search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் சக்கரபாணி
    X
    அமைச்சர் சக்கரபாணி

    இலங்கைக்கு அனுப்பும் அரிசி பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை- அமைச்சர் எச்சரிக்கை

    இலங்கைக்கு அனுப்புவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் ஆணை வழங்கியுள்ள உயர்ரக அரிசியோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது.

    சென்னை:

    உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகக் கடுமையான துன்பத்திலிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்று மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து ஒன்றிய அரசின் அனுமதியைக் கோரியிருந்தார். அனுமதி கிடைத்தவுடன் 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட பொருள்களை அனுப்பிடும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தினார்.

    அதன்படி, ஒப்பந்தப்புள்ளிகள் கோரி இறுதிப்படுத்திட தாமதமாகும் நிலையில் உடனடியாக நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக வெளிப்படைத் தன்மையுடன் அரிசி ஆலை அதிபர்களின் சங்கங்களை அழைத்துப் பேசி, குறுகியகாலத்தில் உற்பத்தி செய்ய முடிந்த 51 ஆலைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விநியோக ஆணைகள் வழங்கப்படுகின்றன.

    இலங்கை அரசு ஏற்கனவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து உள்ள அரிசிக்கு இணையான, ஆந்திரா பொன்னி, ஏடிட்டி45 , கோ51 போன்ற உயர்ரக அரிசி இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டு, 10 கிலோ பைகளில் அனுப்பப்பட உள்ளது. இவற்றை சென்னை மற்றும் தூத்துக்குடி துறை முகங்களுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்துச் செலவு,பை உட்பட கிலோ ஒன்றிற்கு ரூ.33.50 என்ற குறைந்த விலையில் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சில விஷமிகள் வழக்கமாக விசத்தைக்கக்கும் விதமாக இந்திய உணவுக் கழகத்திடமிருந்து கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய்க்கு வாங்காமல் அதிகமாகக் கொடுத்து வாங்கிவிட்டது போல் சமூக ஊடகங்களில் எழுதுகின்றனர். இது தவறான பொய்ப் பிரச்சாரமாகும்.

    ஒன்றிய அரசின் உணவு மானியத்தால் விலை குறைக்கப்பட்டு, 20 ரூபாய் விலையில் இந்திய உணவுக் கழகம் வழங்கக்கூடிய கூடிய அரிசியானது, நமது நாட்டில் பொது விநியோகத் திட்டத்தில் மாநில அரசுகள் விநியோகிப்பதற்கும் மாநில அரசின் திட்டங்களுக்கும் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி ஆகும். இதனை மாநில அரசுகள் வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது.

    இதனால்தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. எனவே இந்த இந்திய உணவுக் கழக அரிசியை, இலங்கைக்கு அனுப்புவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் ஆணை வழங்கியுள்ள உயர்ரக அரிசியோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது.

    இந்த உண்மைகள் முழுமையாகத் தெரிந்திருந்தும் அவதூறு செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×