என் மலர்tooltip icon

    சென்னை

    • பிளவுபடுத்தியே பழக்கப்பட்ட பாஜகவினர் பிளவு என்று தான் பேசுவார்கள்.
    • ஒரிசா, பீகார், மலேசியா என்று ஊருக்கு ஏற்ப பாஜகவினர் பேசுவார்கள்.

    ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டில் ஒத்துவராது என முதலமைச்சர் அளித்த பேட்டி தொடர்பான கேள்விக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.

    முதல்வரின் கருத்தால் திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பிரச்சனை ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பார்வை உள்ளது, கட்சியின் தலைவர் என்ற முறையில் கருத்து கூறியுள்ளார் முதல்வர்.

    திமுக- காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதை முதலமைச்சர் கூறியுள்ளார், இதனால், கூட்டணிக்குள் பிரச்சனை இருக்காது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைமை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள். பிளவுபடுத்தியே பழக்கப்பட்ட பாஜகவினர் பிளவு என்று தான் பேசுவார்கள். ஒரிசா, பீகார், மலேசியா என்று ஊருக்கு ஏற்ப பாஜகவினர் பேசுவார்கள்.

    காங்கிரசாரிடம் எந்த கலக்கமும் இல்லை, நாங்கள் இந்த மண்ணை நேசிப்பவர்கள், விரைவில் முதல்வரை சந்திப்போம்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெகு விரைவில் சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணிக்கம் தாகூர் தொடர்பான கேள்விக்கு எங்களுக்குள் உள்ள பிரச்சனையை நாங்கள் பேசி தீர்வு காண்போம் என பதில் அளித்தார்.

    • ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும்.
    • ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் ரூ.15,900 – ரூ.50,400 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையை மாற்றி தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை தொடர் விடுப்பு எடுத்து, சென்னையில் காத்திருப்புப் போராட்டமும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்திய ஆட்சியாளர்கள், அவர்களும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

    ஆனால், அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாததை உணர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கடந்த 4-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தைத் தொடரும் நிலையில், அவர்களிடம் அரசு பேசாமல், 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் பணி நீக்க உத்தரவுகள் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் பிறப்பிக்கப்பட்டு மாநில அளவில் ரகசியமாக பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் 600-க்கும் மேற்பட்டோரை ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.

    ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும். இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களாக இருந்துவரும் நிலையில், அக்கிராமங்களின் ஊராட்சி செயலாளராக இருந்துவரும் இவர்களே அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக அடக்குமுறைகள் மூலம் பணியவைக்க முயல்வது மிகத்தவறு.

    எனவே அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    • எனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்படுகிறது.

    சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தல் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வருகின்ற சட்டசபை தேர்தல் 2026 சிறப்பாக எதிர்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியானது பெருவாரியாக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைத்திடும் வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்ற தேர்தலில், நமது கட்சியின் தேர்தல் பணிகளை கடந்த காலங்களைப் போல சிறப்பாக வழிநடத்திட, எனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்படுகிறது.

    மேலாண்மைக் குழு அமைப்பாளர் - பொன். இராதாகிருஷ்ணன் (தேசிய செயற்குழு உறுப்பினர்)

    இணை அமைப்பாளர் - எஸ்.ஆர்.சேகர் (மாநில பொருளாளர்)

    இணை அமைப்பாளர் - ஆர்.என். ஜெயப்பிரகாஷ் (மாநில துணைத் தலைவர்)

    இணை அமைப்பாளர் - மா. வெங்கடேசன் (மாநில துணைத் தலைவர்)

    இணை அமைப்பாளர் - மாலா செல்வகுமார் (மாநில பொதுச் செயலாளர், ஓபிசி அணி)

    இணை அமைப்பாளர் - எஸ்.ஆர். ராமப்பிரியன் (கட்சி உறுப்பினர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கூட்டணிக் கட்சிகளை வாக்கு வங்கிகளாக தி.மு.க. பயன்படுத்தி வருகிறது.
    • கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார்.

    சென்னை சோழிங்கநல்லூரில் த.வெ.க. தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என தி.மு.க. அறிவிக்குமா?

    * கூட்டணிக் கட்சிகளை வாக்கு வங்கிகளாக தி.மு.க. பயன்படுத்தி வருகிறது.

    * முதலமைச்சர் நாற்காலியில் ஒரு கால் மட்டுமே தி.மு.க.வுடையது.

    * கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
    • அரசியலுக்கு அப்பாற்பட்டு ராகுல்காந்தியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் சகோதரர்களாக பழகுகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் தலைமை பலமுறை சந்தித்து பேசியுள்ளது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைத்த பிறகு பேசலாம் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த குழுவை உடனே அமைக்குமாறு காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியது. ஆனால் தி.மு.க.வில் இன்னும் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைமை வற்புறுத்தி 70 நாட்கள் ஆகியும் குழு அமைக்கப்படவில்லை. இது காங்கிரஸ் தலைவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக டெல்லியில் நேற்று பேட்டி அளித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "நாங்கள் தி.மு.க.வில் பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர்கள் என்று 70 நாட்களாக காத்திருக்கிறோம். அவர்கள் குழு அமைக்காதது வேதனை அளிக்கிறது" என்று கூறினார்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்லப்பெருந்தகை கூறுகையில், "ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தொகுதி பங்கீட்டு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்துவது காங்கிரசுக்கு தர்மசங்கடமாக உள்ளது. ஏற்கனவே பீகார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களில் இந்த தர்ம சங்கடத்தை அனுபவித்து உள்ளோம்.

