண் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையை டி.ஜி.பி. எடுக்கவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    • திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
    • ஒரு திட்டத்தை அறிவிக்கிறதோட கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறது இல்லை.

    தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இதில், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரேசன் பொருட்களை நேரில் சென்று வாங்க சிரமப்படுவதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்துப் பொருட்களையும் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க 'தாயுமானவர்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

    அதனை தொடர்ந்து, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

    சென்னை தண்டையார்பேட்டை, கோபால் நகரில் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி, ஏறக்குறைய 35 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் 70 வயதிற்கும் மேற்பட்ட 20 லட்சம் முதியோர், 1 லட்சத்து 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பயனடைவர்.



    இந்த நிலையில், 'தாயுமானவர்' திட்டத்தை இன்று தொடங்கி வைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    வணக்கம். திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். அந்த வரிசையில் எனது மனதிற்கு பிடித்த திட்டமாக உருவாகியிருக்கிற திட்டம் தான் 'தாயுமானவர் திட்டம்'. இத்திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி அரசின் செயல்களை மக்களுடைய வீடுகளுக்கே சென்று கொடுப்பது இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி. ஒரு திட்டத்தை அறிவிக்கிறதோட கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறது இல்லை. அந்த திட்டத்தின் பயன், பலன் கடைக்கோடி மனிதர்களையும் சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்கிறதும் கடமையா நினைக்கிறேன்.

    அப்படி உருவாக்குன இத்திட்டத்தை 34,809 நியாய விலைக்கடைகளில் செயல்படுத்த போறோம். 70 வயதிற்கு மேற்பட்ட 20,42,657 மூத்த குடிமக்கள், 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என 21,70,454 பேர் இந்த திட்டத்தால் பயன் அடையபோகிறார்கள். ஒவ்வொரு மாதம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரேசன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும். இதற்காக ரூ.30 கோடியே 16 லட்சம் ஆகிற செலவை கூடுதல் செலவாக கருதாமல் மக்களுக்கு செய்கிற உயிர் காக்கும் கடமையா நாங்கள் நினைக்கிறோம். இது கூட்டுறவுத்துறையின் மிகப்பெரிய சேவை. அந்த துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப்போகிற மிகப்பெரிய கடமை. இந்த நேரத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள் என்பது இந்த திட்டத்தின் நோக்கம் 100 விழுக்காடு நிறைவேறுகிற வகையில் உங்கள் பணி அமையணும். உங்களை எதிர்பார்த்து காத்து இருக்கும் முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மனம் குளிர்கிற வகையில் நீங்கள் கனிவா நடந்துக்கணும். நீங்கள் வாங்குகிற நல்ல பெயர் தான் ஆட்சிக்கு கிடைக்கிற பாராட்டு என்றார். 



    • திருச்சி டிஐஜி வருண்குமார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • ஜெயஸ்ரீ ஐபிஎஸ் ஆகியோரும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.

    இதுகுறித்த உத்தரவை தமிழக கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டார். 

    அதன்படி, திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

    டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபி ஆக நியமிக்கப்ட்டுள்ளார். 

    சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமிக்கப்ட்டுள்ளார். 

    சென்னை குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி  ஆயுஷ்மான் திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரி ( ஏடிஜிபி) ஆக  நியமிக்கப்பட்டுள்ளார். 

      

    • அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான்.
    • அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விடுதலை நாளையொட்டி மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராமங்கள் அனைத்தும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாகத் திகழ வேண்டும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்குவதற்கான மகத்தான ஆயுதம் தான் கிராம சபைக் கூட்டங்கள் ஆகும். நமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அவற்றை நாம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான். அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கிராமசபைக் கூட்டங்களில் நாம் வெற்றிகரமாக தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

    இந்த ஆக்கப்பூர்வமான பணி நடப்பாண்டிலும் தொடர வேண்டும். அதன்படி வரும் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்கொண்டு சமூகநீதியைப் பாதுகாக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையாகவும், சமூகப் பின் தங்கிய நிலையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கவும் வசதியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க.வினர் உள்ளிட்ட பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று 75 ஆண்டுகளாக முழங்கி வரும் திமுகவுக்கு உண்மையாகவே ஜனநாயகத்தில் அக்கறை இருந்தால், கிராம சபைகளுக்கு உள்ள உரிமைகளை மதித்தும், அவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் கொடுக்கும் வகையிலும் விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • கிளாம்பாக்கத்தில் இருந்து வியாழக்கிழமை 570 பேருந்துகள் இயக்கம்.
    • புதன் மற்றும் வெள்ளிக்கிழமை தலா 375 பேருந்துகள் இயக்கம்.

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    15/08/2025 அன்று சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13/08/2025 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/08/2025 (புதன்கிழமை) அன்று 375 பேருந்துகளும் 14/08/2025 (வியாழக்கிழமை) அன்று 570 பேருந்துகளும், 15/08/2025 (வெள்ளிக் கிழமை) மற்றும் 16/08/2025 (சனிக்கிழமை) 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14/08/2025 வியாழக்கிழமை அன்று 100 பேருந்துகளும் மற்றும் 15/08/2025 வெள்ளிக் கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 14/08/2025 மற்றும் 15/08/2025 ஆகிய இரு நாட்களுக்கு 24 சிறப்பு பேருத்துகளும் இயக்கப்படுகிறது.

    மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருத்தும் 17/08/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 715 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் புதன் கிழமை அன்று 8,145 பயணிகளும், வியாழக்கிழமை அன்று 26,534 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 5,004 பயணிகளும், சனிக்கிழமை 3,678 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 23,266 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பாகவே தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மேயர் பிரியாவிடம் இருந்து தகவல் மட்டும் தான் வருது தீர்வு வரவில்லை.
    • பணி நிரந்தரம் செய்வீர்கள் என்று நீங்க கொடுத்த வாக்குறுதியைதான் அவர்கள் கேட்கிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 11 -வது நாளை எட்டி உள்ளது.

    இந்த நிலையில், சென்னையில் போராட்டம் நடத்தி வரும் மாநகராட்சிப் பணியாளர்களை நடிகை சனம் ஷெட்டி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:-

    கொரோனா நாட்களில் நாம் உயிர் பயத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு நமக்காக வந்தவங்க. ஊர் ஊரா.. தெரு தெருவா.. சுத்தம் செய்தவங்க. என்னுடனைய நண்பர்கள்.

    மேயர் பிரியா வாராங்க செய்தி சொல்லிவிட்டு போராங்க. அவரிடம் இருந்து தகவல் மட்டும்தான் வருது தீர்வு வரவில்லை. எத்தனை நாள் தான் இவர்கள் இப்படி இருக்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை பறித்து விட்டீர்கள்.

    பணி நிரந்தரம் செய்வீர்கள் என்று நீங்க கொடுத்த வாக்குறுதியைதான் அவங்க கேட்கிறார்கள். உங்க வாக்குறுதியை நீங்க காப்பற்றவில்லை என்றால், இனிமேல் முதலமைச்சரிடம் எதை எதிர்பார்க்க முடியும்.

    மக்களுக்காக தான் அரசாங்கம். மக்களுக்காக ஒரு பாலிசி மாற்ற முடியவில்லை என்றால் அரசாங்கம் இருந்து என்ன இல்லாமல் இருந்தும் என்ன. உங்க வாக்குறுதியை தான் கேக்குறாங்க. இனிமேல் ஓட்டு கேட்டு எப்படி வருவீங்க.

    என ஆவேசத்துடன் கூறினார்.

    • தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது.
    • தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை.

    தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது.

    தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை நான் நேரில் சென்று சந்திக்கலாம் என்றிருந்த நேரத்தில் தான் அவர்களாகவே என்னைச் சந்திக்க விரும்புவதை அறிந்தேன். மேலும் நான் நேரில் சென்று அவர்களைச் சந்தித்தால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக் கருதிய தூய்மைப் பணியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்திற்கே வந்து என்னைச் சந்தித்தனர்.

    அப்போது தங்கள் நிலை குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள், கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல், மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற ஒரு அரசாக இந்த வெற்று விளம்பர மாடல் அரசு இருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

    பலர் செய்யத் தயங்கக்கூடிய வேலைகளைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரவணைத்துச் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது. நோய்த்தொற்றுகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு செயல்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு, கொடுத்த வாக்குறுதியின்படி செவி சாய்ப்பதே அரசின் கடமை.

    எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த வெற்று விளம்பர மாடல் திமுக, தற்போது வழக்கம் போல வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, நடுத்தெருவில் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    பல்லாண்டுக் காலமாகச் சென்னை மாநகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கடந்த 19.01.2021 அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தின்படியும், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 153இன் படியும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

    தங்கள் உடல்நலம் குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் எளியவர்களான தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும்.

    • வழித்தடம் 4-ன் நீட்டிப்பு- கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை.
    • தாம்பரம் முதல் வேளச்சேரி வரை.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1. வழித்தடம் 4-ன் நீட்டிப்பு- கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை.

    இந்த நீட்டிப்பு, மெரினா கடற்கரை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான மெட்ரோ இணைப்பை மேம்படுத்துவதற்கு தோராயமாக சுமார் 7 கிலோ மீட்டர் நீளத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம், தினசரி பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளும் எளிதில் அணுகுவதற்கும், நகரப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.

    2. தாம்பரம் முதல் வேளச்சேரி வரை

    சுமார் 21 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம் தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய புறநகர்ப் பகுதிகளை சென்னை மெட்ரோ ரெயில் வழித்தடம்-1-இல் உள்ள கிண்டி மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த வழித்தடம் தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி மற்றும் கிண்டி பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வசதியுடன் உருவாக்கப்படும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை M/s Systra MVA Consulting India Pvt நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

    கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை வழித்தடம் 4-ன் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிபதற்கு ரூ. 38,20,000 மற்றும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரை ரூ.96,19,000/- மதிப்பாகும். இந்த விரிவான திட்ட அறிக்கைகள் சமர்பிப்பதற்கான காலம் 120 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் Systra MVA Consulting India Pvt நிறுவனத்தின் உயர் துணைத் தலைவர் பர்வீன் குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த திட்ட அறிக்கைகள் வழித்தட பாதை அமையும் இடங்கள், பயணிகளின் எண்ணிக்கை, பல்வேறு போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்படும். இந்த அறிக்கை தகவலறிந்த முடிவெடுப்பதற்கு மற்றும் எதிர்கால திட்ட செயலாக்கத்திற்கும் அடித்தளமாக அமையும்.

    சென்னையின் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகள் மற்றும் நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு உகந்த, விரிவான மற்றும் எதிர்கால நோக்குடன் பொது போக்குவரத்து பயன்பாட்டை உருவாக்குவதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முனைப்புடன் செயல்படுகிறது.

    • நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
    • இந்த தேர்வு எழுத இன்று முதல் செப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    இந்த தேர்வு எழுத இன்று முதல் செப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    ×