search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூமி பூஜை நடைபெற்றதையடுத்து அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணிகள் நேற்று உடனடியாக தொடங்கியது.
    X
    பூமி பூஜை நடைபெற்றதையடுத்து அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணிகள் நேற்று உடனடியாக தொடங்கியது.

    அடையாறு ஆற்றை ரூ.70 கோடி செலவில் அகலப்படுத்தும் பணி தொடங்கியது

    அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    அடையாறு ஆறு தாம்பரத்தை அடுத்த ஆதனூர் ஏரி கலங்கல் பகுதியில் இருந்து தொடங்குகிறது. மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக சென்று சென்னை பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. அடையாறு ஆற்றின் மொத்த நீளம் 42 கி.மீ ஆகும். ஆற்றின் அகலம் ஒவ்வொரு இடத்துக்கும் தகுந்த வகையில் 60 அடி முதல் 200 அடி அளவில் உள்ளது.

    இந்த நிலையில் ஆற்றின் கரையோரம் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதன் காரணமாக அடையாறு ஆற்றின்அகலம் 20 அடி முதல் 100 அடியாக சுருங்கியது. இதன் காரணமாக மழை காலங்களில் ஆற்றில் அதிகளவு வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 2015-ம் ஆண்டு பெய்த கனமழையின் போது ஆற்றின் அதிகபட்ச அளவை காட்டிலும் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதன்காரணமாக ஆற்றின் கரையையொட்டியுள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்தது.

    அந்த மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகபட்சமாக 29,600 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாய் அடையாறு ஆற்றில் சேரும் இடத்தில் ஆற்றின் அகலம் 129அடியாகவும், திருநீர்மலை பாலம் இருக்கும் இடத்தில் 186 அடியாகவும் உள்ளது. இந்த ஏற்ற இறக்கம் காரணமாக ஆற்றில் கடுமையான அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க 2016-ம் ஆண்டு ஆதனூர் முதல் மணப்பாக்கம் வரை 22 கி.மீ தூரத்துக்கு ரூ.19 கோடி செலவில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தி ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் பல இடங்களில் அகலம் குறைவாகவே உள்ளது. இதன்காரணமாக கடந்த ஆண்டு பருவமழையின் போது கிளை கால்வாய்கள் வழியாக வந்த தண்ணீர் தடைபட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து திருநீர்மலை முதல் அனகாபுத்தூர் வரை 2.4 கி.மீ தூரத்துக்கு அடையாறு ஆற்றை அகலப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பூமி பூஜை நடைபெற்றதையடுத்து அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணிகள் நேற்று உடனடியாக தொடங்கியது. திருநீர்மலை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக இனி மழை காலத்தின் போது அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படாது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    மழை அதிகமாக இருக்கும் போது செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறந்தால் அதன் வேகம் அதிகரிக்கும். அப்போது அடையாறு ஆற்றில் உபரி நீர் மட்டுமே செல்லும். முடிச்சூர், தாம்பரம் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் தடைபட்டு பின்னோக்கி செல்லும்.

    இதன் காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் மூழ்கடிக்கிறது. அடையாறு ஆறு அகலப்படுத்தப்பட்டால் அதில் 40 ஆயிரம் கனஅடி அளவுக்கு தண்ணீர் செல்லும். இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருக்காது.

    அடையாறு ஆற்றில் செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் கால்வாய் சேரும் இடத்தின் இடதுபக்க கரையை ஒட்டி தரிசு நிலம் உள்ளது.அந்த பகுதியில் நிலத்தை கையகப்படுத்தி ஆற்றை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடையும்.

    அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் போது இடது புறத்தில் 3,600 அடி தூரத்துக்கும், வலது புறத்தில் 600 அடி தூரத்திற்கும் 16.5 அடிஉயரத்துக்கு சிமெண்ட் தடுப்பு கட்டப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×