    எனவேதான் தமிழ்நாட்டில் பேச்சுவார்த்தை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று தி.மு.க.விடம் வலியுறுத்தினோம். குழு அமைப்பார்கள் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால் குழு அமைக்காதது வேதனை அளிக்கிறது.

    காங்கிரஸ் கட்சி தலைமை என்னிடம் சில கருத்துக்களை சொல்லி உள்ளது. அந்த கருத்துக்களை முதலமைச்சரை பார்த்து தெரிவிக்க இருக்கிறேன்" என்று கூறினார்.

    அது என்ன கருத்துக்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, "அதுபற்றி வெளியே சொல்ல முடியாது" என்றார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அளித்துள்ள பேட்டியில், "தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்துதான் சந்திக்கும். ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது. அது எங்களுக்கும் தெரியும். காங்கிரசுக்கும் தெரியும். சட்டசபையில் முறிவை ஏற்படுத்த முடியுமா? என்பதற்காக சிலர் சதி செய்கிறார்கள். அரசியலை தாண்டி ராகுல் காந்தி எனது சகோதரர் போன்றவர்" என்று கூறி உள்ளார்.

    இதன் மூலம் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து ஆட்சியில் பங்கு என்கிற விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று கேள்விக்குறி எழுந்து உள்ளது.

    இதற்கிடையே ஆட்சியில் பங்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்து உள்ளார்.

    முதலமைச்சரின் கருத்தால் தி.மு.க. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பிரச்சனை ஏற்படாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், எதிர்பார்ப்பு இருக்கும். அதை கூறுவது ஜனநாயகம். கட்சியின் தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து கூறி உள்ளார்.

    அவர் சொன்னது அவரது கருத்து. தி.மு.க.வின் கருத்து. தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதை முதலமைச்சர் கூறி உள்ளார். இதனால் கூட்டணிக்குள் பிரச்சனை இருக்காது.

    ஆட்சியில் பங்கு என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும். தமிழ்நாட்டு நலனுக்கும், 2 கட்சிகளுக்கும் எது நலனோ அதை கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் கலந்து பேசி முடிவை எடுப்பார்கள்.

    அரசியலுக்கு அப்பாற்பட்டு ராகுல்காந்தியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் சகோதரர்களாக பழகுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டுள்ளன.
    • தற்போது 4 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கட்சியை பலப்படுத்துவது, கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக வருகின்றன.

    அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்டங்கள் அதிகரிக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 128 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, கூடுதலாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 4 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&e=2&st=75kfq593&dl=0

    புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.



    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
    • போராட்டம் நடத்தியவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்.

    சென்னை:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    இதில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டம் நடத்தியவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது ஊரக உள்ளாட்சி பணியாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

    அவர்களுடன் என்னையும் கைது செய்யுங்கள் என்றவாறு சீமானும் வேனில் ஏறினார். அவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சீமான் விடுவிக்கப்பட்டார். சீமான் கைது செய்யப்பட்டால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்கள் முடிவு செய்வார்கள் .

    கூட்டணி ஆட்சியா்?

    அல்லது

    ஒரு கட்சி ஆட்சியா என்பதை .

    2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம்

    தமிழ்நாடு காங்கிரஸ்-ன் தவறு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டின் வெற்றி பயணத்தை 2.0 ஆட்சியிலும் தொடர்வோம்.
    • சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்.

    சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தலில் 12 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்துள்ளது.

    கருத்துக்கணிப்பில் எங்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் 12 சதவீதம் தான். தமிழக மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்று எடுத்து கணக்கெடுப்பில் திமுக கூட்டணி வெல்லும் என தெரியவந்துள்ளது.

    திமுக அரசின் சாதனை திட்டங்களால் 65-க்கும் மேற்பட்ட விருதுகள் தமிழ்நாட்டை தேடி வந்துள்ளது.

    தமிழ்நாட்டிற்கும் திமுக அரசிற்கும் குடைச்சல் கொடுப்பதில் மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

    திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்தாலும் நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம். தொடர்ந்து உழைப்போம்.

    இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை கூட திமுக ஆட்சியில் அடைந்தோம்.

    தலைசிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டின் 33 கல்லூரிகள் இருக்கின்றன.

    தமிழ்நாட்டின் வெற்றி பயணத்தை 2.0 ஆட்சியிலும் தொடர்வோம்.

    தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது. திமுக-காங்கிரஸ் இணைந்து போட்டியிடும். அரசியலையும் தாண்டி என்னுடைய சகோதரரைப் போன்றவர் ராகுல்காந்தி.

    சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேசிவரும் நிலையில் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வரும் 25-ம் தேதிக்குள் 10 முதல்வர் படைப்பகங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தவர்.

    போரூர்:

    சென்னை அசோக் நகரில் மேம்படுத்தப்பட்டு வரும் முதல்வர் படைப்பகத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி சார்பில் 10 இடங்களிலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 25 இடங்களிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் 25-ம் தேதிக்குள் 10 முதல்வர் படைப்பகங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது. சென்னை அசோக் நகரில் ரூ.15 கோடி அளவில் முதல்வர் படைப்பகம் உருவாக்கப்பட்டு வருகிறது. வருகிற 25-ந்தேதிக்குள் இது மாணவர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.

    கேள்வி:- இடைக்கால பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாமா?

    பதில்:- எதிர்க்கட்சிகள் அரண்டு போகும் அளவிற்கு நிறைய அறிவிப்புகள் இடம்பெறும்.

    கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும், தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி இல்லை என்றும் டாக்டர் அன்புமணி கூறியுள்ளாரே?

    பதில்:- உடைந்த கட்சியின் ஒரு பாகமாக இருக்கின்ற அன்புமணி பேசுவதற்கெல்லாம் பதில் சொன்னால் சரியாக இருக்காது.

    கேள்வி:- 7.5 சதவீதம் என்பது நாங்கள் கொண்டு வந்தது என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே?

    பதில்:- எடப்பாடி பழனிசாமி அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தவர். அவர் வாயில் இருந்து உண்மையை தவிர வேறு எதுவுமே வராது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் எடப்பாடி பழனிசாமி. அவருடைய கட்சியில் இருந்து இப்போது வெளியேறி இருக்கின்ற செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் போன்றவர்களிடம் கேட்டால் அவரது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்.

    கேள்வி:- த.வெ.க. சார்பில் கருத்து கேட்க சென்றவர்கள் தாக்கப்பட்டு உள்ளார்களே?

    பதில்:- அங்கு த.வெ.க.வினருக்கும், பொதுமக்களுக்கும் தான் சண்டை. பொதுமக்கள் தாக்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உண்மை நிலையை களத்துக்கு சென்று விசாரியுங்கள். இது பனையூரில் நடப்பது போன்ற ஒரு மோதல் தான். உண்மை நிலையை விசாரித்து மக்களுக்கு சொல்லுங்கள். இதுபோன்ற செயல்களை வைத்து தங்கள் இயக்கத்துக்கு கலர் மெருகேற்ற துடிக்கின்றார்கள். அதற்கு நாமும் சேர்ந்து விளம்பரம் கொடுக்க தயாராக இல்லை.

    கேள்வி:- சட்டசபை தேர்தலில் சென்னையில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

    பதில்:- சென்னையில் தி.மு.க.வின் இரு வண்ண கொடிதான் பட்டொளி வீசி பறக்கும். சூரியன் உதிக்கின்ற இடம் கிழக்கு. உதயசூரியனை சின்னமாக கொண்டிருக்கின்ற இந்த இயக்கம்தான் சுடரொளி வீசி பறக்கும். செயின்ட் ஜார்ஜ் கோட்டை எந்நாளும் எங்கள் முதல்வர் வசம் இருக்கும். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடி யாது.

    கேள்வி:- சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தான் வெற்றி பெறுமா?

    பதில்:- 22 தொகுதிகளிலும் முதலமைச்சரின் வெற்றிக்கொடிதான் பறக்கும்.

    கேள்வி:- பா.ம.க.வின் பிரிவினைக்கு காரணம் தி.மு.க. தான் என்று கூறுகிறார்களே?

    பதில்:- அன்புமணியால் தனது அப்பாவையே சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு கட்சி வேறு நடத்திக்கொண்டிருக்கிறார். டாக்டர் ராமதாஸ் கதறிக்கொண்டு இருக்கிறார். டாக்டர் ராமதாசை பார்ப்பதற்கே பாவமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு கொடுத்தார்.
    • தாய் மற்றும் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை பெரம்பூரில் விஷம் கலந்த கேக்கை சாப்பிட்டு 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சகாயம் செபஸ்டின் என்பவரின் மனைவி பியூலா புற்றுநோயால் பாதிப்பட்டார். இதன் காரணமாக மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு கொடுத்தார்.

    கேக்கை சாப்பிட்டு 2 பேர் உயிரிழந்தனர். தாய் மற்றும் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி பெரம்பூர் செம்பியம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையில் 2-வது நாளாக இன்று மாற்றம் இல்லை.

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    கடந்த 9-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் 2-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,640

    09-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

    08-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    07-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    06-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-02-2026- ஒரு கிராம் ரூ.300

    09-02-2026- ஒரு கிராம் ரூ.300

    08-02-2026- ஒரு கிராம் ரூ.285

    07-02-2026- ஒரு கிராம் ரூ.285

    06-02-2026- ஒரு கிராம் ரூ.280

    ×