search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல் பண்ணைகளில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு- ஒரு முட்டை விலை 10 காசுகள் உயர்வு

    தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து முட்டை விலையில் மாற்றம் செய்ய பண்ணையாளர்கள் முடிவு செய்தனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இரவுநேர ஊரடங்கு அமலில் இருந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு முட்டை கொண்டு செல்வது பாதித்தது.

    உணவுப்பொருள் என்ற அடிப்படையில் முட்டை வாகனங்களுக்கு விலக்கு அளித்த போதிலும் ஞாயிற்றுக்கிழமையில் போக்குவரத்து இல்லாமல் முட்டை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பண்ணைகளில் கணிசமான அளவுக்கு முட்டைகள் தேக்கம் அடைந்தன. இதையடுத்து முட்டை விலை குறைந்து வந்தது.

    இந்த மாத தொடக்கத்தில் ரூ.5.05 ஆக இருந்த முட்டை விலை கடந்த 6-ந்தேதி ரூ.4.80 ஆகவும், 8-ந்தேதி ரூ.4.60 ஆகவும், 17-ந்தேதி ரூ.4.50 ஆகவும், 20-ந்தேதி ரூ.4.30 ஆகவும் குறைந்தது. 25 நாட்களில் முட்டை விலை 75 காசுகள் குறைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து முட்டை விலையில் மாற்றம் செய்ய பண்ணையாளர்கள் முடிவு செய்தனர்.

    இதை தொடர்ந்து நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை நிர்ணய ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்தில் முட்டை விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.4.30 ஆக இருந்த முட்டை விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.40 ஆனது. பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் வருமாறு:-

    ஆமதாபாத்-ரூ.4.65

    சென்னை-ரூ.4.45

    சித்தூர்-ரூ.4.38

    டெல்லி-ரூ.4.80

    மும்பை-ரூ.4.70.

    Next Story
    ×