என் மலர்tooltip icon

    சென்னை

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    சென்னையில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை தாறுமாறாக ஏறியது. வரலாறு காணாத வகையில் கடந்த 9 மாதங்களில் சவரனுக்கு ரூ.21 ஆயிரம் அதிகரித்து, கடந்த 6-ந்தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

    தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக்கூடும் என்று வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 430-ம், சவரன் ரூ.83 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 149 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440

    21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    19-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,840

    18-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-09-2025- ஒரு கிராம் ரூ.148

    21-09-2025- ஒரு கிராம் ரூ.145

    20-09-2025- ஒரு கிராம் ரூ.145

    19-09-2025- ஒரு கிராம் ரூ.143

    18-09-2025- ஒரு கிராம் ரூ.141

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • பால விநாயகர் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பச்சையப்பன் தெரு, காமராஜ் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (24.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    செம்பியம்: உமா நகர், முத்தமிழ் நகர் 1 முதல் 8வது பிளாக், எஸ்பிஓஏ டீச்சர்ஸ் காலனி, செக்ரட்ரியேட் தெரு, அக்பர் நகர், மாதவன் நகர், பிஆர்எச் சாலை, பரிமேகம் நகர், சுதா நகர், விக்னேஷ் நகர், விநாயகர் நகர், பால விநாயகர் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பச்சையப்பன் தெரு, காமராஜ் தெரு, ரெட்ஹில்ஸ் சாலை, மாதா தெரு, பஜனை கோவில் தெரு, பள்ளி சாலை, கிரிஜா நகர், எம்என் நகர், சன்னதி தெரு, சிட்டிபாபு நகர், கக்கன்ஜி காலனி, ராஜா தெரு, கபிலர் தெரு, எம்பிஎம் தெரு, சத்தியவாணி முத்து நகர், கருணாநிதி சாலை, நாகை அம்மையார் தெரு, ராஜாஜி தெரு.

    கோயம்பேடு மார்க்கெட்: சீனிவாசநகர், பக்தவச்சலம்தெரு, சேமாத்தம்மன் நகர், இடர்.ரோடு, மேட்டுகுளம், நியூகாலனி, திருவீதி அம்மன்கோவில் தெரு, சின்மயாநகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஷ்வரி நகர். 

    • தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

    அதன்படி, வருகிற 28-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • இரு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
    • போலியாக புலம்பும் சிலர் இனியாவது உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும்.

    தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த 2 கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க ரூ.30,000 கோடி முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெிரவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொடர்ந்து தமிழகத்தில் முதலீடு செய்யும் பிரதமர் மோடி அரசு!

    தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதற்காக 30,000 கோடி ரூபாயை CSL Cochin

    மற்றும் Mazagaon Dock ஆகிய இரு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    முத்துநகராம் தூத்துக்குடிக்கு வருகைபுரிந்து ₹452 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தைப் புதுப்பித்து ₹4,800 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடித்தளமிட்டு இருமாதங்களுக்குள்ளேயே ₹30,000 கோடி மதிப்பில் மேலும் முதலீடு செய்ய முன்வந்துள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்வதில்லை என்று பொழுது புலர்ந்ததும் போலியாக புலம்பும் சிலர் இனியாவது உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆவின் விற்பனை மூலம் வருகின்ற வருவாய் 90% க்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகிறது.
    • பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலன் சார்ந்த பால் உபபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாகவும், பண்டிகை கால சலுகையாகவும் ஆவின் நெய், பனீர் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஆவினின் அனைத்து வகை நெய்யும் லிட்டருக்கு ரூ.40 வரை குறைத்து சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தனியார் நிறுவனத்தைவிட ரூ.50 வரை குறைவாக 500 கிராம் வெண்ணெய் ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    200 கிராம் பனீர் சலுகை விலையில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆவின் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி வரி குறைப்பின் காரணமாகவும் பண்டிகை கால சலுகையாகவும், ஒரு லிட்டர் ஜார் நெய் ரூ. 690/- லிருந்து ரூ.650/-குறைக்கப்பட்டுள்ளது.

