search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவையில் பெயிண்டர் - பெண்ணை தாக்கிய உறவினர் கைது

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    பொள்ளாச்சி வடுகபாளையம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (38). பெயிண்டர். இவரது உறவினர் அதே பகுதிைய சேர்ந்தவர் செல்வராஜ் (28). இந்த நிலையில் சுப்பிரமணியின் உறவினர்  நந்தினி என்பவரை கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு செல்வராஜ் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி பிரிந்தனர்.இதற்கு சுப்பிரமணி தான் காரணம் என செல்வராஜ் நினைத்தார். 
     
    அதனால் அவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது.சம்பவத்தன்று  சுப்பிரமணி, பழனிசாமி என்பவருடன் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றனர். அப்போது அங்கு செல்வராஜும் இருந்தார். அவர் திடீரென அருகில் இருந்த பழனிசாமியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த சுப்பிரமணி, பழனிசாமியை சமாதானம் செய்து 2 பேரும்  அங்கிருந்து  வீட்டுக்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து செல்வராஜ், குடிபோதையில் சுப்பிரமணியின் வீட்டுக்கு வந்தார். அங்கு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியின் தம்பி மனைவி கன்னீஸ்வரி ஓடிவந்து செல்வராஜை தடுத்து நிறுத்தி  சுப்பிரமணியை வீட்டுக்குள் அனுப்பினார். 

    அப்போது செல்வராஜ், கன்னிஸ்வரியை பிடித்து கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் சென்று சுப்பிரமணியை சரமாரியாக தாக்கினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணி  மற்றும் கன்னீஸ்வரி சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.  

    இதுகுறித்து சுப்பிரமணி பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் தெரிவித்தார்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×