search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழிசை சவுந்தரராஜன்
    X
    தமிழிசை சவுந்தரராஜன்

    பலர் தமிழ் மொழியையே முழுமையாக படிப்பதில்லை- புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை

    வேலை நிமித்தமாக பிற மொழிகளை கற்பது நமது எதிர்காலத்திற்கு பயன்தரும் என்றும், இதனை மொழி திணிப்பாக கருதக் கூடாது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கடற்கரையில் நடைபெற்ற மகாபவுர்ணமி தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.  

    பின்னர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    குமரி கடற்கரையில் நடக்கும் பவுர்ணமி தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது. நதிகள், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு ஆரத்தி எடுப்பது தமிழர்களின் பண்டைய கால கலாசார முறை ஆகும். நீர்நிலைகளுக்கு  நாம் நன்றி கூறி மரியாதை செலுத்தும் விதம் ஆகும்.

    தமிழர்களின் பண்டைய கலாசார நிகழ்வுகள் இளையதலைமுறையினருக்கும் ஒரு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும். தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை முறைகள், வீரம், ஆளுமை திறன் மற்றும் அவர்களின் அறிவுக் கூர்மை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் நமது கலாசாரங்களை அறிந்து அனைவரும் பின்பற்ற வேண்டும்.

    தமிழர்களின் பெருமை உலகம் அறிந்தது. அவற்றை நாம் எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டும்.  பண்டைய காலம் முதல் இன்றளவிலும் தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்றாக இணைந்தது. 

    ஆன்மீகம் இல்லாமல் தமிழ் இல்லை என்பதில் நானும் மிகுந்த உறுதியுடன் இருக்கிறேன். சில கட்சியினர் தமிழில் இருந்து ஆன்மீகத்தை பிரிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். இது என்றும் நடக்காது.

    நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. அவரவர் தாய் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்றுக்கொள்ள வேண்டும். தொழில் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக பிற மொழிகளை கற்பது நமது எதிர்காலத்திற்கு பயன் பெறும். இதனை பிற மொழி திணிப்பு என எடுத்துக்கொள்ள கூடாது. 

    இங்கு பிறமொழி திணிப்புக்கு இடமில்லை. நம்மில் பலர் தமிழ் மொழியையே முழுமையாக படிப்பதில்லை என்பது வேதனைக்குரியது. ஒரு மொழியை உயர்த்தி பிற மொழியை குறைத்து பேசக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×