என் மலர்
சென்னை
- தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.
- தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பரவலாக மழை பெய்யக்கூடும்.
சென்னை:
மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக உருவாகியது.
இதுகுறித்து சென்னை வானிலை மண்டல ஆய்வு மைய அதிகாரி செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-
நேற்று மலேசியா ஜலசந்திர் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த மண்டலம் நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அதன் பின்னர் இன்று காலையில் அது புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு 'சென்யார்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் இந்தோனேசியா பகுதிகளை கடந்து அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.
மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலை கொண்டு உள்ளது.
இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக தீவிரமடையும் என்பதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை தென் மாவட்டத்திலும், டெல்டா மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
30-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 8 செ.மீ. ராமேஸ்வரம் 6 செ.மீ. மண்டபம் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமேஸ்வரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. கோவில், சுற்றுலா தளங்கள் வெறிச்சோடியது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் சேர்ந்தார்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் கோலோச்சி வந்த செங்கோட்டையன் இந்த முடிவு எடுத்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கினார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்குள் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கெடு விதித்தார்.
இது அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் உடனடியாக பறிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஆதரவாளர்களை திரட்டி தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்த செங்கோட்டையன் அ.தி.மு.க. இணைப்புக்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறி வந்தார். ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய செங்கோட்டையன், சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார். செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற தனது கோரிக்கைக்கு யாரும் செவி சாய்க்காத நிலையில் செங்கோட்டையன் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் கைகோர்க்க உள்ளார்.
இது தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் ஏற்கனவே செங்கோட்டையனை சந்தித்து பேசி அவர் த.வெ.க.வில் சேருவதை உறுதி செய்துள்ளனர். இதற்காக சென்னை வந்துள்ள அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறார்.
கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நாளை செங்கோட்டையன் இணையும் விழா நடைபெறுகிறது.
அந்த கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொள்கிறார். அவருடன் ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
த.வெ.க.வில் இணைய உள்ள செங்கோட்டையனுக்கு அவரது அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது. புதிதாக பொதுச்செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் செங்கோட்டையன் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தலைமை செயலகத்துக்கு சென்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் சேர்ந்தார்.
இதையடுத்து தனது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். அதே போன்றுதான் செங்கோட்டையனும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் கோலோச்சி வந்த செங்கோட்டையன் எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது.
- சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர்.
சென்னை:
சென்னை அமைந்தகரையில் 'ஆருத்ரா கோல்டு' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைந்தகரை, வில்லிவாக்கம், அண்ணாநகர், வேலூர், திருவண்ணாமலை உள்பட 26 இடங்களில் கடந்த 2022-ம் ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஆவணங்கள், ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.1 லட்சம் பணம் செலுத்தினால் வட்டியாக ரூ.36 ஆயிரம் தருவோம் என ஆசை காட்டப்பட்டது தெரிய வந்தது. இப்படி ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து ஆருத்ரா நிறுவனம் சட்ட விரோத பணபரிமாற்ற விவகாரத்தில் சிக்கியுள்ளது. இது தொடர்பாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 15 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, வேலூர், காஞ்சிபுரம் உள்பட 15 இடங்களில் நடைபெறும் இந்த சோதனையின் போது சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதன் முடிவிலேயே முழுமையான தகவல்கள் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- 'இந்திய மக்களாகிய நாம்' என்று தொடங்கும் அதன் முதல் வரி நமது ஒற்றுமை, அனைவருக்குமான பிரதிநிதித்துவம், கூட்டுறவு வாழ்க்கை போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.
- நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பொன்விதிகள் இந்தியத் திருநாட்டின் சிறப்பை பிரதிபலிக்கிறது.
இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை ஒட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய குடிமக்கள் சாதி, மதம், இனம், பாலினம் போன்ற எந்தவித பாகுபாடுகளுக்கும் இடமில்லாமல் 'அனைவரும் சமம்' என்று பிரகடனம் செய்த ஆவணம் அரசியலமைப்பு சட்டம். 'இந்திய மக்களாகிய நாம்' என்று தொடங்கும் அதன் முதல் வரி நமது ஒற்றுமை, அனைவருக்குமான பிரதிநிதித்துவம், கூட்டுறவு வாழ்க்கை போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பொன்விதிகள் இந்தியத் திருநாட்டின் சிறப்பை பிரதிபலிக்கிறது.
இந்திய ஜனநாயகத்தின் ஆவணமாகவும், இந்தியர்களுடைய மதச்சார்பின்மையின் அடையாளமாகவும் உள்ள அரசியலமைப்பு சட்டத்தைக் காப்போம் என்று 'அரசியலமைப்பு தினமான' இன்று உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல.
- ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் செய்வோம்.
சென்னை:
அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல. அதன் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இந்த அரசியலமைப்பு தினத்தில், பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் ஒவ்வொரு சக்தியையும் எதிர்க்கும் நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் செய்வோம்.
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பதே அரசமைப்புக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என கூறியுள்ளார்.
- நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான சூழலே கடந்த ஒரு வாரமாக நீடிக்கிறது. கடந்த 21-ந் தேதி விலை குறைந்திருந்த நிலையில், 22-ந் தேதி விலை அதிகரித்து, நேற்று முன்தினம் குறைந்து, நேற்று மீண்டும் உயர்ந்து காணப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 520-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ரூ.93 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 176 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,760
24-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,160
23-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
22-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
21-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-11-2025- ஒரு கிராம் ரூ.174
24-11-2025- ஒரு கிராம் ரூ.171
23-11-2025- ஒரு கிராம் ரூ.172
22-11-2025- ஒரு கிராம் ரூ.172
21-11-2025- ஒரு கிராம் ரூ.169
- மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
- இன்று காலை 5.30 மணியளவில் சென்யார் புயல் உருவானது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
* சென்யார் புயல் இன்று காலை 5.30 மணியளவில் உருவானது.
* அடுத்த 24 மணி நேரத்தில் புயலின் தீவிரத்தை தக்கவைத்து பின்னர் படிப்படியாக வலுவிழக்கும்.
* சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அடுத்த மாதம் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
- 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும்.
சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.
கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்துகிறதோ, அப்போதெல்லாம் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அமைச்சர்கள் கொண்ட குழு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அதேபோல் மார்ச் 13-ந்தேதி முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கடந்த 18-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்பது குறித்து ஆலோசிக்க ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.பாஸ்கரன், சே.பிரபாகரன், இலா.தியோடர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த கூட்டத்தின் முடிவில், அடுத்தகட்ட போராட்டமாக அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோ சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டார அளவில் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- அரக்கோணத்தில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) இரவு 11.30 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 2.30 மணி வரையில் (3 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* மூர்மார்க்கெட்டில் (சென்னை சென்ட்ரல்) இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66009), திருவலங்காடு-அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.
- பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்றார்.
சென்னை:
கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திராவிடம் என்பது கற்பனை எனக்கூறிய ஆளுநருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜகவின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
திராவிடம் என்ற வார்த்தை தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ளது என்பது ஆளுநருக்கு தெரியாதா?
எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.
தமிழ்நாட்டில் இருக்கும் பீகாரிகள் அச்சுறுத்தப்படுவதாக கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.
தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது என்ற கருத்து ஏற்கக் கூடியதல்ல என தெரிவித்தார்.
- அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக 82 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
- தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றி மாவட்ட செயலாளர்கள் விளக்கி கூறினார்கள்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் அ.தி.மு.க.வினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் அந்த பணிகளில் எப்படி கவனமாக செயல்பட வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகளை வழங்குவதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக 82 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வினர் அனைவரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் முறைகேடாக பதிவாகி உள்ள ஓட்டுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் மாவட்டச் செயலாளர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தங்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த படியே மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றியும் அவர்கள் விளக்கி கூறினார்கள்.






