என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் - தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார் விஜய்: செங்கோட்டையன்
- தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல என்பதால் தான் த.வெ.க.வில் இணைந்தேன்.
- மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தூய்மையான ஆட்சியை கேட்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் த.வெ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் த.வெ.கவில் இணைந்தனர்.
தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் செங்கோட்டையன் பனையூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் இருந்தனர்.
அப்போது செங்கோட்டையன் கூறியதாவது:
* தன்னை விடாமல் பின் தொடர்ந்து ஊடகப் பணியாற்றியதற்காக நிருபர்களுக்கு பாராட்டுகள்.
* ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஊடகப் பணியை செய்தனர்.
* அ.தி.மு.க.வில் புரட்சி தலைவரால் அடையாளம் காட்டப்பட்டவன் நான்.
* எம்.ஜி.ஆர்.-ஆல் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தவன் நான்.
* எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது 100 நாள் கூட இந்த படம் ஓடாது என விமர்சித்தார்கள். பின்னர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர்.
* அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது ஜெயலலிதா தலைமையில் பணியை மேற்கொண்டேன்.
* ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 3 கூறுகளாக அ.தி.மு.க. என்ற இயக்கம் பிரிந்தது.
* ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கருத்தை செயல்படுத்த இயலவில்லை.
* அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன்.
* பசும்பொன் சென்று திரும்பிய பின், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டேன்.
* என்னை சார்ந்து இயங்கியவர்களும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.
* அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என நான் கெடு விதிக்கவில்லை. எனது பேட்டியை மீண்டும் ஒரு முறை கேளுங்கள்.
* என்னை கட்சியில் இருந்த நீக்கும் எண்ணத்தில் தான் நான் கெடு விதித்ததாக அவதூறு பரப்பினார்கள்.
* அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று தான் நான் கூறினேன். கெடு விதிக்கவில்லை.
* தெளிவாக முடிவு எடுத்தபின், பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தேன்.
* தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல என்பதால் தான் த.வெ.க.வில் இணைந்தேன்.
* தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வேண்டும்.
* தமிழகத்தில் தூய்மையான ஒரு அரசியலை விஜய் முன்னெடுத்துள்ளார்.
* மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தூய்மையான ஆட்சியை கேட்கிறார்கள்.
* அன்பிற்கினிய இளவல் விஜய் வெற்றி பெறுவார்.
புனித ஆட்சியை விஜய் கொடுப்பார் என செங்கோட்டையன் கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய செங்கோட்டையன்,
* அ.தி.மு.க. ஆட்சி புனித ஆட்சி இல்லை என்று நான் கூறினேனா?
* ஜெயலலிதா ஆட்சியை புனிதமான ஆட்சி இல்லை என்று கூறவில்லையே.
* தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து யாரும் என்னை அணுகவில்லை.
* சட்டைப் பையில் இருந்து ஜெயலலிதாவின் படத்தை எடுத்து விட்டால் விமர்சிக்க மாட்டீர்களா?
இவ்வாறு அவர் கூறினார்.