    ரூ.120/-க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பனீர் ரூ.110/-க்கும், ரூ.300/- க்கு விற்பனை செய்யப்பட்ட 1/ 2 கிலோ பனீர் ரூ.275/- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய அளவில் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களை காட்டிலும் ஆவின் நிறுவளம் பொதுமக்கள் நலன் கருதி மிகவும் குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் உப பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

    மேலும், ஆவின் விற்பனை மூலம் வருகின்ற வருவாய் 90% க்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகிறது.

    மேலும் அவ்வப்பொழுது சந்தை நிலவரத்திற்க்கு ஏற்றவாறு இதர கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் போல் பால் மற்றும் பால் பொருட்களின் விNைDI மாற்றியமைக்காமல், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலன் சார்ந்த பால் உபபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனம் பொதுமக்கள் நலன் கருதி குறைந்த விலையில் uns மற்றும் பால் உப பொருட்களை கர்வோருக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசால் கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3/-குறைந்து ஆணையிட்டது. இதன் மூலம் தினமும் சுமார் 1.5 கோடி நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர்.இதுவரை பொதுமக்கள்கு 1073/- கோடியை சேமித்துள்ளனர்.

    2023 ஆம்ஆண்டுமாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள். பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு ஊக்கத்தொகையாக லிட்டர் ஒன்றுக்கு ரூபாம் 3 வழக உத்தரவிட்டுள்ளார்.

    இதன் மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுகின்றனர். 18.12.2023 முதல் இதுவரை ரூ 635 கோடி தமிழ்நாடு அரசால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசால் இணையம், ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களின் நிதி கட்டமைப்பை வலுபடுத்திட சுமார் 675 கோடி ரூபாயை பங்கு மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.

    தற்சமயம் ஒன்றிய அரசாங் GST வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பால் மற்றும் பால் உபபொருட்களை விற்பனை செய்வதாலும் மற்றும் பால் தரத்திற்கேற்ப உரிய விலையில் பால் கொள்முதல் செய்வதாலும் ஆவின் நிறுவனம் நிதி சுமையை கவனத்தில் கொண்டு சந்தையில் குறைவான விலையில் தாந்துடன் அனைத்து பால் பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது.

    தற்பொழுது ஜிஎஸ்டி (GST) சதவிகிதகுறைப்பின் காரணமாகவும் மற்றும் பண்டிகை கால சலுகையாகவும் ஆவினின் அனைத்து வகையான நெய்களுக்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 40/- ரூபாய் விலை குறைத்து பொது மக்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

    மேலும் வெண்ணெய் விலையானது இந்தியாவிலுள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை விட ரூ.10/- முதல் ரூ.50/- வரை குறைவான விலையில் (அரை கிலோ வெண்ணெய் ரூபாய் 275/- ) ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

    மேலும் ஆவின் 200 கிராம் பனீர் ரூபாய் 110/- என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • எனது குழந்தைக்காக எந்த நிலைக்கும் சென்றும் போராடுவேன். இது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை.
    • இரண்டு வருடம் வாழ்ந்து இருக்கிறோம். அது பற்றி தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன்.

    மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.

    காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய புகார் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்த துணை ஆணையர் வனிதா இன்று ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தன்னுடைய இரண்டு வருட வாழ்க்கை குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கமிஷன் அலுவலகத்தில் கொடுத்த புகாரை இங்கே அனுப்பி வைத்துள்ளனர். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். முதல் திருமணம் முடிந்த நிலையில் என்னை திருமணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அதனால்தான் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என குற்றம்சாட்டுகிறேன். புகாரை வாபஸ் பெற வேண்டும் என யாரும் என்னை மிரட்டவில்லை. அது தொடர்பாக அணுகவில்லை. எனது குழந்தைக்கு மிரட்டல் இருப்பதாக கேள்ளவிப்பட்டேன். அதற்கான பாதுகாப்பை எடுப்பார்கள்.

