search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி கொலை வழக்கில் தம்பி உள்பட மேலும் 2 பேர் கைது
    X

    கொலை வழக்கில் கைதான பிரவீன்குமார், செபஸ்தியார் மற்றும் அருண்குமார்.

    விவசாயி கொலை வழக்கில் தம்பி உள்பட மேலும் 2 பேர் கைது

    • வேடசந்தூர் அருகே சொத்துப்பிரச்சினை காரணமாக முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
    • இந்த கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 62). இவர் தனது மனைவி குழந்தைதெரசு என்பவருடன் சவேரியார்பட்டி ஒத்தையூரில் உள்ள தனது மாமனார் அமல்ராஜ் வீட்டில் வசித்து வந்தார்.

    ஆரோக்கியசாமிக்கும் அவரது தம்பி செபஸ்தியார் குடும்பத்தினருக்கும் இடையே 7 ஏக்கர் அளவுள்ள பூர்வீக நிலத்தை விற்பது தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிலத்தை விற்பதற்கு செபஸ்தியார் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் ஆரோக்கியசாமி நிலத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்து, பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த செபஸ்தியார் தனது மகன்களான பிரவீன்குமார், அருண்குமார் ஆகியோருடன் ஒத்தையூரில் உள்ள ஆரோக்கியசாமியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், வீட்டிலிருந்த மரக்கட்டையால் ஆரோக்கியசாமியின் தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்தார். அதன் பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி. மகேஷ் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. தனிப்படையினர் பாசித்ரகுமான், பாலாஜி, நாகராஜ் ஆகியோர் விரைந்து செயல்பட்டு பிரவீன்குமாரை கைது செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த செபஸ்தியார் மற்றும் அருண்குமாரையும் பிடித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குபதிவு செய்து கைதான பிரவீன்குமார், அருண்குமார், செபஸ்தியார் ஆகிய 3 பேரையும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×