search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமான ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் 8 விமானங்கள் ரத்து
    X

    விமான ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் 8 விமானங்கள் ரத்து

    • சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதி.
    • விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.

    ஆலந்தூர்:

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவிவருகிறது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானங்களை இயக்க விமானிகள், என்ஜினீயர்கள், ஊழியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானங்களை இயக்குவதில் சிக்கல் உருவாகி நேற்று ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இந்த நிலையில் இன்று அந்த விமான நிறுவன ஊழியர்களின் போராட்ம் நீடித்து வருகிறது. ஊழியர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை. இதனால் இன்றும் 2-வது நாளாக பல்வேறு நகரங்களில் அந்த நிறுவனத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் பலர் திடீர் விடுப்பு எடுத்து உள்ளதால் மொத்தம் 8 விமானங்கள், ரத்து செய்யப்பட்டு உள்ளனர்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும்விமானம், அதைப்போல் நள்ளிரவு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் விமானம், இன்று மதியம் 12.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம்,இதேபோல் இன்று இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரும் விமானம் ஆகிய 4 வருகை விமானங்கள் ரத்து ஆகி உள்ளன.

    இதேபோல் சென்னையில் இருந்து இன்று அதிகாலை திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் விமானம், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகாலையில் புறப்பட்டு செல்லும்விமானம், இன்று காலை சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்லும் விமானம், இன்று இரவு சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 10.30 மணிக்கு சென்னைவிமான நிலையத்தில் தயாராக இருந்தது. அதில் 362 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அனைவரும் சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தனர்.

    விமானம் புறப்பட தயாராக இருந்த போது விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. நள்ளிரவு வரை இதனை சரிசெய்ய முடியவில்லை. இதைத்தொடர்ந்த அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×