    எனது குழந்தைக்காக எந்த நிலைக்கும் சென்றும் போராடுவேன். இது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை. அவர் வெளியே ஜாலியாக சுற்றலாம். நான் போராடுவேன். புகார் நான் கொடுத்துள்ளதால் என்னை முதலில் அழைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், மாதம்பட்டி ரங்கராஜை அழைத்து விசாரணை நடத்துவார்கள். கண்டிப்பாக அவர் மீது எப்ஐஆர் போடுவார்கள். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். நடவடிக்கை எடுக்கப்படும்.

    இரண்டு வருடம் வாழ்ந்து இருக்கிறோம். அது பற்றி தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன். இதனால் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பாசிட்டிவ் ஆன ரிப்ளை கொடுத்துள்ளனர். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். என்ன மாதிரியான ஆதாரங்கள் கொடுத்துள்ளேன் என்பதை தற்போது கூற இயலாது.

    இவ்வாறு ஜாய் கிரிசில்டா தெரிவித்தார்.

    • மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
    • இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.

    சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழக அரசு முமொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் கல்வி நிதி வழங்க முடியும்" என்று பேசினார்.

    அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்," தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம்.

    இந்த இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்" என்றார்.

    • 1,231 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கியதை முதலமைச்சர் குறிப்பிட்டு பதிவு.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் தேர்ச்சி பெற்ற 1,231 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கியதை முதலமைச்சர் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்று, மக்களுக்குச் சேவையாற்றவுள்ள 1,231 கிராம சுகாதாரச் செவிலியர்களுடன்!

    மேலும் 2,417 காலிப் பணியிடங்களும் விரைவில் #MRB மூலம் நிரப்பப்படும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும்.
    • வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒலிபரப்பாகி வருகின்றன. ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை.

    ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆவின் நிறுவனம், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது.

    எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்சம் விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12% ஜி.எஸ்.டி வரி ரூ.75 ஆகும். ஆவின் நெய் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.31 மட்டும் தான். அதன்படி ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.656-க்கும் மட்டுமே விற்கப்பட வேண்டும். அமுல் , நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில் தான் விலைக்குறைப்பு செய்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூ.625-லிருந்து ரூ.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூ.31 ஜி.எஸ்.டி விலை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூ.700 நிர்ணயித்துள்ளது.

    அதே நேரத்தில் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாளில் விலையை குறைத்ததாகக் கணக்குக் காட்டும் நோக்குடன் இன்று முதல் நவம்பர் 30 வரை ஒரு கிலோ நெய்க்கு ரூ.40 தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடியும் கூட ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றுக்கு குறைந்த அளவில் தரப்படுகிறதே தவிர, பிற பால் பொருள்களுக்கு தரப்படவில்லை. அவை அதிக விலைக்குத் தான் விற்பனை செய்யப்படுகின்றன.

    நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் நிலையில், திசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும். திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும். இதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அவர்களுக்குத் தான் தோல்வி கிடைக்கும். வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    • வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
    • புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது.

    இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் இன்று ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்து புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.83,440ஆக விற்பனையாகிறது.

    காலையில் ஏற்கனவே ரூ.560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.

    அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.83,440ஆக உயர்ந்து விற்பனையாகிறது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று காலை 05.30 மணி அளவில் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் நகரக்கூடும்.

    வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில் மத்திய-கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27-ஆம் தேதி வாக்கில் தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் கரையை கடக்கக்கூடும்.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    அதே நேரம் இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 24-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    25 மற்றும் 26-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்
    • ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 37,416 பள்ளிகளில் 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்

    * 2.57 லட்சம் குழந்தைகள் இந்த ஆண்டு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.

    * 14.60 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * 500க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    * இந்த திட்டங்களால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது"

    * கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

    * நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 25ம் தேதி இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

    * தமிழ்நாடு அரசு நடத்தும் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிகழ்வில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி .சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    என்று தெரிவித்தார். 

    ×